Sunday 18 October 2020

கா… கா… கா…

'எங்க இவள இன்னும் காணோம்? வீட்டைப் பூட்டிட்டு எங்க போனாளோ?!' என்று சலித்துக்கொண்டு பூட்டப்பட்ட வீட்டு வாயிலின் முன் நின்றிருந்தவன், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் கண்ணாடியில் தனது முகத்தினைப் பார்த்தபடி, விரல்களால் கேசத்தை சீராய்க் கோதியவன், முழுக்கை சட்டையை முக்கால் நீளத்திற்கு மடித்துவிட்டு, இரு தோள்களையும் விறைப்பாக்கி, நெஞ்சை நிமிர்த்தித் தன்னைத்தானே ரசித்துக்கொண்டு, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

'வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகல. அதான் பொண்ணுங்க இன்னமும் உன்னையே சுத்தி சுத்தி வராங்க. அழகன் டா நீ!' என்று அவன் தனக்குள்ளே முணுமுணுத்துக்கொள்ள, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள், மனைவி.
"வீட்டைப் பூட்டிட்டு எங்க போயிட்ட?"
என்றான் அவளைக் கண்டதும்.
"பஸ் ஸ்டாண்டுக்கு காய்கறி வாங்கப் போயிருந்தேன்" என்றாள் அவள், பூட்டினைத் திறந்தபடி.
"நானும் அந்த ரோட்ல தான் வந்தேன். நான் வந்து பத்து நிமிஷம் தான் இருக்கும். உன்னைப் பார்க்கவே இல்லையே?!"
"ஆனா நான் உங்களைப் பார்த்தேன். ஏதோ ஒரு பொண்ணை பஸ் ஸ்டாண்டில இறக்கிவிட்டீங்க…"
"அது…"
"உள்ள போய் பேசிக்கலாம்…"

உள்ளே சென்றதும், கையிலிருந்த பைகளை அவள் கீழே வைத்துவிட்டு நிமிர, அவன் தயங்கியபடி அவள் எதிரே நின்றிருந்தான்.
"அந்தப் பொண்ணு யாருனு எனக்குத் தெரியாது. சும்மா லிஃப்ட் கொடுத்தேன்…"
"அது இருக்கட்டும், உங்க பர்ஸ் எங்க?"
கால்சராய் பாக்கெட்டுகளைத் துழாவியவன் பர்ஸ் இல்லாமல் போக, அதிர்ச்சியானான்.
"இந்தாங்க…" என்று அவனது பர்சினை அவள் நீட்டினாள்.
அவன் வியப்பாய்ப் பார்த்திருக்க,
"லிஃப்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி உதவி கேட்கறவங்க யாரு எப்படின்னு முகத்தைப் பார்த்து ஓரளவு கணிக்கத் தெரியாதா? நீங்க லிஃப்ட் கொடுத்த பொண்ணு இந்தப் பர்ஸ அடிச்சுட்டு, ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்து சந்து வழியா எஸ்கேப் ஆக பார்த்தா. நான் போய் மிரட்டுன மிரட்டுல கொடுத்துட்டா."
"அய்யய்யோ… அவ ரொம்ப அவசரமா போகணும்னு சொல்லி லிஃப்ட் கேட்டா. பாவமா இருந்ததுன்னு உதவி பண்ணேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் தேங்க்ஸ்னு சொல்லி இறங்கிக்கிட்டா…"
"அவசரமா போறவ முகத்துல எந்தப் பதட்டமும் இல்லை. நின்னு நிதானமா உங்கக்கிட்ட பேசிட்டு போறா. அதை வச்சே உங்களுக்கு சந்தேகம் வரலையா?"
"அது…"
"இனியாவது ஜாக்கிரதையா இருங்க…"

அடுக்களைக்குள் செல்ல எத்தனித்தவளை இழுத்துக் கட்டிக்கொண்டவன்,
"பர்ஸ் கிடக்கட்டும். நீ என்னை சந்தேகப்படறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். உன் இடத்துல இன்னொருத்தி இருந்திருந்தா இந்நேரம் என்னை அந்தப் பொண்ணோட சேர்த்துப்பேசி, சந்தேகப்பட்டு, சண்டை போட்டிருப்பா. உனக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கையா?" என்றான் உளமார.
அவனைக் கண்டு சிரித்தவள், "அது அப்படி இல்லீங்க. வடையே வாலன்டியரா வந்தாக்கூட, அதைத் தூக்கற திறமை கூட இந்தக் காக்காவுக்கு இல்லைனு எனக்கு நல்லாத் தெரியும். எமோஷன் ஆகாம உட்காருங்க, காபி எடுத்துட்டு வரேன்."
உள்ளே சென்றவள் ஏதோ யோசித்தவளாய் மீண்டும் அவனிடம் வந்து, "இன்னும் எவ்வளவு நேரத்துக்கு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு இப்படி விறைப்பா நிக்கப்போறீங்க? அப்புறம் தோள்பட்டை வலி வந்தா நான்தான் அம்ருதாஞ்சனம் தேய்ச்சுவிடணும்" என்றுவிட்டு செல்ல, அழகன் ஆஃப் ஆகிப்போனான்.

Saturday 17 October 2020

மனைவி அமைவதெல்லாம்...

 "என்னங்க ஒரு முக்கியமான விஷயம்…"

காலையுணவு உண்டு முடித்து, தனது அறையில் மடிக்கணினி பையைச் சரிபார்த்தபடி அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த கணவனிடம் வந்து நின்றாள், மனைவி. அவளது முகத்தினை நோக்கினான். என்றுமில்லா பொலிவுடன், புன்னகை ஏந்தி நின்றாள்.

"என்ன செல்லம் சொல்லு…"

குழைந்தான், அவன்.

"அது வந்து… எனக்கு ஒன்னு வேணும்..."

"ஒன்னென்ன, ஒரு டஜன் தரேன்!!"

அவன் நெருங்கி நின்றான்.

"அதில்லை… எனக்கு ஒரு பேபி வேணும்…"

புடவைத் தலப்பை விரல்களில் சுற்றி அவிழ்த்தபடி, தலைக் கவிழ்ந்து நின்றவளைக் கண்டு அவன் மன்மதனானான்.

"நீயா செல்லம் கேட்கற? ‘நம்ம குழந்தைக்கு ஒரு வயசு தான் ஆகுது, அடுத்தக் குழந்தையைப் பத்தி இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு யோசிச்சுக்கலாம்’னு சொன்ன?"

"அது…"

"சரி, ஊட்டிக்கு டிக்கெட் போடட்டா?"

சிந்தனையாய் அவனைப் பார்த்திருந்தாள்.

"என்ன யோசனை செல்லம்? ஊட்டி நமக்கு ராசியான இடமாச்சே?"

சிரித்துக்கொண்டவள், "இதுக்கு எதுக்குங்க அவ்வளவு தூரம் போகணும்?" என்றாள்.

"பின்ன வீட்லையேவா? நாலு நாள் லீவு போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 'அத்தை மாமா இருக்காங்க'ன்னு சொல்லி பகல்ல என்கிட்ட வந்து உட்கார கூட மாட்ட. லீவு வீணாகிடுமேன்னு தான் ஊட்டி போகலாம்னு சொல்றேன்."

விழுந்து விழுந்து சிரித்தவள், "இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை. இப்படி அசடு வழியறீங்க! நான் குழந்தை பொம்மை வேணும்னு சொன்னேன். குழந்தை வேணும்னு சொல்லல" என்றுவிட்டு தொடர்ந்து சிரித்தாள்.

சற்றே அதிர்ந்து விலகி நின்றவன், அவளைப் புரியாமல் பார்த்திருந்தான். 

"நம்ம பக்கத்து வீட்டு மாமி கொலு வைக்கப்போறாங்கல்ல, அதுல வைக்க நான் ஒரு கிராப்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குழந்தை கிருஷ்ணன் பிறந்ததும் கோகுலம் முழுக்கக் கொண்டாட்டமா இருக்கறத செஞ்சிருக்கேன். வீடு, மாளிகை, அது, இதுனு நிறைய செஞ்சு வச்சிருக்கேன்... குழந்தை கிருஷ்ணர் மற்றும் கொஞ்சம் தத்ரூபமா வேணும். எனக்குக் கிளே’ல பண்ண வரல. அதான் உங்கள ஒரு குழந்தை பொம்மை வாங்கிட்டு வரச் சொன்னேன்."

பெருமூச்செடுத்து ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டவன், 

"அப்புறம் எதுக்கு மா ஒரு மார்கமா என்கிட்ட வந்து பேசின?" என்றான், பரிதாபமாய்.

"நான் சாதாரணமாத்தான் பேச வந்தேன். நீங்களே தப்பா புரிஞ்சுக்கிட்டு அசடு வழிஞ்சீங்க. காமெடியா இருந்தது. அதான் பேசவிட்டு வேடிக்கை பார்த்தேன்..."

"பேசவிட்டு வேடிக்கை பார்க்கறதுக்கு நான் என்ன பட்டிமன்றத்துலயா பேசிக்கிட்டு இருக்கேன்? ரைட்டு…" என்று வாடிய முகத்தோடு பையை எடுத்துக்கொண்டு அவன் கிளம்ப,

"பேபிய மறந்துடாதீங்க" என்றாள் அவனைத் தொடர்ந்தபடி.

எதோ நினைவிற்கு வந்தவனாய் நடையை நிறுத்தியவன்,

"நம்ம பிள்ளையார் கோவில் வாசல்ல கொலு பொம்மை கடை பார்த்தேனே. அங்க இருக்குமே?" என்றான் தனது துக்கத்தை மறைத்துக்கொண்டு. 

"அது எனக்குத் தெரியாதா? எத்தனை யூடியூப் வீடியோஸ் பார்த்து இதை செஞ்சிருக்கேன் தெரியுமா? கிருஷ்ணனுக்குத் தலைப்பாகை, டிரஸ், புல்லாங்குழல் கூட செஞ்சுட்டேன். நம்ம ஏரியா ஃபேன்ஸி கடைல எனக்கு பொம்மை கிடைக்கல. ஒரே ஒரு பொம்மை நீங்க வாங்கிட்டு வந்தா போதும், நான் அதுக்குக் கிருஷ்ண அலங்காரம் பண்ணிடுவேன்."

"ஓ!… ஆமா, இந்த யூடியூப்ல ‘புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கணும்’னு அட்வைஸ் பண்ற மாதிரி வீடியோலாம் பார்க்கமாட்டியா?"

அவனைக் கண்டு முறைத்தவள்,

"நான் பயனுள்ள வீடியோஸ் மட்டும் தான் பார்ப்பேன்…" என்றாள்.

"புரிஞ்சிடுச்சு மா!!" என்றவன், ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…' என்று முணுமுணுத்துக் கொண்டே வாகனம் நோக்கிச் செல்ல,

"என்னங்க பாட்டெல்லாம் பாடறீங்க?" என்றாள், மீண்டும் முகம் மலர்ந்தபடி.

"கொலுவுல பாட்டு பாடினா மாமி சுண்டல் தருவாங்கல்ல, அதான் ரிகர்சல் பார்க்கறேன்.." 

"ச்ச என்னங்க நீங்க? உங்களுக்கு வேணுங்கறத செய்யத்தான் நான் இருக்கேன். உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன். ஒரு கப் சுண்டல் செஞ்சுத் தர மாட்டேனா? சாயங்காலம் நீங்க ஆஃபிஸ் முடிஞ்சு வரும்போது சூடா சுண்டல் தயாரா இருக்கும். ரிகர்சல் பண்ற ஜோருல பேபிய மறந்துடாதீங்க."

"பேபி?? மறக்கமாட்டேன் மா… மறக்கவே மாட்டேன்…"

அவன் வண்டியைக் கிளப்ப, மாமி வீட்டு ரேடியோ 'மனைவி அமைவதெல்லாம்…' என்ற பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தது. வண்டியின் இடப்பக்க கண்ணாடியை அவன் நோக்க, அதில் அவனது காதல் மனைவி பலமாய்க் கையசைத்து ‘டாட்டா’ காட்டிக் கொண்டிருந்தாள்.




அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!