Saturday 31 March 2018

கானலாய்க் கானகம்!!

ஊரின் எல்லையில் ஓர் விசாலமான பொட்டல் காடு… காடு அல்ல… களம்… போர்க்களம். அங்கே காற்றிலெங்கும் பிணவாடை. நிலம் முழுதும் குருதிக் குழம்பு. தலைகளும், கைகளும், கால்களும், சிதைந்தும் சிதையாமலும்… காண்போர் நெஞ்சம் பிளந்து ரத்தம் வடியும். அதிகார ஆக்ரோஷத்தின் கோர தாண்டவம். வளியவனின் பதவிக் கிறுக்கு. வைரங்கள் கொப்புலிக்கும் வஞ்சகம். மண்ணுள் கிடக்கும் புழு முதல், விண்ணில் வட்டமிடும் பருந்து வரை, அனைத்திற்கும் ராஜ விருந்து.

தூரத்தில் சில கொட்டகைகள். வெற்றிக்கொண்டாட்ட கூச்சல், எங்கும் எதிரொலித்தது. அந்த சிற்றூரைக் கைப்பற்றிய களிப்பு. வாகை சூடிய மன்னனின் முகத்தில் பெருந்திரளாய்ப் பெருமிதம் புரண்டோடியது. யாரும் அவனை வெல்வதற்கில்லை என்றொரு இறுமாப்பு. அந்த சிற்றூரின் அரசனை வீழ்த்தி, அந்த நகரத்தைத் தன் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டான். மண், பொன், பெண் பேராசைக் கொண்ட அந்த கொடூர மாமன்னன், சிற்றூர்களைப் பல வென்றும் பசி தீராது, இப்பொழுது இந்த ஊரையும் வென்றுவிட்டான்.

கம்பீரமாய் அவன் அமர்ந்திருக்க, அவன் எதிரே மண்டியிட்டு, கைகள் கட்டிய நிலையில் சிற்றரசன் அழுகிறான். சோம பானம் அருந்தியபடி அவனை உற்று நோக்கிய மாமன்னன், சடார் என தன் வாளை உருவி, பட்டென சிற்றரசனின் தலையைக் கொய்தான். அடுத்த சில மணித்துளிகள் சிற்றரசன் கூறுபோடப்பட்டு, அகண்ட அண்டாவில் குழம்பாய்க் கொதித்துக்கொண்டிருந்தான். இது மாமன்னனின், வெற்றியைக் கொண்டாடும் முறை. தோற்ற அரசனை குழம்பாக்கி, அவன் மாமிசத்தை உண்டு, தனது மனதை சாந்திப்படுத்திக்கொள்ளும் விந்தை. எதனாலோ அப்படி. ஏனென்று கேட்டிட யாருக்கும் நா எழவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அந்த விருந்து, அவனோடு போரிட்ட அனைத்து வீரர்களுக்கும் அதில் பங்குண்டு. கொன்றால் பாவம், தின்றால் தீரும்!

உண்ட களிப்பில் அனைவரும் ஆனந்தக் கூத்தாட, பட்டுக்கம்பளத்துள் சுற்றியிருந்த நெடிய வாளொன்றை எடுத்தான் அந்த மாமன்னன். நவரத்தினங்கள் ஜொலிக்கும் உறைக்குள்ளே, வைரத்தால் மெருகேற்றப்பட்டு, கைப்பிடியில் கர்ஜிக்கும் சிங்க முகத்தோடு கம்பீரமாய் காட்சியளித்தது அவ்வாள். அதைக் கண்டவர் கண்களிலெல்லாம் அவ்வாளே மின்னியது. தனது தளபதியை அழைத்தான் மன்னன். நிமிர்ந்த நெஞ்சத்தோடு, பெருகும் பெருமிதத்தோடு, வெற்றி என்பது பழகி சலித்துப்போன இறுமாப்பு முகத்தோடு, மன்னனின் முன்னே சென்று நின்றான், தளபதி. அவனை ஆரத்தழுவிய மன்னன், அந்த வாளை அவனுக்குப் பரிசளிக்க, மீண்டும் ஆனந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அவன் கைகளில் வாளுக்குப் பெருமை கூடியதா?! அந்த வாளின் அம்சம் அவனுக்கு கம்பீரம் ஊட்டியதா?! அனைத்து கண்களும் அதிசயித்து அடங்கின.

கட்டழகிகள் புடை சூழ மன்னன் ராஜ லீலைக்கு வேறு புறம் செல்ல, வாள் ஏந்திய தளபதியின் செருக்கு அடங்குவானேன் என்று பொங்கிப் பெருகியது. ஆடிப் பாடி ஓய்ந்த கூட்டம் அங்கங்கே கிடக்க, தனது கொட்டகையுள் கட்டிலின் மேல் அமர்ந்த தளபதியின் மூளை, அடுத்த களம் எதுவென்று ஆராயத் தொடங்கியது.

வாயிலைப் பார்த்தபடி சிந்தித்திருந்த தளபதியின் சிந்தனையை தடை செய்தது அச்சிருவனின் வருகை. அவன் பின்னே ஓடி வந்த இரு காவலர்கள் அவன் கைகளைப் பற்ற, அவன் திமிறிக்கொண்டு நின்றிருந்தான். அவனை விடுக்கும்படி தளபதி கை அசைக்க, நிமிர்ந்த நெஞ்சோடு, கூறிய பார்வையோடு, தளபதியின் முன்னே வந்து நின்றான், அச்சிறுவன்.

“யாரடா நீ?” என்று கர்ஜித்த தளபதியின் குரலுக்கு, சிறிதும் கலங்கவில்லை அச்சிறுவன்.
“என் தந்தை எங்கே?” என்றான் தீர்க்கமாக.
அவன் கேள்வியைக்கேட்டு, கொட்டகையின் கூரை பிளந்து போகும் அளவிற்கு வாய்விட்டுச் சிரித்தான் தளபதி.
“அங்கே குவிந்து கிடக்கும் பிணங்களில் உன் தந்தையின் கையோ, காலோ, சிரசோ, எது கிடைத்ததோ அதை அள்ளிக்கொண்டு செல்” என்றான்.
சிறுவனின் பார்வை மேலும் கூறானது. அவனது முகம் சினம் ஏறியது.
“என்னடா பார்வை?” என்று சினம் கொண்ட சிங்கமென கர்ஜித்தான், தளபதி.
“தினமும் என் தந்தை வழங்கிய நீரும், பருப்பும், பழமும் உண்ட நீரெல்லாம் மனிதனா?” என்றான் சிறுவன், முகத்தை சுழித்துக்கொண்டு.
“யார் நீ? என்ன திமிர் உனக்கு?” என்று கழுத்து நரம்பு புடைக்க வினவினான், தளபதி.
“நானா?! உன் எதிர் கால சந்ததி… தினமும், வண்டியிலே உமக்கு உணவைக் கொண்டு வந்து குவித்தது என் தந்தை. அவரை ஏன் கொன்றாய்? தின்றதற்குக் கூட நன்றி இல்லையா உன்னிடம்? அவரை நம்பியே நாங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் உள்ளோம் என்று நீ அறிவாயோ? எங்கள் தந்தை இல்லாது நாங்கள் பிழைப்பதெப்படி? இனி தாகத்திற்கு, குருதியைக் குடி. பசிக்கு, பொற்காசுகளைத் தின்று களி. உன் குடல்களை உருவியெடுத்து, அங்கே வைரத்தையும், வைடூரியத்தையும் பதுக்கிக்கொள்” என்று கூறிக்கொண்டே, சற்றுமுன் தளபதி வென்ற வாள் அச்சிருவனின் கண்களில் பட, நொடியில் அதை உயர்த்தி, தனது தலையினை துண்டித்துக்கொண்டான்.

கோடிக்கோடி கொலைகள் செய்தவன், நர வேட்டை ஆடிய மாமிச நாயகன், ரத்த வாடை சுவாசிக்கும் மிருக மனிதனான அந்த தளபதியின் முகத்தில் தெறித்தது, அச்சிருவனின் ரத்தம். முதன் முறையாக, அந்த செங்குறுத்தின் இளரத்த வாடையால் தளபதியின் கைகள் நடுங்கியது!!

Saturday 3 March 2018

One is in all!!

The fielding thorns
Are pricking me
And the shell is
Crushing the pearl

Hunting for the key
To open the door
To let some air
And life inside

Finding love
In the vine and wild
Mercier the heart!
Merrier the life!!
The veil on my head
Is melting away
The colours of life
Are shimmering around

The tiny, the small
The big and the giant,
Manifests on one
The one is in all!!

Friday 2 March 2018

புது ராகம்

சன்னமாய் ஒரு இசை, என் செவியைச் சேர்ந்து மறைகிறது. எனது பரபரப்புகளின் மத்தியில், வலுவிழந்த அந்த சன்னமான இசை, என்னைக் கடிவாளமிட்டு முடக்கவில்லை. அவ்வப்போதே தோண்றி மறையும் இசை. வலு பெற்று, இப்பொழுது தெளிவாய்க் கேட்கிறது. ஆஹா!! அது யாழின் இசை... கற்கண்டுகளால் நாவினை நனைத்தது போல், தேனமுது! எங்கிருந்து வந்தது இந்த இசை… எதனால்? கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு, உலகைப் பார்க்கும் பறவையைப் போல், நானும் என் மனதின் சிகரத்தில் நின்றுகொண்டு என் எண்ணங்களை ஆராய்கிறேன். ஒன்றும் புதிதாய் இல்லை!! ஓ! அதென்ன மூலையில் ஒரு ரத்தின மொட்டு. எத்தனை ஜொலிஜொலிப்பு!!

யாழின் இசையோ இப்பொழுது மிகவும் உரக்கமாய்!! ரத்தின மொட்டு மலர்ந்து, நவமணிகள் சிதறிக்கிடக்கின்றன. எனது பரபரப்புகள் பறந்துவிட்டன. சில நாழிகைகள் யாழ் இசையின் ரசனையில். மீதி காலங்கள் ‘எதனாலோ இந்த இசை’ என்ற சிந்தனையில். மத்தொன்று மனதைக் கடைந்து கொண்டிருந்தது.

நவமணிகள் பிணைந்துகொண்டு, கொடியென எழும்பத் தொடங்கியது. மனதை விசாரணை செய்கிறேன். பாவம்! காரணம் தெரியாமல் அழுகிறது. எனது கோபத்தைக் கண்டு நடுங்கி, இந்த கண்களே காரணம் என்று போட்டுடைத்தது. கள்ளக்கண்கள் என்னிடம் சிக்கினர். ‘அதோ, அவன்தான்!’, என்று இமை திறந்து கூறினர். உண்மைதான்!! இப்பொழுது என் காதுகள் செவிடாகும் அளவிற்கு யாழின் இசை ஒலிக்கிறது.

அவன் கண்களின் பார்வை அலைகளே, யாழினை மீட்டுகிறது. அவன் இல்லாவிடில், எங்கும் அமைதி. அவன் வந்துவிட்டால், கண்களால் என்னை வருடிவிட்டால், யாழின் ருத்ரம் ஆரம்பம்!! இதுவரை நான் கேட்டிராத, ஒரு புது ராகம். நான் மட்டுமே உணர்ந்த, புது ராகம். என்ன பெயர் வைக்கலாம், அந்த ராகத்திற்கு?! ம்ம்… அவன் பெயர் தான்… என்னவன்… என் ராகமானவன்… ஜீவ தாளமும் ஆனவன்!

அய்யோ! என்னை பார்த்தபடி என்னருகே மெல்ல வருகிறான். மயங்கி விழப்போகிறேன். இன்னும் அருகே வருகிறான். வேண்டாம்! வேண்டாம்! பாதி மயங்கிவிட்டேன். கைத்தொடும் தூரத்தில் அவன். முக்கால் மயக்கம். அவன் மூச்சுக்காற்று என் கன்னங்களில். போடா, முழுதும் மயங்கி விழுந்துவிட்டேன். சில நொடிகளே! அவன் நகர்ந்து செல்ல, என் மயக்கம் கலைந்தது. தினமும் நெருக்கம். தினமும் மயக்கம்.

ஒரு நாள், நெருக்கத்தின் மத்தியில் ஆழமான பார்வை, அவனிடமிருந்து. இனி மயக்கம் இல்லை, மரணம் தான். அந்த மீளமுடியாத ஆழமான பார்வை எனும் குழிக்குள்ளே விழுந்துவிட்டேன். என்னை சுற்றி நூறு யாழ்கள் மீட்டி நின்றன. அடடே, இந்த ஆனந்தக்கூத்துக்கு தான், இத்தனை கண்ணாமூச்சியா?!

கையில் ஏதோ கொடுத்துவிட்டு, விலகி நிற்கிறான். வழவழவென்று மிருதுவாய்!! என்னவென்று உற்று நோக்கினால், அவனின் இதயம். என்னுள் பொங்கிய, அதே புது ராகம் பாடியபடி, அவனின் இதயத்திலும் ஒரு யாழ். “உன் இதயத்தை என் நெஞ்சுக்கூட்டுக்குள் புதைக்கப்போகிறேன். திரும்பி நில்! ஓரக்கண் சில்மிஷம் வேண்டாம். நாணம் கவ்வினால், படபடப்பில் பரிதவிப்பேன்.”

“ம்ம்… இதோ என் கைகளைப் பற்றிக்கொள்! வருகிறேன், எல்லைக்கோட்டின் இறுதி புள்ளி வரை, உன்னோடு! இதோ என்னுள் படர்ந்து பெருகும் நவமணிகளின் கொடி, இனி என்றும் உன் தோள்களின் மேல் தொடர்ந்து படர்ந்திடும். ஒரு உதவி மட்டும் செய்திடு. உன்னைக் கண்டு, நான் என்னை மறந்து உறைந்து நிற்கும் நொடிகளில், பெருமிதத்தால் என் விழியோரம் அவிழும் நீர்த்துளிகளை, உன் விரல்களால் துடைத்துவிடு!!!”