Thursday 2 March 2017

தமிழ் கவிதைகள்

அண்டம் யாவிலும்
தேடிக்கிடைக்காத
பிண்டமற்ற
உயர் ஜோதி நீயடி!

நான்,
உயிர் பெற்று
வென்றெழுவதும் உன்னாலே!
உயிர் கசிந்து
மடிந்தொடுங்குவதும் உன்னுள்ளே!

உன் தாய்மைப்பார்வையால்
என் விரகதாபங்கள் ஓயுமடி
உன் மெல்லியபுன்னகையால்
என் கோபச்சீற்றங்கள் மடியுமடி
உன் நுனிவிரல் ஸ்பரிசத்தால்
என் துன்பமெல்லாம் மறையுமடி
உன் நல்வாக்கு மொழியால்
என் எதிர்காலம் மிளிருமடி!

-----------------------------

கொற்றவை சூடிய
கொன்றை மலர்களை
பொத்திவைப்பேன் இதயத்துள்
பத்திரமாய்!

கயல்விழி பாடிய
கமல மொழிகளை
செதுக்கிவைப்பேன் நரம்புகளில்
சித்திரமாய்!

செவ்விதழ்கள் சிந்திய
புன்னைகைப் பூக்களை
கலந்துவைப்பேன்  உதிரத்தில்
தந்திரமாய்!

வான்மகள் தூவும்
காதல் மழைகளை
ஊற்றிவைப்பேன் உயிருக்குள்
நித்தியமாய்!

–------–---  

உன் மீது நான் காதல் கொண்டேன்
காமம் கடந்த மோகம் கொண்டேன்
கிளர்ச்சிகள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டேன்
ஆவி கலக்கவே ஆசை கொண்டேன்

மோகமுல் கீறுகின்ற நெஞ்சுக்குள்ளே
மோகனமாய் நீ வந்தாய் மெல்ல மெல்ல
தாகங்கள் தீர்ப்பதர்க்கா காதல் என்றாய்
மௌனத்தில் மோனத்தை அறிய வைத்தாய்

கைகோர்த்து நடைபோட எத்தனித்தேன்
உணர்வால் கிரங்கள் தாண்டி கூட்டிச் சென்றாய்
கன்னத்தில் முத்தம் வைக்க இச்சை கொண்டேன்
காமத்தின் கருவறுத்து என்னை மீட்டாய்

ஜென்மங்கள் தொடர்ந்து வரும் உறவிற்கு
பஞ்சணையில் வேலி செய்தல் நியாயமன்று
உள்ளத்திலே மொட்டு விட்டு முளைத்த காதல்
ஜீவனிலே நட்டு வளர்க்க வேண்டும் என்றாய்

தேக்கிவைத்த சபலத்தை ஒழித்துவிட்டேன்
தேகத்தின் தேடல்களை ஒதுக்கிவிட்டேன்
உயிர் கொண்டு உரையாட அடிமையானேன்
காதல் என்பதென்னவென்று புரிந்துகொண்டேன்!!

-----------

Wednesday 1 March 2017

சொர்க நிமிடங்கள்!!

உருவாக உள்புகுந்து
உயிராக மாறிநின்றாய்
உணர்வெல்லாம் நீபடர்ந்து
காதல் உபன்யாசம் தினம் சொன்னாய்

கணம் ரெண்டு உனைக்காண
மணிக்கணக்காய் காத்திருப்பேன்
காலிரண்டும் நோகுதடி
மனம் மட்டும் சிலிர்க்குதடி!

உனக்காக வாங்கிவந்தேன்
மல்லியும் முல்லையும்
உணைக்கண்டு மலர்ந்திடவே
முகம் மூடி இருப்பதுவே!

காத்திருக்கும் பொழுதுகளில்
மனம்,
உனை நினைத்து அசை போடும்
காலமெல்லாம் சேர்ந்திருக்க
தினம்,
அவனிடம் மனு போடும்

மேகமெல்லாம் அள்ளிவந்து
உன்னை தரையிறக்கி விட்டதுபோல்
மெல்ல தவழ்ந்துவருகையிலே
என்னை மொழி மறக்கச் செய்கின்றாய்

நீ என்னைக்கண்டு சிரிக்கையிலே
நாடி நரம்பெல்லாம் உறையுதடி
என் கைகளில் உள்ள மலர்கூட்டம்
தன் முகம் மலர்ந்து சிரிக்குதடி

மல்லியை அள்ளி நீ சூடயிலே
என் தலை தாண்டி கர்வம் உயருதடி
உன் மெல்லிய வெட்கத்தை காணயிலே
எனக்கும் ரகசிய வெட்கம் துளிர்க்குதடி

இரண்டு நிமிடங்களில்
இருநூறு கதை பேசினாய்
கதையின் முடிவிலே
கேள்வி ஒன்று வினவினாய்

கோதையின் அழகில் மயங்கிவிட்டால்
பேதை பேச்சுக்கள் கேட்டிடுமோ?
கதையே அறியாத என்னிடம்தான்
விடை மட்டும் கிட்டிடுமோ?!

உன் பொய்கோபமும்,
செல்ல சினுங்களும்,
காதலை இன்னும் தூண்டுதடி,
குழந்தையாய் உன்னை காட்டுதடி!

ஒரு நொடியில் வந்த கோபம்
மறு நொடியில் மறைந்திடுதே
அந்த சூட்சுமத்தை சொல்வாயா
நானும் கொஞ்சம் அறிந்திடவே!

மொழியால் கதைகள் பேசிய பின்னே
மௌனத்தால் காதலை பேசுகின்றாய்,
உன் கண்களின் ஆயிரம் அபிநயம் கண்டு
என் நெஞ்சு தாண்டவம் ஆடுதடி!

போய் வருகிறேன் என்று கூறி
என் கிள்ளை பறந்து போனதுவே,
சொர்க நிமிடங்கள் நிறம் மாறி
நிஜம் என்னை சூழ்ந்ததுவே!

நாளை உன்னை காணும் வரை
யுகங்கள் கோடி கடக்க வேண்டும்
உன்னைப்போல் காதலி பெற
தவமாய் தவம் கிடக்க வேண்டும்!!