Monday 30 July 2018

குப்பைக்காரன்

‘கோபம் தான் எனக்கு. ரொம்ப கோபம். பணமென்ன மரத்துலையா காய்க்குது?! பொன் முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியும். வெயில் மழை பார்க்காம வேலைக்குப் போன எனக்கு தான் கஷ்டம் தெரியும். இவ தங்கச்சி புருஷனுக்கு ஆப்ரேஷனுக்கு நான் ஐம்பதினாயிரம் தரணுமா? நல்ல கதையா இருக்கு. இவ அம்மா வீட்ல வழி இல்லனா நான் தான் கிடைச்சேனா? என் பொண்ணு, புள்ளையெல்லாம் செட்டில் ஆயிடுச்சுன உடனே கெளம்பி வரானுங்க இவனுக்கு இந்த பிரச்சனை அவனுக்கு அந்த பிரச்சனைனு சொல்லிக்கிட்டு. எல்லாம் இவள சொல்லணும். ஒழுங்கா பதில் சொல்லி அனுப்பறத விட்டுட்டு என் கிட்ட வந்து காசுக்கு நிக்கறா. இன்னைக்குப் போட்ட சத்தத்துல இனி ஜென்மத்துக்கும் எவனுக்கும் சிபாரிசு பண்ணிக்கிட்டு வந்து நிக்க மாட்டா. அந்த வகையில நல்லதா போச்சு’ என்று மனதிற்குள் எண்ணியபடியே மிகுந்த எரிச்சலோடு கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் சுவாமிநாதன். பணி ஓய்வு பெற்று, பென்ஷன், இரண்டு வீட்டு வாடகை என்று தாராளமாகத் தான் பணம் புழங்கியது அவரிடம். ஆனால் இந்த நிலை அவருக்கு அவ்வளவு சுலபத்தில் கிட்டவில்லை என்பது நிதர்சனமான உண்மை. தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராகப் பணியமர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி, பணி ஓய்வு பெறும்போது அந்நிறுவனத்தின் மேலாளராக இருந்தார். யார் தயையும் இன்றி பிள்ளைகளின் படிப்பு, திருமணம், சொத்து என்று தனது கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளை எண்ணி அவ்வப்போது பெருமிதம் கொள்வார். ஆனால் இதெல்லாம் தனது மனைவி மக்களுக்கு எங்கே விளங்கிடப் போகிறது என்று ஒரு சலிப்பும் அவர் மனதில் தவறாமல் தோன்றும்.

தலை கவிழ்ந்து நடந்து வந்தவரின் கால்கள் தன்னிச்சையாக வேகம் குறைக்க, முகத்தை சுழித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தவரின் எதிரே, ஒரு இருபது அடி தள்ளி குப்பை வண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதனருகே இருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த குப்பைகளை இரண்டு ஊழியர்கள் மடமடவென்று அள்ளி கொட்டிக்கொண்டிருந்தனர்.

குப்பைத்தொட்டியின் சமீபத்தில் இருந்த பிரியாணி கடையின் வாயிலில் அந்த இரண்டு ஊழியர்கள் தலை சொரிந்துகொண்டு நிற்க, உள்ளிருந்து வந்த கடை ஊழியன் ஒருவன் அவர்களிடம் நான்கு பொட்டலங்கள் கொடுக்க, சலாம் வைத்துவிட்டு நகர்ந்தனர். அவ்விருவரில் ஒருவன் ஓட்டுநர் புறம் ஏறிக்கொள்ள, மற்றொருவன் வண்டியின் பின்புறம் தொத்திக்கொண்டான். அவன் ஒரு கையால் வண்டியைப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் சற்றுமுன் அள்ளிப் போட்ட குப்பையைத் துழாவினான். அவனின் செய்கையைக் கண்ட சுவாமிநாதன் தலையில் அடித்துக்கொண்டு, முகத்தை சுழித்துக்கொண்டு நின்றிருந்தார்.

குப்பை வண்டி கிளம்பி சிறிது தூரம் செல்ல, வண்டியின் பின்னே தொங்கிக் கொண்டிருந்தவன், தெருவோரம் படுத்துக்கிடந்த சில நாய்களுக்கு எதோ வீசிவிட்டுச் சென்றான். அவை இறைச்சி துண்டுகள் என்று தொலைவில் இருந்த சுவாமிநாதனுக்கு விளங்காமல் இல்லை. அக்காட்சியைக் கண்ட நொடி அவர் பேய் அறைந்தார் போல் நின்ற இடத்தில் உறைந்து போனார். குப்பைவண்டி பார்வையினின்று  மறைந்த பின் நினைவிற்கு வந்தவர், திரும்பி வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

ஒரு லட்ச ரூபாய்க்குக் காசோலையை மனைவியிடம் கொடுத்துவிட்டு, அருகிலிருந்த சிவாலயத்திற்கு சென்றுவிட்டார். சுவாமி தரிசனம் முடிந்து மண்டபத்தில் வந்து அமர்ந்தவர் கண்களை மூடி சுவாமியின் திருவுருவை நினைவுக்கூற முற்பட, அவரின் மனக்கண்ணில் தோன்றியது அக்குப்பைக்காரனின் முகமே!!

Tuesday 10 July 2018

என் உயிரைத் தரவா?!!

உன் சுவாசத்தைக் கடன் வாங்கி
பூவிற்கு வாசம் தரவா?!

உன் பெயரைப் பாடிடவே
கருங்குயிலுக்கு ஆணையிடவா?!

மேகக் கூட்டத்தை அழைத்துவந்து
உன் பாதையில் படரவிடவா?!

விடியற் பனித்துளியை சேகரித்து
உன் கூந்தல் பூவிற்கு பொழியவா?!

இரவில் உனக்கு ஒளி சேர்க்க
தாரகைத் தோரணம் கட்டவா?!

நின் சிரிப்புகள் ஒவ்வொன்றையும்
சிப்பியுள் பூட்டி முத்தெடுக்கவா?!

உன் நிலாமுகம் போதும்
சந்திரனுக்கு விடுமுறை கொடுக்கவா?!

உனது விழியோரம் நீர் கசிந்தால்
என் உயிரைக் கொண்டு துடைக்கவா?!

Wednesday 4 July 2018

பருவத்தின் வசந்த காலம்...

அது ஒரு வசந்த காலம். துளிர்த்து சிலிர்க்கும் மரங்களைப்போல், மனதின் ஆழத்தில் அதுவரை அறிந்திடாத, அழகான, ஆத்மார்த்தமான, ஆனந்தமான எண்ணங்கள் முட்டி முளைத்து, நரம்புகளோடு வேரூன்றும் பருவ காலம். அவனை முதல் முறை காண்கிறேன். சட்டென என் நெஞ்சில் பதிந்தது அவனது காந்தக் கண்கள். அந்த அரை நொடிப் பார்வை, என் உயிர் வரை தீண்டியது. படபடக்கும் பட்டாம்பூச்சி சிறகுகள், என் நெஞ்சுக் குழிக்குள் துடிப்பது போல் ஒரு உணர்வு. அன்று என் நெஞ்சின் ஓரத்தில் ஒரு ரகசியப் பெட்டியைத் திறந்து வைத்தேன், அவனின் நினைவுகளை அதற்குள் சேகரிக்க. நான் மட்டுமே அறிந்த ரகசியப்பெட்டி!!

போகிறபோக்கில் அவன் சிந்திச் செல்லும் சிரிப்புகளுக்கு, எனக்குப் பிடித்த அர்த்தங்களைக் கொடுத்து அப்பெட்டிக்குள் அடுக்கிவைத்தேன். அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து மகிழ்ந்தும் போனேன். எப்பொழுதாவது என்னிடம் அவன் பேசினால், என் கால்களின் நடுக்கத்தை என்னவென்று நான் சொல்ல!! பதில் கூறமுடியாமல் என் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கிடக்கும் வார்த்தைகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுவதற்குள் என்னுள் ஒரு உலக யுத்தமே அரங்கேறிடும்.

அவனது குரல், இரவும் பகலும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மதுரமாய்… அமிர்தமாய்… என் பெயர் சொல்லும்பொழுது செந்தேனாய்… வார்த்தைகள் சிந்தும்பொழுது கற்கண்டாய்… நினைவுப்பெட்டகத்தில் அனைத்தும் கிடக்கின்றன. என்னிடம் எண்ணியெண்ணி அவன் பேசிய வார்த்தைகள், எண்ணிக்கை மாறாமல் என் உள்ளே வாழ்கின்றன.

எதேச்சையாக அவன் என் அருகில் நின்றால், என் விரல்களுக்குள் சிக்குண்ட என் துப்பட்டாவின் நுனியைக் கேட்டால் தெரியும் என் நிலை. அந்த நுனி, என் விரல்களுக்குள் சுருண்டு, விரிந்து, கசங்கி, குழைந்து, தோய்ந்து போவது போல், அந்த சில நொடிகளில் என் மனமும் ஆயிரம் அவஸ்தைக் கொள்கிறது.

அவனிடமிருந்து வரும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்திக்காக, வருடம் முழுதும் தவம் கிடக்கிறேன். விறுவிறுவென காலண்டர் பக்கங்களைக் கிழித்து வீச கைகள் பரபரக்கிறது. அந்த குறுஞ்செய்தியில் அவன் இட்ட முற்றுப்புள்ளியைக் கூட மணிக்கணக்காய் ரசித்திருக்கிறேன். அந்த முற்றுப்புள்ளியிலும் அவன் முகம் தெரிகிறதே!!

ஒரு ரகசியம் கூறவா? என்னுள் இப்பொழுது நூறு பெட்டிகள் சேர்ந்துவிட்டன. நெஞ்சை முட்டும் அளவு..  மூச்சு திணறும் அளவு… தனிமைதான் எத்தனை சுகம்! அவனது ஒவ்வொரு நினைவையும் அசைபோட்டுக்கொண்டு காலம் மறந்து கிடப்பது தான் எத்தகைய தவம்!! இப்படியும் ஒரு மாயம் உண்டா?!! இது தான் பருவத்தின் வசந்த காலமா?!!

Tuesday 3 July 2018

கடற்கரையில்...

கடற்கரையில் அமர்ந்திருக்கிறேன். ஆர்ப்பரித்துக்கொண்டு பாய்ந்துவரும் அலைகள், கல கல வென சிரித்துக்கொண்டு தொட்டு தொட்டு மீளும் சிறு குழந்தையைப்போல், என் கால் விரல்களை வருடிச்சென்று போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. நீயும் இந்த அலைகள் போல் தானடா - ஒரு முறை சிரிப்பாய், மறு முறை முறைப்பாய்… போக்கு காட்டும் என் காதல் போக்கிரி!! ‘ஏன் அப்படி முறைக்கிறாய்?’, ‘எனக்காகவா சிரிக்கிறாய்!!’, என்று ஒவ்வொரு முறையும் சிந்தித்தேன். பிறகு உன்னைப் பற்றி சிந்தித்தேன். உன்னைப் பற்றி சிந்தித்தவை உருமாறி உன்னை மட்டுமே சிந்திக்கலானேன். சிந்தை சூறையாடிய என் செங்கதிரோன்!!

உச்சி வெயிலில் ஜொலிக்கும் கடல் நீர் உன் சிரிப்பல்லவா! வெயிலில் அனல் கக்கும் மணல் பரப்பு உன் கோபம் அல்லவா! இதோ கண்முன்னே விரிந்துகிடக்கும் கடல் என் காதல் அல்லவா!! என்னால் நீ… உன்னால் நான்…

நீ சிரிக்கையில் கைக்கோர்த்து நிற்கும் அலையின் நுரை போல், மனதில் இன்பங்கள் படையெடுத்து நிற்கிறது. உன் கோபம் கண்டால், பட்டென வெடித்து மரிக்கும் நீர் குமிழி போல், சட்டென என் மனம் துன்பத்தில் துவள்கிறது.

கடல் மேல் மிதக்கின்றன ஆயிரம் கப்பல்கள். அவற்றுள் ஓர் படகாய் நான். கலங்கரை விளக்கமாய் உன் ஒளி - எனக்குமா? எனக்கு மட்டுமா??

எதுவாயிருப்பினும் எனது காதல் கடலில் ஆசை அலைகள் ஓய்வதாய் இல்லை.

கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களை சேர்த்து வைக்கிறேன். உனக்கும் எனக்குமாய் ஓர் அழகிய சிறு கிளிஞ்சல் கூடு கட்டிக்கொள்வோம்... சம்மதமா??!!

முத்துக்குளிப்போம் நீயும் நானும். சிப்பிகளை அள்ளி வந்து முத்து மாலை கோர்த்திடுவோம். உனக்கு நான் சூட, எனக்கு நீ சூடுவாய். கடல் சாட்சியாய் ஓர் கந்தர்வ திருமணம்… சம்மதமா??!!

அதோ தொலைதூரத்தில் கடலும் வானும் முத்தமிட்டு சங்கமித்துக்கொள்கின்றன. அது போல், உன்னுள் நான், என்னுள் நீ … முப்பொழுதும்… எப்பொழுதும்… சம்மதமா??!!

நம் பிள்ளை இரவில் உறங்கிட, பிறை நிலவினை தூளியாய் கடன் வாங்கிடுவோம்… தூளியை நீ ஆட்ட, தாலாட்டு நான் பாடுவேன்… சம்மதமா??!!

காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்தும் வாழ்வு நிறைந்தபின், கடற்கரை காற்றோடு காற்றாய் மாறி காலம் தாண்டியும் கை கோர்த்து நாம் கிடப்போம்… சம்மதமா??!!

கண்கள் மூடி உன் முகம் காண்கிறேன். உன்னை எண்ணும்பொழுதெல்லாம் இதழோரம் சிரிப்பு, உடலெங்கும் சிலிர்ப்பு, காற்றில் உன் வாசம், காலடியில் சொர்க்கம். இது மட்டும் போதும்…

மடி மீது ஏதோ கனம்… விழி திறந்து பார்த்தால், உன் முகம். எப்பொழுது வந்தாய்? எதற்கு வந்தாய்? என் மடி மீது பள்ளி கொண்டுள்ளாய், மன்மத ராஜனைப் போல்!

என் காதல் பெண்ணே, உன்னை நீங்கிச் சென்றால் தானடி உனைத் தேடி மீண்டும் வர… என் பைங்கிளிக்கு நான் என்ன போக்கிரியா? எனது சிரிப்புகள் மட்டும் போதுமா? எனது கோபங்களும் உனக்கே… எனது நட்பும் உனக்கே… எனது பகையும் உனக்கே… எனது கர்வமும் உனக்கே… எனது பணிவும் உனக்கே… எனது நொடிகளின் உணர்வுகள் அனைத்தும் உனக்கே உனக்காய்… என்னை நீ அறிந்துகொள்ள… நான் அறியாத என்னை நீ அறிந்துகொள்ள!!

எனது சிரிப்பும் கோபம் சில நாழிகையே… அழகே, அந்த கடல் போல் உன் மனம் தான் முடிவிலியன்றோ! நீ சீறினால் என் சிரிப்பு தான் உன்னை தடுத்திடுமோ… என் கோபம் தான் உன்னை நிறுத்திடுமோ… இந்த மண்மேடும் உன்னுள் புதைந்துபோகமாட்டேனா…

அடி பெண்ணே, உன் கலங்கரை விளக்கம் நானா? உன் படகின் லாந்தர் ஒளியில் உயிர் வாழும் ஈசல் நான். உன்னால் நான்… உன்னால் மட்டுமே நான்…

உன் ஆசைகள் அனைத்தும் தேனாய் தித்திக்கிறது. ஆயினும், எனக்கு எதிலும் சம்மதம் இல்லை.

கிளிஞ்சல்களால் செய்த கூடு எதற்கு? என் உயிர்கொண்டு மாட மாளிகை செதுக்கிவைத்துள்ளேன். அதன் சிம்மாசனத்தில் நீ வந்து அமர்ந்திடுவாய். உன்னைக் கவர்ந்த கிளிஞ்சல்களை வெறுக்கிறேன்!

முத்துமாலை மாற்றி திருமணமா? உன்னுள் நாள் நுழைந்தவேலை, என்னுள் நீ புகுந்த வேலை, மனங்கள் இடம் மாறி திருமணம் முடிந்துவிட்டது. இந்த முத்துக்கள் மரத்தில் காய்த்தால் என்ன?… என் கண்மணி மூச்சடக்கி முத்துக்குளிப்பதா??… முடியாது!

பேதை பெண்ணே, கடலும் வானும் கானல் கூடல் கொண்டுள்ளன. உனது தந்திரங்கள் என்னிடம் வேண்டாம். இந்த கடலும் கரையும் போல் நமது சங்கமங்கள் இருக்கும்… முப்பொழுதும்… எப்பொழுதும்…

பிள்ளைக்கு எதற்கு பிறை நிலா? என் தோள்கள் அவனுக்கு தூளியாகட்டும்… என் நெஞ்சத்துத் துடிப்பு தாலாட்டு பாடட்டும்… நீயும் தூங்கடி கண்மணி, எனது மறு தோள் சாய்ந்து!

காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்தும் வாழ்வு நிறைந்தபின், மீண்டும் பிறந்திடுவோம் காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்வதற்கே, பல கோடி முறை!!

கண்களைத் திறந்து என்னை பார். உன் இதழோரம் சிரிப்போடு, உன் வெட்கமும் தா... எனக்கும் சிலிர்க்கட்டும்.  உன் வாசம் மட்டுமே என் சுவாசமாய், நம் காலடியில் சொர்க்கம். இது போதும்...இது மட்டும் போதும்!!