Sunday 18 October 2020

கா… கா… கா…

'எங்க இவள இன்னும் காணோம்? வீட்டைப் பூட்டிட்டு எங்க போனாளோ?!' என்று சலித்துக்கொண்டு பூட்டப்பட்ட வீட்டு வாயிலின் முன் நின்றிருந்தவன், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் கண்ணாடியில் தனது முகத்தினைப் பார்த்தபடி, விரல்களால் கேசத்தை சீராய்க் கோதியவன், முழுக்கை சட்டையை முக்கால் நீளத்திற்கு மடித்துவிட்டு, இரு தோள்களையும் விறைப்பாக்கி, நெஞ்சை நிமிர்த்தித் தன்னைத்தானே ரசித்துக்கொண்டு, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

'வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகல. அதான் பொண்ணுங்க இன்னமும் உன்னையே சுத்தி சுத்தி வராங்க. அழகன் டா நீ!' என்று அவன் தனக்குள்ளே முணுமுணுத்துக்கொள்ள, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள், மனைவி.
"வீட்டைப் பூட்டிட்டு எங்க போயிட்ட?"
என்றான் அவளைக் கண்டதும்.
"பஸ் ஸ்டாண்டுக்கு காய்கறி வாங்கப் போயிருந்தேன்" என்றாள் அவள், பூட்டினைத் திறந்தபடி.
"நானும் அந்த ரோட்ல தான் வந்தேன். நான் வந்து பத்து நிமிஷம் தான் இருக்கும். உன்னைப் பார்க்கவே இல்லையே?!"
"ஆனா நான் உங்களைப் பார்த்தேன். ஏதோ ஒரு பொண்ணை பஸ் ஸ்டாண்டில இறக்கிவிட்டீங்க…"
"அது…"
"உள்ள போய் பேசிக்கலாம்…"

உள்ளே சென்றதும், கையிலிருந்த பைகளை அவள் கீழே வைத்துவிட்டு நிமிர, அவன் தயங்கியபடி அவள் எதிரே நின்றிருந்தான்.
"அந்தப் பொண்ணு யாருனு எனக்குத் தெரியாது. சும்மா லிஃப்ட் கொடுத்தேன்…"
"அது இருக்கட்டும், உங்க பர்ஸ் எங்க?"
கால்சராய் பாக்கெட்டுகளைத் துழாவியவன் பர்ஸ் இல்லாமல் போக, அதிர்ச்சியானான்.
"இந்தாங்க…" என்று அவனது பர்சினை அவள் நீட்டினாள்.
அவன் வியப்பாய்ப் பார்த்திருக்க,
"லிஃப்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி உதவி கேட்கறவங்க யாரு எப்படின்னு முகத்தைப் பார்த்து ஓரளவு கணிக்கத் தெரியாதா? நீங்க லிஃப்ட் கொடுத்த பொண்ணு இந்தப் பர்ஸ அடிச்சுட்டு, ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்து சந்து வழியா எஸ்கேப் ஆக பார்த்தா. நான் போய் மிரட்டுன மிரட்டுல கொடுத்துட்டா."
"அய்யய்யோ… அவ ரொம்ப அவசரமா போகணும்னு சொல்லி லிஃப்ட் கேட்டா. பாவமா இருந்ததுன்னு உதவி பண்ணேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் தேங்க்ஸ்னு சொல்லி இறங்கிக்கிட்டா…"
"அவசரமா போறவ முகத்துல எந்தப் பதட்டமும் இல்லை. நின்னு நிதானமா உங்கக்கிட்ட பேசிட்டு போறா. அதை வச்சே உங்களுக்கு சந்தேகம் வரலையா?"
"அது…"
"இனியாவது ஜாக்கிரதையா இருங்க…"

அடுக்களைக்குள் செல்ல எத்தனித்தவளை இழுத்துக் கட்டிக்கொண்டவன்,
"பர்ஸ் கிடக்கட்டும். நீ என்னை சந்தேகப்படறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். உன் இடத்துல இன்னொருத்தி இருந்திருந்தா இந்நேரம் என்னை அந்தப் பொண்ணோட சேர்த்துப்பேசி, சந்தேகப்பட்டு, சண்டை போட்டிருப்பா. உனக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கையா?" என்றான் உளமார.
அவனைக் கண்டு சிரித்தவள், "அது அப்படி இல்லீங்க. வடையே வாலன்டியரா வந்தாக்கூட, அதைத் தூக்கற திறமை கூட இந்தக் காக்காவுக்கு இல்லைனு எனக்கு நல்லாத் தெரியும். எமோஷன் ஆகாம உட்காருங்க, காபி எடுத்துட்டு வரேன்."
உள்ளே சென்றவள் ஏதோ யோசித்தவளாய் மீண்டும் அவனிடம் வந்து, "இன்னும் எவ்வளவு நேரத்துக்கு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு இப்படி விறைப்பா நிக்கப்போறீங்க? அப்புறம் தோள்பட்டை வலி வந்தா நான்தான் அம்ருதாஞ்சனம் தேய்ச்சுவிடணும்" என்றுவிட்டு செல்ல, அழகன் ஆஃப் ஆகிப்போனான்.

Saturday 17 October 2020

மனைவி அமைவதெல்லாம்...

 "என்னங்க ஒரு முக்கியமான விஷயம்…"

காலையுணவு உண்டு முடித்து, தனது அறையில் மடிக்கணினி பையைச் சரிபார்த்தபடி அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த கணவனிடம் வந்து நின்றாள், மனைவி. அவளது முகத்தினை நோக்கினான். என்றுமில்லா பொலிவுடன், புன்னகை ஏந்தி நின்றாள்.

"என்ன செல்லம் சொல்லு…"

குழைந்தான், அவன்.

"அது வந்து… எனக்கு ஒன்னு வேணும்..."

"ஒன்னென்ன, ஒரு டஜன் தரேன்!!"

அவன் நெருங்கி நின்றான்.

"அதில்லை… எனக்கு ஒரு பேபி வேணும்…"

புடவைத் தலப்பை விரல்களில் சுற்றி அவிழ்த்தபடி, தலைக் கவிழ்ந்து நின்றவளைக் கண்டு அவன் மன்மதனானான்.

"நீயா செல்லம் கேட்கற? ‘நம்ம குழந்தைக்கு ஒரு வயசு தான் ஆகுது, அடுத்தக் குழந்தையைப் பத்தி இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு யோசிச்சுக்கலாம்’னு சொன்ன?"

"அது…"

"சரி, ஊட்டிக்கு டிக்கெட் போடட்டா?"

சிந்தனையாய் அவனைப் பார்த்திருந்தாள்.

"என்ன யோசனை செல்லம்? ஊட்டி நமக்கு ராசியான இடமாச்சே?"

சிரித்துக்கொண்டவள், "இதுக்கு எதுக்குங்க அவ்வளவு தூரம் போகணும்?" என்றாள்.

"பின்ன வீட்லையேவா? நாலு நாள் லீவு போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 'அத்தை மாமா இருக்காங்க'ன்னு சொல்லி பகல்ல என்கிட்ட வந்து உட்கார கூட மாட்ட. லீவு வீணாகிடுமேன்னு தான் ஊட்டி போகலாம்னு சொல்றேன்."

விழுந்து விழுந்து சிரித்தவள், "இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை. இப்படி அசடு வழியறீங்க! நான் குழந்தை பொம்மை வேணும்னு சொன்னேன். குழந்தை வேணும்னு சொல்லல" என்றுவிட்டு தொடர்ந்து சிரித்தாள்.

சற்றே அதிர்ந்து விலகி நின்றவன், அவளைப் புரியாமல் பார்த்திருந்தான். 

"நம்ம பக்கத்து வீட்டு மாமி கொலு வைக்கப்போறாங்கல்ல, அதுல வைக்க நான் ஒரு கிராப்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குழந்தை கிருஷ்ணன் பிறந்ததும் கோகுலம் முழுக்கக் கொண்டாட்டமா இருக்கறத செஞ்சிருக்கேன். வீடு, மாளிகை, அது, இதுனு நிறைய செஞ்சு வச்சிருக்கேன்... குழந்தை கிருஷ்ணர் மற்றும் கொஞ்சம் தத்ரூபமா வேணும். எனக்குக் கிளே’ல பண்ண வரல. அதான் உங்கள ஒரு குழந்தை பொம்மை வாங்கிட்டு வரச் சொன்னேன்."

பெருமூச்செடுத்து ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டவன், 

"அப்புறம் எதுக்கு மா ஒரு மார்கமா என்கிட்ட வந்து பேசின?" என்றான், பரிதாபமாய்.

"நான் சாதாரணமாத்தான் பேச வந்தேன். நீங்களே தப்பா புரிஞ்சுக்கிட்டு அசடு வழிஞ்சீங்க. காமெடியா இருந்தது. அதான் பேசவிட்டு வேடிக்கை பார்த்தேன்..."

"பேசவிட்டு வேடிக்கை பார்க்கறதுக்கு நான் என்ன பட்டிமன்றத்துலயா பேசிக்கிட்டு இருக்கேன்? ரைட்டு…" என்று வாடிய முகத்தோடு பையை எடுத்துக்கொண்டு அவன் கிளம்ப,

"பேபிய மறந்துடாதீங்க" என்றாள் அவனைத் தொடர்ந்தபடி.

எதோ நினைவிற்கு வந்தவனாய் நடையை நிறுத்தியவன்,

"நம்ம பிள்ளையார் கோவில் வாசல்ல கொலு பொம்மை கடை பார்த்தேனே. அங்க இருக்குமே?" என்றான் தனது துக்கத்தை மறைத்துக்கொண்டு. 

"அது எனக்குத் தெரியாதா? எத்தனை யூடியூப் வீடியோஸ் பார்த்து இதை செஞ்சிருக்கேன் தெரியுமா? கிருஷ்ணனுக்குத் தலைப்பாகை, டிரஸ், புல்லாங்குழல் கூட செஞ்சுட்டேன். நம்ம ஏரியா ஃபேன்ஸி கடைல எனக்கு பொம்மை கிடைக்கல. ஒரே ஒரு பொம்மை நீங்க வாங்கிட்டு வந்தா போதும், நான் அதுக்குக் கிருஷ்ண அலங்காரம் பண்ணிடுவேன்."

"ஓ!… ஆமா, இந்த யூடியூப்ல ‘புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கணும்’னு அட்வைஸ் பண்ற மாதிரி வீடியோலாம் பார்க்கமாட்டியா?"

அவனைக் கண்டு முறைத்தவள்,

"நான் பயனுள்ள வீடியோஸ் மட்டும் தான் பார்ப்பேன்…" என்றாள்.

"புரிஞ்சிடுச்சு மா!!" என்றவன், ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…' என்று முணுமுணுத்துக் கொண்டே வாகனம் நோக்கிச் செல்ல,

"என்னங்க பாட்டெல்லாம் பாடறீங்க?" என்றாள், மீண்டும் முகம் மலர்ந்தபடி.

"கொலுவுல பாட்டு பாடினா மாமி சுண்டல் தருவாங்கல்ல, அதான் ரிகர்சல் பார்க்கறேன்.." 

"ச்ச என்னங்க நீங்க? உங்களுக்கு வேணுங்கறத செய்யத்தான் நான் இருக்கேன். உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன். ஒரு கப் சுண்டல் செஞ்சுத் தர மாட்டேனா? சாயங்காலம் நீங்க ஆஃபிஸ் முடிஞ்சு வரும்போது சூடா சுண்டல் தயாரா இருக்கும். ரிகர்சல் பண்ற ஜோருல பேபிய மறந்துடாதீங்க."

"பேபி?? மறக்கமாட்டேன் மா… மறக்கவே மாட்டேன்…"

அவன் வண்டியைக் கிளப்ப, மாமி வீட்டு ரேடியோ 'மனைவி அமைவதெல்லாம்…' என்ற பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தது. வண்டியின் இடப்பக்க கண்ணாடியை அவன் நோக்க, அதில் அவனது காதல் மனைவி பலமாய்க் கையசைத்து ‘டாட்டா’ காட்டிக் கொண்டிருந்தாள்.




அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!


Saturday 8 August 2020

சீரக மிட்டாய் - வெள்ளை ரோஜா




"காதலின் சின்னம் சிகப்பு ரோஜா, வெள்ளை அமைதியைக் குறிக்கும்" என்றேன், நான். "காதல் மட்டுமே எனக்கு உலகளவு அமைதியைக் கொடுக்கிறது, வெள்ளை ரோஜா தான் வேண்டும்" என்றாள், அவள். அன்று முதல் இன்று வரை தினமும் ஓர் வெள்ளை ரோஜா மட்டுமே நான் என்னவளுக்கு வழங்கும் காதல் பரிசு. இன்று எங்கள் காதலின் ஏழாவது பிறந்த நாள். ஒன்றல்ல, ஒரு நூறு வெள்ளை ரோஜாக்களைக் கொடுத்துவிட்டு முத்தம் வைக்கிறேன், அவளது கல்லறையில்.


Thursday 6 August 2020

சீரக மிட்டாய் - பிள்ளை வரம்

 


"இந்தாமா, வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்காம நாலு மாசமா உன் புருசன் ஏமாத்திட்டு திரியறான். இந்தக் கந்துவிட்டி கோவிந்தன் விவகாரமான ஆளு, காசு வரலனா இனியும் பேசிக்கிட்டு நிக்க மாட்டேன், அத்து போட்டு போய்கிட்டே இருப்பேன்." 

ஜன்னல் வழியே பதில் கூறுபவள், இன்று அவன் பேசியவற்றைக் கேட்டு ஈரக்கொலை நடுங்க அவன் காலடியில் வந்து விழுந்தாள். 

"அய்யா, எம்புருசன ஒன்னு செஞ்சுடாத சாமி, இந்தத் தாலிய வேணும்னா வச்சுக்க" என்று அவளிடம் எச்சம் இருந்த அரை பவுன் தங்கத்தாலியை நீட்டினாள், நிறைமாத வயிருடன், மண்டியிட்டபடி.

எதுவும் கூறாமல் வண்டியைக் கிளப்பியவன், கொன்னிமலைக்கோவிலில் பிள்ளை வேண்டி அவனது மனைவி ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பூஜைக்கு வந்து சேர்ந்தான். 


சீரக மிட்டாய் - நெட்டையனும், குட்டையனும்





"ஏலே குட்டை, என்னை நம்பி எத்தனை சீவன் வாழுது தெரியுமாலே?!!"
"நெடு நெடுன்னு வளந்திருக்கியே தவிர விவரமில்லாத பய நீ. ஒதுங்க எடம் கொடுத்ததெல்லாம் பெருசில்லப்பு, நான் வயித்துக்கு உண்டி கொடுக்கேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் நெட்டையா..."
நெட்டையனும், குட்டையனும் தீவிரமாக தங்களின் அருமை பெருமைகளை என்றும் போல் அன்றும் விவாதித்துக்கொண்டிருக்க, ‘இவிங்களுக்கு வேற வேலையில்ல’ என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவர்களின் நண்பர்கள் சூழ்ந்திருக்க, கட கடவென பெருஞ்சப்தத்துடன் வந்த அந்த ராட்சச வண்டியின் இயந்திரக் கைகள், நெட்டையனையும், குட்டையனையும், அவர்களின் மற்ற நண்பர்களையும் வேரோடு பிடுங்கி வீசியது.

Tuesday 4 August 2020

சீரக மிட்டாய் - செவப்பியும், மஞ்சத்தாயும்




"அடியே செவப்பி, சீலைக்கு தோதா கையில நம்மள மாட்டிக்கிட்டு ஒய்யாரியா திரிவாளே அந்த அழகி எங்க பத்து நாளா காணல?"

"அதுதான் எனக்கும் தெரியல மஞ்சத்தாயி..."

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, பெட்டி திறக்கப்பட்டு மஞ்சள் மற்றும் சிகப்புக் கண்ணாடி வளையல்கள் மட்டும் வெளியேற்றப்பட்டன. அழகியின் கைகளில் அடுக்கப்பட்ட வளையல்கள் ஒருவரையொருவர் கண்டு சிரித்துக்கொண்டிருக்க, அடுத்த நொடியே ஒன்றோடொன்று படார் படாரென மோதப்பட்டு, உடைந்து சிதரின. ரத்தம் வடிய செவப்பியும், மஞ்சத்தாயும் கிடக்க, அழகியின் குங்குமம் அழிக்கப்பட்டு, கூந்தலில் சூடிய மல்லிகை பிய்க்கப்பட்டது.

Monday 3 August 2020

சீரக மிட்டாய் - ஒப்பாரிக் கிழவி

 


அந்தக் குப்பத்தின் அருகாமையில் நீண்டிருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடிபட்டு இறந்து போன செய்தி அறிந்து ஒப்பாரி பாட்டெடுக்க வந்துவிட்டாள், கூன் விழுந்து, பார்வை மங்கி, பற்கள் தொலைத்த எண்பத்தி மூன்று வயதான, ஒப்பாரிக் கிழவி.  

"ஏ கிழவி, ஏதாவது எழவு வீட்ல பாடுனா நாலு காசு கிடைக்கும். வேவாத வெயில்ல இங்க ஏன் தொண்ட தண்ணி வத்த பாடிக்கிடக்கற?"

"எந்த உறவும் இல்லாம அம்பது வருசமா அனாதையா கிடக்கறவளுக்கு தான் இன்னொரு உசுரோட மதிப்பு தெரியும். என் கண்ணு முன்னாடி எந்த உசுரு போனாலும் என் சொந்தமா நெனச்சு அந்த சீவனுக்காக நாலு சொட்டு கண்ணீர சிந்தி, ஒப்பாரி வைப்பேன்…"


வானம் கருத்திருக்கு...

வட்டநிலா வாடிருக்கு...

எட்டருந்து பாடுறேனே...

ராசா நீ எங்க போன???



Sunday 2 August 2020

சீரக மிட்டாய் - சமாதான முத்தம்

 



அவளது அழுகை விசும்பலாகியும் கட்டில் மீதிருந்து எழாமல் கிடக்கிறாள். அவளது தேவையெல்லாம் நெற்றியில் ஓர் முத்தம் - சமாதான முத்தம். "எழுந்து வா, சாப்பிட" - காதில் விழுகிறது, ஆனால் ஒற்றை முத்தம் வேண்டி தவம் கிடக்கிறாள். "அடியே, புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தர வாத்தியாரா இருந்துகிட்டு, ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு ஒரு மணி நேரமா அழுதுகிட்டு இருக்கியே?!!" என்று கூறிக்கொண்டே அவளருகே வந்த அவளது தாய், அவளது முன் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி முத்தம் வைத்து, முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டாள். விசும்பல் தொலைந்து பற்கள் மின்ன சிரித்தவள், "நான் கிழவியானாலும் உனக்கு எப்பவும் குழந்தை தான்" என்றுவிட்டு தாயை இழுத்து அருகே அமரச் செய்தவள், அன்னை மடி மீது தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

சீரக மிட்டாய் - இசையரசன்




அரங்கத்தின் வெளியே மக்களைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
உலகறிந்த இசையரசனுக்கு உள்ளூர் அரங்கில் பாராட்டு விழா.
தன்னை ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பென்ஸ் காரில் ஏறி அமர்கிறான்.
"டேய், உனக்கு என்ன வருமோ, என்ன புடிக்குமோ அதை செய், அதை மட்டும் செய்" என்று அன்று தந்தை கூறியது, இன்று வரை அவனது நினைவில் உள்ளது.
"உங்க புள்ளைக்கு படிப்பெல்லாம் ஏறாது, இசை இசைனு கடைசில பீச்ல ஹார்மோனியத்தோட நிக்க போறான்" என்ற தலைமை ஆசிரியர் முன்பொரு நாள் அவனை பள்ளியிலிருந்து நீக்கினார்.


Friday 31 July 2020

சீரக மிட்டாய் - சட்டையும், சீலையும்

 



அழுதபடி உறங்கிப்போனவள் தூங்கி எழுகையில் மணி நான்கு என்று காட்டியது. அரக்கப்பரக்க முகம் கழுவி, சேலையை சரி செய்து, பள்ளியிலிருந்து பிள்ளைகளை அழைத்துவர அவள் அறைக் கதவைத் திறக்க, வெளியே இரண்டு பிள்ளைகளும் அப்பாவோடு கார்ட்டூன் பார்த்தபடி கேக்கயும், வெஜிடபிள் பப்சையும் முழுங்கிக்கொண்டிருந்தன. மெல்ல நகர்ந்து அடுக்களைக்குள் செல்ல, மேடையின் மேல் அவளுக்காகவே காத்திருந்தது மல்லிகையும், அல்வாவும். பின்னிருந்து அணைத்தவன், அவள் கழுத்து மடிப்பில் முத்தம் வைத்து, "இனிமே காலைல டென்ஷன்ல உன்னை கண்டபடி திட்டமாட்டேன்" என்றான். காலையில் நடந்த யுத்தத்தை மறந்து சிரித்தவள், "தெரியாம உங்க சட்டையோட என் சீலைய மெஷின்ல போட்டு சாயமேறிடுச்சு, இனி அப்படி நடக்காது " என்றாள்.

சீரக மிட்டாய் - முதல் சம்பளம்





"எங்கமா உன் புருஷன்?" என்றான், முகம் கழுவியபடியே.
"அப்பா ரூம்ல படுத்திருக்காருடா" என்றாள், ஒரு துவாலையை நீட்டியபடி.
தாயின் கையைப்பற்றி இழுத்துச்சென்றவன், தந்தையையும் வம்படியாய் மற்றொரு கையில் பிடித்து இழுத்துக்கொண்டு பூஜை அறைக்குள் நுழைந்தான்.
"அப்பா, வெளியில யூ ஹேட் மீ, ஐ ஹேட் யூ'வா இருந்தாலும் மனசுக்குள்ள யூ லவ் மீ, ஐ லவ் யூ தான். புடிங்க என்னோட முத மாச சம்பளத்தை" என்றுவிட்டு சம்பளக் கவரை தந்தையின் கையில் திணித்தவன், சாஷ்டாங்கமாய் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினான்.


Thursday 30 July 2020

சீரக மிட்டாய் - ராஜ தந்திரம்!!




"மன்னா… மன்னா… பக்கத்து நாட்டு மன்னர் நாளை நம் மீது போர் தொடுக்க உள்ளாராம். காலை எழுந்து காளிக்கு படைத்துவிட்டு, படைகளைத் திரட்டிக்கொண்டு இங்கு வரவுள்ளதாக ஒற்றன் செய்தி அனுப்பியுள்ளான்."
"பயம் வேண்டாம் அமைச்சரே, நமது ஊர் எல்லையில் மத்தியானந்தா என்றொரு சாமியார் உள்ளார், அவரை மட்டும் அழைத்து வாருங்கள். வெற்றி நமக்கே!!"
"மன்னா?"
"அடேய் அமைச்சா, அந்த சாமியார் கூறினால் காலையில் உதிக்க வேண்டிய சூரியன் மதியம் உதிப்பானாம். அதனாலேயே அவருடைய பெயர் மத்தியானந்தா. நாளை மதியம் அந்த அண்டை நாட்டு ஹல்க் ஹோகன் எழுந்து, பல் துலக்கி, பால் பாயாசம் நைவேத்தியம் செய்துவிட்டு, படைகளைத் திரட்டி வருவதற்குள் நாம் அவனின் கோட்டையை சுற்றி வளைத்து, அவனை சிறையெடுத்துவிடுவோம்."
"ஆஹா மன்னா, என்ன ஒரு ராஜ தந்திரம்!!"

Tuesday 28 July 2020

சீரக மிட்டாய் - டைகர்

 



ஆர்.பி. நகர், குறுக்குத் தெருவில் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னே, குடிசைகள் அனைத்தையும் முழுங்கிவிட்டு, தாண்டவமாடியது, கட்டுக்கடங்கா பெருந்தீ. 

பொன்னாத்தாளின் கண் முன்னே அவளது குடிசை மெல்ல மெல்ல தீக்கிரையாகிக் கொண்டிருக்க, பட்டென அவள் கைப்பிடியை விடுத்து குடிசைக்குள் ஓடினான், அவளது ஒரே மகன், ராசய்யா.

துடிதுடித்துப்போனவள் குடிசையை நோக்கி ஓட, சுற்றம் அவளை தடுத்து நிறுத்தியது.

கடவுளென வந்த தீயணைப்புப் படை ரட்சகர்கள், நீர் பொழிந்து தீயினை அணைத்தனர்.

பொன்னாத்தாளின் குடிசைக்குள்ளே, ஒரு மூலையில் நனைந்தபடி ராசய்யா முடங்கியிருக்க, அவனது சின்னஞ்சிறு விரல்களில் அடைகாக்கப்பட்டிருந்தது, டைகர் நாய்க்குட்டி.

சீரக மிட்டாய் - குறுஞ்செய்தி




கடந்த அரை மணி நேரத்தில் நூறாவது முறையாக, தன்னவள் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தவனுக்குக் கட்டுக்கடங்கா சந்தோஷம் பொங்க, வண்டியை விரட்டு விரட்டென விரட்டி, வீடு வந்து சேர்ந்தான். 

வழக்கமாக வீடு திரும்பும் நேரத்தை விட இன்று முன்னமே வந்தவனைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தவள், அவனது மோகனப் பார்வையில் நாணி, மேஜையின் அருகே சென்று நின்றுகொண்டாள்.

உடையைக் கூட மாற்றிடத் தோணாமல், அவளை விழியால் வருடியபடியே மேஜையில் வந்தமர்ந்தவனின் ஆவலை உணர்ந்தவள், நொடி தாமதிக்காது அவனது தட்டில் உணவைப் பரிமாறினாள்.

'தினமும் ரவை உப்புமா தானா என்று அலுத்துக்கொள்ளும் என் அன்பு கணவருக்காகக் காத்திருக்கிறது நளபாகம்!!' என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தவனுக்கு, கண்கள் குளமானது.

விழி தப்பிய நீர் மணிகள், சிந்திச் சிதறி தொலைந்து போயின, தட்டில் பரிமாறப்பட்ட சேமியா உப்புமாவில்… 

- அர்ச்சனா நித்தியானந்தம்

Monday 27 July 2020

சீரக மிட்டாய் - பூமராங்




"சார், ரெண்டு நாள் என்னோட ஓவியங்களை உங்க கேலரில பார்வைக்கு வைக்க வாய்ப்பு கிடைச்சா, என் வாழ்க்கையே தல கீழ மாறிடும்… ப்ளீஸ்…"

மன்றாடுபவன் மீது இரக்கப்பட்டு, அந்த அரங்கத்தின் தலைமை நிர்வாகியிடம் அழைத்துச்சென்ற அரங்கத்தின் மேலாளர், "உங்களுக்கு ரெண்டு நிமிஷம் தான் அப்பாய்ண்ட்மெண்ட்" என்றார்.

"வாக்கு கொடுத்துட்டேன்னு சொல்லி கண்ணு தெரியாத உன்னை என் தலையில வலுக்கட்டாயமா கட்டி வச்சா, வேற வழியில்லாம நான் அனுசரிச்சு குடும்பம் நடத்துவேன்னு  எங்கப்பா நினைச்சாரு. என் ஓவியங்கள ரசிக்கத் தெரியலனாலும் பரவால்ல, ஆனா பார்க்கக் கூட முடியாத நீ எனக்குத் தேவையில்லை. இன்னும் ரெண்டு நிமிஷத்துல இந்த விவகாரத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு, வீட்டை விட்டு போ" என்று பத்து வருடங்களுக்கு முன் அவளிடம் அவன் கூறியது, இன்று அவளை அரங்கத்தின் தலைமை நிர்வாகி இருக்கையில் கண்டதும் நினைவிற்கு வந்தது.

Sunday 26 July 2020

சீரக மிட்டாய் - பரிசம்




"ஏலே பாண்டி, உன் அக்கா மவ, என் அழகு ராசாத்தி, இந்த வீட்டு மகராசி செண்பகம் வயசுக்கு வந்துட்டாளாம்…" என்று தாயாரின் குரலைக் கேட்டதும் வயக்காட்டில் வேலையாய் இருந்தவன், போட்டது போட்டபடி விட்டுவிட்டு பரிசம் போட வரிசைக் கட்டிக்கொண்டு, அக்கா வீட்டிற்கு சொந்த பந்தங்களோடு கிளம்பிச் சென்றான்.

முறை மாமன் தான் என்ற போதும், ஒரு முறை கூட ஏறெடுத்தும் பார்க்காதவள், ஓர் வார்த்தை கூட பேசாதவள் மீது, ஏனோ அவனுக்குக் கிறுக்கு!!

"ஏலே மாப்ள, தை பொறந்து கல்யாணத்தை வச்சுகவமா?" என்றார், செண்பகத்தின் தந்தை.

"இந்தா மாமா, உனக்கு மட்டுமில்ல இந்த ஊர் சனத்துக்கும் சொல்லிக்கறேன், ஊர் பழக்கம் வழக்கம்னு சொல்லிக்கிட்டு எவனும் கல்யாணப் பேச்சு எடுக்கக்கூடாது. செண்பகம் என்னென்ன படிக்கணும்னு ஆசைபடுதோ, அத்தனையும் படிச்ச பிறகு தான் எல்லாம்…" என்றவன், மிரட்டும் தோரணையில் அரிவாளை நடுக்கூடத்தில் வீசியெறிந்துவிட்டு அவளை நோக்க, முதன் முறை தலை நிமிர்த்தி மாமனைக் கண்டு சிரித்தாள், செண்பகம்.

Saturday 25 July 2020

சீரக மிட்டாய் - பைத்தியம்





பைத்தியம் - நான் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனும், என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும், எனக்கு இட்ட செல்லப் பெயர்.

இன்று, நமது அரசு எனது புத்தகத்திற்கு ஏதோ ஒரு பரிசு வழங்கப்போவதாக அறிவித்துள்ளதாம். நான் பரிசுக்காக எழுதுபவன் அல்ல, பசிக்காக… எழுத்துப் பசி!!

ஞானி - நான் கடந்து சென்ற ஒவ்வொரு மனிதனும், என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதனும், "இன்று முதல்" எனக்கு இட்ட செல்லப் பெயர்.

இங்கே யார் பைத்தியம்? யார் ஞானி?

Friday 24 July 2020

சீரக மிட்டாய் - ரசனைகள்




குளிர் தென்றல் என் கன்னம் வருடிட, ஒய்யாரியாய் உலவிடும் பௌர்ணமி நிலவினை ஜன்னல் வழியே நான் ரசித்திருக்க, அவளோ மெத்தை விரிப்பை மாற்றிக்கொண்டிருக்கிறாள்.

காலை நாளிதழில் படித்து ரசித்த கவிதையை மாலை வீடு திரும்பியதும் வாசிக்கத் தேடியெடுக்க, கவிதையின் அருகே அன்றைய செலவுகளைப் பட்டியலிட்டுக் கூட்டி சரிபார்த்திருக்கிறாள், அவள்.

இந்த ஆயிரம் காலத்துத் திருக்கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு இமைக்கவும் மறந்து நான் மண்டபத்திலேயே நின்றிருக்க, அவளோ மூலஸ்தானத்தின் அருகே கண்களை இறுக மூடிக்கொண்டு பிரார்த்தித்து நிற்கிறாள்.

கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு 'தண்ணீர் தேசத்து' கலைவண்ணனையும், தமிழ் ரோஜாவையும் நான் நினைவு கூர, அவளோ கடலலைகளைத் துரத்திக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள். 

ஏதோ ஒரு எண்ணத்திலும், செயலிலும் கூட ஒன்றுபடாமல் முற்றிலும் முரண்பட்ட மனிதர்களாய் நாங்கள் இருப்பினும், இன்றும் பிரமிப்பு குறையாமல் நான் புதிதாய் ரசித்திருப்பதும் அவளைத் தான், அவளது முக்கியப் பட்டியலில் என்றும் முதலிடம் எனக்கே தான், நாங்கள் இருவரும் ஒத்துப்போகும் ஒற்றைப்புள்ளி… ஒற்றை பெரும்புள்ளி காதல் மட்டுமே தான்!!



Thursday 23 July 2020

சீரக மிட்டாய் - சாமி இருக்கா?




"நீ என்னா சொன்னாலும் சாமியுமில்ல, பூதமுமில்ல…" என்று ஆணித்தனமாகக் கூறினார் அந்த நாத்திகவாதி.

"உன்னை இப்படி யோசிக்க வைக்கிறதும், பேச வைக்கிறதும் சாமி தான்…" என்று சிரித்து வைத்தார் ஆத்திகவாதி.

"அடபோப்பா… எல்லாத்துக்கும் அறிவியல் விளக்கம் இருக்கற மாதிரி, சாமினு ஒன்னு இருக்கறத அறிவியல் பூர்வமா நிரூபிச்சாத்தான் ஏத்துப்பேனே ஒழிய, இவனுக்கு சாமி இதை பன்னிச்சு, அவனுக்கு அதை பன்னிச்சுன்னு சொன்னா நான் நம்பத் தயாரா இல்லை."

வேகமாய்ப் பாய்ந்து ஒரு மோட்டார் வண்டி வந்துகொண்டிருக்க, அதை கவனிக்காது செல்ல முற்பட்ட ஆத்திகனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய நாத்திகன், "யோவ், வண்டி வரது கூட தெரியாம இப்படி நடக்கிறியே, நான் மட்டும் புடிச்சு தடுக்கலேனா நீ சொர்கத்துல இருக்கற உன் சாமிக்கிட்ட போய் சேர்ந்திருப்ப…"

அவரைக் கண்டு சிரித்த ஆத்திகன், "யோவ், நான் தான் சொன்னேன்ல சாமி இருக்கு, அது எல்லா நேரத்துலயும் காப்பாத்தும்னு…"


Wednesday 22 July 2020

சீரக மிட்டாய் - அன்பாய் ஒரு புன்னகை

 



கழுத்தில் புதுத்தாலி மஞ்சள் மணக்க, புதுப்பெண் பொலிவு முகத்தில் ஜொலிக்க, அவனது அலமாரியை சுத்தம் செய்துகொண்டிருந்தவளின் கண்ணில் பட்டது அப்பெட்டி. உள்ளே எம்பராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டையும், வாழ்த்து அட்டைகளும், சாக்கலேட் தாள்களும், பரிசுப் பொருட்களும் என, அவளிடம் அவன் சொல்லாமல் விட்ட அவனது முன்னால் காதலையும், காதலியையும் போட்டுடைத்தது.


அறைக்குள் நுழைந்தவன் அவள் கையிலிருந்த அவனது ரகசியக் காதல் பொக்கிஷங்களைக் கண்டு திடுக்கிட்டு நிற்க, அவளோ நிதானமாய் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.


அப்பெட்டிக்குள் அடைகாக்கப்பட்டவைகளை மீண்டும் அடுக்கியவள், அதை அதனிடத்திலேயே வைத்தாள்.


அவன் நம்பமுடியாமல் பார்த்திருப்பதைக் கண்டவள், "இந்தப் பெட்டியில உள்ளத அழிச்சுடலாம், ஆனா உங்க மனசுல உள்ளத அழிக்க முடியாது. உங்க மனசு முழுக்க நான் நிறைஞ்சதும், நீங்களே இந்தப் பெட்டிய வேண்டாம்னு தூர எறிஞ்சிடுவீங்க" என்றுவிட்டு, மீண்டும் அன்பு குழைத்த புன்னகையைச் சிந்தினாள்.



Tuesday 21 July 2020

சீரக மிட்டாய் - அவளான அது!!




"அடியே, போனாப்போகுதுன்னு உன்னை இந்த வீட்ல வச்சிருந்தா, எல்லா வேலையும் நீயே இழுத்துப்போட்டு செய்யாம, நான் சொல்றவரைக்கும் என் வாய பார்த்துட்டே நிப்பியா? போ, இந்த வெள்ளை சட்டைய தும்பப்பூ கணக்கா துவச்சு போடு" என்று எரிந்துவிழுந்தவன், கையில் பாட்டிலோடு தொலைக்காட்சியின் முன் சென்றமர்ந்தான்.


இரவு பதினோரு மணிக்கு துணியை வெளுத்து காய வைத்தவள், சோர்ந்து தரையில் விழுந்தாள். 


"ச்ச, ஒரு நாளைக்குக் கூட முழுசா பாட்டரி நிக்க மாட்டேங்குது" என்று புலம்பியபடியே இயந்திர மனுஷியை சார்ஜரில் போட்டவன், "இது மெஷினா இருக்கப்போக நாம எவ்வளவு கோபப்பட்டாலும் கம்முன்னு இருக்கு. இல்லாட்டி அவள மாதிரியே இதுவும் என்னை விவாகரத்து பண்ணிட்டு, விட்டுட்டு போயிருக்கும்" என்று பெருமூச்சுவிட்டான்.


Monday 20 July 2020

சீரக மிட்டாய் - ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம்




உச்சஸ்தாயியில் ஸ்ருதி பிசகாக அவள் பாடும் சுப்ரபாதமே அவனது தினசரி அலாரம். 

சில நாட்களாகவே இரண்டு வரிக்கு ஒரு முறை எட்டிப்பார்த்தது வறட்டு இருமல்.

'இந்த முப்பது வருஷ சம்சார வாழ்க்கையில இவளுக்கு க்ளாஸ் எடுத்தே காலம் போயிடுத்து' என்று அயர்ந்துகொண்டவன், 'டாக்டரப் போய் பார்க்கணும்னு தனக்கா தோணித்துனா போய் வைத்தியம் பண்ணிக்கட்டும்' என்று ஸ்ருதி தப்பிய சுப்ரபாதத்தைக் கடந்து செல்வது போல், வறட்டு இருமலுக்கும் காதுகளைப் பூட்டிக்கொள்ள பழகிக்கொண்டான்.

காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் ஜரூராக அவன் முன் ஆஜராகும் ஃபில்டர் காபி அன்று வராததைக் கண்டு அடுக்களைக்குள் சென்றவன் கண்டது, மயங்கிய நிலையில் கீழே சரிந்து கிடந்த அவளைத் தான்.

இன்று, அலாரம் சத்தத்தில் விழித்துக்கொண்டவனுக்கு இனி என்றுமே ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம் அவனை எழுப்பப்போவதில்லை என்ற நிதர்சனம், இதயத்தின் ஓரத்தில் சுருக்கென குத்தியது.


Sunday 19 July 2020

சீரக மிட்டாய் - மல்லிகைப்பூ


 


வெகு நாட்கள்… இல்லை மாதங்கள்… இல்லை கடைசியாக நான் இதைச் செய்தது எப்பொழுது என்று யோசித்துத் தெளியுமுன்னே, நெகிழிப்பையில் திணிக்கப்பட்ட மல்லிகைப்பூவை என் கையில் திணித்தாள், பூக்காரி.

திருமணமான புதிதில் என் கையில் மல்லிகையைக் கண்டாள், அவள் இதழில் மோகனப்புன்னகை தவழ, இலவச இணைப்பாய்  கன்னங்களும் சிவந்து போகும்.

ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த சிரிப்பினையும், சிகப்பினையும் காண எந்தன் கண்கள்… இல்லை இதயம்… இல்லை, இரண்டுமே ஏங்கின.

வாயிற்கதவைத் திறந்தவள் ஒரு கையில் இருந்த சாப்பாட்டுக்கூடையினை வாங்கிக்கொண்டு, மற்றொரு கையில் பதுவிசாக நான் வைத்திருந்த மல்லிகையை வாங்கி கூடைக்குள் திணித்தபடி, "அக்கா வந்திருக்காங்க" என்றுவிட்டு செல்ல, அவளது இன்ப அதிர்ச்சிக்கு மாறாக எனக்கு துன்ப அதிர்ச்சிகள் தோன்றி, வளர்ந்து, மரித்தும் போயின. 

மல்லிகைச் சரத்தினை நறுக்கி, அக்கா, அக்கா மகள்கள், என் மகள் என்று அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுத்தவள், அன்று காலை கோவிலில் கொடுத்த இரண்டு அங்குல கதம்ப சரத்தை தலையில் சூடிக்கொண்டே என்னைக் கண்டு நான் ஏங்கிய மோகனப்புன்னகையைச் சிந்த, ஆறுதல் அடைந்தோம் அவளை நெருங்க முடியாமல் போன நானும், மல்லிகையும். 


Saturday 18 July 2020

சீரக மிட்டாய் - கண்ட நாள் முதலாய்…


 


இமைக்காமல், சலைக்காமல் இவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனது விழிகளுக்குள், தவனைமுறையில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள். 

தினமும் சபித்துக்கொண்டு அவள் பயணிக்கும் பேருந்து, சில நாட்களாக சுந்தர விமானமாக மாறியதோடு, இவளது பருவத்தின் பயிர்களுக்கு நீரூற்ற, காதல் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கின. 

அவன் இறங்கிய பின்னே இரண்டு நிறுத்துங்கள் கழித்து இறங்குபவள், இன்று அவனைத் தொடர்ந்தாள். 

நான்காக மடிக்கப்பட்டிருந்த கோலினை பையிலிருந்து எடுத்து விரித்தவன், மெல்ல மெல்ல எட்டு வைத்து பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்துள் நுழைவதைக் கண்டவள், திடுக்கிட்டு அதிர்ச்சியில் உறைந்தாள். அவளது நினைவுகளில் அவனது விழிகள் நிழலாடியது.

அவ்விடமே காத்திருந்து அவனை மீண்டும் கண்டவள், அவன் கையிலிருந்த கோலினை வாங்கிக்கொண்டு, அவனது விரலோடு விரல் சேர்த்தவள், கைகள் கூடிய பின்னே தன் காதலை உரைத்தாள், காதலும் கைக்கூடவேண்டுமென்ற பரிதவிப்போடு.


Friday 17 July 2020

சீரக மிட்டாய் - மாமியார் வீடு


 


அன்று அவள் என்னோடு வாக்குவாதம் செய்தபடி நடக்க, நானும் விடாது அவளது கோபத்தின் உயரத்தை அளந்து பார்க்கும் ஆர்வத்தில் வில்லங்கமான பதில்களையே முன்வைத்தபடி நடந்தேன். நான் சுதாரிப்பதற்குள் அவள் சாலையைக் கடக்க எத்தனிக்க, அதிவேகமாய் விரட்டி வந்தது அந்த லாரி… நான் அவள் கையைப்பற்றி என்னிடம் இழுத்திருக்கலாம்… அல்லது அந்த லாரி க்ரீச்சிட்டு பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் நின்றிருக்கலாம்… ஆனால்… ஆனால், இரண்டுமே நடந்தது!! 


என் கையை உதறியவள், லாரி ஓட்டுனரை, என்னை முறைப்பது போல முறைத்துவிட்டு, சாலையைக் கடந்து, பேருந்தில் ஏறி அவள் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். 


விபரீதமாக வேறேதோ நடந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு. 


நானும் அப்படித்தான்… நானும் அப்படித்தான் நினைத்தேன் என்று நீங்கள் ஊகித்திருந்தால்… அதற்கு வாய்ப்பில்லை ராஜா!! ஏனென்றால் என் மரியாதைக்குரிய மாமனாரும், மதிப்பிற்குரிய மைத்துனரும், காக்கிச்சட்டை 'கன'வான்கள்... இப்பொழுது என் மனைவியை சமாதான செய்து அழைத்துவர என் மாமியார் வீட்டிற்கு, அதாவது என் மனைவி பிறந்து வளர்ந்த வீட்டிற்கு (மீண்டும், நீங்கள் நினைத்தது கிடையாது) சென்றுகொண்டிருக்கேன்.


Saturday 23 May 2020

லண்டனில் வத்தக்குழம்பு


அன்று அவன் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே வீடு திரும்பியிருந்தான். ஐயாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்த ஒளியும்/ஒலியும் அழைப்பில் தன்னை மறந்து சிலாகித்துக்கொண்டிருந்தார், அப்பா. மூன்று பேர் அமரக்கூடிய சோபாவில் நடுநாயகமாய் அமர்ந்திருப்பார், எப்பொழுதுமே. அலுவலகம் செல்லும் நேரம் தவிர, வீட்டில் அவர் வசிப்பது அங்கு தான். 

தனது கையில் வைத்திருந்த காகிதத்தை வருடிப்பார்த்தவன், தனது அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தான். வரவேற்பறையின் மூலையில் போடப்பட்டிருந்த உணவு மேசையின் பக்கவாட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை அவன் நின்று நிதானித்துப் பார்த்ததில்லை. இன்று ஒரு சிறிய மகிழ்ச்சியின், எளிய கொண்டாட்டமாய் அவன் அன்னையின் முகத்தைக் கண்டு புன்னகைத்தான். 

“அப்பா, அம்மா எங்க?” 
கைப்பேசியில் கேள்வி வந்து விழ,
“வந்துட்டேன் வந்துட்டேன்…” என்று குரல் கொடுத்துக்கொண்டே அப்பாவின் அருகே வந்தமர்ந்தாள், அவள். அவளும் அவனுக்கு அம்மா தான்! லண்டனிலிருந்து அழைத்தது அவனுக்குத் தங்கை தான். ஆனால், தங்கைக்கு எப்படியோ?! அவன் தெரிந்து கொள்ள முயன்றதில்லை.

அவனது அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் ஒளியும்/ஒலியும் நிறைவடைந்து, அவன் மீது தந்தையின் பார்வை விழுந்தது.
கடிகாரத்தைப் பார்த்தவர், “என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்றார். 
அவனது அம்மாவாக இருக்க வேண்டியவள், அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தாள். 

பழகிவிட்ட ஒன்றிற்கு அவனிடம் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

தந்தையின் எதிரே வந்து நின்றான். கையிலிருந்த காகிதத்தை நீட்டினான். பிரித்துப் படித்தவரின் புருவங்கள் உயர்ந்தன. கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவளின் கவனம், கணவனின் முக பாவனைகளின் மீது திரும்பியது. 
“என்னப்பா திடீர்னு லண்டன் போற?”
கணவன் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தியவள், இம்முறை கவனத்தைக் கடிதத்தில் பாய்ச்சி, ‘லண்டன்’ எனும் வார்த்தையை மீன் பிடித்தாள்.
“ப்ராஜெக்ட்டுக்காக ஆபிஸ்ல போகச் சொல்லியிருக்காங்க.”
“லெட்டர்ல ஆறு மாசம்னு போட்டிருக்கு?!”
“ஆறு மாசம்னு சொல்லியிருக்காங்க. அது முன்ன பின்ன ஆகலாம்.”
“எப்போ கிளம்பணும்?”
“இன்னும் மூணு வாரத்துல…”

உள்ளே எழுந்து சென்றவள் தண்ணீர் நிரப்பிய பாட்டிலுடன் அறைக்குள் புகுந்துகொண்டாள். தட்டில் மூடிவைக்கப்பட்டிருந்த மூன்று சப்பாத்தியும் ஒரு கரண்டி அளவு குறுமாவும் அவனது கால் வயிற்றினை நிரப்ப, கிச்சனில் தாராளமாக வைக்கப்பட்டிருந்த குடத்து நீரை மூன்று சொம்பு அளவிற்குப் பருகிவிட்டு, மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்றான். பதினொன்றாம் வகுப்பிலிருந்து அவன் அந்த அறையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனோடு மர டேபிள் ஒன்று, வயர் பின்னிய நாற்காலி ஒன்று, பழைய மர அலமாரி ஒன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உடையை மாற்றிக்கொண்டவன், உதறி விரித்த பாயில் உயிரிழந்த தலையணையைத் தலைக்கு வைத்து உறங்கிப்போனான். 

அலுவலகத்திற்குக் கிளம்பி கீழே வருவான். மேசை மீது மூடி வைக்கப்பட்டிருந்த இரண்டு மூன்று இட்டிலி, தோசை வகையறாக்களை விழுங்குவான். வறண்டு, சில்லிட்டு, தடித்து, தீய்ந்து… எப்படியிருந்தாலும் அதை விழுங்குவன். பூஜை அறைக்குள் தீபாவளி பொங்கலன்று மற்றும் செல்வதோடு சரி. மற்றபடி உண்டு முடித்து, தட்டினை அலம்பிவைத்துவிட்டு, இரண்டு சொம்பு நீர் குடித்துவிட்டு கிளம்பிவிடுவான். கிளம்பும் முன் பெற்றவளின் முகத்தை ஒரு முறை பார்ப்பதோடு சரி. கையெடுத்து வணங்கியதில்லை; கண்ணீர் வடித்ததில்லை; வேண்டுமென்று வேண்டியதில்லை. அவனுடைய உரையாடல் அனைத்தும் அவனது ஒற்றைப் பார்வையில் சுருங்கிக்கொண்டுவிடும். உருவமாய் இருக்கும் தாய்க்கு பிள்ளையின் பார்வை புரியும்போது, அருவமாய் இருப்பவள் அவன் மனதைப் படிக்காமலா இருப்பாள்! நடப்பவை அனைத்திற்கும் பூதசாட்சி அவள்!

அன்று அவன் உண்ண அமர்ந்ததும், "எத்தனை பெட்டி எடுத்துட்டு போகலாம்?" என்றாள் அவனுக்கு அன்னையாக வந்தவள், எங்கோ பார்த்தபடி.
"ரெண்டு பெட்டி. ஒவ்வொண்ணும் பதினைஞ்சு கிலோ."
அவளுக்குத் தேவையான தகவலை மட்டும் கொடுத்தான், தலை கவிழ்ந்தபடி.

‘அம்மா!’ எனும் சொல்லே அவனது அகராதியில் புழக்கத்தில் இல்லாத வார்த்தையாகிப் போனது. ஐந்து வயது பிள்ளை தாயை இழந்த துக்கத்தில் வாடியிருக்க, ‘பிள்ளைக்காக’ என்று சொல்லி மறுமணம் செய்துகொண்டார் தந்தை. ‘அம்மா’ எனும் வெற்றிடம் தொலைந்துபோன மகிழ்ச்சி அப்பிள்ளைக்கு. ஈராண்டுகள் செல்ல, தான் தமையன் ஆகிவிட்ட திளைப்பில், பஞ்சுப்பொதியென தாயின் அருகே படுத்திருந்த பிஞ்சின் கால் விரல்களைத் தொட்டுப்பார்த்தான். சொப்புவாயை சப்பு கொட்டிக்கொண்டு, குமிந்து கிடந்த விழி விரித்து அண்ணனைப் பார்த்தது, அக்குழந்தை. அதன் நாசியினை அவன் தொட நினைத்து விரல் நீட்ட, வெடுக்கென தட்டிவிட்ட புதுத்தாய், ‘இனி இந்த ரூமுக்குள்ள வராதே’ என்று விரட்டினாள். இருப்பினும் ‘அம்மா… அம்மா…’ என்று அவளைச் சுற்றி வந்தவனை, இனி எப்பொழுதும் தன்னை ‘அம்மா’ என்று விளிக்கக்கூடாது என்று கண்கள் உருட்டி மிரட்டினாள். அவளது அகராதியில், ‘அம்மா’ எனும் சொல், தனது மகளுக்காகப் பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்ட ஒன்றாகிப் போனது. தன்னை மறந்து அவன் அவ்வாறு விளித்த சமயங்களில் பூசைகள் நடந்தன. அவனது இல்லம் அவனுக்கு அந்நிய தேசமாகிப் போனது. அவனது அப்பா இருந்தும் இல்லாமல் போனார்.         

“நாளை மறுநாள் காலைல எத்தனை மணிக்கு பிளைட்டு?”
வினவினாள் அவனது சித்தி - பெற்றவளின் உடன் பிறந்தவள்.
அவன் தாராளமாகப் பேசுவது அவளோடு மட்டுமே.
“விடியற்காலை ரெண்டு மணிக்கு, சித்தி. லுஃப்தான்சா. மூணு மணி நேரத்துக்கு முன்னமே ஏர்போர்ட் போயிடுவேன்.”
“நானும் சித்தப்பாவும் வரோம்… இந்நேரம் என் அக்கா இல்லாம போயிட்டாளே… என் புள்ளை ஒரு வயசுலயே ஓடறான், பேசறான், சிரிக்கிறான், டான்ஸ் ஆடறான்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் பூரிச்சு போவா. அவ இருந்திருந்தா நீ லண்டன் போறத சொல்லிச்சொல்லி ரொம்பப் பெருமை பட்டிருப்பா. ஹ்ம்ம்…”
அம்மாவைப் பற்றி சித்தி கூறியதும், அவனது கண்களில் ஈரம் தேங்கி நின்றது. அவனது தாய் அவனைக் கொண்டாடிய நினைவுகளை பலமுறை சித்தி கூறக் கேட்டிருக்கிறான். அவ்வாறான கொண்டாட்டமின்மையால், தான் இந்த உலகில் முக்கியமற்ற ஆன்மா என்றே எண்ணியிருந்தேன். 
அமைதியாக இருந்தவனின் உள்ளத்து அனலை உணர்ந்தவளாய்,
“தேவையான துணியெல்லாம் எடுத்து வச்சுட்டியா?” என்று மௌனத்தைக் கலைத்தாள்.
“எடுத்து வச்சுட்டேன் சித்தி…”
“அப்புறம் அவளோட பொண்ணு லண்டன்ல தான இருக்கா?”
“தங்கச்சியா? ஆமா சித்தி…”
“என்ன ‘தங்கச்சி’யா? அவ உன்னை புள்ளையா நினைச்சதில்ல. அவ பொண்ணு உன்னை ‘அண்ணா’னு கூப்பிட்டு பேசினதில்ல. இதுல உனக்கு எங்கிருந்து உறவு வந்துச்சு…”
“எனக்கிருக்கற உறவு இவங்க தான சித்தி…”
“காலாகாலத்துல உனக்கு கல்யாணம் பண்ணிட்டா உனக்குன்னு ஒருத்தி வந்துடுவா.”
“அதையும் அவங்க தான சித்தி செய்யணும். அம்மா அப்பாவா, அவங்க ரெண்டு பேரும் தான சித்தி முன்னாடி நின்னு என் கல்யாணத்தை நடத்தணும். இல்லைனா, வரப்போற பொண்ணுக்கும், அவ குடும்பத்துக்கும் என் மேல எப்படி மரியாதை வரும்.”
“நீ ஏன் கவலை படற? இவ்வளவு நாளா நீ பட்டதுக்கெல்லாம் சேர்த்துவச்சு நல்ல பொண்ணு கிடைப்பா. நீ கவலைப்படாத. நான் இருக்கேன்.”
அவனிடம் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.
“உனக்கு தொக்கு, புளிக்காய்ச்சல் எல்லாம் செஞ்சு வைக்கறேன். ஊறுகாய் எடுத்துட்டு போகலாமா?”
மீண்டும் அவளே அவனது மௌனத்தை உடைத்தாள். 
“அதெல்லாம் வேண்டாம் சித்தி. எடை அதிகமாயிடும். வெறும் முப்பது கிலோ தான் எடுத்துட்டு போகலாம்.”
“முப்பது கிலோவுக்குமா துணிமணி எடுத்து வச்சிருக்க?”
“இல்லை சித்தி. கைல ஏழு கிலோ எடுத்துக்கலாம். அதுல என்னோடது  வச்சுட்டேன். மீது முப்பது கிலோவும் தங்கச்சிக்கு தேவையான பொருளெல்லாம் அவங்க எடுத்து வச்சிருக்காங்க.”
“அடிப்பாவி… அவ இவ்வளவு அநியாயம் பண்ணறாளா?! உன் அப்பா ஒண்ணுமே சொல்லலையா? ஆறு மாசம் ஊருக்கு போற புள்ளைக்கு எவ்வளவோ தேவை இருக்கும்னு அவருக்குக் கூட தெரியாதா. ஏண்டா நீ இவ்வளவு அப்பாவியா இருக்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தி. நீங்க தேவை இல்லாம எதையும் நினைச்சு மனசு வருத்தப்படாதீங்க. நாளைக்கு காலைல நானே வீட்டுக்கு வந்து உங்கள பார்க்கறேன். நீங்க நடு ராத்திரி ஏர்போர்ட்டெல்லாம் வரவேண்டாம்.”
அழைப்பினைத் துண்டித்துவிட்டு தனது லண்டன் வருகையைப்பற்றி தங்கையின் கணவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.

அன்னையின் புகைப்படத்தின் எதிரே நின்று ஒருமுறை பார்த்துவிட்டு, அப்பாவிடமும், அன்னையாக வந்தவளிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். 
“பணத்தையெல்லாம் விரயம் பண்ணாம ஒழுங்கா சேர்த்து வை. கிரவுண்ட் ஒன்னு வாங்க பேசி வச்சிருக்கேன்” என்று மேலும் ஒரு சுமையை அவனது தோளில் ஏற்றினார், தந்தை. இதை அவர் கூறியிருக்கத் தேவையில்லை. செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பதனை அவன் அறிந்து வைத்திருக்கவில்லை. அவனுக்கென்று எந்த வித தேவைகளும் இருப்பதாக அவனுக்குத் தோன்றியதே இல்லை.

விமானத்தில் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன், தனது லெதர் ஜாக்கெட்டுக்குள் பாஸ்போர்ட் வைக்கப்பட்ட சிறு தோள் பையினை சொருகிக்கொண்டான். விமானம் மேலே உயர, பிரம்மாணட நகரம் மெல்லச் சுருங்கியது வியப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு கைப்பிடி மின்மினிப்பூச்சிகளைச் சிதறவிட்டதுபோல் ஜொலித்தது. சிறிது நேரத்தில் இருள் சூழ்ந்துவிட, கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்தவன், நினைவு வந்தவனாய் மீண்டும் தனது பாஸ்போர்ட்டை சரிபார்த்துக்கொண்டான். தோள் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த தங்கையின் விலாசம் கண்ணில் பட்டது. ‘ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு வந்துடறேன்’ என்று தங்கையின் மாப்பிள்ளை அனுப்பியிருந்த மின்னஞ்சல் நினைவிற்கு வந்தது. தங்கையின் முகமும் நினைவிற்கு வந்தது. இத்தனை வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அவன் தங்கையோடு ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளான். சிறு  வயதில் விளையாடியிருக்கக் கூடும். ஆனால் அந்த நினைவுகள் பனி சூழ் காட்சியென மங்கிக்கிடந்தன. அவன் விவரம் தெளிந்த பின் தங்கை பூப்பெய்த, அவனுக்கு அவசரஅவசரமாக மாடியில் தனி அறை கட்டிக்கொடுக்கப்பட்டு அவனது ஜாகை மாற்றப்பட்டது. பெரும்பாலும் உணவு உண்ண மட்டுமே கீழே வருபவன், அவள் தலை கவிழ்ந்தபடி உணவருந்திவிட்டு எழுந்து செல்வதையே கண்டிருக்கிறான். அடுத்த சில மணி நேரத்தில் அவன் அவளை சந்திக்கப்போகிறான். நலம் விசாரிப்புகளையும் தாண்டி வேறென்ன பேசுவது என்றொரு பெருந்தயக்கம் அவனுள். 

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவன், தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளிப்பட, அங்கே தங்கையின் கணவன் மட்டும் காத்துக்கொண்டிருந்தான்.
“வாங்க மச்சான்! வெல்கம் டு லண்டன்!!” என்று அவன் கைகுலுக்க, இவனும் அமைதியான புன்னகையோடு கைகுலுக்கினான். 
“இருவது நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம், மச்சான். உங்க தங்கச்சிய தடபுடலா சமைக்கச் சொல்லிட்டு தான் வந்தேன்.” 
பணி நிமித்தமாய் உரையாடியபடி வீட்டை அடைந்தனர்.

மூன்று அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பில், வாயிலில் புல்வெளி படர்ந்திருக்க, ஆங்காங்கே டாஃபோடில் மலர்கள் சிரித்திருக்க, தலையாட்டியபடி அவனை வரவேற்றது ஜப்பான் செர்ரி மரங்கள். 
தரைத்தளத்தில் இருந்த வீட்டின் வாயிலில் அவனது தங்கை காத்து நிற்க, இரு பெட்டிகள், கைப்பை, மடிக்கணினி பை என்று அனைத்தையும் தூக்கிக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க!” என்று மெலிதாய் சிரித்து அவனை வரவேற்றவள், அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.
“ரெண்டு பெட்ரூம், கிச்சன், ஹால்… இவ்வளவுதான் மச்சான் வீடு இங்கெல்லாம். ஏதோ அட்டைப்பெட்டிக்குள்ள வாழறமாதிரி இருக்கும். நம்ம ஊர்ல நல்ல விசாலமான வீட்ல வாழ்ந்துட்டு இங்க இந்த மாதிரி வீட்ல இருக்கணுமேன்னு நினைக்கும்போது முதல்ல கஷ்டமாத்தான் இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. முன்னாடி ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்ல தான் இருந்தோம். இவ டெலிவரி நேரத்துல ஊர்லேர்ந்து அத்தை மாமா வந்திருந்ததால வசதி பத்தாதுனு இந்த வீட்டுக்கு மாறிட்டோம்…”
தங்கைக் கணவன் பேசி முடிக்க, அவர்கள் இருவரும் பருக கோப்பைகள் ஏந்தியாடி எதிரே வந்து நின்றாள், தங்கை. காப்பியை எடுத்துக்கொண்டவன்,
“எனக்கு காபி கொடுத்துட்டு, மச்சானுக்கு என்ன எடுத்துட்டு வந்திருக்க?” என்றான் அவளது கணவன் யோசனையாய்.
“அண்ணனுக்கு ஹார்லிக்ஸ்” என்றவள் அண்ணனின் கையில் கோப்பையைக் கொடுத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டாள்.

“அய்யோ… அடிக்காதீங்க… எனக்கு ஹார்லிக்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதான் எடுத்து சாப்பிட்டேன். அடிக்காதீங்க... வலிக்குது… வலிக்குது…” 
“ஏண்டா என் பெண்ணுக்காக வாங்கி வச்சிருக்கற ஹார்லிக்ஸை நீ தின்னு தீர்க்கப்பார்க்கறியா? உன்னை வீட்ல வச்சிருக்கறதே பெரிய விஷயம். இந்த வயசுலயே திருட்டுத்தனமா?” என்று வசைபாடியபடியே அவனை முதுகிலும், கையிலும் அம்மா அடிப்பதை, சிறு குழந்தையாய் இவள் கதவோரம் நின்று வேடிக்கை பார்த்தது இவளது நினைவிற்கு வந்தது. தேம்பியபடி, கண்களைக் கசக்கிக்கொண்டு இவளைக் கடந்து சென்ற அண்ணனின் அழுகையும் நினைவிற்கு வர, இன்று இவளது விழிகள் ஈரம் கொண்டன.

குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு வந்தவன், தூக்கக் கலக்கத்தில் தங்கையின் மடியில் அமர்ந்திருந்த அவளது பிள்ளையைக் கண்டான்.
“இப்பத்தான் சார் தூங்கி எழுந்திரிச்சாரு. முழிச்சு ஒரு கால் மணிநேரம் ஆகும் அவர் நிதானத்துக்கு வர. அதுவரைக்கும் இப்படித்தான் அவன் அம்மாவை விடமாட்டான்.”
தங்கையின் கணவன் கூறக்கூற, விரல் சூப்பியபடி அமர்ந்திருந்த எட்டு மாதக் கைக்குழந்தையை இமைக்கவும் மறந்து பார்த்திருந்தான், தாய்மாமன். பிறகு யோசனை வந்தவனாய், தனது கைப்பையைத் திறந்து சிறு நகைப்பெட்டி ஒன்றினை எடுத்து மாப்பிள்ளையிடம் நீட்டினான்.
“இது குழந்தைக்கு…”
“நீங்களே உங்க தங்கச்சி கிட்ட கொடுங்க மச்சான்.”
பெட்டியைத் திறந்து தங்கச்சங்கிலி தெரிய தங்கையின் முன் அவன் நீட்ட, அவளோ குழந்தையை அண்ணன் கையில் கொடுத்தாள். பஞ்சுப்பொதியென சந்தன வெண்மைக் குழந்தையைக் கையில் ஏந்தியதில் அவனுக்குப் பேரானந்தம் பொங்கியது. வாயில் வைத்திருந்த விரலை எடுத்துவிட்டு குழந்தை சிரிக்க, உணர்ச்சிப் பரவசத்தில் கண்கள் ஈரமானவன், அதன் உச்சியில் முத்தம் வைத்தான். கையில் வைத்திருந்த நகையை அவன் மீண்டும் தங்கையிடம் நீட்ட, 
“நீங்களே போட்டுவிடுங்க…” என்றாள் பரிவாக.
“ஆமா மச்சான். தாய் மாமன் சீரு ரொம்ப ஸ்பெஷல். நீங்களே போட்டுவிடுங்க” என்று தங்கையின் கணவனும் கூற, உளமார இறைவனை வேண்டி, குழந்தைக்கு நகை சூட்டி, ‘தாய் மாமன்’ ஆசிர்வதித்தான். முதன்முறையாகத் தானும் முக்கியப்பட்டவனாகிப்போன மகிழ்ச்சி அவனுள்!! 

இந்திய நாட்டு நடப்புகளையும், இங்கிலாந்து நாட்டு நடப்புகளையும் பேசியபடி இருவரும் உணவு மேஜையில் ஆஜராகினர்.
உணவு பரிமாறியவள், வெள்ளை சாதத்தின் மீது வத்தக்குழம்பு ஊற்ற, சற்றே கடுப்பான அவளது கணவன்,
“ஏன்மா முதன்முதல்ல உன் அண்ணன் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. சாம்பார் வைக்காம இதென்ன வத்தக்குழம்பு போய் வச்சிருக்க?” என்று சிடுசிடுத்தான்.
“அண்ணனுக்கு வத்தக்குழம்புனா ரொம்பப் புடிக்கும்” என்றவள், அண்ணனை நோக்க, அவனோ தங்கையின் பதிலைக் கேட்டு ஆச்சரியத்தில் விறைத்திருந்தான்.
வெடுக்கென விலகிச் சென்று அடுக்களைக்குள் புகுந்துகொண்டவள் இமையோரம் துளிர்த்த கண்ணீர்த்துளியை துடைத்துவிட்டாள். 

அன்றொருநாள் மதியம், இவள் உணவு உண்டு முடிக்கும் தருவாயில் அண்ணன் வந்து அமர்ந்தான். தட்டில் அம்மா வெள்ளைச்சோறு இட்டுக் கொடுக்க, அருகிலிருந்த வத்தக்குழம்பினை எடுக்க எத்தனித்தான்.
“டேய், அது அவளுக்கு…” என்ற அன்னை, குழம்பினை அவளின் தட்டில் கவிழ்த்துவிட்டு, மோரினை அவனது தட்டினில் ஊற்றினாள்.
கடுங்கோபத்தோடு மடமடவென உண்டு முடித்தவள், எழுந்து அடுக்களைக்குள் சென்று,
“ஏன் அம்மா என் தட்டிலே குழம்பை கொட்டுனீங்க? என்னால சாப்பிட முடியாம மீதம் வச்சுட்டேன். அண்ணனாவது சாப்பிட்டிருக்கும். அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று பொரிந்து தள்ளினாள்.
“இங்கப்பாருடி உன்னால சாப்பிட முடியலைன்னா கீழ கொட்டு. பரவாயில்லை. அவனுக்கும் பிடிக்கும்னு இரக்கப்பட்டா, இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிங்கிக்கற கதை தான் ஆகும். இனி வத்தக்குழம்பு செஞ்சா தானே. அவனுக்கு எப்பவும் புளிச்ச மோரு தான்.”
முகத்தினை திருப்பிக்கொண்டு அவள் அடுக்களை விட்டு வெளியே வர, கதவருகே கலங்கிய கண்களோடு அண்ணன் நின்றிருந்த நினைவு, இன்றும் அவளை கலங்க வைத்தது.   

முகத்தினை  அழுந்தத் துடைத்துவிட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தவள் கணவனுக்கும், அண்ணனுக்கும் மீண்டும் அன்னமிட்டாள். அண்ணனுக்கு அவள் வத்தக்குழம்பு நீட்ட, அவளது கணவன் ரசத்தை நீட்ட, அண்ணனோ அவளது கைகளையே இமைக்காது பார்த்திருந்தான். 
புரிந்துகொண்ட அவளது கணவன் ரசத்தினை கீழே வைத்துவிட்டு,
“என்ன வேணுமோ கூச்சப்படாம சாப்பிடுங்க மச்சான்…” என்றபடியே தனது தட்டில் கவனம் கொள்ள, அவனோ மீண்டும் வத்தக்குழம்பு இட்டு வயிறார உண்டு  முடித்தான்.   

உண்டு முடித்து கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனை கொஞ்சிக்கொண்டே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டான். தங்கையின் கல்யாண புகைப்படங்கள் சில மாட்டப்பட்டு இருந்தன. குடும்ப போட்டோ எடுப்பதற்காக மணமக்களோடு தாய் தந்தையர் நிற்க, இவனும் அருகில் வந்து நின்றான். அச்சமயம் அவனுக்கு ஏதோ ஒரு பணியை கொடுத்து அவ்விடம் விட்டு அனுப்பப்பட்டு மீண்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த நினைவு எதிர்பாராமல் அவனுள் வர, புகைப்படத்தைக் காணாது தயக்கத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். மீண்டும் படத்தினைக் காண வேண்டும் என்று ஆவல் தலைதூக்க, அருகே சென்று அதனை நோக்கினான். அங்கே அவனும் நின்றிருந்த குடும்பப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவனுள் ஏராளமான சந்தோஷங்கள் பொங்க, கையில் வைத்திருந்த குழந்தைக்கு ஆசை தீர முத்தமிட்டான்.

மாலை அவன் தன் ஜாகைக்குக் கிளம்பிட தயாரானான்.
“மச்சான் நீங்க இங்க எங்கக்கூட தங்கிக்கலாமே?!” 
“இல்ல மாப்பிள்ளை, கம்பெனில ஆபிஸ் பக்கத்துலயே கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. கூட இரண்டு பிரண்ட்ஸ் இருக்காங்க. அதனால நான் அங்கேயே தங்கிக்கறேன்.”
“நீங்க கிட்டத்தட்ட லண்டன்ல ரொம்ப மெயினான இடத்துல தங்கப்போறீங்க. அங்கிருந்து ட்ரபால்கர் ஸ்கொயர், பக்கிங்ஹம் பேலஸ், மார்பில் ஆர்ச், தேம்ஸ், லண்டன் அய், பிக் பென், பார்லிமென்ட், லார்ட்ஸ் ஸ்டேடியம், வெஸ்மின்ஸ்டர், துஸ்ஸாட் வாக்ஸ் மியூசியம்னு எல்லாமே ரொம்ப ஈசியா சுத்தி பார்த்துடலாம். அப்பிடியே டியூப்  புடிச்சா ஈஸ்ட் ஹாம் போயி முருகனையும், மஹாலட்சுமியையும் கும்பிட்டுட்டு, சரவண பவன்ல நல்லா சாப்பிடலாம். வார கடைசில எதையும் மிஸ் பண்ணாம கண்டிப்பா சுத்தி பாருங்க. நாம ஒரு தடவை பிளான் பண்ணி வேல்ஸ், ஸ்காட்லாந்து போயிட்டு வருவோம்.”
‘சரி’ என்று தலையை அசைத்தபடி அழகாய் சிரித்துக் கொண்டான்.

தனது கைப்பேசியை சரிபார்த்த தங்கையின் கணவன், 
“மச்சான் டாக்சி வந்துருச்சு” என்றதும் தனது கைப்பையையும், மடிக்கணினி பையையும் மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். 
“இந்தப் பெட்டி இரண்டும்?!” 
“உங்களுக்குத்தான்…” என்றவன் மீண்டும் ஒருமுறை தன்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்து சரிபார்த்துக் கொண்டு மடிக்கணினி பையில் வைத்தான். 
“இங்கே எல்லாமே கிடைக்கும் அதனால கவலைப்படாதீங்க…” என்று தனது தர்மசங்கடத்தை சூசகமாய்க் காட்டிக்கொண்டான், தங்கையின் கணவன். அவசர அவசரமாக அடுக்களையில் இருந்து கையில் ஒரு நெகிழிப் பையோடு வெளியே வந்த தங்கை, 
“இதல வத்தக்குழம்பு இருக்கு. ஹார்லிக்ஸ் வச்சிருக்கேன். புளிக்காய்ச்சல், தோசை மாவு, இட்லி பொடி கொஞ்சம் வச்சிருக்கேன். ரெண்டு மூணு நாளைக்கு வரும்னு நினைக்கிறேன். நான் வீட்டுல செஞ்ச பட்சணம் கொஞ்சம் வச்சிருக்கேன்” என்று வாழ்வில் முதல்முறையாக மிக நீளமாக பேசி முடித்தாள், அண்ணனிடம்.
அவன் பதில் கூறுவதற்கு முன், தாய்மாமனிடம் தாவிக் கொண்டு வந்த குழந்தையை கையில் அள்ளி கொண்டவன் குழந்தையை விட மனமில்லாமல் வாயிலில் நின்றிருந்த டாக்ஸி வரை ஏந்திக்கொண்டு வந்தான். பிரிய மனமின்றி குழந்தைக்கு ஒரு முத்தம் வைத்து விட்டு தங்கையிடம் கொடுத்தவன் அவளைக் கண்டு ஒரு மென்னகை சிந்திவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். 
“மச்சான், உங்க பை சீட்டுக்கு கீழே இருக்கு. இந்தாங்க உங்க லேப்டாப் பை. பாஸ்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க” என்ற தங்கையின் கணவன் அவனது மடிக்கணினி பையை நீட்ட அதை வாங்கி கொண்டவன், தங்கை கொடுத்த நெகிழிப்பை கீழே இருந்ததைக் கண்டு, அதனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மடிக்கணினி பையை கீழே வைத்தான். வண்டி புறப்பட, 
“அண்ணா, ஊரெல்லாம் பொறுமையா சுத்தி பார்த்துக்கலாம். நீங்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேலை முடிஞ்சதும் நேரா இங்க வந்துடுங்க. திங்கட்கிழமை காலையில இங்கிருந்தே ஆபிஸ் போயிக்கலாம்” என்றாள், அண்ணன் கிளம்பும் பரிதவிப்பில் கண்களில் ஈரம் சேர்த்தபடி. 
“சரிம்மா! போயிட்டு வரேன்மா!!” என்றபடி விடைபெற்றுக்கொண்டான், நீண்டதொரு புன்னகையை முகத்தில் படரவிட்டபடி. 

லண்டன் மாநகரத்து இளவெயில் மாலையின் இளந்தென்றல் காற்றில், தங்கையின் வத்தக்குழம்பு வாசம் அவனுக்கு மட்டும் வீசியது. மனதில், பெற்றவளின் முகம் தோன்ற, தனது கையிலிருந்த நெகிழிப்பையை மேலும் இறுகப் பற்றிக் கொண்டான், புன்னகை குறையாமல்.



*** முற்றும் ***