Monday 6 January 2020

கா(த)லர் டியூன் - 1

பகுதி - 1


ஒரு மனிதனின் வாழ்வில் ஆகச்சிறந்த சந்தோஷங்கள் அத்தனையும் சேர்த்துக்கட்டி, ஒரு பெரிய உருண்டையாய் உருமாற்றி பரிசளித்தது போல் இருந்தது, அவனுக்கு. மூன்று நாட்களாக வீடு முழுதும் உறவினர்கள் சூழ்ந்திருக்க, அம்மாவும் அப்பாவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க, தனது அறையில் கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தனது பிம்பத்தைக் கண்டு சிரித்துக்கொண்டிருந்தான். 
‘என்ன மச்சான்… அதுக்குள்ள…’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டவனுக்கு சிரிப்பு பொங்க, மகிழ்ச்சி தாளாமல் கீழுதட்டை மடித்துக் கடித்தபடி சிரிப்பினை அடக்க முயற்சித்திருந்தான். சராசரி உயரம், மாநிறம், விவரம் தெரிந்த நாள் முதல் மாற்றப்படாத சிகை, கனிவான கண்கள், பணிவான முகம் என்று சாதாரண தோற்றம் கொண்டிருந்தாலும், அவளின் நினைவுகள் அவனை அசாதாரண நாயகனாகவே உணரச் செய்தன. எப்பொழுதும் உரக்கச் சிரிப்பவன் ஏனோ இம்முறை அடக்கமாய் சிரித்து நின்றான். பெண்களின் வெட்கம் அழகென்றால் ஆண்களின் வெட்கம் பேரழகு! இம்சிக்கும் சிலிர்ப்புகளால் அவனால் அவன் முகத்தையே கண்ணாடியில் காண முடியாத அளவிற்கு ஒருவித கூச்சம் உடலெங்கும் பரவியது. தலையை உலுப்பிவிட்டு தனது சோபாவின் மேல் வந்தமர்ந்தான், புன்னகை குறையாமல். கைபேசியை எடுத்தான். எண்ணிக்கையில் அடங்கா வாழ்த்துச் செய்திகள் குவிந்திருந்தன. பொங்கும் பேரானந்தம் மூச்சு முட்ட, கண்கள் மூடி சோபாவின் மேல் சாய்ந்தான். மீண்டும் அவளது பிறைமுகம் அவனை வாட்டி வதைத்தது. 

கண் திறந்தவன் தனது கைப்பேசியை நோண்டி, அதிலிருந்த அவளது நிழற்படத்தை இமைக்காது பார்த்திருந்தான். அவளது நிழற்படம் என்று இது ஒன்று தான் அவனிடம் இருந்தது. இதைப் பல கோடி முறைகள் பார்த்த பின்னும், அவளை ஒருமுறை நேரில் பார்த்த பின்னும், ஏனோ ஆசைக் குமிழிகள் மட்டும் மனதில் பொங்கிய காதல் வெள்ளத்தில் முளைத்துக்கொண்டு தான் கிடந்தன. மூன்று வாரங்களுக்கு முன் கண்ணில் பட்டவள் இன்று மூச்சு முட்டும் அளவிற்கு காதலைத் தருவாள் என்று அவன் நிச்சயம் எதிர்பார்த்திருக்கவில்லை. படிப்பு, வேலை என்று வாழ்வில் வேறு எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல், ‘காதல்’ போன்ற எந்தவித சாகசங்களிலும் ஈடுபடாமல், தெருமுனை ‘வினைதீர்க்கும் விநாயகர்’ அவனுக்கென பிறந்து வளர்ந்தவளை உரிய நேரத்தில் கண்ணில் காட்டுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கையோடு, தினமும் அலுவலகத்திற்கு செல்லும் முன் பதினோரு முறை விநாயகரை வலம் வந்து, மற்றவர் முன் தோப்புக்கரணம் போடத் தயங்கி, நமஸ்கரித்துவிட்டுச் செல்வான்.

மூன்று வாரங்களுக்கு முன் அப்பா ராமச்சந்திரன் இவளது புகைப்படத்தை மின்னஞ்சலில் இவனோடு பகிர்ந்துகொள்ள, அலுவலகத்தின் தலையாய கடமைகளை புறந்தள்ளிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் தந்தையை கைபேசியில் அழைத்து திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான். அவனது ஆர்வமிகுதியை புரிந்துகொண்ட தந்தையும் பெண் பார்க்க மறுநாள் ஏற்பாடு செய்ய, அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக அடுத்த மூன்று வாரங்களில் திருமணம் என்று முடிவானது. 

அனைத்தையும் மனதில் ஓட்டிப்பார்த்தவன் மெல்ல எழுந்து தனது மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கல்யாண பத்திரிக்கையை கையிலெடுத்தான். ‘தீபிகா வெட்ஸ் சஞ்சய்’ என்று அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்துக்களை மெல்ல வருடினான். ‘தீபிகா… தீபு… தீபுமா… தீபு டியர்… ஹனி…’ விதவிதமாய் அவளை அழைத்துப்பார்த்தான். எப்படி அழைத்தாலும் அவனுள் இன்பம் பெருகத் தவறவில்லை. 

ஒருமுறை கூட அவளிடம் பேசவில்லை. வாய்ப்பும் அமையவில்லை… கேட்டிட அவனுக்கு வாயும் எழவில்லை. பேசிப்பேசித் தீர்ப்பதற்கே பல நூறு கதைகளை அவன் இதயத்துள் சேர்த்து வைத்திருந்தான். அவள் கூறவிருக்கும் கதைகளுக்கும் ஆர்வமாக காத்திருந்தான். 

கைக்கடிகாரத்தை நோக்கினான். மணி மூன்று என்றது. ‘இன்னும் சிறிது நேரத்தில் மாப்பிள்ளை அழைப்பு. அதன் பின் மணமாகாத இளங்காளையாக வாழ்விலே கடைசி இரவு. நாளை காலை வாழ்விலே வசந்த காலத்தின் தொடக்கம். நாளை இரவு… நாளை இரவாவது மனம்விட்டு அவளோடு பேசிட வேண்டும்’ என்று எண்ணிக்கொண்டான். அவனது அதீத விருப்பமெல்லாம், ‘என்னை பிடிச்சிருக்கா?’ என்று அவன் வினவ வேண்டும், அவளும் தலை கவிழ்ந்தவாறு ‘ம்ம்…’ என்றிட வேண்டும். அவனது அபிலாஷைகள் அனைத்தும் அமைதிகொள்ள, அவளது ‘ம்ம்’ மிகவும் வேண்டியதாய் இருந்தது.

உடனே வேறொரு தொலைபேசியிலிருந்து தனது கைபேசிக்கு அழைப்பு விடுத்தவன், ‘ஓ! நெஞ்சாத்தியே… நெஞ்சாத்தியே… நீதானடி என் வாழ்க்கையே…’ என்று காலர் டியூன் ஒலிக்கக் கேட்டு அவனும் உடன் சேர்ந்து பாடினான். பாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் கற்பனையில் அவளது கைகோர்த்து சுற்றிச் சுற்றிச் ஆடினான்.

குளித்து முடித்து வந்தவன், அன்னை எடுத்து வைத்திருந்த புது சட்டை, கால்சராயை உடுத்திக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தான். உறவுகள் அவனை சூழ்ந்துகொள்ள, புது மாப்பிள்ளைக்கே உண்டான பளபளப்பு அவன் முகத்தில் ஜொலித்தது. மாலையிட்டு, நலுங்கு வைத்து பெரியோர் அனைவரும் ஆசிர்வதிக்க, நெஞ்சை நிறைக்கும் பரவசத்தை அனுபவித்தபடி கல்யாண மண்டபத்திற்கு புறப்பட்டான்.

“வாங்க மாப்பிள்ளை! வாங்க மாப்பிள்ளை!!” 
திருமண மண்டபத்தில் பெண்வீட்டார் எதிர்கொண்டு அழைக்க, ‘மாப்பிள்ளை’ என்ற விளிப்பு சற்றே அவனுக்கு கூச்சத்தைக் கொடுத்தது. விழா நாயகனன்றோ இந்த மாப்பிள்ளை!! அனைவரது கண்களும் அவன் மீதே இருந்தது. அவனது உள்ளமோ அவளைத் தேடியது. 

“சஞ்சய் சீக்கிரம் கிளம்பு, நான் வந்தவங்கள போய் கவனிக்கறேன்” என்று விட்டு அவனது அம்மா சென்றுவிட, மாப்பிள்ளை அறையில் தனது பெரியப்பா, மற்றும் பெரியப்பா மகன்களான இரண்டு அண்ணன்களோடு கதைபேசியபடியே தயாரானான். 
“ஏண்டா, இப்போ பொண்ணுங்களுக்கு பியூட்டி பார்லர்’ல இருந்து ஆள் வந்து மேக் அப் போட்டு விடற மாதிரி பசங்களுக்கும் செய்யறாங்களாம். நீ அதெல்லாம் ஏற்பாடு செய்யலையா?”
“பெரியப்பா, நான் மூஞ்சிக்கு பவுடர் கூட அடிச்சதில்லை, இதுல பியூட்டி பார்லரா?!”
“அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே… ஒரே புள்ளைன்னு உன்னை உலகம் தெரியாம வளர்த்துட்டான் என் தம்பி…” 
பெரியப்பா கூறியதைக் கேட்டு, ‘எனக்கா ஒன்னும் தெரியாது?’ என்று தன்னுள்ளே சிரித்துக்கொண்டான்.
“டேய் சஞ்சு, மத்த விஷயம் தெரியலானாலும் பரவால்ல… தெரிய வேண்டியதெல்லாம் தெரியுமா இல்லை அண்ணன் க்ளாஸ் எடுக்கணுமா?”
அவனை சீண்டினான் அவனது அண்ணன்.
“ஏன் அண்ணே நீ வேற… நான் ஒன்னும் பால்வாடியில்லை… எல்லாம் தெரியும்…”
அவன் யதார்த்தமாய்க் கூற, அண்ணன்மார்களோ அவனை விடாப்பிடியாக கேள்விகள் கேட்டு, கேலிப் பேச்சுகள் பேசி ஒருவழியாக மாப்பிள்ளை அழைப்பிற்குத் தயாராகினர்.


போடி மாப்ள… உனக்கு அணுகுண்டு வெயிட்டிங்!! 

கா(த)லர் டியூன் - 2

பகுதி - 2



திருக்கோவிலில், மாப்பிள்ளை சஞ்சய், அவனது பெற்றோர், உறவினர் மற்றும் பெண் வீட்டார் குழுமியிருக்க, சிறப்புப் பூஜைகள் முடிந்து மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது. 

“மாப்பிள்ளை, நான் பொண்ணோட தாய்மாமா. மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு குதிரை ஏற்பாடு செஞ்சிருக்கோம். நான் தான் குதிரையை புக் பண்ணேன்” என்று சஞ்சய்யின் காதுக்குள் பெருமை ஓதிக்கொண்டு கோவிலை விட்டு வெளியே அழைத்து வந்தவர், வாயிலில் நிற்கவைக்கப்பட்டிருந்த குதிரையைக் காண்பித்தார். 
‘என்னங்கடா இது? மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ரோஜாப்பூ ஒட்டின காரைத்தானே ஏற்பாடு செய்வாங்க. இவனுங்க குதிரையை நிறுத்தி வச்சிருக்கானுங்க?!’ என்று மிரண்டுபோனான் மாப்பிள்ளை. குதிரையின் அருகே நின்றிருந்த அதன் சொந்தக்காரன் அழுக்கு லுங்கியுமாய், புகையிலை வாயுமாய் “நமஸ்தே சாப்… ஆவோஜி” என்று வணக்கம் வைத்தான். 

‘இந்தக் குதிரையெல்லாம் வடநாட்டுல தானே கல்யாண அழைப்புக்கு வைப்பானுங்க?! அவனுங்க பானி பூரி விக்க வரும்போது கூடவே குதிரையையும் ஓட்டிட்டு வந்துட்டானுங்க போல. இறைவா… நான் பீச்சுல கூட குதிரை மேல போனதில்லை… கல்யாணத்துல இப்படி ஒரு சோதனையா எனக்கு...’ என்று துக்கப்பட்டு, துயரப்பட்டு, வேதனைப்பட்டு தனது தாயை நோக்க, அவள் மட்டுமின்றி அனைவருமே குதிரையையும் அவனையும் மாறிமாறி பார்த்திருந்தனர். 

“அண்ணே என்ன இது குதிரையெல்லாம்??” என்று அருகில் நின்றிருந்த அண்ணனிடம் கடுப்படித்தான், சஞ்சய்.
“இது கூட நல்லாத்தான் இருக்கு… சீக்கிரம் ஏறு மாப்பிள்ளை… மொத்த கூட்டமும் உன் சாகசத்தை பார்க்க பின்-ட்ராப் சைலன்ட்ல இருக்கு” என்று அண்ணன் பதிலளித்துவிட்டு நழுவிக்கொண்டான்.

“ஏறுங்க மாப்பிள்ளை, என்ன யோசனை?” என்று குதிரையை ஏற்பாடு செய்திருந்த தாய்மாமன் கூற, 
“நான் கோட் சூட் போட்டிருக்கேன் மாமா, நீங்க சொல்ற மாதிரி தாவியெல்லாம் ஏற முடியாது. நான் நடந்தே வந்துடறேனே…” குரலைத் தாழ்த்தி பணிவன்போடு மன்றாடினான்.
“அட ஆமா, இதை நான் யோசிக்கவே இல்லை… இருங்க வரேன்” என்று சென்றவர் அருகில் பூக்கடையிலிருந்து ஒரு மர ஸ்டூலை இரவல் வாங்கி வந்தார்.

“இப்ப ஸ்டூல் மேல ஏறி, அப்படியே குதிரை மேல ஏறிடுங்க… நான் ஒரு கைய பிடிச்சுக்கறேன்” என்றவர் அவனது இடக்கையைப் பிடித்துக்கொள்ள, மர ஸ்டூலின் மீதேறி, இடது காலை சுதாரித்தபடி சஞ்சய் வலது காலைத் தூக்க, குதிரை வெடுக்கென எட்டு வைத்து சற்று முன்னே நகர்ந்து சென்றது. தூக்கிய காலை தூக்கியபடி குதிரையின் செயலால் உறைந்து நின்றவன், ‘நல்லவேளை உட்காரல… இந்நேரம் வாரிக்கிட்டு கீழ விழுந்திருப்பேன்...’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். தாய்மாமன் குதிரைக்காரனை கத்த, குதிரைக்காரன் குதிரையைக் கத்த, அதுவும் கனைத்தபடி மீண்டும் பொசிஷனில் வந்து நின்றது. இம்முறை கூட்டத்தில் இருந்து நான்கைந்து ஆண்கள் ஒன்று சேர்ந்து அவனை அலேக்காக தூக்கி குதிரையில் உட்கார வைத்தனர். 

நடப்பவற்றை நொடி தவறாது திருமண ஒளிப்பதிவாளர் படம் பிடிக்க, ‘ஐயோ இதெல்லாம் என் தீபு குட்டி பார்த்தா என்ன நினைப்பா… இவனுங்க இதையெல்லாம் தெரிஞ்சு செய்யரானுங்களா இல்ல தெரியாம செய்யறானுங்களா… மை டியர் இறைவா…' என்று நொந்துகொண்டான். 

சிறிது தூரம் ஊர்வலம் கடந்த பின், மாப்பிள்ளை முன் வழிமறித்து நின்ற பெரியவர் ஒருவர், “மாப்பிள்ளை, இந்த வீரவாளை கையில பிடிச்சுக்கிட்டு வாங்க. சும்மா வீராதிவீரனாட்டம் இருப்பீங்க!!” என்றுவிட்டு சஞ்சய் கையிலிருந்த பூச்செண்டை வாங்கிக்கொண்டு, இரண்டடி நீள வாளினை கையில் திணித்தார். 
சஞ்சய் கலவரமாகித் தயங்க, “இது நிஜம் கத்தியில்லை மாப்பிள்ளை, நாடகத்துக்கு வாடகைக்கு கொடுக்கற கடையிலிருந்து வாங்கிட்டு வந்தது… மொக்க கத்தி தான்” என்று அவர் கூற, ‘சரி’ என்றுவிட்டு ஒருவாறு சிரித்து வைத்தான்.

‘விநாயகா என்னை நல்லபடியா மண்டபத்துல கொண்டு போய் சேர்த்துடுப்பா’ என்று அவன் மானசீகமாய் வேண்டிக்கொண்டு வர,
“ஒரு கையில குதிரையை பிடிச்சுக்கிட்டு, மறு கையில வீரவாள ஏந்திக்கிட்டு நம்ம மாப்புள வர அழகை பார்த்தா திப்பு சுல்தான் வீதி உலா போற மாதிரி இருக்கு!!” என்று கூட்டத்திலிருந்து ஒலித்த குரல் கேட்டு அழுவதா சிரிப்பதா என்று புரியாமல் தவித்துப் போனான்.
‘அடேய்களா… திப்பு சுல்தான் எப்படா கோட் சூட் போட்டுக்கிட்டு குதிரைல வீதி உலா போனாரு… எல்லா பயலும் பிளான் பண்ணி கலாய்க்கறானுங்க… அவனவன் தன்னோட கல்யாணத்துல செஞ்சு பார்த்துக்க முடியாததையெல்லாம் அடுத்தவன் கல்யாணத்துல செய்ய வச்சு உயிர வாங்குறானுங்க’ என்று சஞ்சய் நொந்து, வெந்து, அவிந்து போக, ஒரு வழியாக மண்டபம் வந்து சேர்ந்தது, மாப்பிள்ளை ஊர்வலம்.

சஞ்சய்யின் வீரவாளை ஒருவர் வாங்கிக்கொள்ள, பெண்ணின் தாய்மாமன் குதிரையின் அருகே போட்டு வைத்த பிளாஸ்டிக் இருக்கையில் பதுவிசாக அவன் இறங்க, மறுநொடியே இருக்கையின் கால் முறிந்து தடுமாறி கீழே விழப்போனவனை தாங்கிப் பிடித்து நிறுத்தியது தளிர் கரம் ஒன்று. அவன் அவள் முகம் நோக்க, அவள் இன்முகம் காட்ட, பட்டென எழுந்து தன்னை சுதாரித்துக்கொண்டான், சஞ்சய். 

“என்னாச்சு மாப்பிள்ளைக்கு?” என்று வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர் வினவ,
“சுல்தானுக்கு ஸ்லிப் ஆயிடுச்சு” என்றுவிட்டு அவள் தோழிகளோடு ஓடிச்சென்றாள். 

“உன் மச்சினி உன்னை கலாய்ச்சுட்டு போறா, நீ என்னடான்னா அமைதியா இருக்க?!”
அண்ணன் அவன் காதில் கேலி பேசினான்.
‘ஓ! இவதான் தீபு பேபியோட தங்கச்சி பேபியா…’ என்று எண்ணிக்கொண்டவன், ‘கொஞ்சம் என் பேபிய கண்ணுல காட்டுங்கடா’ என்று தன் காரியமே கண்ணானான்.

அடுத்த சில நிமிடங்களில், அலங்கரிக்கப்பட்ட மேடையின் மீது சஞ்சய் நிற்க, அவனருகே தோழிகள் புடை சூழ, ஒப்பனைகள் ஜொலி ஜொலிக்க, பெண்ணவள் வந்து நின்றாள். அவளை வஞ்சனையில்லாமல் கண்குளிர கண்டு ரசிக்க முடியாமல் அவன் தவிக்க, அவளைச் சூழ்ந்திருந்த இளசுகள் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருக்க, அவனுக்கு சற்றே எரிச்சல் ஆனது. அவளைக் கண்டு சிறு புன்னகை கூட செய்ய முடியாமல் அவன் தவித்துக்கொண்டிருந்தான். 

பரிசு கொடுப்பதற்கு வரிசைக்கட்டி நின்ற உறவுகள் ஒருவர் மாற்றி ஒருவர் வந்துகொண்டிருக்க, அவ்வப்போது சிலபலரை அறிமுகம் செய்யும் இடைவெளியில் அவளது அழகை, குறுநகையை, வணக்கம் சொல்லும் நளினத்தை ரசித்து, நெஞ்சினில் நிறைத்துக் கொண்டான். 

பரிசு வழங்கும் படலம் ஒருவாறு ஓய்ந்தபின் சினிமாப் பாட்டு ஒலிக்க, மேடையில் இளஞ்சிட்டுகள் நடனத்தைத் தொடங்கினர். ஆடிக்கொண்டிருந்தவர்களின் மத்தியிலே அவனது கவனத்தை மட்டுமல்ல, அனைவரின் கவனத்தையும் தன்வசம் ஆக்கியிருந்தாள் அவனது மச்சினி. அவனுக்கும் உள்ளூர ஆடவேண்டும் என்று சிறு ஆசை இருப்பினும், அமைதியாய் நின்றிருந்த தீபிகாவைக் கண்டு அவனும் அமைதியாகிப் போனான். பலரும் அவனை ஆட அழைத்தும் மறுத்துவிட்டான். 

"சஞ்சய், நீயும் ஆட வேண்டியது தான?! அநியாயத்துக்கு வெட்கப்படற?"
மாப்பிள்ளைத் தோழனாய் நின்றிருந்த அண்ணன் காதுகடித்தான்.
"சும்மாவே வர்றவன் போறவனெல்லாம் என்னை கலாய்க்கறாணுங்க. இதுல டேன்ஸ் வேற நான் ஆடினா, 'அந்த நடராஜரே இறங்கி வந்து நடனம் ஆடற மாதிரி இருக்கு’னு சொன்னாலும் சொல்லுவானுங்க. எதுக்கு வம்பு?"
மாப்பிள்ளையும் பதிலுக்கு காது கடித்தான்.

"ஏன்டி, மாப்பிள்ளையை ஆட சொல்லுங்களேன்…" என்று அந்த இளவட்டங்களிடம் பாட்டிமார் ஒருவர் கூற,
"சுல்தானுக்கு கத்தி சுத்த மட்டுந்தான் தெரியுமாம்… ஆட வராதாம்..." என்று அவனது மச்சினி அவனைக் கண்டு நக்கலாக சிரித்துக்கொண்டே பதில் கூற, அதைக் கேட்டு அனைவரும் சிரிக்க, மாப்பிள்ளையின் நிலையோ, ஷேம் ஷேம் பப்பி ஷேமாகிவிட்டது.

'இவ என்னை இப்படி கிண்டல் பண்றா, ஆனா எந்த ரியாக்ஷனும் இல்லாம என் தீபுமா நிக்கறாளே…' என்று ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியாவாகிவிட்டது சஞ்சய்க்கு. இருப்பினும் தன்னவள் மீது அவனுக்குத் துளியும் வருத்தம் எழவில்லை. 

இரவு விருந்து முடிந்து, மாப்பிள்ளை தனது அறையில் மறுநாள் திருமணத்தை எண்ணி பரவசத்தில் தூக்கம் வராமல் புரண்டிருந்தான். அதைக் கலைக்கும் வண்ணம் கைப்பேசி அவ்வப்போது சிணுங்கி அடங்க, அதில் கவனம் கொண்டான்.

அனைவரும் தஞ்சம் கொள்ளும் முகப்புத்தகத்தில் அவனும் தஞ்சம் கொள்ள, அதில் இருந்த பதிவினைக் கண்டு ஏறத்தாழ கண்கள் கலங்கிவிட்டான். மாப்பிள்ளை ஊர்வலத்தில் குதிரையின் மீது ஏறுவதற்கு முன் ஒற்றைக் காலில் நின்று கொண்டு, மற்றொரு காலைத் தூக்கிய நிலையில் அவன் தடுமாறிய புகைப்படம் பகிரப்பட்டு திருமண வாழ்த்து செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. அடுத்து அவன் கையில் வாளோடு பவனி வந்த புகைப்படம் பகிரப்பட்டு, 'தீரா தீரா மின்னல் வாள் வீசும் கரிகாலா… வீரா வீரா கண்கள் ஆள் தாக்கும் குருவாளா…’ என்ற வரிகளும் பதிவிடப்பட்டிருந்தது.

'எவன்டா இந்த வேலையை பார்த்தது?’ என்று கோபம் கொப்பளிக்கும் கனலாய் அவன் பதிவுகளைப் பார்த்துக்கொண்டிருக்க, ‘ஹாய் மாம்ஸ்… என்னோட பிரென்ட் ரிக்குவெஸ்ட் அக்செப்ட் பண்ணுங்க’ என்று முகப்புத்தக உட்பெட்டியில் குறுஞ்செய்தி ஒன்று வந்துவிழுந்தது. 

‘யாரிது?!!’ என்று ஆர்வமான சஞ்சய், அனுப்புனரைப் பார்க்க, ‘பூமிகா’ என்ற பெயரில் அவனது மச்சினி முகப்புப் படத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள். ‘இவ இங்கயும் வந்துட்டாளா..’ என்று அயர்ந்துகொண்டவன் அவளது நட்பு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள, உடனே அவனது கைப்பேசி எண்ணை வேண்டி இன்னொரு குறுஞ்செய்தி வந்தது. அவன் பதில் கூறியதும் உடனே புது இலக்கத்திலிருந்து அழைப்பு வர, அதனை ஏற்று “ஹலோ!” என்றான், மாப்பிள்ளை சஞ்சய்.


ஹையோ அணுகுண்டு பத்திக்கிச்சு பத்திக்கிச்சு ஓ ஓ மாப்ளே!!    

கா(த)லர் டியூன் - 3

பகுதி- 3


"என்ன மாம்ஸ் இன்னும் தூங்கலயா?"
"இல்ல… தூங்கணும்…"
"விடிஞ்சா கல்யாணம்… எப்படி தூக்கம் வரும்?"
பரிகாசமாய் அவள் கேட்டுவிட்டு சிரிக்க, அவளோடு சேர்ந்து ஒரு கோரஸ் சிரிப்பொலியும் கேட்க, 
"நீங்களும் ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க? விடிஞ்சா உங்களுக்கும் கல்யாணமா?" என்றான். அவளைப் பழிகுப் பழி வாங்கிவிட்டு சந்தோஷத்தில் அவன் உரக்கச் சிரிக்க, 
"வொய் நாட் மாம்ஸ்? உங்களை மாதிரியே ஒரு ஸ்பேர் (spare) மாப்பிள்ளை இருந்தா சொல்லுங்க, ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சுடுவோம்" என்றவள் மீண்டும் கோரசுடன் சிரிக்க, அன்று மாலை அவன் ஏந்தி வந்த வாளைக் காட்டிலும் மிக மோசமாக மொக்கைப்பட்டான்.
'இந்த பாடி சோடாவை அநியாயத்துக்கு இந்த லேடி தாதா கலாய்க்கறாளே…’ என்று வெளியே சத்தம் கேட்காத அளவிற்கு உள்ளுக்குள் குமுறியவன், அவளிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு, "எனக்கு தூக்கம் வருது…" என்று நழுவிக்கொள்ள முயல, "இருங்க மாம்ஸ் உங்ககிட்ட பேச இங்க ஒரு கியூவே நிக்குது" என்றவள் அருகிலிருந்த மற்றொரு உறவுக்காரப் பெண்ணிடம் கைப்பேசியைக் கொடுக்க, 'திரும்பவும் முதல்லேர்ந்தா?!' என்று கண்கள் வியர்த்துவிட்டான்.


"சஞ்சய் எழுந்து குளிச்சுட்டு வா… நேரம் ஆகுது… இன்னும் என்ன தூக்கம்?"
அண்ணன்மார்கள் உலுக்கியதில் மெல்ல கண்விழித்து எழுந்த மாப்பிள்ளை, உள்ளங்கைகளை உரசி வெப்பம் கூட்டி, கண்கள் மூடி இமை மீது வைத்து ஒத்தடம் கொடுத்தான். 
"என்ன மாப்ள, ராத்திரியெல்லாம் தூங்காம கண்ணை திறந்துக்கிட்டே கனவா? இப்படி சிவந்து போயிருக்கு?" 
"அதெல்லாம் ஒன்னும் இல்ல அண்ணே…" என்றவன், எழுந்து குளித்து முடித்து முகூர்த்தத்திற்கு தயாரானான். வெண்பட்டு சட்டை வேஷ்டியில் கண்ணாடி முன் யோசனையாய் நின்றிருந்தவனை கலைத்தது, அவனது கைப்பேசி அழைப்பு. 


கைப்பேசி அழைப்பினை ஏற்று சற்று தனிமையில் உரையாடிவிட்டு தனது அறைக்குத் திரும்பியவனைக் கண்டு,
“எங்கப்பா போயிட்ட? உன்னைக் காணோம்னு நாங்க பதறிட்டோம்…” என்று தந்தை ராமநாதன் பதற, தாய் சீதாலட்சுமி ஏறக்குறைய அழும் நிலையில் தவித்திருந்தாள்.
“எங்கெல்லாம் உன்னை தேடுறது? ஒழுங்கா உன் ரூம்ல இருக்க மாட்ட?” 
அம்மாவும் தன் பங்கிற்கு கோபித்துக்கொண்டாள். 
“தொலைஞ்சுபோக நான் என்ன சின்ன புள்ளையா? ஒரு முக்கியமான ஆபிஸ் கால் வந்தது. அதான் மண்டபத்துக்கு கீழ இருக்கற கார் பார்க்ல பேசிட்டு இருந்தேன்…”
இவர்களின் தேடுதல் ஆரவாரத்தைக் கண்டு மாப்பிள்ளை சிடுசிடுத்தான்.
“என்ன சஞ்சய், முகூர்த்தத்துக்கு நேரம் ஆகுது, இப்போ போய் ஆபிஸ், வேலைனு சொல்லிக்கிட்டு இருக்க?” என்று பெரியப்பாவும் தன் பங்கிற்கு வருத்தம் தெரிவிக்க, 
“ரொம்ப முக்கியமான போன் கால் பெரியப்பா…” என்று அவன் விளக்கம் கொடுக்க முயற்சிக்க, அதற்குள்ளாக நல்ல நேரம் தொடங்கிவிட்டிருந்ததால், மாப்பிள்ளை உடனே மணமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.


முன்தினம் அவனிடம் இருந்த பரவசங்கள் இன்று முற்றிலுமாய் வற்றியிருந்தன. ஏதோ ஒன்று அவனை அலைக்கழித்துக்கொண்டிருந்தது. அவனை சிரிக்கச் சொல்லி அண்ணன்மார்கள் கூறியும், மென்னகை சிந்த மறுத்தான். மணப்பெண் தீபிகா அழகிய பதுமையென அவனருகே வந்தமர, அவனோ தனது சிந்தனையில் தொலைந்திருந்தான். அவளைக் கண்டிடும் எண்ணம் அவனுள் தொலைந்திருந்தது. அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, அவனிடம் கல்யாண குருக்கள் மாங்கல்யம் வைத்திருந்த மங்களத் தட்டினை நீட்ட, ஒருவித மிரட்சியுடனும், வெறுப்புடனும் அதனை நோக்கினான். 
“திருமாங்கல்யத்தை எடுங்கோ” என்று குருக்கள் கூற, தாலியைக் கையிலெடுத்தவன் தலை நிமிர்ந்து அவள் முகம் காண்டான். ஆயிரம் கண்கள் நோக்கிக்கொண்டிருந்த அந்தத் தருணத்தில், கையிலெடுத்த தாலியை தட்டில் வைத்துவிட்டு மணவறையில் எழுந்து நின்றவன்,
"எனக்கு பத்து லட்சம் ரொக்கம் எடுத்து வச்சா தான் நான் தாலி கட்டுவேன்" என்றான், திடமாக.
பெண் வீட்டார் மட்டுமல்ல, மாப்பிள்ளை வீட்டாரும், அவனது பெற்றோரும் கூட அதிர்ந்தனர். 
“சஞ்சய் என்னடா ஆச்சு உனக்கு? நீயா இப்படியெல்லாம் பேசறது?”
ராமநாதன் தனது மகன் பேசியவற்றையும், நின்றிருந்த தோரணையையையும் கண்டு மனம் குழம்பித் துவண்டார்.
“டேய் சஞ்சய், நீ ஒரு நாளும் இப்படி பேசினதில்லையே? இப்போ எதுக்கு காசு பணம்னு ஏதேதோ பேசற?”
கண்கள் கலங்கியிருந்தாள், அன்னை சீதாலட்சுமி.
“நீங்க பேசவேண்டியதெல்லாம் பேசியிருந்தா நான் ஏன் இப்போ இதைப் பத்தி பேசப்போறேன்?”
தாயிடம் சீறினான்.
“மாப்பிள்ளை, எதுவா இருந்தாலும் கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம். நேரம் ஆகுது… நீங்க தாலி காட்டுங்க…”
தீபிகாவின் தந்தை அவனிடம் மன்றாடினார்.
“கல்யாணம் முடிஞ்சுட்டா எப்படி பேச முடியும்? பொண்ண கட்டிக்கொடுத்தாச்சுனு கைய கழுவிட்டு போயிடுவீங்க. அதுக்குத்தான மூணே வாரத்துல அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணீங்க?”
“அப்படியெல்லாம் இல்லை மாப்பிளை, தீபிகா ஜாதகப்படி அவளுக்கு இந்த மாசத்துக்குள்ள கல்யாணம் பண்ணனும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. இதை நான் ஏற்கனவே உங்க அம்மா, அப்பா கிட்ட கூட சொல்லியிருந்தேனே?!”
“காசு கொடுத்தா ஜாதகத்தையே மாத்தி எழுதிக்கொடுக்கற ஃப்ராடு ஜோசியக்காரனுங்க நிறைய பேரு இருக்கானுங்க. கேவலம் ஒரு பொய் சொல்லமாட்டானுங்களா என்ன?”
“இங்க பாருங்க தம்பி, நீங்க கேட்கறத என்ன எதுன்னு கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம். பொண்ண பெத்தவர் நிறைவாவே உங்களுக்கு செய்வாரு. நீங்க முதல்ல தாலிய காட்டுங்க…”
மாப்பிள்ளையுடன் சமாதானம் பேச முயற்சித்தார் பெண் வீட்டார் ஒருவர்.
“பேச்சு வார்த்தைக்கெல்லாம் இங்க இடம் இல்லை.”
கராராகக் கூறியவன், கழுத்தில் அணிந்திருந்த மணமாலையைக் கழற்ற எத்தனித்தான். அவனது கையை இறுகப்பற்றி தடுத்து நிறுத்திய அவனது தாயோ, “சஞ்சய், மாலையைக் கழட்டாத, உன் கால்ல வேணும்னா விழறேன்… ஒரு பொண்ணோட சாபம் உன்னை வாழவிடாது… மேடை வரைக்கும் வந்துட்டு அந்தப் பொண்ண இப்படி கலங்கடிக்குறியே இது மகாபாவம் டா… நான் சொன்னா கேளு… நமக்கு எதுக்குடா காசு பணமெல்லாம்? போதுங்கற அளவுக்கு கடவுள் நமக்குக் கொடுத்திருக்காரு. வேண்டாம் சஞ்சய். இந்த அம்மா சொல்றபடி கேளு. முதல்ல தாலிய கட்டுடா… ப்ளீஸ் டா” என்று கதறியவள், தன்னால் முடிந்த மட்டும் அவனது எண்ணத்தை மாற்ற முயற்சித்தாள்.
“என் ஆபிஸ்ல வேலை செய்யற சாதாரண அக்கவுண்டண்டுக்கு அம்பது சவரன் நகை, சீர் செனத்தியோட தடபுடலா நேத்துதான் கல்யாணம் ஆச்சு. அதே ஆபிஸ்ல சேல்ஸ் ஹெட்’ஆ இருக்கற எனக்கு இது ஒரு ப்ரெஸ்டீஜ் இஷியூ. எனக்கு என்ன குறைச்சல்? வீட்டுக்கு ஒரே பையன். M.B.A. படிச்சிருக்கேன். சொந்த வீடு இருக்கு. நியாயமா நூறு பவுன் நகை போட்டு, ஒரு கார் வாங்கிக்கொடுத்து ஜாம்ஜாம்னு நடத்திருக்கணும். கல்யாணமாம் கல்யாணம்… கைய விடுமா” என்று வெறுப்பினையும், கோபத்தையும் உமிழ்ந்தவன், தனது தாயின் கைகளைத் தட்டி விட்டு மாலையைக் கழற்றி கீழே வீசினான்.
அவனது செய்கையைக் கண்டு மாப்பிள்ளை வீட்டார் வெட்கித் தலைகுனிய, பெண்வீட்டாரிடம் ஆரவாரம் அதிகமானது.
“இங்க பாருங்க தம்பி, வரதட்சணை வாங்கறது சட்டப்படி குற்றம்னு உங்களுக்குத் தெரியாதா?”; “இது வாழ்க்கை பிஸினெஸ் இல்ல..”; “இவ்வளவு காசு கொடுத்து உங்களுக்கு கட்டிக்கொடுக்கறதுக்கு பதிலா, அந்தப் பொண்ணு கல்யாணம் ஆகாமலே இருந்திடலாம்”; “படிச்சு என்னை பிரயோஜனம்? நாகரீகம் இல்லை…” என்று ஒவ்வொருவரும் அவனை சொல்லெனும் ஈட்டி கொண்டு தாக்க, அவனோ எதற்கும் அசரவில்லை.
“எல்லாரும் பேசிமுடிச்சுட்டீங்களா? நான் வரதட்சணை வேணும்னு கேட்டா தப்பு, ஆனா உங்க பொண்ணுக்கு மட்டும் சொத்து சுகத்தோட, படிச்சு நல்ல வேலைல இருக்கற மாப்பிள்ளை வேணும். அப்படித்தானே? குணம் தான் முக்கியம்னா, எவனாவது யோக்கியன தேடிப்பிடிச்சு காசு இல்லாதவனா இருந்தாலும் பரவால்லனு கட்டிக்கொடுக்க வேண்டியதுதானே?”
இதற்கு மேல் பொறுமை இழந்த பெண்ணின் தாய்மாமா, “இங்க பாருப்பா, எங்க பொண்ண எவனுக்கு வேணும்னாலும் கட்டிக்கொடுப்போம் ஆனா உனக்கு மட்டும் கட்டித்தரமாட்டோம். தாலி கட்டற நேரத்துல கலாட்டா பண்ணா கால்ல விழுந்துடுவாங்கன்னு நினைச்சு மிரட்டுறியா? ஒழுங்கு மரியாதையா இடத்தை காலி பண்ணு, இல்லை போலீஸ்ல சொல்லி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லிடுவேன்.”
“மச்சான், என் பொண்ணு நிலைமை என்ன ஆகறது? ஏன்யா இப்படியெல்லாம் பேசற?” என்று தீபுவின் தந்தை கண்கள் கலங்கி பதற, “இந்தாளுக்கு கட்டிக்கொடுக்கறதுக்கு பதிலா பொண்ண கிணத்துல பிடிச்சு தள்ளிடலாம்” என்றவர், கூட்டத்திலிருந்த ஒரு வாலிபனை மேடைக்கு வரும்படி சிமிஞை செய்ய, அவனோ பதட்டத்தோடு அங்கு வந்து நின்றான். 


சஞ்சய்யின் பெற்றோர் பெண்வீட்டாரிடம் மன்னிப்பு கோர, அவனோ கடுங்கோபத்தோடு அந்த வாலிபனை ஏளனமாய் பார்த்தபடி கீழே இறங்கி நின்றான். 
“அய்யா, அவசரப்படாதீங்க... நான் என் பிள்ளை கிட்ட பேசறேன்…” என்று ராமநாதன் மன்றாட, சஞ்சய்யோ, “அங்க என்ன கெஞ்சிக்கிட்டு இருக்கீங்க? இவர் பொண்ணு பெரிய உலக அழகி… வாங்க…” என்று பற்களைக் கடித்துக்கொண்டு தீபுவை நோக்க, அவளோ உப்பிடப்பட்ட தவிப்புகளைக் கண்ணீராய் சிந்திக்கொண்டிருந்தாள். வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டவன், வசை மொழிகளின் மத்தியில் சலனமின்றி நின்றிருந்தான்.


மேடையின் அருகிலே நின்றிருந்த வாலிபனை வரச்சொல்லி, அவன் கழுத்தில் மாலையிட்டு அமரச் செய்த தாய்மாமன், “சாமி தாலியைக் கொடுங்க” என்று கல்யாண குருக்களிடம் கூற, அடுத்த நிமிடம் தீபுவின் திருக்கழுத்தில் அந்த வாலிபன் திருமாங்கல்யம் அணிவித்தான்.


ஓ நோ… வடை போச்சே...





கா(த)லர் டியூன் - 4




வீட்டில் குழுமியிருந்த நெருங்கிய சொந்தங்கள் வசை பாட, அன்னை சீதாலட்சுமி ஒரு மூலையில் அழுதுகொண்டிருக்க, யாருடனும் பேச விரும்பாமல் தனது அறைக்கு சென்றான், சஞ்சய்.

படாரென கதைவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த தந்தை ராமநாதன், தனது கையிலிருந்த வங்கிக் கணக்கு புத்தகங்களை அவன் மீது வீசியவர், “காசு தான வேணும் உனக்கு? என் பேர்ல இருக்கற எல்லா காசையும் எடுத்துக்க. நானும், உன் அம்மாவும் உன்னை பெத்த பாவத்துக்கு உச்சி குளிர்ந்து போயிருக்கோம். நான் அவளை கூட்டிக்கிட்டு எங்கயாவது போயிடறேன்… நீ எங்க போட்டோவுக்கு மாலை மாட்டிடு” என்று வார்த்தைகளால் அவனை சுட்டுவிட்டுச் சென்றார்.

தந்தை கூறியதைக் கேட்டு கண்களில் நீர் துளிர்க்க, கட்டிலில் சரிந்து கண் மூடினான், சஞ்சய். கைப்பேசி ஒலிக்க அழைப்பினை எடுத்தவன், பதறியடித்துக்கொண்டு வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தை நோக்கி ஓடினான். அவனது பரபரப்பைக் கண்டு தந்தை துணுக்குற, மற்றவர் கேள்வியாய் நோக்க, கவலையும் கோபமுமாய் அவன் முன்னே சென்று நின்றார், ராமநாதன்.
“இப்போ எங்க அவசரமா கிளம்பற?” என்றபடி அவனை வண்டியை கிளப்ப விடாமல் வழிமறித்து நின்றார்.
"அப்பா, தீபிகாவுக்கு ஏதோ பிரச்சனையாம், அவ தங்கை இப்போ தான் ஃபோன் போட்டு சொன்னா. நான் பார்த்துட்டு வந்துடறேன்."
"பிரச்சனையே உன்னால தான், இப்ப நீ எந்த பிரச்சனைய தீர்த்து வைக்க கிளம்பிட்ட?"
"அப்பா, ப்ளீஸ் நான் உடனே வந்துடறேன்" என்றவன், தந்தையின் சொல்லையும் மீறி திருமண மண்டபத்திற்கு விரைந்தான்.
“அவன் எங்க போயிருக்கான்?” என்று வினவிக்கொண்டு சீதாலட்சுமி வாயிலில் வந்து நிற்க,
“அந்த தீபிகாவுக்கு ஏதோ பிரச்சனையாம், போன் வந்ததுன்னு கல்யாண மண்டபத்துக்கு போயிருக்கான்…” என்று பற்கள் நறநறக்க கூறிமுடித்தார்.
“சித்தப்பா, அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டு வந்தவன் இப்போ அவளுக்கு பிரச்சனை’னு எதுக்கு ஓடணும்?” 
ராமநாதனின் அண்ணன் மகன் வினவ, அனைவருக்குமே சஞ்சய்யின் நடவடிக்கை புதிராகத் தான் இருந்தது.  
“அப்போவே போலீஸ் கேஸுன்னு மிரட்டுனாங்க. இவனை பேசி வரவழைச்சு ஏதாவது ஆபத்து உண்டு பண்ணிடுவாங்களோனு பயமா இருக்கு...” 
மகனை எண்ணி, தரையில் சரிந்து அமர்ந்த சீதாலட்சுமி குரலெடுத்து அழ, ராமநாதனுக்கும் ஒருவித கலக்கம் பிறந்தது. தனது மனைவியையும், நெருங்கிய சொந்தங்களையும் அழைத்துக்கொண்டு அவர் மண்டபத்திற்கு உடனே விரைந்தார்.

அடித்து பிடித்து மண்டபத்திற்குள் சென்ற சஞ்சய், தீபிகா கண்கள் கலங்கியிருக்க, அவள் அருகில் அவளது கணவன் கவலையாய் நின்றிருக்க, உறவுகள் இவனது வருகையை எதிர் நோக்கியது போல காத்திருக்கக் கண்டு கண்களில் கொக்கிகள் மின்ன அவர்களின் எதிரே சென்று நின்றான்.
“டேய் சஞ்சய், என்ன பிரச்சனை?” என்று குரல் கொடுத்துக்கொண்டே அவனருகே அவனது அண்ணனும், உறவுகளும் வந்து நின்றனர்.

“இப்போ எதுக்கு எல்லாரையும் வரவழைச்ச பூமிகா? என்ன நடக்குது இங்க?”
தாய்மாமன் பொறுமை இழந்தார். 
சஞ்சய்யை ஆழ்ந்து நோக்கிய பூமிகா, தனது அக்காவை நோக்கி,
"அவர் மட்டுமில்ல, அவர் வீட்டு ஆளுங்களும் வந்திருக்காங்க… ரொம்ப நல்லதா போச்சு... இப்பவாவது உண்மைய சொல்றியா?" என்று கண்டிப்பான குரலில் அக்காவை கூராய் நோக்கியபடி, வினவினாள்.
"அவ… அவர் மேல…"
வார்த்தைகளை மென்று முழுங்கினாள், தீபிகா.
"இப்ப எதுக்கு தேவை இல்லாதத பேசிக்கிட்டிருக்கீங்க?"
அவள் கூறவந்ததை கூறி முடிக்கும் முன், சஞ்சய் இடைமறித்தான்.
"உங்களுக்கும் பேச வாய்ப்பு வரும். அப்ப நீங்க பேசலாம். இப்ப என் அக்கா சொல்ல வந்ததை சொல்லட்டும்" என்று பூமிகா அவனை நோக்கி திடமாய்க் கூற, இவன் நா அமைதியானது.

குற்ற உணர்வுகள் கண்களில் ததும்ப சஞ்சய்யை நோக்கிய தீபிகா, மறுநொடி தனது தலையை தாழ்த்திக்கொண்டு முடக்கி வைக்கப்பட்டிருந்த உண்மைகளை கூறத் தொடங்கினாள். 
"அவர் மேல எந்தத் தப்பும் இல்லை. என் விருப்பத்துக்கு மாறா இந்தக் கல்யாணம் நடக்கயிருந்தது. என்னை பெத்தவங்க என் மனசை புரிஞ்சுக்கல, ஆனா இவர் புரிஞ்சுக்கிட்டார். சின்ன வயசுல எனக்கும் ரமேஷ் மாமாவுக்கும் தான் கல்யாணம்னு எல்லாரும் பேசி சிரிப்பீங்க. ஆனா அது விளையாட்டில்லனு எத்தனை பேர் உணர்ந்தீங்க? நீங்க பேசிப்பேசியே எங்களுக்குள்ள ஆசைய விதைச்சுட்டீங்க… திடீர்னு வந்து இவர் தான் மாப்பிள்ளை’னு இன்னொருத்தர கைகாட்டினா எப்படி ஏத்துக்க முடியும்? அப்பா… உங்க கிட்டையும், மாமா கிட்டையும் வெளிப்படையா என் விருப்பத்தை சொல்லியும், வசதிய காரணம் காட்டி நீங்க மறுப்பு தெரிவிச்சீங்க. அப்போ தான் நேத்து இவரோட பேச எனக்கு வாய்ப்பு கிடைச்சுது…”

நேற்றிரவு…
“எல்லாரும் இப்படி மாறிமாறி பேசி ஏன் என் தூக்கத்தை கெடுக்கறீங்க?” 
பூமிகா மற்றும் அவளது வானரப் படையின் பரிகாசத்திலிருந்து தப்பிக்க வழி தெரியாமல், விழி பிதுங்கியிருந்தான், சஞ்சய். நள்ளிரவு நெருங்கியும் அவனை விடுவேனா என்று கைப்பேசியின் வழியே அவர்கள் ரகளைகள் செய்துகொண்டிருந்தனர்.
“மாம்ஸ், எல்லார்கிட்டயும் பேசினீங்க, ஆனா முக்கியமான ஒருத்தர் கிட்ட பேசவே இல்லையே?!” என்ற பூமிகா தனது அக்காவை நோக்க, அவளோ கட்டிலில் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு, பேசும் வாய்ப்பிற்காக காத்திருந்தாள்.

சஞ்சய்க்குள்ளும், அடுத்து பேசவிருப்பது தீபிகாவாக இருக்க வேண்டும் என்றொரு எதிர்பார்ப்பும், ஆசையும் முட்டி முளைத்தது. தங்கையிடமிருந்து கைப்பேசியை பெற்றுக்கொண்ட தீபிகா, உடனே அறையை விட்டு வெளியே வந்து தனிமையில் நின்று பேசத் தொடங்கினாள்.
“ஹலோ… நான் தீபிகா பேசறேன்...”
அவளது குரலைக் கேட்டவனுக்கு அன்றைய பொழுதின் அலுப்புகள் நீங்கி, உற்சாகம் சுரந்தது.    
“ஹாய் தீபிகா… எப்படி இருக்கீங்க?” 
வார்த்தைகளுக்கு வலிக்கா வண்ணம் மென்மையாய் வினவினான்.
“ம்ம்… உங்ககிட்ட… உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்… நீங்க மண்டபத்து மாடிக்கு வரமுடியுமா?” என்றாள், அவசரஅவசரமாக. அவளது குரலே ஏதோ வில்லங்கம் காத்திருப்பதை போட்டுடைத்தது.
“சரி வரேன்…” என்றுவிட்டு அழைப்பினைத் துண்டித்தவனின் மனம் கனத்தது.   

மொட்டை மாடியில் நிலவொளியும், ஒரு மஞ்சள் பல்ப் ஒளியும் மட்டுமே அவளுக்குத் துணையாக இருக்க, இருள் படர்ந்திருந்த வெளியைக் கண்டு அச்சம் கொள்ளாது, அதைக் குறித்த நினைவு கூட இல்லாது, தனது சிந்தனையில் தொலைந்திருந்தாள். 
“தீப்… பிகா…” 
‘தீபு’ என அழைக்க நினைத்து ‘தீபிகா’ என்றான், சஞ்சய்.    
அவனைக் கண்டதும் கண்கள் தாழ்த்திக்கொண்டவள், 
“என்னை மன்னிச்சுடுங்க…” என்றாள், அவன் குழம்பும்படியாக.
“ஏதாவது பிரச்சனையா?” என்றான் சஞ்சய், பரிவாக.
‘ஆம்’ என்று தலையசைத்தவள், “நீங்க தான் உதவி செய்யணும் ப்ளீஸ்..” என்றாள் குரல் தழுதழுக்க.
“எந்தப் பிரச்சனையா இருந்தாலும் சரி பண்ணிடலாம். ப்ளீஸ் அழாதீங்க…”
“எனக்கு இருக்கற கடைசி நம்பிக்கை நீங்க தான்…” என்றவள் விழிவழியே அவனது உதவியை யாசிக்க,
“நிச்சயம்… நிச்சயம் செய்யறேன். நீங்க எதுவா இருந்தாலும் சொல்லுங்க…” என்றான் ஆறுதலாக.
அவளது கண்ணீர், அவனது இதயத்தைச் சுட்டது.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லை…”
அவள் நிதானமாய்க் கூறினாலும், அவள் கூறியது அவன் தலையில் இடியென இறங்கியது. தொண்டை அடைத்துக்கொள்ள, கண்கள் ஈரம் கொள்ள, பதில் என்ன சொல்வதென்று புரியாமல் பேரதிர்ச்சியில், பரிதவித்து நின்றான். அவன் எதுவும் கூறும் முன், தீபிகா தன் மனதை மொழியத் தொடங்கினாள்.
“என்னுடைய அம்மா வழி முறைப்பையன் ஒருத்தர விரும்பறேன். சின்ன வயசுல அவருக்கும் எனக்கும் தான் கல்யாணம்னு பேசிப்பாங்க. அந்த நினைப்பு என் மனசுல விதையா விழுந்து, மரமா வளர்ந்து நின்னதை நான் உணர்ந்ததே உங்களோட எனக்கு நிச்சயம் ஆன பிறகு தான். அவரும் பொண்ணு கேட்டு வந்தாரு. ஆனா, அப்பா மறுத்துட்டார். உடனே இந்தக் கல்யாணத்தை ஏற்பாடு செய்தார். என் விருப்பம் என்னனு அவங்க கேட்கவே இல்லை. நானா வெளிப்படையா பேசியும், அதை புரிஞ்சுக்கல. அப்பாவுக்கு பயந்து அம்மாவும் கூட என் விருப்பத்துக்கு தடை சொல்லிட்டாங்க. உங்ககிட்ட எப்படியாவது பேசணும்னு முயற்சி பண்ணேன். இப்ப தான் வாய்ப்பு கிடைச்சுது. நீங்க தான் எப்படியாவது இந்தக் கல்யாணத்தை தடுத்து நிறுத்தணும். ஒருவேளை இந்தக் கல்யாணம் நடந்தா நிச்சயம் உங்களுக்கு ஒரு நல்ல மனைவியா என்னால இருக்க முடியாது. எவ்வளவு காலம் ஆனாலும் என் மனசையும் என்னால மாத்திக்க முடியாது. என்னை மன்னிச்சுடுங்க…” என்று மனதில் உள்ளவற்றைக் கூறி முடித்தவள், கைகளுக்குள் முகம் புதைத்து அழத்தொடங்கினாள். 
அவள் கூறியவற்றை உள்வாங்கிக்கொள்ள முடியாமல் தவித்திருந்தவன், சில நிமிடங்கள் அமைதியாய் நின்றிருந்தான், தனது மனதின் ஆர்ப்பரிப்பு சற்றே அடங்கும் வரை. 
அழுது ஓய்ந்தவள் அவனை நோக்க, அவனோ எங்கோ வெறித்தபடி இருந்தான். “நான் கிளம்பறேன்…” என்றவள், அவனது பதிலுக்கு காத்திராமல் தனது அறைக்கு விரைந்தாள்.


நடந்தவற்றை கூறிமுடித்தவள், “நீங்க யாரும் என்னை புரிஞ்சுக்கல, இவராவது புரிஞ்சுப்பாரான்னு முயற்சி செஞ்சு பார்ப்போம்னு தான் நேத்து ராத்திரி மண்டபத்து மொட்டை மாடில இவரை சந்திச்சு எல்லா உண்மையையும் சொன்னேன். அவர் என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்ததும் இல்லாம, ஒரு படி மேல போய், பொய்ப் பழிய தன் மேல ஏத்துக்கிட்டு, இந்தக் கல்யாணத்தை நடத்தி வச்சாரு…" என்றாள் தனது பெற்றோரை நோக்கி. கண்ணீர் மல்க கூறி முடித்தவள், பட்டென சஞ்சய்யின் காலில் விழுந்தாள்.
அவளை எழுப்பியவன், “கவலை படாதீங்க தீபிகா, அழுவறதால எந்தப் பிரயோஜனமும் இல்லை… நல்லா வாழ்ந்துகாட்டுங்க!!” என்று மனதார வாழ்த்தினான்.

“வாழ்த்தறது இருக்கட்டும் தம்பி, எங்க பொண்ணு உங்ககிட்ட வந்து இப்படி பேசினா, நீங்க எங்ககிட்ட வந்து சொல்லியிருக்க வேண்டாமா? இப்படித்தான் கல்யாணத்துல குழப்பத்தை உண்டு பண்ணுவீங்களா?” 
கடிந்துகொண்டார் தாய்மாமன்.
“டேய் எங்கக்கிட்டயாவது சொல்லியிருக்கலாமேடா?” 
அண்ணனும் முறைத்துக்கொண்டான்.
“இன்னைக்கு விடிஞ்சதும் முதல்ல அப்பா, அம்மா கிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா அவங்களுடைய ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு என்னால ஊகிக்க முடியல. இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைங்கறது ஒரு பக்கம் இருந்தாலும், இத்தனை பேர் கூடியிருக்கற சபைல நான் ஏதாவது செய்யப்போக என் அம்மா அப்பா தலை குனியும்படி ஆகிடுமோனு ஒரு பயம். எல்லாருக்கும் இந்த விஷயம் தெரியவந்தா, ஒரு பொண்ணு அவமானப்படவேண்டி வருமே’னு ஒரு தயக்கம். அப்பத்தான் ரமேஷ்கிட்டயிருந்து கால் வந்தது. 
‘சார் நாங்க பார்க்கு, பீச்சுன்னு சுத்தினது இல்லை. போன்ல மணிக்கணக்கா கதை பேசினதில்ல. ஏதாவது ஒரு விழாவுல இல்லை பொது இடத்துல சந்திச்சுக்கும்போது ஒருத்தரை பார்த்து ஒருத்தர் சிரிச்சுப்போம், அவ்வளவுதான். மனசு ஒத்துப்போன பிறகு பேச்செதுக்குனு நினைச்சேன். உங்ககூட தீபிகாவுக்கு கல்யாணம் முடிவு பண்ணின விஷயம் தெரிஞ்சு என் அம்மா, அப்பாவ அழைச்சுட்டு போய் பொண்ணு கேட்டேன். சரியான தொழில் அமைஞ்சு போதிய வருமானம் இல்லாததால பொண்ணு கொடுக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. பெத்தவங்களா அவங்க முடிவு சரிதான். ஆனா அவளுக்கும் மனசு இருக்குல்ல?! அவளும் என்னை விரும்பறதா வாய்விட்டுச் சொன்ன பிறகும் என்னால அமைதியா இருக்க முடியல. முன்னேறணும்ங்கற வெறியோடத்தான் ராத்திரியும், பகலும் உழைக்கறேன். சில வருஷத்துல நான் நல்ல நிலைமைக்கு நிச்சயம் வந்துடுவேன். ஆனா, அப்போ நான் இழந்த என்னோட காதல் திரும்பக்கிடைக்குமா சார்? இல்லை, மனசுல என்னை நினைச்சு புழுங்கிபுழுங்கி அவ உங்களோட வாழற வாழ்க்கை தான் இனிக்குமா?’ னு சொன்னார். அவர் பேசினது ஒவ்வொண்ணும் அவங்க ரெண்டு பேருக்குமான ஆழமான காதல எனக்கு உணர்த்துச்சு. என்னால சேர்த்த வைக்க முடியலைனாலும், அவங்க பிரிய நான் காரணமா இருக்கக்கூடாதுனு தான் பத்து லட்சம் பணம் கேட்டு நான் கல்யாணத்தை நிறுத்தினேன். எந்த பணத்துக்காக அவரை வேண்டாம்னு சொன்னீங்களோ, அதே பணம் நான் கேட்டதும் நான் கெட்டவனாகிட்டேன், அவர் நல்லவராகி கல்யாணமும் முடிஞ்சுது. எனக்கு இதுல வருத்தமோ, குற்றவுணர்வோ இல்லை. ஒரு நல்ல விஷயம் நடக்க காரணமாயிருந்த திருப்தி தான்.”
“இப்படியெல்லாம் இனிக்க இனிக்க பேசி, உங்களோட செயல நியாயப்படுத்த பார்க்கறீங்களா?”
அவனை பாராட்டாது, வினா விடுத்து இறுக்கினர், சிலர்.
"கட்டாயக் கல்யாணம் பண்றது, உயிரோட இருக்கற பொண்ணுக்கு கருமாதி பண்றதுக்கு சமம். தப்பு பண்ணவன விட தப்புக்கு துணை போனவனுக்கு தான் தண்டனை அதிகம். தாராளமா என்ன தண்டனை வேணும்னாலும் எனக்குக் கொடுங்க. ஆனா தப்பெல்லாம் உங்களோடது தான்னு ஒரு நாள் உணருவீங்க…" என்று சபையினரை நோக்கி உணர்ச்சிப்பொங்கக் கூறி முடித்தவன், மூச்சிரைக்க அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். 

"உங்களுக்கு ஆயுள் தண்டனை தயாரா இருக்கு" என்ற குரல் கேட்டு தலை நிமிர்ந்தவன், அவன் எதிரே, நெஞ்சின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்த பூமிகாவைக் கண்டு கேள்வியாய் நோக்கினான். 
"என்ன தண்டனை?" என்றான், ‘எதற்கும் தயார்’ என்பதைப்போல.




அந்த வானத்தை போல மனம் படைச்ச நல்லவனே… போ மாப்பு கண்ணு வேர்த்துடுச்சு…

கா(த)லர் டியூன் - 5




பூமிகா அவனது கண்களை ஊடுருவி நோக்க, 
“எதுவா இருந்தாலும் நான் தயார்… தண்டனை என்னனு சொல்லுங்க…” என்றான், அழுத்தம் திருத்தமாக.
"வெரி சிம்பிள். என்னை இப்பவே கல்யாணம் பண்ணிக்கோங்க.."
அவள் கூறியதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவன், பதில் பேசிட வார்த்தைகளைத் தேடி ஓய்ந்துபோனான்.
"என்ன ஹீரோ, இன்ப அதிர்ச்சியில வார்த்தை வரலையோ?"
"அதிர்ச்சி தான்… ஆனா இன்பமெல்லாம் இல்லை… இங்க பாரு, நீ சின்ன பொண்ணு… சும்மா…"
திக்கித் திணறி தவித்துப் போயின அவனும், அவனது வார்த்தைகளும். 
"ப்ச்… ப்ளீஸ் ஹீரோ மாம்ஸ், இந்த ஹீரோக்களுக்கு இருக்கற பெரிய குறையே இப்படி காதுல ரத்தம் வரவரைக்கும் அறிவுரை சொல்றது தான். தெரியாம தான் கேட்கறேன் என் அக்கா காதலுக்கு மட்டும் தான் உதவி செய்வீங்களா? என் காதலுக்கு உதவ மாட்டீங்களா?"
"காதலா?"
"ஆமா, ரெண்டு மணி நேரமா… உங்க மேல… எக்கச்சக்கசக்கச்சக்கமா லவ்ஸ், மிஸ்டர் ஹீரோ… அதான் உங்களுக்கு ஃபோன் போட்டு வரவச்சேன்… தாலியும் ரெடி, மாலையும் ரெடி… இன்னொரு நல்ல நாள் பார்த்து, மண்டபம் புடிச்சு, இந்த சொந்தக்காரங்களுக்கு பத்திரிக்கை வச்சு… ஷப்பா, எனக்கு அதுக்கெல்லாம் பொறுமையில்லை மாம்ஸ்… உங்கள மாதிரி மாப்பிள்ளையெல்லாம் மிக மிக அறிய வகை உயிரினம்!! இன்னைக்கு நடந்த சீன் மட்டும் வெளியே தெரிஞ்சுது, நீங்க மாஸ் ஹீரோ ஆயிடுவீங்க, பொண்ணுங்க ப்ரொபோஸ் பண்ண கியூ கட்டி நின்னுடுவாங்க, அப்புறம் நானும் என் காதலும் என்ன ஆகறது? யூ சீ நான் பேசிக்கலி பயங்கர உஷாரு..."
அவள் கூறியதை நம்பமுடியாமலும், ஏற்கமுடியாமலும் அவன் தவித்திருக்க, சபையினர் அதிர்ச்சியில் உறைந்திருக்க, பூமிகாவின் அப்பா ஏறக்குறைய மூர்ச்சையாகினார். 
“பூமிகா, நீ என்னமா அடுத்த குண்டை எங்க தலையில தூக்கிப்போடற?”
அதிர்ச்சியிலிருந்து தெளிந்த தாய்மாமன் வினவ,
“மாமா, நமக்கு கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை ஒரு பொண்ணோட வாழ்க்கை நல்லா அமையணும்னு நினைக்கற மனசு இருக்கே… அது தான் கடவுள். அப்படிப்பட்ட கடவுள் மனசுள்ள மாம்ஸ கல்யாணம் பண்ணிக்காம விட்டா அது தெய்வக்குத்தமாயிடும் மாமா…” என்று அசராமல் பதிலளித்தாள்.
“அதுசரி, நீ திடீர்னு உன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்க இது விளையாட்டில்ல, வாழ்க்கை…”
அவளின் அம்மா கண் கலங்கினாள்.
“ஆமாமா, நீங்க அக்கா வாழ்க்கையில விளையாட நினைச்சதை நான் தான் பார்த்தேனே… அதுவுமில்லாம நான் அப்போ சொன்ன மாதிரி இது திடீர்னு எடுத்த முடிவில்ல. ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி எடுத்தது. கல்யாணம் முடிஞ்சும் என் அருமை அக்கா அழறாளேனு சமாதானம் செய்யும் போது நடந்த உண்மையெல்லாம் என்கிட்ட சொன்னா. அப்பவே மாம்ஸ் மேல மரியாதை வந்து, மரியாதை உடனே காதலாவும் மாறிடுச்சு. சித்தி பையன தாலியும், மாலையும் வாங்கிட்டு வர அனுப்பிட்டு, மாம்ஸ்க்கு போன் போட்டு வரச்சொல்லிட்டு, உங்க எல்லாரையும் இங்க ஒண்ணுகூட வச்சேன். இப்போ அவர் மேல எந்தத் தப்பும் இல்லைனு தெரிஞ்சு போச்சுல?! அவர் செஞ்ச தியாகம் என்னனு புரிஞ்சுபோச்சுல?! அதனால எல்லாரும் அட்சதைய தூவி ஆசீர்வாதம் பண்ணுங்க...” என்றவள் அவனைக் கண்டு பிறைநிலா புன்னகை சிந்தினாள்.

சஞ்சய் பூமிகாவை முறைத்துவிட்டு வெளியேற எத்தனிக்க,
"டேய் ஒழுங்கு மரியாதையா அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா" என்று அவனை மீண்டும் இடைமறித்தார் தந்தை.
"அப்பா அவ…"
"ஒரு பொண்ணு சபைல வச்சு இவ்வளவு தூரம் மனசுல உள்ளத சொல்லிட்டா. இதுக்கு மேல என்னடா வேணும்?!" என்று அவனை அடக்கியவர், "அட்சதைய எடுத்துவாங்கப்பா…" என்றுவிட்டு ஆசிர்வதிக்க ஆயத்தமானார்.

"அப்பா என்ன விளையாடறீங்களா?" என்ற சஞ்சய், "இங்க பாரு எதாவது சினிமா பார்த்துட்டு, கதை புக்கு படிச்சுட்டு நீயே என்னென்னமோ கற்பனை பண்ணி சின்னபுள்ளதனமா பேசாத. இதெல்லாம் நடக்காது…" என்றான் பூமிகாவிடம், கண்டிப்போடு.
"ஏன் நடக்காது? கண்டிப்பா நடக்கும். நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?! நடத்திக் காட்டுவோம். உன் அருமை தெரிஞ்சு ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னா, உடனே தாலி கட்டி அவள தலை மேல வச்சு கொண்டாட வேண்டாமாடா? " என்று வீரு கொண்டு எழுந்த சஞ்சய்யின் தாய் சீதாலட்சுமி, பூமிகாவின் பெற்றோரிடம், "சம்பந்தி, உங்க பெரிய பொண்ணுக்கு மனம் போல் மாங்கல்யம் அமைஞ்சுடுச்சு. உங்க ரெண்டாவது பொண்ணுக்கும் அவ இஷ்டப்படி தான் கல்யாணம் செய்யணும்னு நீங்க நினைப்பீங்கன்னு நம்பறேன். எங்களுக்கும் அதான் விருப்பம். நீங்க சம்மதிச்சா கையோட தாலி கட்டி, என் மருமகள வீட்டுக்கு கூட்டிட்டு போய்டுவோம். என்ன சொல்றீங்க?"என்றாள், தடாலடியாக.

பூமிகாவின் அம்மா கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க, யோசனையாய் நின்றிருந்த தந்தை, தனது மைத்துனரிடம் "மாலையும், தாலியும் எடுத்துட்டு வரச் சொல்லுங்க மச்சான்" என்றார்.

சஞ்சய் சுதாரிப்பதற்குள் அவனது கையில் மாலை திணிக்கப்பட, கண்களில் மகிழ்ச்சி மின்ன அவன் எதிரே வந்து நின்றாள், பூமிகா.
"மாலையப் போடு சஞ்சய்" என்று அண்ணன் அவனை அவசரப்படுத்த, நடப்பவற்றை உணர்ந்துத் தெளியக்கூட அவகாசம் இன்றி, அவள் கழுத்தில் மாலையிட்டு மறுநொடி திருமாங்கல்யம் அணிவித்தான்.

அவள் அவனைக் கண்டு கண் சிமிட்டி காதலாய் சிரிக்க, அவனோ இதழோர முறுவல் சிந்தி, கஞ்சத்தனமாய் புன்னகைத்தான். 
"மாப்ள காலைல நடந்த குழப்பத்துல உங்கள மனசு நோகற மாதிரி பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க… என் பொண்ண நல்லா பார்த்துக்கோங்க..." 
சஞ்சய்யின் கையைப் பற்றி பூமிகாவின் தந்தை மனமுருகி கூற,
"அப்பா, அவர் ஒன்னும் அல்பம் இல்லை, இதையெல்லாம் மனசுல வச்சுகிட்டு பழிவாங்க…"
'பல்பம் மாதிரி இருந்துக்கிட்டு என்னை அல்பம்ங்கறாளே?' என்று எண்ணியபடி அவளை விநோதமாய் அவன் நோக்க, அவளோ "ஹீரோ" என்றாள் அவன் காதுகளுக்கு மட்டும் எட்டும் படி. 'இந்த ஒரு வார்த்தைய வச்சே என்னை கவுத்துட்டாளே!' என்றெண்ணியவன் அவளையே கூர்ந்து நோக்க, அவளும் சளைக்காமல் அன்பும், ஆசையும் வழிய அவனைப் பார்த்திருந்தாள்.
தம்பியை தன்னருகே அண்ணன் இழுத்து, "என்னடா ஒரே கண்ணும் கண்ணும் நோக்கியா? நேத்து அந்தப் பொண்ணு உன்னை கலாய்க்கும்போது நீ அமைதியா இருந்தப்பவே  எனக்கு பயங்கர டவுட்டு… சரியான ஆளு தான் நீ…"
"யோவ் அண்ணா, நானே சூனியம் வச்ச மாதிரி ஒன்னும் புரியாம நின்னுக்கிட்டு இருக்கேன். நீங்க வேற…"
"டேய் டேய் டேய்… இது கூட உன் மாஸ்டர் ப்ளானோட ஃபினிஷிங் டச் தானே?"
"நீங்க ரெண்டு பேரும் என்னடா ரகசியம் பேசிக்கறீங்க?"
அவர்களின் எதிரே வந்து நின்றாள், சீதாலட்சுமி.
"ஒண்ணுமில்ல சித்தி, பூமிகா இன்னும் படிப்பு முடிக்கல, அதனால இந்த முதலிரவு சமாச்சாரம்’லாம் வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருந்தான்..."
மகனின் கைகளை தன் கைகளுக்குள் ஏந்திய சீதாலட்சுமி, "உன்னை பெத்ததுக்கு உண்மையாவே பெருமை படறேன். தெரியாம உன்னை திட்டிட்டேன்டா, அம்மாவ மன்னிச்சிடுடா" என்றாள், மனதார.
"என்னமா இதுக்கு போய்… நீங்கதான திட்டுனீங்க… இதுல என்ன இருக்கு?" என்று தாயிடம் கூறியவன், அண்ணனை முறைக்க, "என்னை பார்க்காத, அந்தப் பக்கம் ரியாக்ஷன் பாரு" என்று கண்ணால் பூமிகாவை சுட்டிக்காட்டி சிமிஞை செய்ய, "ரொம்ப தேங்க்ஸ் ஹீரோ மாம்ஸ்!!" என்றாள், இடப்புறம் தலை சாய்த்து, கண்கள் விரிய.
"இட்ஸ் ஓகே" என்று பணிவன்புடன் கூறியவன், “தேங்க்ஸ் அண்ணா” என்றான் அண்ணனுக்கு மட்டும் கேட்கும்படி.

சில மணி நேரத்திற்கு முன் அழுகையும், புலம்பலுமாய் இருந்த சஞ்சய்யின் இல்லம், தற்பொழுது புதுமணத்தம்பதியரை வரவேற்று பேச்சும் சிரிப்புமாய் இருந்தது. அனைவரிடமும் இயல்பாய் பேசிப்பழகிய பூமிகாவைக் கண்டு, சஞ்சய்க்கு உள்ளூர பெருமையாக இருந்தது. அவள் தன்னைக் காணும் நொடிகளில் நெஞ்சினுள் புளகாங்கிதம் கொண்டவன், அவள் அறியா வண்ணம் அடிக்கொருமுறை விழியால் அவளை வருடினான். சஞ்சய்யின் வீர தீர தியாகத்தை புகழ்ந்தோரெல்லாம், பூமிகாவின் அன்பினை மெச்சிடத் தவறவில்லை. 

இரவு தனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி நேற்று இரவு முதல் சற்றுமுன் வரை நடந்த நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்த்தான் சஞ்சய். பூமிகாவின் தடாலடி முடிவும், எதிர்பாரா திருமணமும் அவன் மனதை சூழ்ந்திருந்த கவலை மேகங்களைக் களைந்து, சில்லென மழைச்சாரல் தூவியது. தலைசாய்த்து விழி விரிய நோக்கிய அவள் திருமுகம் மனதில் தோன்றி, மேலும் அவளுக்கு குளிர் சேர்த்தது. 
“என்ன ஹீரோ, ஆழந்த சிந்தனை போல?”
கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்தவள், கட்டிலின் மேல் சென்று அமர்ந்துகொண்டாள். மறுபுறம் வந்து அமர்ந்தவன்,
“ஒண்ணுமில்ல… ஒரே நாள்ல என் வாழ்க்கையே டேக் டைவர்ஷன் எடுத்திடுச்சு… அதான் யோசிச்சுட்டு இருந்தேன்…”
அவள் முகம் சற்றே வாடக் கண்டவன்,
“என்னாச்சு?” என்றான் கவலையாக.
“மாம்ஸ்… அக்கா இடத்துல என்னை பொருத்திப் பார்க்க முடியலையா?”
அவள் கண்களில் மனதின் பரிதவிப்பைக் கண்டவன்,
“உன் அக்காவுக்கு கல்யாணம் முடிஞ்சுடுச்சு. இனி நீ சிந்திக்க வேண்டியது நம்ம ரெண்டு பேர் பத்தி மட்டும் தான். தேவையில்லாததை யோசிச்சு மனச குழப்பிக்காத. புரிஞ்சுதா?” என்றான் நிதானமாக. 
மறுநொடி முகம் மலர்ந்தவள், 
“பக்கா ஹீரோ மாம்ஸ் நீங்க” என்று குரலில் குதூகலம் பொங்கக் கூறியவள், விழி விரித்து அவனைக் கண்டு சிரிக்க, மீண்டும் அவன் மனதில் சில்லென மழைச்சாரல் தூறியது.

“ஆமா நீ எந்த க்ளாஸ் படிக்கற?”
“ம்ம்… ஏழாம் வகுப்பு ஏழாவது வருஷம்…”
“என்ன?”
“பின்ன என்ன மாம்ஸ், ஸ்கூல் பிள்ளை கிட்ட கேட்கற மாதிரி எந்தக் க்ளாஸ்ன்னு கேட்கறீங்க… நான் பி.காம். தர்ட் இயர்…”
“ஓ! அப்போ கடைசி செமெஸ்டரா?”
“ம்ம்…”
‘நல்லவேலை… பள்ளியறைக்கும், பஞ்சணைக்கும் பல நாள் காத்திருக்கணுமோனு பயந்தேபோயிட்டேன்… பரவால்ல நாலஞ்சு மாசம் பொறுத்துப்போம்..’ என்றெண்ணிக்கொண்டு தனது சிந்தனையில் தொலைந்திருந்தான்.
“என்ன மாம்ஸ் அப்பப்போ ஏதோ யோசனைல டேக் ஆஃப் ஆயிடறீங்க?”
“ஒண்ணுமில்ல… நீ தூங்கு… நம்ம வீட்ல ரெண்டு பெட்ரூம் தான் இருக்கு… நீ இந்த ரூம்ல படுத்துக்கோ… நான் ஹால்ல படுத்துக்கறேன்…”
“ஏன் மாம்ஸ்? இங்கயே படுங்க… குட் நைட்…” என்றுவிட்டு அவள் படுத்துக்கொள்ள, விடிவிளக்கை எரியவிட்டு கட்டிலின் மறுகோடியில் அவன் படுத்துக்கொண்டான்.

திடீரென எழுந்து அமர்ந்தவள், தனது கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைக்க, என்னவென்று புரியாமல் கேள்வியாய் எழுந்தமர்ந்தவன், விளக்கினை ஏரியவிட்டான்.  
“ஹலோ அம்மா, நான் பூமிகா தான் பேசறேன்… என் புள்ளைக்கு சாப்பாடு கொடுத்தாச்சா?”... “சரி சரி… நாளைக்கு வரும்போது… சரி சரி…” என்று புதிராய் பேசிவிட்டு அழைப்பினைத் துண்டித்தவள், குழப்பமாய் அவளையே பார்த்திருந்த சஞ்சய்யை நோக்கி, “மாம்ஸ் நாளைக்கு என்னோட… சாரி நம்மளோட பப்புளூ வந்துடுவான்…” என்றுவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.  
படாரென அவன் காதுகளுக்கு மட்டும் ஓர் சப்தம் கேட்க, சுற்றும் முற்றும் நோக்கியவன், இறுதியில் வெடித்தது அவனுடைய லிட்டில் ஹார்ட் என்று உணர்ந்தான்.
“பூமிகா… என்ன சொல்ற நீ?” என்றான் கடுங்கோபத்தோடு. அவனது குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தவள், புரியாமல் அவனையே பார்த்திருக்க, “மொத்த குடும்பமும் சேர்ந்து என்னை மாக்கான்னு முடிவு பண்ணி இதெல்லாம் பண்றீங்களா?” 
அவன் கண்கள் உருட்டி முறைக்க, அவள் தொண்டைக்குழி அடைக்க, அவனைக் கண்டு மிரண்டுபோனாள்.
“மாம்ஸ்… என்ன சொல்றீங்க?”
“நீதான் பப்புளூ அது இதுனு என்னமோ சொல்ற… என்னை பார்த்தா இளிச்சவாயன் மாதிரி இருக்கா?”
கண்களில் கண்ணீர் வழிய அழத்தொடங்கியவள், 
“நீங்க ஹீரோனு நினைச்சு அவசரப்பட்டுட்டேன். காலம் முழுக்க உங்க நிழல்ல நானும், பப்புளூவும் இருந்துடலாம்னு நினைச்சேன். என் பப்புளூ தான் எனக்கு எல்லாம். அவன் இங்க இருக்கக்கூடாதுனா நானும் இங்க இருக்கமாட்டேன். விடிஞ்சதும் நான் போயிடறேன். நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க…” என்றுவிட்டு, மேலும் குரலெடுத்து அழத்தொடங்கினாள். 
அவள் அழுவதை தாங்க முடியாமல் அருகே சென்றவன், 
“பூமிகா… இன்னொரு தடவை அப்படி பேசாத… நமக்குக் கல்யாணம் முடிஞ்சு முழுசா ஒரு நாள் ஆகல, அதுக்குள்ள வீட்டை விட்டுட்டு போறேன்னு சொல்ற? இனி எப்பவும் நீ இப்படி பேசக்கூடாது… இந்த ஜென்மத்துல நான்தான் உன் ஹஸ்பண்ட், இதுதான் உன் வீடு…” என்றான் அவளை அமைதியாக்கிட. 
கண்களைத் துடைத்துக்கொண்டு அவனை நோக்கியவள், “நிஜமாவா மாம்ஸ்?” என்றாள் ஆசையாக. 
அவள் கழுத்தில் தென்பட்ட மஞ்சள் கயிறும், அனிச்சையாய் அவனது கரம் பற்றியிருந்த அவளது கரத்தின் வெதுவெதுப்பும் அவனை ‘ஆம்’ என்று கூற வைத்தது. 
தலைசாய்த்து கண் விரிய சிரித்தவள், “மாம்ஸ் உங்ககிட்ட ஓப்பனிங் வில்லத்தனமா இருந்தாலும், ஃபினிஷிங்ல  மரண மாஸ் ஹீரோ தான் நீங்க…” என்றவள், மீண்டும் அவனுக்கு ஸ்வீட் ட்ரீம்ஸ் கூறிவிட்டு உறங்கிப்போனாள். 
அவள் உறங்கியிருக்க, இவனோ துக்கத்தில் தூக்கத்தைத்  தொலைத்திருந்தான். ‘ஹீரோ ஹீரோன்னு சொல்லியே என்னை காமெடியன் ஆக்கிட்டாளே… விடிஞ்சா அடுத்த அணுகுண்டு தயாரா இருக்கு… ஆளு அம்சமா இருக்காளேன்னு கொஞ்சம் கூட யோசிக்காம தாலிய கட்டுனா கூடிய சீக்கிரத்துல என்னை துவம்சம் பண்ணிடுவா போல…’ என்று அயர்ந்துகொண்டவன், விடிவிளக்கின் ஒளியில் அவளைக் காண, அவளோ சிறுகுழந்தையென உறங்கிக்கொண்டிருந்தாள். துவண்ட மனதிற்கு ஆறுதலின்றி தவித்திருந்தான், சஞ்சய்.
              

அன்பு ஒன்று தான் அநாதை!!