Sunday 9 December 2018

அனைத்தும் அழகு!!

சித்திரங்கள் ஏந்தி நிற்கும் ஒவியனின் முத்தம் 
மத்தளங்கள் வாய் திறந்து கொட்டுகின்ற சிரிப்பு 
ராட்டினத்து குதிரையின் மேல் அரசனாகும் பிள்ளை
ராத்திரியில் ரகசியம் பேசும் தென்னைகளின் ஓலை

காலையில் சிரித்து நிற்கும் நந்தவனத்து ரோஜா
காற்றலையை இசையாக்கும் துளையிட்ட மூங்கில்
மழைக்கரு சுமந்து செல்லும் தென்கிழக்கு மேகம்
அந்தியிலே அருள் சேர்க்கும் மாடத்து விளக்கு

மார்கழி வர்ணங்களை ரசித்திருக்கும் பூசணிப்பூ
மான்விழி கண்டு மகிழ்ந்து நெளியும் மீசைப்பூ
இனிப்பு நினைவுகள் தரும் கண்ணோரக் கசிவு
இனிய நாள் என குறி சொல்லும் நாள் காட்டி

எங்கும் எதிலும் அழகின் ஆடம்பரம்
காண்பவை யாவிலும் அவனின் தோரணம்
கண்களும் பழகட்டும் அழகினைத் தேடிட
உள்ளமும் வாழட்டும் அனைத்தையும் போற்றிட!!

Friday 7 December 2018

களிமண் கடவுள்கள்

அவன் களிமண் கடவுள். அவனது விரல்களின் சொல் கேட்டு, களிமண் சகதி பானைகளாய் ஒய்யார வளைவுகளோடு செழித்து நிற்கும். எத்தனை பானைகள் வடித்தாலும் ஒவ்வொன்றும் மற்ற ஒன்றோடு ரெட்டைப் பிறவியாய் பிசிறு வேறுபாடின்றி ஒன்றுபோல் இருக்கும். சிறிய வகை ஒன்று, பெரிய வகை ஒன்று - இரண்டே வகைகளின் ஜித்தன். அன்னையின் ஜாடையில் பிள்ளையைப் போல், சிறிய பானைகள், பெரியவைகளின் பால பருவம்.

இவனும் களிமண் கடவுள் தான். இவனது விரல்கள் இவன் சொல் கேட்பது அரிது. பானைகளை வடிக்கிறான்... வடிக்க முயல்கிறான்… ஏனோ ஒவ்வொன்றும் விநோதமாக வடிவெடுத்து நிற்கிறது, கண்களை மூடிக்கொண்டு இடக் கையால் தீட்டிய ஓவியம் போல்.

அவனது பானைகள் ஐந்து காசு என்றாலும், அள்ளிச் செல்ல ஜன அலை மோதும். தரத்தில் ஒத்திருந்தாலும் இவனது நெளிந்த பானைகள் இரண்டு காசு தான். பேரம் பேசினால் ஒரு காசு தள்ளுபடி செய்வான்.

எவனோ ஒருவன் வந்தான். அவன் வீட்டு திண்ணையில் சென்றமார்ந்தான். அலட்டிக்கொண்டான் அவன். தனது மூட்டைகளை எடுத்துக்கொண்டு இவன் வீட்டு திண்ணைக்கு இடம் பெயர்ந்தான். அரைக் குவளை கஞ்சி கொடுத்தான் இவன். என்றும் போல் இன்றும் பரந்தாமனை எண்ணிக்கொண்டு உறங்கிப்போனான், நாளையாவது சந்தையில் நெளிந்தவைகளுக்கு வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

விடியற்காலை. அவன் எழுந்தான், சந்தையில் கடை விரிக்க, பானைகளை எடுத்துச் சென்றான். இவன் எழுந்தான். பராந்தாமனை எண்ணினான். திண்ணையில் உறங்கும் வழிப்போக்கனுக்காக இரவு பத்திரப்படுத்திய தனது பங்கு கஞ்சியை எடுத்துவந்தான். காலி திண்ணை வழிப்போக்கன் அவன் வழி சென்றுவிட்டதைக் கூறியது. நெளிந்த பானைகள் ஒவ்வொன்றும் வானவில் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிரித்தபடி, வழிப்போக்கனின் நன்றியைக் கூச்சலிட்டன. அவனது பானைக்கூட்டத்தில், முதல் பானை விற்றது பத்து காசிற்கு, இறுதிப்பானை விற்கப்பட்டது இருவது காசிற்கு. மடியில் சில்லறை குலுங்க, இவன் சிரித்துகொண்டு வந்தான், பரந்தாமனை எண்ணியபடி!!

Wednesday 5 December 2018

மழைக்குருவி

மழைக்குருவி நீ மனதுள் சிலிர்க்க
சிறகு தெறிக்கும் சாரல் எனை நனைத்ததடி
சித்து விளையாட்டு உன் விழிகள் படைக்க
சுற்றும் பூமியும் ஸ்தம்பித்து நிற்குதடி
கார்த்திகைக் குளிரே நீ வருடிச் செல்ல
சருகும் இங்கே வண்ண சிறகானதடி
மோகனக் கொலுசுகள் மந்திரம் தூவ
கட்டுண்டு மனம் உன் பின்னே செல்லுதடி
உன்தன் நந்தவனத்தில் வாழ்ந்திடவே
என் வீட்டு ரோஜாக்கள் மதில் தாண்டுதடி
தாவணி வாசம் என் சுவாசம் சேர
அணுக்களிலெல்லாம் காதல் வழியுதடி
உதடு தெறித்த வார்த்தைகள் எல்லாம்
இதய குடுவைக்குள் உயிரோடு வாழுதடி
மகுடி கண்ட பாம்பினைப் போலே
உன் அசைவிற்கு என் உயிர் இசைக்குதடி!!

Monday 3 December 2018

என்னை அறிவாயோ??!

தூரத்து நிலவு கூட மனமிரங்கி
தரை சேர்ந்து என்னோடு துணை நடக்கும்
துப்பட்டா புது மலரே நீ மட்டும்
காத்திருக்கும் எனை கடந்து போவதென்ன?

தினம் நடக்கும் ஓராயிரம் ஒத்திகை
கண்ணாடியும் கை நீண்டு எனை அணைக்கும்
கருணை இல்லா பெண் பூவே நீ
கண்கொண்டு எனை பார்த்தால் என்ன?

வணக்கங்களோடு வாழ்த்துக்களும் கூறி
தினமும் குறுஞ்செய்தியில் உனை துரத்த
பன்னீர்ப்பூ விரல் கொண்டு நீயும்
ஒரு 'மின்'நகை பகிர்ந்தால் என்ன?

நேற்று கடலோரம் காதல் நட்டவர்
இன்று மணமுடித்து தொட்டில் ஆட்டுகிறார்
ஆண்டுகள் ஆறு ஓடியும் நீ
என் பெயராவது அறிந்துகொண்டால் என்ன?

Saturday 1 December 2018

நீ வா...

சித்திரை மேகங்களின்
சர்க்கரை நீர் பந்தலில்
சித்திரமே என் கைக்கோர்த்து
சித்தம் நனைந்திட வா!

சொப்பன விண்வெளியில்
சொர்கத்து பொன் விரிப்பில்
அற்புதமே என் தோள் சாய்ந்து
அமைதியைத் தந்திட வா!

பட்டாசு மொழிகளோடு
மத்தாப்பு மென்னகை சேர்த்து
கற்பகமே என் விழி பார்த்து
கவிதைகள் இயம்பிட வா!

நட்சத்திர மாலையிட்டு
நெற்றியில் தேன்முத்தம் பதித்து
உத்தமமே என் மனம் நிறைந்து
உயிரில் நீரூற்ற வா!!

உயிருள்ள சுருக்குப்பை!

மூப்பிடம் கைதாகி - நரை
சூடி, கோல் ஊன்றி
அழையா விருந்தாளி 
எமனை எதிர்நோக்கி
விடுதலை பெற காத்திருக்கும்
உயிருள்ள சுருக்குப்பை!

ஆட்டம் ஆடும் வரை
ஓட்டம் ஒடுங்கும் வரை
சட்டைப்பை நிறையும் வரை
பூமிக்கு பாரமில்லை

நடை தளர்ந்து
ஓய்ந்து அமர்ந்தாள்
கட்டிலின் கால்களும்
கேலி பேசும்
கைகள் நடுங்க
கண்ணொளி மறைய
தானே தனக்கு
பாரமாகிப் போகும்

பிள்ளைகளின் ஒதுக்கம்
உறவுகளுக்கு ஒவ்வாமை
சீர் குலைவின் ஒப்புவமை
தனிமையின் ஒப்பனை

"யார் தந்தது எமனுக்கு
'தருமன்' என்ற பட்டத்தை?
மாற்று குறையாதவன் தருமன்!
கடமைத் தவறாதவன் தருமன்!
கிழப்பருவம் எய்தி, நான்
கிடப்பதன் அர்த்தம் என்ன?
அள்ளிச் செல்லாமல், எமனும்
எங்கோ அலைவதும் என்ன?"

வாழ்வு சிறக்கக் கல்வி
இளமை இனிக்கக் காதல்
பெயர் சொல்ல பிள்ளை
வறுமை ஒழிக்க செல்வம்
பசியில் சோறிட வேண்டும்
மட்டானால் தேனும் கசக்கும்
வாழ்வின் தேவைகள் வேண்டும்போது
தட்டினால் ஆர்வம் தீரும்
நேரத்தே வராது போனால்
மரணமும் மரியாதை இழக்கும்!!

தஞ்சம் வரவா?!!

விழியைத் திருப்பி என்னைப் பாரடா
எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா
உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ?
என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ?

சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட
வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட
மலர்களைக் கையேந்தி என்மீது தூவடா
வளர்பிறை கொண்டு ஊஞ்சலும் செய்யடா

ஆலமரமாகிய காதலைத் தருகிறேன்
ஆணிவேராகி உயிரை சுரந்திடு
ஆளங்கட்டிகளைத் தூவிச் செல்லாதே
காதல் குமிழிகளை உடைத்துப் போகாதே

அரை நிறைவு சித்திரம் நான்தானோ?!
விரல் தூரிகை எனக்காகத் தாராயோ?!
பகல் நிலவு நான்தானே தெரியாதோ?!
உன் கனவுகளில் உலவிட நான் வரலாமோ??!!

நெஞ்சக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்திடு
வஞ்சி எந்தன் முகத்தை அங்கே தேடிடு
நெஞ்சம் கொண்ட காதலை உணர்ந்திடு
தஞ்சம் வர தவிப்பவளின் கைக்கோர்த்திடு!!

முத்தம் தந்திடு!!

முட்களோடு சொற்கள் செய்து
காயம் தந்தாய் - எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!

தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் - இன்றோ 
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!

மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே - நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!

பகலெல்லாம் காத்திருக்கும் 
மல்லி அல்லியும் - இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே 
மெல்ல அவிழுமே!

காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து - நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!

மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு - இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!

என் இமைகளில்...

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்துவிட்ட என்னை
நிச்சயம் முயன்று முத்தமிடுவேன்
உனைக் காட்டிய கண்ணை 
தெவிட்டாமல் பார்த்திருப்பேன்
என் விழி குடிக்கும் உன்னை 
கண்ணாலா உன் கண்ணசைவில்
துளிர்க்கும் எந்தன் பெண்மை!!

காட்சிகள் அனைத்தும் திரிந்து
நீ மட்டுமே நிற்க,
காதல் தழலில் கசங்குகிறேன்
நான் என்ன செய்ய?!!
கண்ணுள்ளே கனவில் மட்டும்
வந்துபோவதை நிறுத்து
என்னை உனதாக்கிக்கொள்
என் இமைகளில் முத்தம் கொடுத்து!!!

கல்யாணம் ஓகே, ஆனா...

அதிகாலையில் நெற்றியில் முத்தம்
கூடவே காலை வணக்கம்
ஃபில்டர் காபி ரொம்ப பிடிக்கும்
அது சூடா இருக்க வேண்டும்

இட்லி, தோச, கெல்லாக்ஸ்
ஏதோ ஒன்னு, உன் இஷ்டம்
ப்ரேக்பாஸ்ட்டு மட்டும் செய்யல 
மவனே, உனக்கு தான் கஷ்டம்

லஞ்சுக்கு டப்பால சோறு
வேணாம்ப்பா செம போரு
கேண்டீன்ல சாப்பிட்டுப்பேன் பர்கரு
ஏன்னா, நான் சாப்ட்வேர் என்ஜினீயரு

ராத்திரி எட்டு மணிக்கு வருவேன்
சத்தியமா டயர்டா இருப்பேன்
உனக்கு பிடிச்ச சமையல் செய்
அதையே எனக்கும் வை

உன் சட்டைய நீயே துவச்சுக்கோ
உன் பேண்ட்டுக்கு இஸ்திரி போட்டுக்கோ
வீட்டை பெருக்கல், துடைத்தல்
முடிஞ்சா நீயே பார்த்துக்கோ

சனிக்கிழமை ஃபோரம்ல ஷாப்பிங்
ஞாயிறு சத்தியம்ல சினிமா
வீக்கெண்டு பிளானும் நீயே யோசி
ஏன்னா, நாங்கெல்லாம் ரொம்ப பிஸி!!

வீட்டு வேலையெல்லாம் சான்ஸே இல்ல
நான் தான் 'டாடி'ஸ் லிட்டில் பிரின்ஸஸ்'ல!!
கண்டிஷனுக்கு பயந்து நழுவாத
அப்புறம், 'வட போச்சே'னு அழுவாத!!

கல்யாணம் கட்டிக்கோ!!!

என்னை பார்த்துக்கோ
என் காதலை ஏத்துக்கோ
நான் எழுதும் கவிதையெல்லாம் 
பிடிக்கலனாலும் ரசிச்சுக்கோ!!

கொஞ்சம் சிரிச்சுக்கோ 
நிறைய முறைச்சுக்கோ
என் கன்னத்தை மாங்காவபோல்
தாராளமா கடிச்சுக்கோ!!

இம்சை பண்ணிக்கோ
லவ்ஸ பொழிஞ்சுக்கோ
குட் மார்னிங், குட் நைட்
என் நம்பருக்கு அனுப்பிக்கோ!!

டிரைவரா யூஸ் பண்ணிக்கோ
கிரெடிட் கார்டா வச்சுக்கோ
நான் ஜீரோவா இருந்தாலும் 
ஹீரோவா ஏத்துக்கோ!!

தூக்கி போட்டு மிதிச்சுக்கோ
துவச்சு தொங்க விட்டுக்கோ
ப்ளீஸ் ப்ளீஸ் பேபி என்னை
கல்யாணம் மட்டும் கட்டிக்கோ!!!

Wednesday 1 August 2018

நான் நிலா மகள்...

நான் நிலா மகள். தாரகைத் தோழிகளோடு கொஞ்சி விளையாடும் வெண்ணிலவின் மகள். சாம்பல் கூடமாய்க் காட்சி தரும் வெற்று நிலவு தேசமே என் தாய் மடி. மேடின் மீதேறி பள்ளத்தில் குதித்து, நிலவின் மணற்பரப்பில் காலடி பதிப்பதே எனக்குப் பிடித்தமான விளையாட்டு. தாவிச் சென்று முகிலினம் மீது சஞ்சரிப்பேன். மினுக்கும் நட்சத்திரங்களோடு கண்ணாமூச்சி ஆடுவேன். இரவெல்லாம் எனது சாம்ராஜ்யம். ஆதவன் விடியலில் கண் விழிக்க, ஓடிச்சென்று நிலவின் முதுகிற்கு பின்னே ஒளிந்துகொள்வேன். அக்னி ரேகைகள் என்னைத் தீண்டிடக் கூடாது. நிலவின் முகத்தைப் பார்த்ததுண்டா? கதிரவன் கதிர் தீண்டி ஆங்காங்கே எரி தழும்புகள். எனக்கு வேண்டாமம்மா அந்த வடுக்கள்.

ஆடி ஓடி விளையாண்ட காலங்கள் மெல்ல மெல்ல சலித்த பின்னே, என் அகமும் புறமும் மாற்றம் கொள்ள, மனமும் மோகனத் தேடலில் களித்தது. விந்தையான ஈர்ப்பு விசையின் பிடிக்குள்ளே முடங்கியிருந்தேன். இரவெல்லாம் இம்சையாகிப் போனது.

ஓர் இரவு, மேகங்கள் ஒன்று கூடி கைக் கோர்த்து நின்றன. கடகடவென மேலெழும்பி நிலவின் தலைமீது அமர்ந்தன. சரசரவென நீர் மணிகளை அவை கட்டவிழ்த்து விட, முதல் முறையாக நனைகிறேன். இத்தனை ஆண்டுகளின் பல பகல்களும், பற்பல இரவுகளும் கடந்து வந்த நான், என் வாழ்வின் முதல் மழையில் நனைகிறேன். நீர்ச்சரம் என் உச்சியைத் தொட்டு, மெல்ல வடிந்து, என் மேனியில் படர்ந்து, என் பாதத்தின் அடியில் புதைந்து போயின. கண்மூடி நானும் குழைந்து போனேன். மழை தூவி மரித்துப்போன மேகங்கள், மறைந்து போனபின் கண் விழித்தேன். அதோ சாம்பல் காட்டின் மத்தியிலே புதிதாய் ஒரு செடி, அதில் சிறிதாய் ஒரு மலர். மெல்ல அருகே சென்று நான் அம்மலரை முத்தமிட, எனது அதரங்கள் சிவந்தன. விந்தையினும் விந்தையின் விடை அறியாது நான் குழம்பித் தவித்து உறங்கிப்போனேன்.

பளிச்சென்று ஒரு வெளிச்சம் என் இமைகளைத் தட்டி எழுப்ப, வெடுக்கென்று எழுந்தேன் நிலவின் முதுகைத் தேடி ஓடினேன். இரவு கவ்வ, வெளிப்பட்ட நான் இதுவரைக் காணாத ஒன்றைக் கண்டு திகைத்தேன். சாம்பல் மணல்மேடு நந்தவனமாய் நிற்கிறது. பூமி பூங்காவனத்துப் புது மலர்கள் அத்தனையும், இதோ என் கண்முன்னே மலர்ந்து சிரித்து நிற்கிறது. சந்தோஷக் கிறுக்கேறி ஆர்ப்பாட்டமாக நான் ஓட, ஒரு கை இடை மறித்து, என் கரம் பற்றி இடை வளைத்து, நெஞ்சுக்குள்ளே இறுக்கிக் கொண்டது. முதல் மழை போல், முதல் வெப்பம். குளிர் மகள் எனக்கு அனல் அணைப்பு. வெப்பத்தில் மயங்கியவள், வெட்கம் தலை தூக்க, விலகி நின்று பார்க்கிறேன் அந்த கோமகனை. தங்கமென அவன் ஜொலிக்க, என் கண்கள் கூசிக் கவிழ்ந்தன.

‘நிலவின் மகளே, இந்த நந்தவனம் உனக்காக’ என்றான். எனது மோகனத் தேடல்கள் அவனிடம் தஞ்சம் கொண்டன. பாய்ந்து திரிந்த மனம், இன்று பக்குவமாய் அவன் சொற்களை முழுங்கின.
‘யார் நீ?’ என்றேன்.
‘பகலவனின் பிள்ளை’ என்றான்.
என் பரிதவிப்பைக் கண்டவன், ‘உனக்கு சில்லென ஒளி கூட்ட நான். எனது வெப்பத்தில் குளிரூட்ட நீ. உனக்காய் நான். என்னால், எனக்காக மட்டுமே நீ!’
அவனது வெப்பத்தில் காதலாய்க் கரைந்துபோகிறேன். வலியுமில்லை!! வடுவுமில்லை!!

Monday 30 July 2018

குப்பைக்காரன்

‘கோபம் தான் எனக்கு. ரொம்ப கோபம். பணமென்ன மரத்துலையா காய்க்குது?! பொன் முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியும். வெயில் மழை பார்க்காம வேலைக்குப் போன எனக்கு தான் கஷ்டம் தெரியும். இவ தங்கச்சி புருஷனுக்கு ஆப்ரேஷனுக்கு நான் ஐம்பதினாயிரம் தரணுமா? நல்ல கதையா இருக்கு. இவ அம்மா வீட்ல வழி இல்லனா நான் தான் கிடைச்சேனா? என் பொண்ணு, புள்ளையெல்லாம் செட்டில் ஆயிடுச்சுன உடனே கெளம்பி வரானுங்க இவனுக்கு இந்த பிரச்சனை அவனுக்கு அந்த பிரச்சனைனு சொல்லிக்கிட்டு. எல்லாம் இவள சொல்லணும். ஒழுங்கா பதில் சொல்லி அனுப்பறத விட்டுட்டு என் கிட்ட வந்து காசுக்கு நிக்கறா. இன்னைக்குப் போட்ட சத்தத்துல இனி ஜென்மத்துக்கும் எவனுக்கும் சிபாரிசு பண்ணிக்கிட்டு வந்து நிக்க மாட்டா. அந்த வகையில நல்லதா போச்சு’ என்று மனதிற்குள் எண்ணியபடியே மிகுந்த எரிச்சலோடு கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் சுவாமிநாதன். பணி ஓய்வு பெற்று, பென்ஷன், இரண்டு வீட்டு வாடகை என்று தாராளமாகத் தான் பணம் புழங்கியது அவரிடம். ஆனால் இந்த நிலை அவருக்கு அவ்வளவு சுலபத்தில் கிட்டவில்லை என்பது நிதர்சனமான உண்மை. தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராகப் பணியமர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி, பணி ஓய்வு பெறும்போது அந்நிறுவனத்தின் மேலாளராக இருந்தார். யார் தயையும் இன்றி பிள்ளைகளின் படிப்பு, திருமணம், சொத்து என்று தனது கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளை எண்ணி அவ்வப்போது பெருமிதம் கொள்வார். ஆனால் இதெல்லாம் தனது மனைவி மக்களுக்கு எங்கே விளங்கிடப் போகிறது என்று ஒரு சலிப்பும் அவர் மனதில் தவறாமல் தோன்றும்.

தலை கவிழ்ந்து நடந்து வந்தவரின் கால்கள் தன்னிச்சையாக வேகம் குறைக்க, முகத்தை சுழித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தவரின் எதிரே, ஒரு இருபது அடி தள்ளி குப்பை வண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதனருகே இருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த குப்பைகளை இரண்டு ஊழியர்கள் மடமடவென்று அள்ளி கொட்டிக்கொண்டிருந்தனர்.

குப்பைத்தொட்டியின் சமீபத்தில் இருந்த பிரியாணி கடையின் வாயிலில் அந்த இரண்டு ஊழியர்கள் தலை சொரிந்துகொண்டு நிற்க, உள்ளிருந்து வந்த கடை ஊழியன் ஒருவன் அவர்களிடம் நான்கு பொட்டலங்கள் கொடுக்க, சலாம் வைத்துவிட்டு நகர்ந்தனர். அவ்விருவரில் ஒருவன் ஓட்டுநர் புறம் ஏறிக்கொள்ள, மற்றொருவன் வண்டியின் பின்புறம் தொத்திக்கொண்டான். அவன் ஒரு கையால் வண்டியைப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் சற்றுமுன் அள்ளிப் போட்ட குப்பையைத் துழாவினான். அவனின் செய்கையைக் கண்ட சுவாமிநாதன் தலையில் அடித்துக்கொண்டு, முகத்தை சுழித்துக்கொண்டு நின்றிருந்தார்.

குப்பை வண்டி கிளம்பி சிறிது தூரம் செல்ல, வண்டியின் பின்னே தொங்கிக் கொண்டிருந்தவன், தெருவோரம் படுத்துக்கிடந்த சில நாய்களுக்கு எதோ வீசிவிட்டுச் சென்றான். அவை இறைச்சி துண்டுகள் என்று தொலைவில் இருந்த சுவாமிநாதனுக்கு விளங்காமல் இல்லை. அக்காட்சியைக் கண்ட நொடி அவர் பேய் அறைந்தார் போல் நின்ற இடத்தில் உறைந்து போனார். குப்பைவண்டி பார்வையினின்று  மறைந்த பின் நினைவிற்கு வந்தவர், திரும்பி வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

ஒரு லட்ச ரூபாய்க்குக் காசோலையை மனைவியிடம் கொடுத்துவிட்டு, அருகிலிருந்த சிவாலயத்திற்கு சென்றுவிட்டார். சுவாமி தரிசனம் முடிந்து மண்டபத்தில் வந்து அமர்ந்தவர் கண்களை மூடி சுவாமியின் திருவுருவை நினைவுக்கூற முற்பட, அவரின் மனக்கண்ணில் தோன்றியது அக்குப்பைக்காரனின் முகமே!!

Tuesday 10 July 2018

என் உயிரைத் தரவா?!!

உன் சுவாசத்தைக் கடன் வாங்கி
பூவிற்கு வாசம் தரவா?!

உன் பெயரைப் பாடிடவே
கருங்குயிலுக்கு ஆணையிடவா?!

மேகக் கூட்டத்தை அழைத்துவந்து
உன் பாதையில் படரவிடவா?!

விடியற் பனித்துளியை சேகரித்து
உன் கூந்தல் பூவிற்கு பொழியவா?!

இரவில் உனக்கு ஒளி சேர்க்க
தாரகைத் தோரணம் கட்டவா?!

நின் சிரிப்புகள் ஒவ்வொன்றையும்
சிப்பியுள் பூட்டி முத்தெடுக்கவா?!

உன் நிலாமுகம் போதும்
சந்திரனுக்கு விடுமுறை கொடுக்கவா?!

உனது விழியோரம் நீர் கசிந்தால்
என் உயிரைக் கொண்டு துடைக்கவா?!

Wednesday 4 July 2018

பருவத்தின் வசந்த காலம்...

அது ஒரு வசந்த காலம். துளிர்த்து சிலிர்க்கும் மரங்களைப்போல், மனதின் ஆழத்தில் அதுவரை அறிந்திடாத, அழகான, ஆத்மார்த்தமான, ஆனந்தமான எண்ணங்கள் முட்டி முளைத்து, நரம்புகளோடு வேரூன்றும் பருவ காலம். அவனை முதல் முறை காண்கிறேன். சட்டென என் நெஞ்சில் பதிந்தது அவனது காந்தக் கண்கள். அந்த அரை நொடிப் பார்வை, என் உயிர் வரை தீண்டியது. படபடக்கும் பட்டாம்பூச்சி சிறகுகள், என் நெஞ்சுக் குழிக்குள் துடிப்பது போல் ஒரு உணர்வு. அன்று என் நெஞ்சின் ஓரத்தில் ஒரு ரகசியப் பெட்டியைத் திறந்து வைத்தேன், அவனின் நினைவுகளை அதற்குள் சேகரிக்க. நான் மட்டுமே அறிந்த ரகசியப்பெட்டி!!

போகிறபோக்கில் அவன் சிந்திச் செல்லும் சிரிப்புகளுக்கு, எனக்குப் பிடித்த அர்த்தங்களைக் கொடுத்து அப்பெட்டிக்குள் அடுக்கிவைத்தேன். அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து மகிழ்ந்தும் போனேன். எப்பொழுதாவது என்னிடம் அவன் பேசினால், என் கால்களின் நடுக்கத்தை என்னவென்று நான் சொல்ல!! பதில் கூறமுடியாமல் என் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கிடக்கும் வார்த்தைகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுவதற்குள் என்னுள் ஒரு உலக யுத்தமே அரங்கேறிடும்.

அவனது குரல், இரவும் பகலும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மதுரமாய்… அமிர்தமாய்… என் பெயர் சொல்லும்பொழுது செந்தேனாய்… வார்த்தைகள் சிந்தும்பொழுது கற்கண்டாய்… நினைவுப்பெட்டகத்தில் அனைத்தும் கிடக்கின்றன. என்னிடம் எண்ணியெண்ணி அவன் பேசிய வார்த்தைகள், எண்ணிக்கை மாறாமல் என் உள்ளே வாழ்கின்றன.

எதேச்சையாக அவன் என் அருகில் நின்றால், என் விரல்களுக்குள் சிக்குண்ட என் துப்பட்டாவின் நுனியைக் கேட்டால் தெரியும் என் நிலை. அந்த நுனி, என் விரல்களுக்குள் சுருண்டு, விரிந்து, கசங்கி, குழைந்து, தோய்ந்து போவது போல், அந்த சில நொடிகளில் என் மனமும் ஆயிரம் அவஸ்தைக் கொள்கிறது.

அவனிடமிருந்து வரும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்திக்காக, வருடம் முழுதும் தவம் கிடக்கிறேன். விறுவிறுவென காலண்டர் பக்கங்களைக் கிழித்து வீச கைகள் பரபரக்கிறது. அந்த குறுஞ்செய்தியில் அவன் இட்ட முற்றுப்புள்ளியைக் கூட மணிக்கணக்காய் ரசித்திருக்கிறேன். அந்த முற்றுப்புள்ளியிலும் அவன் முகம் தெரிகிறதே!!

ஒரு ரகசியம் கூறவா? என்னுள் இப்பொழுது நூறு பெட்டிகள் சேர்ந்துவிட்டன. நெஞ்சை முட்டும் அளவு..  மூச்சு திணறும் அளவு… தனிமைதான் எத்தனை சுகம்! அவனது ஒவ்வொரு நினைவையும் அசைபோட்டுக்கொண்டு காலம் மறந்து கிடப்பது தான் எத்தகைய தவம்!! இப்படியும் ஒரு மாயம் உண்டா?!! இது தான் பருவத்தின் வசந்த காலமா?!!

Tuesday 3 July 2018

கடற்கரையில்...

கடற்கரையில் அமர்ந்திருக்கிறேன். ஆர்ப்பரித்துக்கொண்டு பாய்ந்துவரும் அலைகள், கல கல வென சிரித்துக்கொண்டு தொட்டு தொட்டு மீளும் சிறு குழந்தையைப்போல், என் கால் விரல்களை வருடிச்சென்று போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. நீயும் இந்த அலைகள் போல் தானடா - ஒரு முறை சிரிப்பாய், மறு முறை முறைப்பாய்… போக்கு காட்டும் என் காதல் போக்கிரி!! ‘ஏன் அப்படி முறைக்கிறாய்?’, ‘எனக்காகவா சிரிக்கிறாய்!!’, என்று ஒவ்வொரு முறையும் சிந்தித்தேன். பிறகு உன்னைப் பற்றி சிந்தித்தேன். உன்னைப் பற்றி சிந்தித்தவை உருமாறி உன்னை மட்டுமே சிந்திக்கலானேன். சிந்தை சூறையாடிய என் செங்கதிரோன்!!

உச்சி வெயிலில் ஜொலிக்கும் கடல் நீர் உன் சிரிப்பல்லவா! வெயிலில் அனல் கக்கும் மணல் பரப்பு உன் கோபம் அல்லவா! இதோ கண்முன்னே விரிந்துகிடக்கும் கடல் என் காதல் அல்லவா!! என்னால் நீ… உன்னால் நான்…

நீ சிரிக்கையில் கைக்கோர்த்து நிற்கும் அலையின் நுரை போல், மனதில் இன்பங்கள் படையெடுத்து நிற்கிறது. உன் கோபம் கண்டால், பட்டென வெடித்து மரிக்கும் நீர் குமிழி போல், சட்டென என் மனம் துன்பத்தில் துவள்கிறது.

கடல் மேல் மிதக்கின்றன ஆயிரம் கப்பல்கள். அவற்றுள் ஓர் படகாய் நான். கலங்கரை விளக்கமாய் உன் ஒளி - எனக்குமா? எனக்கு மட்டுமா??

எதுவாயிருப்பினும் எனது காதல் கடலில் ஆசை அலைகள் ஓய்வதாய் இல்லை.

கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களை சேர்த்து வைக்கிறேன். உனக்கும் எனக்குமாய் ஓர் அழகிய சிறு கிளிஞ்சல் கூடு கட்டிக்கொள்வோம்... சம்மதமா??!!

முத்துக்குளிப்போம் நீயும் நானும். சிப்பிகளை அள்ளி வந்து முத்து மாலை கோர்த்திடுவோம். உனக்கு நான் சூட, எனக்கு நீ சூடுவாய். கடல் சாட்சியாய் ஓர் கந்தர்வ திருமணம்… சம்மதமா??!!

அதோ தொலைதூரத்தில் கடலும் வானும் முத்தமிட்டு சங்கமித்துக்கொள்கின்றன. அது போல், உன்னுள் நான், என்னுள் நீ … முப்பொழுதும்… எப்பொழுதும்… சம்மதமா??!!

நம் பிள்ளை இரவில் உறங்கிட, பிறை நிலவினை தூளியாய் கடன் வாங்கிடுவோம்… தூளியை நீ ஆட்ட, தாலாட்டு நான் பாடுவேன்… சம்மதமா??!!

காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்தும் வாழ்வு நிறைந்தபின், கடற்கரை காற்றோடு காற்றாய் மாறி காலம் தாண்டியும் கை கோர்த்து நாம் கிடப்போம்… சம்மதமா??!!

கண்கள் மூடி உன் முகம் காண்கிறேன். உன்னை எண்ணும்பொழுதெல்லாம் இதழோரம் சிரிப்பு, உடலெங்கும் சிலிர்ப்பு, காற்றில் உன் வாசம், காலடியில் சொர்க்கம். இது மட்டும் போதும்…

மடி மீது ஏதோ கனம்… விழி திறந்து பார்த்தால், உன் முகம். எப்பொழுது வந்தாய்? எதற்கு வந்தாய்? என் மடி மீது பள்ளி கொண்டுள்ளாய், மன்மத ராஜனைப் போல்!

என் காதல் பெண்ணே, உன்னை நீங்கிச் சென்றால் தானடி உனைத் தேடி மீண்டும் வர… என் பைங்கிளிக்கு நான் என்ன போக்கிரியா? எனது சிரிப்புகள் மட்டும் போதுமா? எனது கோபங்களும் உனக்கே… எனது நட்பும் உனக்கே… எனது பகையும் உனக்கே… எனது கர்வமும் உனக்கே… எனது பணிவும் உனக்கே… எனது நொடிகளின் உணர்வுகள் அனைத்தும் உனக்கே உனக்காய்… என்னை நீ அறிந்துகொள்ள… நான் அறியாத என்னை நீ அறிந்துகொள்ள!!

எனது சிரிப்பும் கோபம் சில நாழிகையே… அழகே, அந்த கடல் போல் உன் மனம் தான் முடிவிலியன்றோ! நீ சீறினால் என் சிரிப்பு தான் உன்னை தடுத்திடுமோ… என் கோபம் தான் உன்னை நிறுத்திடுமோ… இந்த மண்மேடும் உன்னுள் புதைந்துபோகமாட்டேனா…

அடி பெண்ணே, உன் கலங்கரை விளக்கம் நானா? உன் படகின் லாந்தர் ஒளியில் உயிர் வாழும் ஈசல் நான். உன்னால் நான்… உன்னால் மட்டுமே நான்…

உன் ஆசைகள் அனைத்தும் தேனாய் தித்திக்கிறது. ஆயினும், எனக்கு எதிலும் சம்மதம் இல்லை.

கிளிஞ்சல்களால் செய்த கூடு எதற்கு? என் உயிர்கொண்டு மாட மாளிகை செதுக்கிவைத்துள்ளேன். அதன் சிம்மாசனத்தில் நீ வந்து அமர்ந்திடுவாய். உன்னைக் கவர்ந்த கிளிஞ்சல்களை வெறுக்கிறேன்!

முத்துமாலை மாற்றி திருமணமா? உன்னுள் நாள் நுழைந்தவேலை, என்னுள் நீ புகுந்த வேலை, மனங்கள் இடம் மாறி திருமணம் முடிந்துவிட்டது. இந்த முத்துக்கள் மரத்தில் காய்த்தால் என்ன?… என் கண்மணி மூச்சடக்கி முத்துக்குளிப்பதா??… முடியாது!

பேதை பெண்ணே, கடலும் வானும் கானல் கூடல் கொண்டுள்ளன. உனது தந்திரங்கள் என்னிடம் வேண்டாம். இந்த கடலும் கரையும் போல் நமது சங்கமங்கள் இருக்கும்… முப்பொழுதும்… எப்பொழுதும்…

பிள்ளைக்கு எதற்கு பிறை நிலா? என் தோள்கள் அவனுக்கு தூளியாகட்டும்… என் நெஞ்சத்துத் துடிப்பு தாலாட்டு பாடட்டும்… நீயும் தூங்கடி கண்மணி, எனது மறு தோள் சாய்ந்து!

காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்தும் வாழ்வு நிறைந்தபின், மீண்டும் பிறந்திடுவோம் காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்வதற்கே, பல கோடி முறை!!

கண்களைத் திறந்து என்னை பார். உன் இதழோரம் சிரிப்போடு, உன் வெட்கமும் தா... எனக்கும் சிலிர்க்கட்டும்.  உன் வாசம் மட்டுமே என் சுவாசமாய், நம் காலடியில் சொர்க்கம். இது போதும்...இது மட்டும் போதும்!!

Monday 25 June 2018

உனக்கே உனக்காய்!!

என் உதடுகள் சேமித்த சிரிப்பு
செல்களுக்குள் ஓர் வெற்றிடம்

விரல்களின் இடைவெளி
தாளம் தப்பும் இதய ஒலி

சுகந்தமற்ற சுவாசம்
புழங்காத நேசம்

கண்கள் தவஞ்செய்யும் காட்சி
கனவுகளைப் பிரசவிக்கும் இரவு

மீதியைத் தேடி பாதி உயிர்
மடிமேல் கனமில்லா காற்றுவெளி

புரிந்தும் புரியா விழிமொழி
பிறப்பும் இறப்புமாய் உணர்வுக் கலவை

எனது உலகின் காலைக் கதிர்
எனது இரவின் மதிமுகம்

என்னை ஆளும் உரிமை
என் வாழ்வின் கடமை

அனைத்தும் காத்துக்கிடக்கின்றன
உனக்கே உனக்காய்!!

Wednesday 20 June 2018

சொல்லவா!!

தொட்டு தொட்டுச் செல்லும்
தென்றலிடம் சொல்லவா...
அவளின் சின்னஞ்சிறு விரல்களுக்கே
என் தலை கோதும் உரிமை


எட்டி எட்டிப் பார்க்கும்
நிலவிடம் சொல்லவா...
எனது கண்மணியின் கண்களுக்கே
என்னை விழுங்கும் பார்வை


கூவிக் கூவி அழைக்கும்
குயிலிடம் சொல்லவா...
எனது பைங்கிளியின் இதழ்களுக்கே
என் பெயரின் பிறப்பு


சுற்றிச் சுற்றி வரும்
மரணத்திடம் சொல்லவா...
என்றோ அவளுள் புதைந்துவிட்டேன்
உனக்குக் கொடுக்க இல்லை!!

கண்ணாமூச்சி...

உன் விழி வீசும் பார்வையில்
பல மொழி பேசிச் சென்றாய்
காற்றோடு உன் வாசம்
எனக்காகத் தந்தாய்
மனம் உன்னிடம் நிற்க
நான் விலகிச் சென்றேன்
சுழலென சூழ்ந்து
என்னை ஆட்கொண்டாய்

கனவோடு சில காலம்
காதலாய் சில நேரம்
உயிர் தீண்டும் உன் முகம்
உடல் தொடும் உன் மூச்சு
கண்ணீரோடு புன்னகை
தூரத்திலும் நெருக்கம்
உனக்கான என் மடி
எனக்கான உன் மார்பு

இருளில் தொலையும் பகலாய்
அனைத்தும் தொலைந்தது எங்கே...
உன் உள்ளங்கை தேடி
என் விரல்களும் அழுகுது இங்கே…

காலத்தின் கைபிடித்து நானும்
ஓடியோடி உனை தேடுகின்றேன்
காதலால் என் கண் கட்டிவிட்டு
எட்டி நின்று சிரிப்பதேனோ??!!