Ad Text

Wednesday, 3 June 2026

கண்ணம்மா

 அடர்த்தியாக படர்ந்து, வளைந்து, அந்த நுழைவாயிலுக்கு நிழல் கூட்டியிருந்தன இருபுறமும் இருந்த அரச மரங்கள். அகண்ட இரும்புக் கதவுகளை பாதுகாவலர் திறக்க, மெல்ல உள்ளே ஊர்ந்து சென்றது அந்த கார். வண்டியின் உள்ளே, பயணியர் இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணம்மா, இடப்பக்க நுழைவாயில் கதவின் பக்கவாட்டில் இருந்த பதாகையை பெருமையோடும், நன்றி உணர்வோடும் பார்த்திருந்தாள். 

“செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்” - மெல்ல தனக்குள்ளே முனகிக்கொண்டாள். 


வண்டி நின்றதும் அவள் கீழே இறங்க, அவளை சூழ்ந்துகொண்டு வரவேற்றனர் மற்ற ஆசிரியர்கள். சால்வைகளையும், பூங்கொத்துகளையும் வாங்கிக்கொண்டவள், தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றாள். ஆசிரியர்கள் விடைபெற்றுக்கொள்ள, ஒரு நிமிடம் அந்த அறையின் அமைதியை உள்வாங்கிக்கொண்டாள். மேசைக்கு எதிரே மாட்டப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் மேரியின் படத்திற்கு முன் சென்று நின்றாள். 

‘கண்ணம்மா உன்னால முடியாதுன்னு யாரு சொன்னா?’ என்று சிரிப்போடு மேரி வினவும் குரல் அவளுக்கு மட்டும் கேட்டது. அந்த குரல் மட்டுமே அவளை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. 


அருகே இருந்த ஜன்னலின் வழியே அகண்டிருந்த பள்ளியின் மைதானத்தைக் கண்டாள். ஒட்டியிருக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில், தனியே விட்டது போல், இரண்டு அடுக்கு கட்டிடம், ‘அப்துல் கலாம் நூலகம்’ என்ற பதாகையை தாங்கிக்கொண்டு நின்றது. 


“ஏன்டி வாரம் ஒரு தடவையாவது காசு வேணும்னு இந்த குழந்தைகளை தூக்கிட்டு வந்து நிக்கறியே, உன் புருஷன் வீட்லயும் போயி கேட்கவேண்டியது தான?” என்று நொடித்துக்கொண்டாள், அண்ணி.

ஐந்து வயதில் ஒரு மகன், மூன்று வயதில் ஒரு மகள். பெரிய வசதிகள் இல்லாமல் போனாலும், குறைபட்டுக்கொள்ள முடியாதளவு குடித்தனம். குடோனில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலையில், கணவனுக்கு போதிய வருமானம். சேமிப்பு என்பது சிரமம் தான். ஆனால் கடன் வாங்கும் நிலையில்லை. இது நிலைத்தாலே போதும் என்று நிதமும் அவள் வேண்டிக்கொண்டாள். ஒரு நாள் தலைவலி காய்ச்சல் என்று தொடங்கி, ஆறு மாதங்களாக படுக்கையில் கிடக்கும் கணவன். தன்னிடம் இருந்தவற்றை அத்தனையும் விற்றாகிவிட்டது. கணவனின் நிலை தேறுவதாக இல்லை. ஒரு வேளை உணவிற்கே சிரமம் என்றாகிப் போனது. ஆறு மாதத்தில் குடித்தனம் தலைகீழாகிப் போனது. உடன் பிறந்த அண்ணனை தவிர வேறு வழியில்லை. கணவனின் உடன் பிறந்தோர் யாரும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. வேறு வழியின்றி அண்ணியின் ஏச்சுகளுக்கு நாசூக்கு பார்க்காமல், அவளிடம் சென்று நின்றாள். ‘தம்படி காசு இல்லாத அம்மா அப்பாவை அவன் பார்த்துக்கொள்கிறான். இதில் நான் வேறு ஏழரை போல’ என்ற வருத்தம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அவன் பெற்ற மூன்று குழந்தைகளின் பொறுப்புகளும் அவனை நசுக்கத்தானே செய்யும். 

கண்ணீரோடு நின்றிருந்தாள். அம்மா கொடுத்த காபியும், பிள்ளைகளுக்கு தலா இரண்டு பிஸ்கெட்டுகளும் தான் அன்றைக்கான பயணத்தின் வரவு. வீட்டிற்கு திரும்புகையில் ஏதேதோ யோசனைகள் அவளை அழைக்கழித்தன. பாவம், மேலும் பல துயரங்கள் அவளை துரத்த காத்து நிற்கின்றன என்பதை அறியாதவளாய்.


அன்று இரவே தன்னால் இனி எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தவன் போல, கண்ணம்மாவின் கணவன் இறந்து போனான். மீண்டும் அண்ணனிடம் தஞ்சம். அண்ணியின் கொடுக்கு பேச்சு. வேறுவழியின்றி அமைதியாகிப் போன பெற்றோர். ‘அப்பப்பா! மனித ஜீவிதம் இத்தனை குரூரங்கள் நிறைந்ததா?’ என்று பேதலித்துப்போனாள். 


என்ன வேலை செய்வது, எப்படி பிழைப்பது என்று புரியாமல் தவித்து போனாள். ஒரு கை சோற்றினை தொண்டைக்குழிக்குள் தள்ளுவது பெரும்பாடாக இருந்தது, அதனோடு பல அவமானங்களையும் முழுங்க வேண்டியிருந்ததால். ‘போதும்’ என்று முடிவு செய்தவளாய், பிள்ளைகளோடு பாலத்தின் மேல் சென்று நின்றவள், ‘உயிர் பிழைத்து என்ன ஆகப்போகிறது? இத்தனை பெரிய உலகில் மூன்று உயிர்கள் தொலைவதால் எதுவும் ஸ்தம்பித்து விடப்போவதில்லை’ என்ற எண்ணத்தில் நீருக்குள் பாய்ந்திட அவள் நினைக்க, அவளை தடுத்து நிறுத்தியது, மேரி.


அவளது கதையைக் கேட்டறிந்த மேரி, உதவிக்கரம் நீட்டினாள்.

“ஒருநாள் சாகத்தான் போறோம். அதுவரைக்கும் வாழ்ந்து பார்த்துட்டுத்தான் போவோமே. என்னதான் இந்த வாழ்க்கை வச்சிருக்குனு தெரிஞ்சுக்க வேண்டாமா?” 

அவள் தற்போது நின்றிருக்கும் அதே அறையில், தலைமை ஆசிரியர் இருக்கையில் மேரி அமர்ந்தபடி வினவ, எதிரே பிள்ளைகளோடு அமர்ந்திருந்தவள், அமைதியாகிப் போயிருந்தாள். 

“வாழ வழியில்லை மேடம். காசு இல்லாதவனுக்கு இந்த உலகத்துல இடமில்லை மேடம்.”

“காசை கடவுள் படைக்கல. அது மனுஷ கண்டுபிடிப்பு. அதை நம்பி இறைவன் நம்மள இங்க அனுப்பி வைக்கல”

“வேற நான் என்ன பண்ணட்டும் மேடம்? போக்கிடம் இல்லை. இந்த புள்ளைங்களுக்கு எதிர்காலம் இல்லை.”

“அதை நீங்க எப்படி தீர்மானிக்கலாம்? காசில்லாம இருக்கற உங்க மகன் நாளைக்கு கர்னனா வாழலாம். உங்களுக்கும் எனக்கும் தெரியாது. பிள்ளைகளோடு கண்களை பாருங்க. எவ்வளவு நம்பிக்கை! வாழ்க்கை மீது எவ்வளவு வேட்கை!! அதை அணைச்சுடாதீங்க. இதெல்லாம் கடந்து போகும்.”

கண்ணம்மா அழுது தீர்த்தாள்.


“என்ன படிச்சிருக்கீங்க கண்ணம்மா?”

“பத்தாவது மேடம். எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? எப்படியாவது பிழைச்சுப்பேன்..”

சிரித்துக்கொண்ட மேரி, “இப்போ உங்க கண்ணுலயும் நம்பிக்கை லேசா மின்னுது” என்றவள், சற்றே யோசித்துவிட்டு, “இப்போதைக்கு ஆயாம்மா வேலைதான் இருக்கு, நீங்க…” என்று கூறி முடிப்பதற்குள்,

“நான் செய்யறேன் மேடம்” என்று அவசரமாக கண்ணம்மா பதிலுரைத்தாள்.

“சரி” என்ற மேரி, உடனே அவளை பணியில் அமர்த்தினாள். 


“என்னாச்சு மேடம் கவலையா இருக்கீங்க?” 

ஒரு நாள் வழக்கம் போல் கண்ணம்மா அனைத்து ஆசிரியர்களுக்கும் மதிய தேநீர் வழங்கியவள், மேரி ஏதோ கவலையாக இருப்பதைக் கண்டு மனம் தாளாமல் வினவினாள்.

“ஆங்… ஒண்ணுமில்ல கண்ணம்மா… அது…”

“சொல்லுங்க மேடம்”

“வெள்ளிக்கிழமை நம்ம ஸ்கூல்க்கு இன்ஸ்பெக்ஷன் வராங்க. புதுசா திறந்திருக்கற லைப்ரரில இருக்கற புத்தகங்களுக்கு லைப்ரரி கார்ட் ஒட்டணும். இன்னைக்கு செவ்வாய்க்கிழமை. இன்னும் மூணு நாள்ல… டீச்சர்ஸ் யாரும் பெருசா ஒத்துழைக்கல… எப்படி செய்து முடிக்கறதுனு…”

“நான் ஒட்டித் தரேன் மேடம்…”

“ஆயிரம் புத்தகங்கள் இருக்கு கண்ணம்மா…”

“அதனால என்ன மேடம், பகல்ல வேலையை முடிச்சுட்டு, சாயங்காலம் பசங்க போனதுக்கு அப்புறம் நான் ஒட்டிடறேன்”

“நீ நினைக்கற மாதிரி…”

“கவலைப்படாதீங்க மேடம்” என்றவள், அன்றிரவு பிள்ளைகளோடு விளையாடியபடி ஓரளவு ஒட்டி முடித்தவள், அங்கேயே உறங்கிப்போனாள்.


மறுநாளும் பணி முடிந்து நூலகத்தில் தனது பணியைத் தொடங்கியவள், இரவு உணவினை பள்ளிக்கூட அடுக்களையில் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுத்து உறங்க வைத்துவிட்டு, தொடர்ந்தாள். 


வெள்ளிக்கிழமை காலை, ஆய்வு செய்யும் குழுவினர் வருகை தந்திருந்தனர். அனைத்து ஆசிரியர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, கண்ணம்மா தனது அன்றாட பணிகளை செய்துகொண்டிருந்தாள். முன் மாலைப்பொழுதில் அவளை மேரி அழைத்ததாக உடன் பணிபுரிபவர் கூற, சற்றே பதட்டத்துடன் மேரியின் அறைக்குள் நுழைந்தாள், கண்ணம்மா.


அவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்ட மேரி, “கண்ணம்மா, இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் ரொம்ப நல்லபடியா முடிஞ்சுது. நம்ம ஸ்கூலை பத்தி ரொம்ப பெருமையா கமிட்டீல சொன்னாங்க. லைப்ரரிய எவ்வளவு அழகா மாத்தி வச்சிருக்க! புத்தங்கங்களை சீரா அடுக்கி வச்சு, அந்த இடத்தை சுத்தம் செய்து… ப்பா… ரொம்ப சந்தோஷமா இருந்தது… எப்படி இவ்வளவும் செய்த?”

“மூணு நாளா, ராத்திரியில பிள்ளைகள தூங்க வச்சுட்டு நான் செஞ்சேன் மேடம்…”

“ராத்திரியில ஸ்கூல்லயே தங்கிட்டியா?”

“ஆமா மேடம்…”

”வீட்ல ஒன்னும் சொல்லலையா?”

“அவங்களும் நிம்மதியா இருந்தாங்க, கொஞ்ச நேரமே ஆனாலும், நானும் ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா தூங்கினேன்…”

“கண்ணம்மா…”

“மேடம், நான் ஸ்கூல்லயே தங்கிக்கவா?”

மேரி அவளது கேள்வியால் அதிர்ந்து போனாள்.

“அது அது… நான் யோசிச்சு சொல்றேன்…”


மறுவாரமே கண்ணம்மா எதிர்பார்த்த ஏற்பாடுகள் தயாராகின. பள்ளி வளாகத்தில் அல்லாது, அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனது இல்லத்தில், மாடியில் இருக்கும் ஒற்றை அறையை கண்ணம்மா தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தாள், மேரி. 

“இங்கயே தங்கிக்கோ. என் கணவர் வெளிநாட்டுல வேலை செய்யறாரு. நானும், என் பொண்ணும் தான் இருக்கோம். இது சின்ன இடம் தான், பிடிச்சிருக்கா? ரூல்ஸ் படி ஸ்கூல்ல தங்கக்கூடாது கண்ணம்மா” என்று மேரி, கண்ணம்மாவின் கைகளை பற்றிக்கொண்டு கூற, 

“சின்ன இடமா? இல்ல மேடம், இந்த உலகமே எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு. இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல…” என்று நெகிழ்ந்து போனாள், கண்ணம்மா.

“என் மனசுல ஒரு எண்ணம் இருக்கு, சீக்கிரமே அதை பத்தி பேசுவோம்” 

வெகு காலம் கழித்து குறையா மகிழ்ச்சிகளை வாழ்க்கை அள்ளித்தந்தது போல் இருந்தது கண்ணம்மாவிற்கு. வாழ்க்கை, குரூரங்களை மட்டுமல்ல குறிஞ்சி மலர்களையும் பரிசளிக்கத் தான் செய்கிறது. பிள்ளைகளோடு விளையாடுவதும், நிம்மதியாக உறங்குவதும் அவளது வெகு நாட்களின் ஏக்கங்கள். எல்லாம் கிடைத்துவிட்டதை போல, மனம் அமைதி கொண்டாள்.


ஓர் நாள் மாலை, கண்ணம்மாவின் அறைக்கு வந்த மேரி, 

“கண்ணம்மா, இடமெல்லாம் வசதியா இருக்கா?” என்றாள்.

“ரொம்ப வசதியா இருக்கு மேடம். இது போதும்.”

“அப்படி சொல்லக்கூடாது”

“??”

“இன்னும் வாழ்க்கை ரொம்ப தூரம் இருக்கு கண்ணம்மா…”

“புரியல…”

“நீ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுது. மேலே படி. டீச்சருக்கு படி. இன்னும் பெரிய வேலைக்கு போ. இதுதான் நீ எனக்கு செய்யற நன்றிக்கடன்”

“மேடம், நானா? என்னால முடியாது மேடம்…” - சற்றே தயங்கினாள், கண்ணம்மா.

“உன்னால முடியாதுன்னு உனக்கு யார் சொன்னா? நெஞ்சு நிறைய வைராக்கியத்தை வச்சிருக்கியே, அது ஒன்னு போதும். தனி ஒரு ஆளா ஆயிரம் புத்தகத்தை ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சு ஒட்டினியே. சின்ன வேலையா இருந்தாலும் ஸ்கூல்ல நல்ல பேரு வாங்கியிருக்கியே. எப்படியாவது வாழ்ந்துடணும்னு ஒரு நம்பிக்கையோட இருக்கியே. இதெல்லாம் தான் தேவை. எதையும் சாதிச்சுடலாம்!!”

“மேடம்…”

“என் பொண்ணு டீச்சர் ட்ரைனிங் பாஸ் பண்ணிட்டா. அவளே நீ படிக்க உதவி பண்ணுவா. நீ படிக்கற. யாருக்கு தெரியும், ஒரு நாள் நீ என் இடத்துக்கு வந்தாலும் வரலாம். வாழ்க்கை என்னென்ன ஆச்சர்யங்களை ஒளிச்சிவச்சிருக்குன்னு தேடினாத்தான் தெரியும்”


அதன் பிறகு கண்ணம்மாவின் வாழ்வு ஏறுமுகம் மட்டுமே. பன்னிரண்டாம் தேர்வு முடித்து, பி.ஏ. மற்றும் எம்.ஏ. தமிழ் படித்து முடித்து, எம்.எட். படித்து முடிக்கையில், பால்வாடி ஆசிரியராக தொடங்கிய அவளது பயணம் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக அவளை உயர்த்தியிருந்தது. 


சில மாதங்களுக்கு முன் மேரி இறைவனடி சேர, தற்காலிக தலைமை ஆசிரியராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், நிரந்தர தலைமை பொறுப்பை கண்ணம்மாவிற்கு வழங்கிட பள்ளியின் மேலாண்மை குழு முடிவு செய்ததை அடுத்து, இன்று பதவியேற்பு ஏற்பாடுகள் தயாராகின.


மாணவர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, உதவி தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் பேசத் தொடங்கினார்.

“அனைவருக்கும் காலை வணக்கம்! இன்று நமது பள்ளியின் வரலாற்றில் ஆகச்சிறந்த மற்றுமொரு பொன் நாள். இன்று, நமது பள்ளியின் தலைமை ஆசிரியராக மதிப்பிற்குரிய கண்ணம்மா அவர்கள், பதவியேற்றுள்ளார். கடை நிலை ஊழியராக தொடங்கிய அவரது வாழ்க்கை பயணம் இன்று அதே பள்ளியின் தலைமை பொறுப்பினை ஏற்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டுமே. அவர் நமக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தோடு நாம் செயல்பட உறுதுணையாகவும் இருக்க வேண்டுமென்று அனைவரின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த பொன்னான நிகழ்வை சிறப்பிக்கும் விதம், தலைமை ஆசிரியரின் மகனும் மகளும் வருகை தந்துள்ளனர். திரு குமரன் அவர்கள், பன்னாட்டு நிறுவனமொன்றில் மென்பொறியாளராக பணியாற்றுவதோடு, பல சமூக சேவை அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு, தன்னால் ஆன பங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். நமது பள்ளியில் ஏறத்தாழ ஐந்து பிள்ளைகளின் கல்வி செலவினை ஏற்றுக்கொண்டுள்ளார். தலைமை ஆசிரியரின் மகள், நான்காம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பு மேற்கொண்டுள்ளார். தனது அண்ணனோடு இணைந்து சமூக ஆர்வலராக தொண்டாற்றி வருகிறார். இவர்களை வரவேற்கும் விதமாக, அனைவரும் கை தட்டவும்!” கை தட்டல்களின் ஒலி விண்ணை பிளந்தது!!


 

அப்பா எனும் கடவுள்!!

தனது மகனை கைகளில் ஏந்தியபடி அந்த மருத்துவமனைக்குள் ஓடினான், வருண். அவனைத் தொடர்ந்து அழுதபடி ஓடிவந்தாள், அவனது மனைவி மதி. மருத்துவ பணியாளர் அவனை வழிமறித்தான்.

“சார், என் புள்ளைக்கு நேத்துலேர்ந்து ஜுரம். மருந்து கொடுத்தும் கேட்கல. தூக்கி தூக்கி போட ஆரம்பிச்சுடுச்சு. அதான் தூக்கிட்டு ஓடி வந்தேன். இந்த ஏரியாவுக்கு புதுசா குடிவந்திருக்கோம். டாக்டர் யாரையும் தெரியாது…” என்று மூச்சிரைக்க கூறி முடித்தான். 

“பயப்படாதீங்க சார், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இருக்காங்க, கவலைப்படாதீங்க” என்ற பணியாளர், “ஏன்பா ஸ்ட்ரச்சர் எடுத்துட்டு வா!” என்று குரல் கொடுக்க, உடனே அவனது மகன் உள்ளே சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டான். மதி விடாது அழுதுகொண்டிருக்க, வருணிடம் மகனை குறித்த தகவல்களை பணியாளர் பெற்றுக்கொண்டார். சிகிச்சை நடக்கும் அறையின் வெளியே பெற்றோர் இருவரும் கலங்கியபடி காத்து நிற்க, உள்ளிருந்து வெளிப்பட்டார் பெண் மருத்துவர் ஒருவர். 


“டாக்டர், என் புள்ள…” என்று வருண் கலங்க, 

“நான் டாக்டர் அஞ்சலி. தைரியமா இருங்க வருண், உங்க பையன ஐ.சி.யூ.ல வச்சிருக்கோம். சீஃப் டாக்டர் இப்போ வந்துடுவாரு. கவலைப்பட ஒண்ணுமில்ல…” என்றவர் அவன் பதிலை எதிர்பாராமல் தனது அறைக்கு சென்றார்.

“சார், வெயிட்டிங் ஏரியால இருங்க, இங்க ஐ.சி.யூ. பக்கத்துல நிக்க கூடாது” என்று பணியாளர் ஒருவாறு அவர்களை சமாதானம் செய்து, அத்தளத்தில் இருக்கும் காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றான். 


ஏறத்தாழ ஒரு மணி நேர காத்திருப்பின் முடிவில் பொறுமை இழந்தவனாய், தனது மகன் இருக்கும் அறையின் வாசலில் சென்று நின்றான், வருண். மீண்டும் அதே பெண் மருத்துவர் வெளிப்பட, “என் புள்ள எப்படி இருக்கான்னு யாராவது ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ். துவண்டு கண்ணு சொருகி கிடந்தான் டாக்டர். ப்ளீஸ் இப்போ எப்படி இருக்கான்?” என்று அழத்தொடங்கினான்.

“எங்க சீஃப் டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கார். பையனுக்கு ட்ரிப்ஸ் போட்டிருக்கோம். நீங்க பயப்பட தேவையில்லை வருண். கொஞ்ச நேரத்துல நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்.”

“அவனை ஒரு தடவை பார்க்கலாமா?” என்றபடி கையெடுத்து வணங்கினான்.

“கண்டிப்பா” என்ற மருத்துவர், ஒரு செவிலியரை அழைத்து வருணை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறினார். 

தலைக்கு கவசம், முகக்கவசம், மேல் கவசம் என்று தொற்று ஏற்படாதிருக்க முழுவதுமாய் தன்னை தயார் செய்து கொண்டு உள்ளே சென்றான். தளர்ந்தும், சோர்ந்தும் உறங்கிக்கொண்டிருந்த மகனைக் கண்டு மனம் வெதும்பினான், வருண். ‘கடவுளே என் குழந்தைய நான் இப்படியா பார்க்கணும்?’ என்று கண்கள் கலங்கினான். அவனைத் தொட வருண் கைகள் நீட்ட, “சார் தொடாதீங்க, இன்பெக்ஷன் ஆகிடும்” என்று அங்கிருந்த செவிலியர் கூற, அவன் அமைதியாகிப்போனான். மன வருத்தத்துடன் மகனை பார்த்து நின்றிருந்தவனை, அவகாசம் முடிந்துவிட்டது என கூறி வெளியே காத்திருக்கும்படி செவிலியர் அனுப்பி வைத்தாள்.


“வருண், குழந்தை?” என்று கலங்கியபடி அவனது கைகளை பற்றினாள், மதி.

“இருக்கான்… பார்க்க முடிலடி… ஒரு இடத்துல அஞ்சு நிமிஷம் மேல உட்காரமாட்டான். துருதுருன்னு ஓடி விளையாண்ட புள்ள, இப்படி கிடக்கறத பார்க்கமுடில” என்றவன் அவளது கைகளை கண்களில் ஒத்தியபடி அழுதான். 


அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஏதோ குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கே வயது முதிர்ந்த மருத்துவர் ஒருவர், மருத்துவர் அஞ்சலியிடமும் மேலும் இரு செவிலியரிடமும் உரையாடிக்கொண்டிருந்தார். அவரது பரிச்சயப்பட்ட முகத்தைக் கண்டு வருண் சினம் கொள்ள, நடப்பதை புரிந்துகொண்டவளாய் மதி அவனது கைகளை பற்றினாள்.


“இந்தாளு இங்க?” என்று வருண் மதியை நோக்க,

“இது ஹாஸ்பிடல் வருண், உன் கோவத்தை ஒதுக்கி வச்சிடு ப்ளீஸ். புள்ளை உள்ள இருக்கான்” என்று கெஞ்சினாள்.

“அதுக்கு? என் நேரம், இங்க கொண்டு வந்து என் புள்ளைய சேர்த்திருக்கேன் பாரு…” என்றவன், நேரே பேசிக்கொண்டிருந்தவர்களிடம் சென்றான்.    


அந்த மூத்த மருத்துவரைக் கண்டு முறைத்தவன்,

“டாக்டர் அஞ்சலி, நான் என் பையனை கூட்டிட்டு கிளம்பறேன். இனிமேல் ஒரு நிமிஷம் இங்க இருக்கமுடியாது” என்றுவிட்டு அவன் செல்ல, மருத்துவர் அஞ்சலி மற்றும் செவிலியர் இருவரும் அவனை ஐ.சி.யூ.வில் நுழைய விடாமல் தடுத்தனர். மதி அவனை பிரயத்தனப்பட்டு தடுத்து, அனைவருமாக அருகே இருந்த மருத்துவர் அஞ்சலியின் அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அமரச் செய்தனர்.


செவிலியர் இருவரையும் அனுப்பிவைத்த மருத்துவர் அஞ்சலி,

“மிஸ்டர் வருண், நீங்க என்ன பண்ண பார்த்தீங்கன்னு உங்களுக்கு புரியுதா?” என்றார்.

அவரைக் கண்டு முறைத்தவன்,

“நான் யாரை இனி என் வாழ்க்கைல பார்க்க கூடாதுனு நினைச்சேனோ, ஒதுங்கி இருக்கணும்னு நினைச்சேனோ, அந்த ஆளே என் முன்னாடி வந்து நிக்கும்போது வேற என்ன பண்ணுவாங்க?” என்றான்.

“யாரை சொல்றீங்க? சீஃப் டாக்டரையா?”

“ஆமா, அந்த ஆளு தான்”

“ஆளா? அவர் எவ்வளவு பெரிய டாக்டர்னு உங்களுக்கு தெரியுமா? இதென்ன மரியாதை இல்லாத வார்த்தை?!”

“அவர் என்னென்ன பண்ணியிருக்காருனு உங்களுக்கு தெரியுமா?” என்றான், ஆத்திரம் குறையாமல்.

“அப்படி என்ன பண்ணிட்டாரு? வருஷக்கணக்கா எத்தனையோ உயிர்களை காப்பித்தனவரு”

“ஆனா என்னோட அம்மாவை சாக விட்டு வேடிக்கை பார்த்தவர்”

“??”

“என்ன பார்க்கறீங்க? இவரு என்னை பெத்தவரு தான். நான் பத்து வயசா இருக்கும்போது என் அம்மா படுத்த படுக்கையா இருந்தாங்க. இவரு வேலை வேலைனு ஓடிடுவாரு. சாகர நேரத்துல கூட ஏதோ அவசரமா எமெர்ஜென்சி கேஸ்னு சொல்லி போயிட்டாரு. அவருக்கு மனசாட்சியே கிடையாது. என் கண்ணு முன்னாடி என் அம்மா இறந்து போனாங்க. ஆறுதல் சொல்ல கூட இவர் பக்கத்துல இல்லை. அன்னைக்கு முடிவு செஞ்சேன் இனி ஜென்மத்துக்கும் இவரை பார்க்க கூடாதுன்னு. என்னோட மாமா தான் என்னை வளர்த்தது. இவர் ஒரு தடவை கூட என்னை வந்து பார்க்கல. இப்ப சொல்லுங்க நான் இருக்கட்டுமா, இல்லை என் புள்ளைய தூக்கிட்டு கிளம்பட்டுமா?”

மெலிதாய் சிரித்த மருத்துவர் அஞ்சலி,

“உங்க மகனை நீங்க கொண்டுவந்து சேர்த்ததும், அவன் ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்கான்னு புரிஞ்சது. உடனே நான் சீஃப் டாக்டருக்கு ஃபோன் பண்ணேன். வர வழியெல்லாம் டிராபிக்ன்னு சொல்லி, உடனே ஒரு சைக்கிளை எப்படியோ ஏற்பாடு செய்து, அவர் வயசுக்கு அஞ்சு கிலோமீட்டர அரக்கப்பரக்க ஓட்டிட்டு வந்தாரு, ‘உங்க’ மகனை காப்பாத்த. அவர் இப்படி செய்யறது முதல் தடவை இல்லை வருண். பல பிஞ்சு உயிர்களை காப்பாத்தி, பல குடும்பங்களை தழைக்க வச்சவர்”

“அவ்வளவு ‘நல்லவர்’ எதுக்கு என் அம்மா சாவுல, கூட இல்லை?” என்றான் கண்கள் கலங்கியபடி, கோபம் குறையாமல்.

“எனக்கும் இந்த கேள்வி மனசுல உருத்திட்டு இருந்தது வருண். ஒரு தடவை அவர் கிட்டயே கேட்டேன். ‘என்ன செய்தாலும் பிழைக்கமாட்டேன்னு தெரிஞ்சும், சாகப்போறவ பக்கத்துல நின்னு என்ன பண்ண போறீங்க? வாழவேண்டிய குழந்தைய போய் காப்பாத்துங்க. உங்களால முடிஞ்சளவு எல்லா உயிரையும் காப்பாத்துங்க. என்னோட இழப்பு உங்களுக்கு என்ன வலிய கொடுக்குமோ அந்த வலி வேறொருத்தர் அனுபவிக்க கூடாது. இதுதான் என் கடைசி ஆசை. வருணை பத்தி கவலைப்படாதீங்க, அவன் உங்களை புரிஞ்சுப்பான்’ - இதான் உங்கம்மா கடைசியா அவர் கிட்ட சொன்னது.” 


வருண் கலங்கி அமைதியாய் அமர்ந்திருக்க, “டேக் கேர்” என்றுவிட்டு மருத்துவர் அஞ்சலி செல்ல, “உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்ற வருணின் கேள்வி மருத்துவர் அஞ்சலியை தடுத்து நிறுத்தியது.

மீண்டும் அவன் எதிரே வந்து நின்றவர், 

“அவர் காப்பாத்தின அந்த குழந்தை நான் தான். நான் என்னோட பெற்றோருக்கு பத்து வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை. இதே மாதிரி ஒரு நாள் கையில என்னை தூக்கிட்டு ஹாஸ்பிடல் வாசல்ல என் அப்பா வந்து நின்னாங்க. உங்க அப்பா அன்னைக்கு தன்னோட வேதனையை மறைச்சுக்கிட்டு என்னை காப்பாத்தலேன்னா, இன்னைக்கு நான் இல்லை! என்னோட அம்மாவும் அப்பாவும் இன்னைக்கும் என்னை நினைச்சு அழுதுட்டு இருந்திருப்பாங்க. உங்க அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக மகனோடு ரெண்டு வார்த்தை பேச முடியாம, பேரனை தூக்கி கொஞ்ச முடியாம, மூணாவது மனுஷன் மாதிரி எட்டி நின்னு வேடிக்கை பார்க்கற வேதனை அவ்வளவு சாதாரணம் இல்லை. அவர் இத்தனையும் பொறுத்திக்கிட்டது உங்க கோபத்துல இருக்கற நியாயத்துக்கு கட்டுப்பட்டு தான். எந்த தகப்பனாலயும் தாங்கிக்க முடியாத விஷயம், பிள்ளை தன் மேல காட்டற வெறுப்பு தான். அதைக்கூட அவர் பக்குவமா ஏத்துக்கிட்டாரு. என்னை பொறுத்தவரை அவர் கடவுளில்ல, அதை விட ஒருபடி மேல” என்றுவிட்டு, தனது பணியைத் தொடர சென்றார்.


வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். மதி அவனையும் தங்களது பிள்ளையையும் எண்ணி மானசீகமாக கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள். 

“சார் உங்க பையன் கண்ணு முழிச்சுட்டான்,நார்மல் வார்டுக்கு மாத்தியாச்சு” என்று செவிலியர் வந்து கூறிய பின் நினைவிற்கு வந்தவன், எழுந்து சென்று குழந்தையை பார்த்தான். சன்னமான குரலில் குழந்தை “அப்பா…” என்றழைக்க, உடைந்து அழுதவன், மகனை மெல்ல வாரி தனது மடியில் கிடத்திக் கொண்டான்.


குழந்தையை பரிசோதிக்க வந்த வருணின் தந்தை, மகனின் மடியில் பேரன் அமர்ந்திருப்பதைக் கண்டு சற்று கலங்கித்தான் போனார். அவனது மடியில் இருந்தபடியே குழந்தையை பரிசோதித்தவர், தன்னைக் கண்டு சிரிக்கும் குழந்தையைக் கண்டவரின் கண்கள் ஈரம் கொண்டன. குழந்தையின் கைகளையும், கேசத்தையும் வருடிப் பார்த்தவர், மிக அருகில் இருக்கும் தனது மகனை ஒரு முறை ஆசை தீர பார்த்துவிட்டு நகர்ந்தார். மதியிடம், “குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா ரொம்ப அஜாக்கிரதையா இருந்துடாதீங்க. நாலு வயசு புள்ளைக்கு என்ன சொல்ல தெரியும்? இனி பயப்பட எதுவும் இல்லை” என்றவர், மீண்டும் ஒரு முறை மகனையும், பேரனையும் பார்த்துவிட்டு அவ்விடம் விட்டுச் சென்றார்.


வெகு நேரமாக ஏதோ சிந்தனையில் தொலைந்தவனாய் அமர்ந்திருந்தான், வருண். மதி பேசியது, மகன் சிணுங்கியது என்று எதுவும் அவனது செவி சேரவில்லை. அவனால் தனது ஆர்ப்பரிக்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. 


எழுந்து சென்று, தந்தையின் அறையின் முன்னே நின்றான். சற்று தயங்கியவனாய், அறையின் கதவைத் தட்டினான். “எஸ் கம் இன்” என்று உள்ளிருந்து குரல் வந்ததும், கதவை திறந்து உள்ளே சென்றான். வருணின் தந்தை முதுகை காட்டியபடி ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். கண்களை துடைத்தபடி திரும்ப, மகனைக் கண்டதும் உறைந்து போனார். வருண், அவரது அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டான். அவனது சிறு வயது முதல், பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள், திருமணம், அவனது மகனின் ஒரு வயது படம் வரை அனைத்தும் அங்கே இருந்தன. அதோடு, அவனது தாயின் மிகப்பெரிய படம் ஒன்றும், சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் பார்த்தவன், கண்கள் கலங்கியபடி அவரின் நேரெதிரே சென்று நின்றான். தலையுயர்த்தி அவரைக் காண தவித்தவன், தன்னையும் மீறி ஓடிச்சென்று அவரைக் கட்டிக்கொண்டான். மகனின் அரவணைப்பில் நெகிழ்ந்து போனவர், வார்த்தைகளின்றி தடுமாற, வருண் கூறியதெல்லாம் ஒரு வார்த்தை மட்டுமே - “அப்பா!”