நிழலைக் கொண்டாடும் உலகில்
நிஜங்கள் இருளில் மறையும்
விரல்கள் சிந்திடும் வியர்வை
கைக்குட்டை மட்டுமே அறியும்
படிகாரக் கற்களை எல்லாம்
வைரமென நம்பி வணங்கும்
பொய்களுக்கு அரியணைத் தந்து
உண்மைகள் ஓரத்தில் ஒடுங்கும்
சிரிக்கின்ற மலரில் கூட
சில்லறைகள் தேடும் உலகம்
நீரூற்ற நேரமில்லை
பழம் மட்டும் ருசிக்க வேண்டும்
எதிலோ மயங்கிடும் மனது
எங்கோ முடங்கிடும் நினைவு
அறியாத புரியாத தேடல்
நாளையில் தொலைத்த இன்று
நட்சத்திரப் பந்தலின் கீழே
உறங்கிட ஆசைகள் கொண்டு
இதிகாசக் கூற்றுகளை மறந்து
இன்னலை சுமக்கும் மாக்கள்
பக்குவமாய் பாசாங்கு நீக்கி
பார்வையில் பகுத்தறிவு பொருத்தி
உழைப்பின் உயர்வை உணர்ந்து
உண்மையின் வீரத்தில் சிலிர்த்து
மதங்களுக்கு பாலம் நெய்து
மனதை சல்லடையில் சலித்து
மானுடம் சிறப்புறச் செய்ய
மாறட்டும் கலியுக வாழ்க்கை!!
No comments:
Post a Comment