Ad Text

Thursday, 10 January 2019

இனி வாழ்வோம்

அழகிய மலரைக் கண்டு
மனதிற்குள் முத்தமிடுவோம்!
வாழ்த்தும் குயில்களுக்கு
கண் சிமிட்டி ஆமோதிப்போம்!
புத்தகத்தில் இனித்தவற்றை
கோடிட்டு சேகரிப்போம்!
தினமும் பத்து நிமிடம்
இசையில் தொலைந்திடுவோம்!
வளர்ந்துவிட்டதை மறந்துவிட்டு
மழையில் நனைந்திடுவோம்!
நூலறுந்த காற்றாடியாய்
எங்கோ தொலைந்து மீள்வோம்!
உள்ளத்தோடு உயிரையும்
சிறு பிள்ளையென பேணுவோம்!
தவறவிட்ட நிமிடங்களை
தூசு தட்டி வாழ்ந்திடுவோம்!

ஓட்டத்தின் நடுவே,
ஓய்வெடுக்கட்டும் கால்கள்...
கனவுகளின் நடுவே,
உறங்கிக்கொள்ளட்டும் விழிகள்...
வியர்வையைத் துடைத்து,
இளைப்பாறட்டும் கைகள்...
அனைத்திற்கும் நடுவே,
அமைதிகொள்ளட்டும் நெஞ்சம்!!

நட்சத்திரம் எண்ணியபடி
இரவுகள் சில கழியட்டும்...
மலரோடு பேசியபடி
பொழுதுகள் பல மரிக்கட்டும்...
நடைபாதை மரங்களோடு
உறவுகள் வளரட்டும்...
வாழ்வாங்கு வாழ்ந்து
இரசனைகள் நிறையட்டும்!!

மரணத்தின் அருகில் நின்று
தத்துவங்கள் பேச வேண்டாம்,
வாழும் வாழ்க்கைத் தடத்தில்
ஞானத்தை வடித்துச் செல்வோம்.

அறிந்தும் அறியாத
அனைவருக்கும் ஒரு புன்னகை!
சிறந்தும் சிறக்காத
நல்லவர்க்கு ஒரு இன்சொல்!
உயிர்த்தும் உயராத
உயிர்களுக்கு ஒரு பிரார்த்தனை!
புரிந்தும் புரியாத

இறைவனுக்கு ஒரு நன்றி!!!

No comments:

Post a Comment