Friday, 19 July 2019

மல்லிகைப்பூ

வெகு நாட்கள்… இல்லை மாதங்கள்… இல்லை கடைசியாக நான் இதைச் செய்தது எப்பொழுது என்று யோசித்துத் தெளியுமுன்னே, நெகிழிப்பையில் திணிக்கப்பட்ட மல்லிகைப்பூவை என் கையில் திணித்தாள், பூக்காரி.
திருமணமான புதிதில் என் கையில் மல்லிகையைக் கண்டாள் அவள் இதழில் மோகனப்புன்னகை தவழ, இலவச இணைப்பாய்  கன்னங்களும் சிவந்து போகும்.
ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த சிரிப்பினையும், சிகப்பினையும் காண எந்தன் கண்கள்… இல்லை இதயம்… இல்லை, இரண்டுமே ஏங்கின.
வாயிற்கதவைத் திறந்தவள் ஒரு கையில் இருந்த சாப்பாட்டுக்கூடையினை வாங்கிக்கொண்டு, மற்றொரு கையில் பதுவிசாக நான் வைத்திருந்த மல்லிகையை வாங்கி கூடைக்குள் திணித்தபடி, "அக்கா வந்திருக்காங்க" என்றுவிட்டு செல்ல, அவளது இன்ப அதிர்ச்சிக்கு மாறாக எனக்கு துன்ப அதிர்ச்சிகள் தோன்றி, வளர்ந்து, மரித்தும் போயின. 
மல்லிகைச் சரத்தினை நறுக்கி, அக்கா, அக்கா மகள்கள், என் மகள் என்று அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுத்தவள், அன்று காலை கோவிலில் கொடுத்த இரண்டு அங்குல கதம்ப சரத்தை தலையில் சூடிக்கொண்டே என்னைக் கண்டு நான் ஏங்கிய மோகனப்புன்னகையைச் சிந்த, ஆறுதல் அடைந்தோம் அவளை நெருங்க முடியாமல் போன நானும், மல்லிகையும். 

No comments:

Post a Comment