நாம் கூறும் வார்த்தைகள் நம் மனதிற்கு இனியவரின் செவி சேராமல், அல்லது சேர்ந்தும் மதிக்கப்படாமல் ஒதுக்கப்படுவதின் வலியை என்றாவது நாம் குறிப்பாகக் கவனித்ததுண்டா? பழகிப்போன ஒன்றை எண்ணி, நமது மூளையும் பெரிசாக அலட்டிக்கொள்வதில்லை என்பதே நிதர்சனம். உதாரணமாக, "கடைக்குப் போய் வாருங்களேன்" எனும் போது, தொலைக்காட்சிப்பெட்டியின் ஒலியை அதிகரித்து, கிரிக்கெட் விளையாட்டில் தன்னை மறந்து, மூழ்கி, தொலைந்துபோவது; "பிள்ளைக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுங்களேன்" எனும் போது, 'எனக்குத் தெரியாது' எனும் உண்மையை தொண்டைக்குள் புதைத்துவிட்டு, "எனக்கு நேரமில்லை" என்று சொல்லி, 'நேரம் இருந்திருந்தால் கணித மேதை ராமானுஜத்திற்கே டஃப் கொடுத்திருப்பேன்' என்று மேதாவி லுக் ஒன்றை நம் மீது வீசுவது; "இன்று ஒரு நாள் லீவு போடுங்களேன்" எனும் போது, "இன்று முடியவே முடியாது" என்று யோசிக்காமல் வரும் பதிலில், 'நான் படிதாண்டி செல்லவில்லை என்றால் அலுவலகம் மட்டுமல்ல அண்டமே நின்றுவிடும்' என்று பொறுப்புணர்வு பொங்கி வழிவது; "இன்று கிச்சனில் உதவுகிறேன்" என்று உள்ளே நுழைந்து, நறுக்கத் தந்த கேரட்டுகளில் முக்கால்வாசியை முழுங்கி வைப்பது… இதுபோல், இன்னும் பல...
எதார்த்தம் என்னவென்றால், நாம் கத்ரீனா கைஃப்பாகவே இருப்பினும், நமக்கு காண்ட்ராக்டர் நேசமணி தான் வாய்க்க வேண்டும் என்று சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டுவிட்டால், அதை யாரால் மாற்ற இயலும்!! கணவன் அமைவதெல்லாம்… ஆமென்!!
No comments:
Post a Comment