Friday, 19 July 2019

ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம்

உச்சஸ்தாயியில் ஸ்ருதி பிசகாக அவள் பாடும் சுப்ரபாதமே அவனது தினசரி அலாரம். 
சில நாட்களாகவே இரண்டு வரிக்கு ஒரு முறை எட்டிப்பார்த்தது வறட்டு இருமல்.
'இந்த முப்பது வருஷ சம்சார வாழ்க்கையில இவளுக்கு க்ளாஸ் எடுத்தே காலம் போயிடுத்து' என்று அயர்ந்துகொண்டவன், 'டாக்டரப் போய் பார்க்கணும்னு தனக்கா தோணித்துனா போய் வைத்தியம் பண்ணிக்கட்டும்' என்று ஸ்ருதி தப்பிய சுப்ரபாதத்தைக் கடந்து செல்வது போல், வறட்டு இருமலுக்கும் காதுகளைப் பூட்டிக்கொள்ள பழகிக்கொண்டான்.
காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் ஜரூராக அவன் முன் ஆஜராகும் ஃபில்டர் காபி அன்று வராததைக் கண்டு அடுக்களைக்குள் சென்றவன் கண்டது, மயங்கிய நிலையில் கீழே சரிந்து கிடந்த அவளைத் தான்.
இன்று, அலாரம் சத்தத்தில் விழித்துக்கொண்டவனுக்கு இனி என்றுமே ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம் அவனை எழுப்பப்போவதில்லை என்ற நிதர்சனம், இதயத்தின் ஓரத்தில் சுருக்கென குத்தியது.

No comments:

Post a Comment