Ad Text

Friday, 4 October 2019

களவு


வெண்ணிலவு படையெடுத்த அந்த வெண்ணிற இரவில், சில்லென இளங்காற்று நதியை முத்தமிட்டு நீந்திச் சென்று நதிக்கரையில் முகிலொத்த நடை பழகிய அவளையும் தழுவியது. அவளது மணிக்கழுத்தில் மின்னிய வெண்கற்களை விட அவள் புன்னகையே ஜொலிஜொலித்தது. ஜொலிப்பில் வசியம் கொண்டவனாய் அவள் எதிரே பேராவலோடு அவன் வர, அவனைக் கண்டு இமைக்க மறந்தவளாய் அவளும் வர, கல்லில் கால் இடறி விழச் சென்றவளை ஒரே பாய்ச்சலில் தாவிச்சென்று மலரென கைகளில் இதமாய் பற்றினான். மறு நொடி தன்னை சுதாரித்துக்கொண்டவள் யாரேனும் பார்த்துவிட்டனரோ என்று அஞ்சியவளாய் அவ்விடம் விட்டு விலகி ஓடினாள்.

மறுநாள்… அதே நிலவு காயும் இரவு…

அவன்...
"இன்னா அசால்ட்டு ஆறுமுகம், நம்ளே ஏமாத்த பாக்குறே? நம்மள்கிட்ட திர்ட்டு நகை விக்கலாம். போலி நகை விக்கமுடியாது."
"போலியா? யோவ் சேட்டு வைரம்னு நினைச்சேன்"
"இத்தினி நாளா தொலில்லே இருக்கே, ஒரிஜினல்கும் டூப்ளிகேட்டுக்கும் வித்தியாசம் தெரிலே. டைம் வேஸ்ட் பண்ணாதே, நிகல் யஹான் சே, சல் சல்…"

அவள்…
"ஏன்டி, சரோஜா ஒருத்தனாண்ட பர்ஸ அட்ச்சா தேறுமா தேறாதானு யோசிக்க மாட்டியா? மூச்ச புட்சிக்கினு முக்கா மைல் ஓடியாறதுக்கு முன்னாடி அத்த ஒருதரம் தொறந்து பாக்கமாட்ட? விளங்காத பய, வச்சிருந்தான் பாரு கத்தை கத்தையா அடகு கட பில்ல… இதுல நெக்லெச வேற தொலைச்சிட்டியே டி"
"வுடு கா, பஜாருக்கு போவும்போது அந்த பான்ஸி ஸ்டோர்ல அதே டிசைன் நெக்லெச அட்ச்சுட்டு வந்து குடுத்துடறேன். நேத்து நடந்ததை இன்னும் எத்தினி தடவ சொல்லி காட்டுவ?"
"எத்தினி தடவ சொன்னாலும் உனக்கு விளங்கர மாதிரி தெரில, உன்னை எப்டி தான் கரை சேக்க போறேனோ… ஹ்ம்ம்!!"


No comments:

Post a Comment