Wednesday, 2 October 2019

ஒற்றை வார்த்தை

தினமும் அவனிடமிருந்து நான் எதிர்பார்க்கும் அந்த ஒற்றை வார்த்தை இன்றும் வாராமல் போய்விடுமோ என்றொரு தவிப்பு என்னுள். தினமும் ஏங்கியேங்கி ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்றாலும், இன்று அவனிடமிருந்து அந்த ஒற்றை வார்த்தை வரவில்லையென்றால் என் மனதில் இருக்கும் மொத்தமும் அவனிடமே கொட்டப்படும். தொலைவிலிருந்து அவனை பார்த்திருந்த நான், ஓர் முடிவுடன் அவன் எதிரே சென்று நின்றேன். தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன், நிமிர்ந்து என்னை நோக்கினான். ஆர்பாட்டமற்ற அவனது முகத்தினைக் கண்டதும், அனைத்தையும் கூறும் நேரம் வந்துவிட்டது என்றுணர்ந்தேன்.

"இங்க பாரு, உன்கிட்டேர்ந்து நான் எதிர்பார்க்கறது 'போதும்'ங்கற ஒரு வார்த்தை தான். ஆனா ஒரு நாளும் நீ அதை சொன்னதில்லை. தினமும் பதினஞ்சு இருபதுன்னு தோசை, இட்லியை முழுங்கற. இன்னைக்கு பத்து தோசை ஊத்தறதுக்குள்ள மாவு காலியாயிடுச்சு. அதனால, நீ சொல்லவேண்டியத, உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவளா இருந்தும் நானே சொல்றேன், போதும், எழுந்து கைய கழுவு!"

விருட்டென எழுந்து வெளியே சென்றவன் பத்து நிமிடங்கள் கழித்து வீடு திரும்பி என்னிடம் வந்து நீட்டினான் பத்து ரூபாய் தோசை மாவு பாக்கெட்டை, ஆர்பாட்டமற்ற முகத்துடன்!!

No comments:

Post a Comment