Thursday, 10 January 2019

விழியால் வருடிச்செல்லாயோ!!

தீண்டும் தென்றலுக்கு தீ வைத்தது யாரோ?
சிரிக்கும் சித்திரத்தை அழச்செய்தது யாரோ?
முத்தத்தடங்களில் முட்கள் நட்டது யாரோ?
வானவில் சத்தியங்கள் உடைத்துச் சென்றது யாரோ?

உந்தன் கண்ணாடி வளையல்கள்
எனது கை கீறி இரத்தம் ருசிப்பதும் ஏனோ?
உனது மங்கள வார்த்தைகள்
என் நினைவுகளில் அமிலம் சுரப்பதும் ஏனோ?

தூது செல்லும் காற்று
என் விளக்கை அணைத்ததும் ஏனோ?
தூரல் சிந்தும் மேகம்
வெகு தூரத்தில் தவழ்வதும் ஏனோ?
வானத்து மின்மினிகள்
தரை மேல் வீழ்வதும் ஏனோ?
நீ விலகிச் சென்றும்
எனதுயிர் பிரியாமல் இருப்பதும் ஏனோ?

விட்டுச் சென்றிடவா
காதலை நட்டாய்??
மொட்டு அவிழ்கையிலே
தீயாலே சுட்டாய்?!!

மனமெனும் மாளிகையில்
மகுடம் தரித்தவள் நீயடி
இன்று மாளிகையை மண்மேடாய்
சிதைத்துப்போனது ஏனடி?
கனவுகளை கண்களுக்குள்
பிரசவித்தவள் நீயடி
வாழ்வின் ஒளியைப் பறித்துக்கொண்டு
இருளைக் கொடுத்தது ஏனடி?

உனக்காகவே வாழ்ந்தன
என்னோடு எனது நிமிடங்கள்
இன்று எஞ்சியிருப்பது
மனதோடு உன் நினைவுகள்...

வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்து
கவிதைகளை வடித்துக் கொடுத்தேன்
எனக்கும் என் காதலுக்குமாய்
முற்றுப்புள்ளி வைத்துச் சென்றாய்...

உறவாக நீ வந்து,
உயிராக ஆனாயே...
களைகின்ற கனவுகளில்
களையாது நின்றாயே...
ஊடலும் காதலுக்கு
பசை தானே என்றாயே...
ஒரு சொல்லிற்கு எனை விடுத்து
காதல் கடந்து சென்றாயே...

தீப்பிடித்த வாழ்விற்கு
குளிர் சாரல் ஆனவளே  
வாழ்வே எனை எரிக்கிறதே

விழியால் வருடிச்செல்லாயோ!!

2 comments: