Wednesday 20 April 2016

மாதவம் - 2

மறுநாள் காலை, கோதை அனைவரையும் அழைத்துக்கொண்டு பெரியப்பா கூறியிருந்த ஆஸ்பத்தரிக்கு வந்தாள். ஒருவரோடு ஒருவர் பேசவும் இல்லை, பேச விரும்பவும் இல்லை. மௌனமும், மௌனமாய் பிரார்த்தனைகளும் மட்டும் சூழ்ந்திருந்தது. கோமதியின் கண்களில் கண்ணீர், குடம்குடமாய், அல்ல குளம்குளமாய் வழிந்தோடியது. அவளின் கணவனும், மாமியாளும், பெரியப்பாவுடன் வந்தனர்.
"வாங்க சம்மந்தியம்மா, வாங்க மாப்பிள்ளை, வாங்க அண்ணே", என்று கூறி, அப்பா அவர்களை எதிர் நோக்கினார்.
" என்னமோ உங்க பொண்ணு, ரெட்ட பிள்ளை பெத்தெடுத்துட்ட மாதிரி, அழைக்கறீங்க!? எல்லாம் எங்க தலையெழுத்து", என்று சீறினாள் மாமியாள். அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பாம்பைப் பார்ப்பதுபோல் இருக்கும், கோதைக்கு. நாவிலே விஷத்தைப் புதைத்து வைத்திருப்பாள்.

கோமதி தன் கணவனின் அருகில் சென்று கெஞ்சுவது போல் ஏதோ சொல்கிறாள். அவனோ, யாரோ யாரிடமோ எதையோ பேசுவதுபோல, முகத்தினை திருப்பிக்கொண்டு நிற்கிறான். இந்த காட்சியை கோதையால் ஏற்கவும் முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. 'இந்த மாமாவுக்கு என்ன வந்துது? ஏன் இப்படி அக்காவ நோகடிக்கிறார்?! எவ்வவளவு பிரியமா இருந்த மனுஷன், இப்போ இப்படி மாறிட்டாரே! இந்த பைத்தியக்காரி அவருக்காக உருகுறா. அவர் இவளுக்காக இரங்க கூட மாட்டேன்கறாரே. திடீர்னு அம்மா பிள்ளை ஆகிட்டாரே. அக்காவுக்கு கடைசி வரைக்கும் இவரு உறுதுணையா இருப்பார்னு நெனச்சோமே, இப்போ இவரு நடந்துக்கறதெல்லாம் புதுசா இருக்கு. அக்காவுக்கு தலைவலி வந்தாகூட, தங்கமா தாங்குற மனுஷன், இப்போ அவ கதறல கூட காதுல வாங்கலையே! இப்படியும் மனுஷங்க மாறுவாங்களா?! நேசம் கூட கரைஞ்சு போகுமா?!',  என்று தன் அக்காவின் கணவனின் மாற்றத்தை எண்ணி வருந்தினாள், கோதை.

பரிசோதனைகளும் மற்றும் பிற சம்பிரதாயங்களும் முடிந்த பின், கோமதியின் கணவனும், மாமியாரும், ஒரு வாய் வார்த்தை கூட பேசாமல் கிளம்பிச் சென்றனர். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! மனிதநேயம் என்பது, எப்போதாவது எட்டிப்பார்க்கும் கடமையாய் மாறிவிட்ட கலிகாலம் இது. கோவில் உண்டியலில் சில்லறைகள் போடுவது, வருடம் ஒரு முறை அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடை தருவது, எப்போதாவது பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பது, தீபாவளிக்கு வீட்டில் வேலைசெய்யும் முனியம்மா, கண்ணம்மாவிற்கு புடவை வாங்கி கொடுப்பது, என்று பட்டியல் போட்டு, அட்டவணை போட்டு மனிதம் நேயம் வளர்க்கும் காலம் இது. நேயம் என்பது நம்மை சுற்றி இருப்போரை, வார்த்தையாலும், செயலாலும் காயப்படுத்தாமல் இருப்பதே ஆகும். அதுவே எதார்த்தமும் ஆகும்.

தன் கணவன், தன்னிடம் பேசாமல் சென்றதை எண்ணியெண்ணி மனம் நொந்தாள், கோமதி. தனது கூட்டிலிருந்து தவறி மண்ணில் விழுந்து, திசை மாறி, தடம் மாறிய சிறு பறவைபோல் துடிக்கிறாள், கோமதி . அவளின் அம்மா, அவளை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தாள். ஆறுதல் சொல்ல கூட அவளுக்குத் தோணவில்லை. சிந்தனையுள் மூழ்கினாலோ! சிலையாய் மாறினாலோ! அந்த சிவனே அறிவான்!!


மறுநாள் காலை, பெரியப்பாவிடமிருந்து, அப்பாவிற்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. பரிசோதனை முடிவுகளை தானே பெற்றுக்கொண்டு வந்துவிடுவதாகவும், மாலை முடிவுகளைப் பற்றி பேசவும், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவு செய்யவும், அனைவரையும் தன் வீட்டிற்கு வரச்சொன்னதாய் கூறினார் அப்பா. ஏதோ ஒரு படபடப்பு கோதைக்கு. அவளது மனக்கலவரம், அவள் முகத்தில் தெரிந்தது. அன்று அவளின் செயல்கள் அனைத்திலுமே தடுமாற்றம் மட்டுமே நிறைந்திருந்தது. 
"கோதை, ஏன் இப்படி தடுமாற்றம் உனக்கு? எதுலயும் ஒரு நிதானம் காட்டுறவ நீ. உன் மனசு படற பாடு புரியுதுமா. கவலைப்படாத. நல்லதையே நினைச்சா நல்லதே நடக்கும். நானும் உங்களோட அவங்க வீட்டுக்கு வரேன். உங்களுக்காக பேச யாரும் இல்லன்னு ஆகிடக்கூடாது. சாமி கும்பிட்டுட்டு, எல்லாரும் கிளம்புங்க", என்று  கூறிச் சென்றான் முரளி. 'இப்படி ஒருத்தர கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்றதா, இல்ல அப்படி ஒருத்தர கொடுத்ததற்கு கடவுள நொந்துக்கறதா!', என்று பெருமூச்சு விட்டபடியே சாமி அறைக்குள் சென்றாள், கோதை.


பெரியப்பா வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர். உறவுகள் ஒன்று சேர்ந்த ஒரு சிறு ஆர்பரிப்பு கூட இல்லை. ஏதோ ஒரு வெறுமை மட்டும் அங்கு கொட்டிக்கிடந்தது. கையிலே பரிசோதனை முடிவுகளோடு, பெரியப்பா அமர்ந்திருந்தார். அனைவரின் கண்களும் அவரை மட்டும் பார்த்திருந்தன.
"இன்னைக்கு நான் மாட்டும் டாக்டர பார்த்துட்டு ரிசல்ட் வாங்கிட்டு வந்துட்டேன். நான் யார் சார்பாகவும் இல்லாம, நடுநிலையா நின்னு, இந்த விஷயத்தை கையாள விரும்பறேன். கோமதி, கிருஷ்ணன் ரெண்டு பேருக்குமே பிரச்சனை இருக்குனு டாக்டர் சொல்லிட்டாரு. கோமதிக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ், நீர் கட்டி இருக்குனு சொல்லி இருக்காங்க. இது ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயம் . இது குணமாக பலதரப்பட்ட வழியும் இருக்கு. ஆனா, கிருஷ்ணனுக்கும் குறை இருக்குமோனு யாரும் யோசிக்கல. அதான் நாம எல்லாரும் பண்ண தப்பு. அவனுக்கு ஏற்பட்ட தற்காலிக ஆண்மைக்குறைவ சரியா கவனிக்காம விட்டதால, இப்போ விஸ்வரூபம் எடுத்திருக்கு. இதுக்கும் வைத்தியம் இருக்கு, அதே நேரத்துல அந்த வைத்தியம் பலன் அளிக்காம போக வாய்ப்பும் இருக்கு. கிருஷ்ணனோட மன அழுத்தம், வேலை சுமை, பிசினெஸ் டென்ஷன் , தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து பெரிய பிரச்சனையை உருவாக்கிடுச்சு. அதுக்கு மேல வயசும் ஆகிடுச்சு", என்று கூறி  சற்று நிதானித்தவர், தன் தங்கையை நோக்கி, "கமலா, இந்த விவாகரத்து பேச்செல்லாம் விட்டுட்டு, கோமதியையும் கிருஷ்ணனையும் அழைச்சுட்டு போ. மும்பைல ஸ்பெஷலிஸ்ட பார்த்து கிருஷ்ணனுக்கும் வைத்தியம் பண்ணு. எல்லாம் நல்லதே நடக்கும்", என்று கூறி முடித்தார்.

கோமதியின் மாமியாளுக்கு, எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல முகம் உர்ர்ர் என மாறியது. "அண்ணே, ரிசல்ட ஒழுங்கா பாத்து தான் வாங்கினியா? யார் பிள்ளைய என்ன சொல்ற? இந்த விளங்காம போனவ மேல  இரக்கப்பட்டு என் பிள்ளையை குறை சொல்லாத", என்று பொரிந்து தள்ளினாள். 

"நான் நடுநிலையா நின்னு தான் பேசறேன். யார் மேலயும் இரக்கமும் இல்ல. கிருஷ்ணன் மேல அபாண்டமா பழி போட ஆசையும் இல்ல. இதே மாதிரி கோமதிய மட்டும் குறை சொல்லி, அவன கவணிக்காம விட்டதால வந்த வினை."
"எல்லாம் இந்த ராசி கெட்டவ என் வீட்டுக்கு வந்த நேரம். என் பிள்ளையோட வாழ்க்கையே நாசமா போச்சு. முதல்ல இவள தலமுழுகிட்டு வேற நல்ல பொண்ண கல்யாணம் பண்ணாதான் எனக்கு மன நிம்மதி கிடைக்கும்."
"திரும்பவும் அதையே சொல்ற! யார கல்யாணம் பண்ணாலும் குழந்தை பிறக்க வாய்பில்லை. அதை புரிஞ்சுக்கோ."
"சரி, அப்படியே என் பிள்ளைகிட்ட குறை  இருந்தாலும், நான் அவன அமெரிக்கா கூட்டிக்கிட்டு போய் வைத்தியம் பார்த்து குணமாக்க முடியும். அவனுக்கும் பிள்ளைங்க பிறந்து வாழவச்சு காட்ட முடியம். ஆனா , அதெல்லாம் இந்த மூதேவிகூட மட்டும் நடக்காது", என்று சீறினாள் பாம்பைப்போல்.
'மூதேவி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், கோதைக்கு தன் மாமியாரின் நினைவு வந்தது. அவளுக்கு பெற்றோர் இட்ட பெயர், 'கோதை'. ஆனால் மாமியார் இட்ட பெயர் 'மூதேவி'. அவளுக்கு தன் மாமியாள் கடைசியாய் 'கோதை’ என்று அழைத்தது எப்போது என்று கூட மறந்துவிட்டது. தனது மாமியாளும், அக்காவின் மாமியாளும் உறவல்ல. ஆனால் இருவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிறவியாய்த் தோன்றினர், கோதைக்கு. அவர்களின் கோபம், மொழி, செயல் என்று அனைத்திலும் ஒற்றுமை தான்.

"ஏன்மா ஒரு பெண்ணை இப்படி பேசறீங்க? அவங்க, உங்க வீட்டு மருமகங்கறத  மறந்துடாதீங்க. பெரியவங்க உங்க மனப்பூர்வமான ஆசீர்வாதம் இருந்தாலே, அவங்க கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும். நீங்க அண்ணியையும் அழைச்சுட்டு போங்க", என்று கூறினான் முரளி.
"நல்லா இருக்குப்பா நீ பேசறது. உனக்கென்ன! லட்டு மாதிரி ரெண்டு குழந்தைங்க. நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ", என்று கூறி, முரளியை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தாள்.

தன் பிள்ளைகள், தன் அக்காவின் மாமியாளுக்கு லட்டாய் இனிக்கிறது. தன் மாமியாளுக்கோ, வேப்பங்காயாய் கசக்கிறது’ என்றெண்ணி சிரித்துக்கொண்டாள் கோதை. இவளுக்கு, பிள்ளை இல்லை என்று கோபம். அவளுக்கு, ஆண் பிள்ளை இல்லை என்று கோபம். இரண்டாவதும் பெண் பிள்ளையாய்ப் பிறந்தவுடன், தன் மாமியாள் ஆஸ்பத்திரியில் இவளை திட்டித்தீர்த்தது, இன்றும் பசுமரத்தாணியாய் கோதையின் நினைவில் இருந்தது. முரளியின் இரு அண்ணன்களுக்கும், ஒரு ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை. முரளிக்கு மட்டும், இரண்டுமே பெண் பிள்ளைகளானதால், கோதை வேண்டாத மருமகளாய்க் கசந்தாள், அவள் மாமியாளுக்கு. இதன் காரணமாகவே, முரளியும், கோதையும் கூட்டுக்குடும்பத்தை விட்டு வெளியேறி, தனிக் குடித்தனம் நடத்த நிர்பந்திக்கப்பட்டனர். தனது நெஞ்சின் வடுக்களை நினைவு கூர்ந்தவள், சட்டென்று நிகழ் காலத்திற்கு வந்தாள்.
"அத்தை, எனக்கொரு யோசனை", என்று கூறினாள் கோதை .
"என்ன யோசனை?"
"அத்தை, பெரியப்பா சொன்னது போல, நல்ல ஸ்பெஷலிஸ்டா பார்க்கலாம். நிச்சயம் நல்லது நடக்கும். அப்படி இல்லாம போனாலும், நீங்க ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம், இல்லையா? உங்க ஆஸ்த்தி பலத்திற்கு, மூணு, நாலு, குழந்தைங்க கூட தத்தெடுத்துக்கலாம்", என்று கோதை கூறி முடிப்பதற்குள், அக்காளின் மாமியாளுக்கு, முகத்தில் சினம் பொங்குவதைக் கண்டாள் .
"என்ன வார்த்தை சொன்ன நீ? ஊரு பேரு தெரியாத, தெருவில கிடக்கறத எல்லாம் கூட்டிட்டுவந்து, நடுவீட்ல வச்சு, பாராட்டி, சீராட்ட சொல்றியா? எங்க பரம்பரை கவுரவத்த குழி தோண்டி புதைக்க, அக்காளும், தங்கச்சியும் கெளம்பிட்டீங்களா?", என்று கூறியவள், தலையை அண்ணாந்து மேலே நோக்கி, "ஈஸ்வரா, இந்த கொடுமையெல்லாம் கேட்டியா? எங்கயோ தெருவில கிடக்கறதுக்கா என் பிள்ளை மலை மலையா காசு சேர்த்துவச்சிருக்கான்? குலம் கெட்டு, கோத்திரம் கெட்டதெல்லாம் வீட்டுல விட்டா, வீடு விளங்குமா? இந்த அநியாயத்தைப் பார்க்கவா இன்னும் உயிரோட என்ன வச்சிருக்க??", என்று கூறி பெரிய ஒப்பாரியே அரங்கேற்றினாள்.

ஒரு நொடி, திகைப்பில் உறைந்தாள் கோதை. தான் என்ன தவறு செய்தோம் என்று அவளுக்கு விளங்கவில்லை. பெற்றோர் இல்லாத பிள்ளைகள், அந்த கடவுளின் பிள்ளைகள் அல்லவா? ஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டுவதைவிட, பெரும் புண்ணிய காரியம் ஏதும் உண்டோ? வணங்கும் தெய்வத்தை கர்பக்ரஹத்தில் மட்டுமே பார்த்துப்பார்த்து பழகிப்போன கூட்டத்திற்கு, உயிர்களின் உள்ளே வசிக்கும் இறைவனைக் காண்பது கடினமே! குலமும், கோத்திரமும், வெளியே மனிதன் பூசிக்கொள்ளும் சாயமே. உள்ளே வாழும் ஜீவன், அனைத்து உயிர்க்கும் ஒன்றே! அது யானையானாலும் சரி, பூனையானாலும் சரி!

இறுதியாக, பல வாக்குவாதத்தின் முடிவாய், கோமதியின் மாமியாள், அவளை உடன் அழைத்துச்செல்ல ஒப்புக்கொண்டாள். தன் மகனுக்கும், மருமகளுக்கும் சிறந்த வைத்தியரிடம் கூட்டிச்சென்று, வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தாள். அன்று  இரவு, பல நாட்களின் பரிதவிப்பிற்குப்பின் நிம்மதியாய் கண்ணயர்ந்தாள் கோதை .

No comments:

Post a Comment