Wednesday, 20 April 2016

மாதவம் - 4

தன் மனதின் எண்ணங்களை தன் தாயிடம் கூறி முடித்தாள் கோதை. தாயின் அதிர்ச்சி அலைகள், தொலைபேசி வழியே இவளிடம் வந்தடைந்தது.
"அம்மா, இதுல பயப்பட ஒன்னும் இல்லை. என்கிட்ட இருக்கற ரெண்டு முத்துல, ஒன்ன தூக்கி கொடுக்க எனக்கு மனசு வரல. என் குழந்தைகள சுத்தி ஆயிரம் கோட்டை கட்டிட்டேன். அத உடைக்க எனக்கு மனசுல தெம்பில்லை. அதே நேரத்துல, அக்காவுக்காக, இன்னொரு குழந்தைய சுமக்கறது பாரம் இல்லை. ‘இது அக்காவோட சொத்துன்னு’ எண்ணம் வந்தபின்னே, பிரசவ வலிய தவிர வேற எந்த வலியும் எனக்கு இருக்காதும்மா. அப்பாகிட்ட நீ பேசு. அக்கா, மாமாகிட்ட நான் பேசறேன்."
"நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா, உன் மாமியாரை நினைச்சா பயமா இருக்கு. உன் அக்காவுக்கு வாழ்க்கை கொடுக்கப்போய், உன் வாழ்க்கைக்கு பங்கம் வந்துடக்கூடாது."
"அதெல்லாம் ஒன்னும் ஆகாதும்மா. இவங்க எனக்கு துணையா இருக்கும்போது, எனக்கு எந்த கவலையும் இல்ல. நீயும் மனசுல எந்த சங்கடத்தையும் வச்சுக்காத."
"எனக்கு அழுவறதா, சிரிக்கறதான்னு தெரியல. கடவுள நொந்துக்கத்தான் முடியும்."
"அம்மா, சிரிச்சுக்கிட்டே போய் கடவுளுக்கு நன்றி சொல்லு. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்", என்று நம்பிக்கை ஊட்டினாள், கோதை. தன் தாயிடம் பேசிவிட்டு, உடனே அக்காவை தொலைபேசியில் அழைத்தாள்.


"அக்கா! ஹலோ! இருக்கியா?"
"ஹலோ, இருக்கேன்டி", என்றாள் கோமதி, பதைபதைப்பாய்.
"என்னக்கா, நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சுதா? உனக்கு சம்மதமா? மாமா கிட்ட பேச நான் தயாரா இருக்கேன். ஆனா... ஹலோ! அக்கா அழறியா? அழாதக்கா. உன் அழுகையை நிறுத்தத்தான் இதை சொன்னேன். உனக்கு விருப்பம் இல்லனா விட்டுடு. மனசுல எதுவும் வச்சுக்காத..."
"எனக்கு வரம் தரும் சாமிய, வெளியே தேடிக்கிட்டிருந்தேனடி. இவ்வளவு நாளா, அந்த காமாட்சி நீதான்னு தெரியாம பரிதவிச்சேனே. எனக்கு வரம் தரும் சாமி நீதான்டி", என்றுவிட்டு ‘ஓ!’ என்று அழுதாள், கோமதி.
வாயடைத்து நின்ற கோதை, தன் கண்கள் சிந்தும் நீரைக்கூட உணராமல், தன் அக்காவின் இறுதி ஒப்பாரியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு, முரளிக்கு கிருஷ்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. கிருஷ்ணனின் கோபத்தை உணர்ந்துகொண்டாள், கோதை. அரைமணிநேரமாக தன் கணவன், கிருஷ்ணனை சமாதானப்படுத்த முயல்வதை சகிக்க முடியாமல், முரளியிடமிருந்து தொலைபேசியை வெடுக்கென்று பறித்து, இவள் பேசத் தொடங்கினாள்.
"மாமா நல்லா இருக்கீங்களா? நான் கோதை பேசறேன்."
"அக்காவும், தங்கையும் ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க? இதுல 'நல்லா இருக்கீங்களா'னு, கேள்வி வேற. உன்னோட வாழ்கையை மட்டும் நீ கவனி.  எங்களுக்கு நீ படியளக்க வேணாம். அப்பவே உன் அக்காவை தலை முழுகி இருந்தா, இப்போ உன்கிட்ட எல்லாம் பேச தேவபட்டிருக்காது. நீ..."
"கொஞ்சம் நிறுத்துங்க மாமா", என்று குறுக்கிட்டாள் கோதை, "என்ன மாமா! நீங்க ஆளே மாறிட்டீங்க? மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. நீங்க இப்படி எல்லாம் பேசறது, எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நான் உங்க தங்கச்சி மாதிரினு சொல்லுவீங்க. இப்போ என்கிட்ட பேச கூட உங்க தகுதி இடம் கொடுக்கல இல்லை?"
"இங்க பாரு, நான்..."
"நான் இன்னும் பேசி முடிக்கல. அதுவரைக்கும், அமைதியா நான் பேசறதை கேளுங்க ப்ளீஸ்! நீங்க மறந்துபோன சில விஷயங்கள, ஞாபகப்படுத்த ஆசைப்படறேன், மாமா. பத்து வருஷம் முன்னாடி, உங்களை அக்கா கல்யாணம் பண்ணும்போது, உங்க தகுதி ஒரு மொபெட் வண்டியும், வாய்க்கும், வைத்துக்கும் இழுத்துப்பிடிக்கற மாத சம்பளமும் தான். அப்போ, எங்க அப்பா உங்க தகுதியை பார்க்காம, உங்க மனசையும், குணத்தையும் தான் பார்த்தாங்க. உங்களுக்கு வேலை போய், நீங்க உடைஞ்சு போய் இருந்த காலத்திலயும், உங்க தகுதியை யோசிக்காம, உங்க கஷ்டத்துல சந்தோஷமா பங்கு போட்டவ, என்னோட அக்கா. நீங்க தொழில் தொடங்க உங்கள ஊக்கப்படுத்தினது, என்னோட அக்கா. உங்க அம்மாவே உங்கள நம்பி பணம் கொடுக்க யோசிச்சபோது, உங்க கூட பிறந்தவங்க உங்களுக்கு உதவ தயங்கின போது, தன்கிட்ட இருந்த கடைசி குண்டுமணி தங்கத்தையும் கொடுத்து, உங்க மேல மலையளவு நம்பிக்கை வச்சது என்னோட அக்கா. நீங்க கை ஊணி, கால் ஊணி எழும்போது, தையல் மிஷினை கைரேகையும், கால் ரேகையும் தேயத்தேய ஓட்டி, குடும்ப பாரத்தை தூக்கினா, என்னோட அக்கா. தனக்குன்னு எந்த ஒரு ஆசையையும் வளர்த்துக்காம, இந்த பிறப்பே உங்களுக்குனு வாழற அவளை, இப்படி நோகடிக்க எப்படி உங்களால முடியுது? அக்காவோட ரத்தத்துல வந்ததுதான், இந்த பஞ்சு மெத்தையும், பட்டு பீதாம்பரமும். அதை உங்களால மறுக்க முடியாது. 'உன்னோட அக்கா, எனக்கு மனைவி மட்டுமில்ல, இன்னொரு தாயும் அவதான். தொப்புள்கொடில உயிர் வந்தது, தாலிக்கொடில வாழ்க்கை வந்தது'னு அடிக்கடி சொல்லுவீங்களே! அதெல்லாம் வெறும் வாய்வார்த்தைகள் தானா? நீங்க தொலைஞ்சுபோயிடாம தூக்கிப்பிடிச்ச தாலிக்கொடிய, இன்னைக்கு தொலைச்சுக்கட்டணும்னு நீங்க சொல்றது, உங்களுக்கே அருவருப்பா இல்லை? அவ அழறத பார்த்து, கூடப்பொறந்த பாசத்துக்கே எனக்கு மனசு நோகுது. உங்களுக்கு நியாயமா ரத்தக்கண்ணீர் வரணும், இல்லையா? வசதியும் தகுதியும் உயர உயர, மனுஷனோட குணமும்,பண்பும் உயரனும். அகந்தையும், செருக்கும் அட்டைப்பூச்சி மாதிரி. மெல்ல மெல்ல உங்க பகட்டையும், மரியாதையையும் உறிஞ்சிட்டு, உங்கள பாதாளத்துக்கு தள்ளிடும். இதுக்கு மேல உங்க விருப்பம். எல்லாம் அவ தலையெழுத்துனு கடவுள நொந்துக்கிட்டு, மனச தேத்திக்கறோம். நான் வச்சுடறேன்", என்று கூறி, மறுமுனை பதில் வரும்முன்னே, தொடர்பைத் துண்டித்தாள்.


சில பல தினங்கள் கழிந்தன. கோதைக்கு அக்காவிடம் பேச விருப்பமில்லை. அம்மாவிடம் பேச துணிச்சலில்லை. முரளியின் சமாதான வார்த்தைகளை, அவனுக்காக கேட்டுக்கொண்டாளே தவிர, அவளது நெஞ்சத்து வலிகளை, அது நீக்கவில்லை.

ஓர் நாள், இரவு சுமார் பத்து மணி இருக்கும். அழைப்பு மணி ஒலித்தது. யாரென்று, முரளிக்கும், கோதைக்கும் சிறு பதட்டம். முரளி வாயிலைத் திறக்க, கிருஷ்ணனும், கோமதியும் நின்றுகொண்டிருந்தனர். முரளிக்கு, அவர்களின் விஜயம் ஆச்சர்யமாய் இருந்தது.

"அக்கா, மாமா! என்ன இந்த நேரத்துல? உள்ள வாங்க", என்று எதிர்கொண்டு அழைத்தாள், கோதை.
உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்த கிருஷ்ணன், "முரளி, எப்படி இருக்கீங்க? கோதை, நீயும் நல்லா இருக்கியா? குழந்தைங்க தூங்கிட்டாங்களா?", என்று வரிசையாய் நலம் விசாரிக்க, வாயடைத்து நின்றாள், கோதை .
"என்னமா அப்படி பார்க்கற? இவரா இப்படி பேசறாருனு நினைக்கிறியா? அக்கறையா, உன்னை 'நல்லா இருக்கியா’ன்னு கேட்டு, ரொம்ப நாளாச்சு. என்ன சுத்தி பணக்கட்டுகள் நிரம்பிட்டதால, நான் யாருனு, எனக்கே மறந்துபோச்சு. அன்னைக்கு நீ பேசினதுக்கு அப்பறம்தான், யோசிச்சேன். பழசையெல்லாம் யோசிச்சேன். நான் செஞ்ச தப்பையெல்லாம் யோசிச்சேன். என்னோட பணம், பதவி எல்லாத்தையும் விளக்கி வச்சுட்டு, கொஞ்சம தள்ளி நின்னு யோசிச்சேன். நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு அப்பதான் புரிஞ்சுது. நான் பணம் சம்பாதிக்கணும்னு போராடினதே, கோமதியை நல்லா வச்சுக்கணும்னு தான். ஆனா அத மறந்துட்டு, அவளை காயப்படுத்தறதையே தொழிலா இருந்திருக்கேன். எங்க வாழ்க்கையோட முற்பகுதி அவளுக்கு பணக்கஷ்டம், பிற்பகுதி மனக்கஷ்டம். மொத்தத்துல எந்த காலத்துலயும் அவ சந்தோஷமா இல்லை. நானும் இருக்க விடல", என்று  குரல் தழுதழுக்க, கண்களும் ஈரமானது கிருஷ்ணனுக்கு.
"எதுக்கு இப்போ இதெல்லாம் பேசிக்கிட்டு?", என்று கோமதி வினவ,
"பேசத்தானே வந்திருக்கோம்? ", என்று கூறியவன், முரளியை நோக்கி, "என்னை மன்னிச்சுடுங்க முரளி! உங்கள ரொம்ப காயப்படுத்திட்டேன். நீயும் என்னை மன்னிச்சுடு கோதை", என்றான்.
"அய்யோ என்ன மாமா நீங்க, மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு?!! நானும் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். எனக்கு வேண்டியதெல்லாம், நீங்களும், அக்காவும் சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான் மாமா!", என்று கூறும்பொழுது, தன்னையும் அறியாமல் புன்னகை செய்த கோதை, தன் கனத்த இதயம்,லேசானதை உணர்ந்தாள்.
"ரொம்ப பசிக்குதுமா. ரெண்டு தோசை ஊத்திக்கொடுக்கறியா?", என்று உரிமையாய் கிருஷ்ணன் கேட்க, ஒரே நொடியில் தயார் செய்வதாய்க் கூறிவிட்டு, பரபரப்பானாள் கோதை.

"கோதை, இருடி நான் செய்யறேன். இனிமேல் நீ நல்லா ஓய்வெடுக்கணும். குழந்தை பெத்தெடுக்கறது சாதாரண விஷயமா என்ன?", என்று கோமதி முகம் மலர்ந்து கூற,
"அக்கா என்ன சொல்ற?" என்று ஆச்சர்ய ஆனந்தம் கொண்டாள், கோதை. 
"ஆமாடி. நீ சொன்ன மாதிரி எனக்கு ஒரு புள்ளைய பெத்துக்குடுடி. நான் நல்லபடியா வளர்த்து ஆளாக்கிடறேன். அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்கு, ஒரு அர்த்தம் கிடைக்கும்", என்று கூறி, கண் கலங்கினாள்.
"அக்கா!?”
"உண்மையா தான் சொல்றேன்..."
"கண்டிப்பா அக்கா! உனக்காக நிச்சயம் பெத்துக்கொடுக்கறேன். நீயும், மாமாவும் சந்தோஷமா இருந்தா போதும்", என்று கூறி, கோதையும் கண் கலங்கினாள்.
"அம்மாகிட்ட மனசுவிட்டு பேசினேன். அவங்க என்ன மனசுல நினைச்சாங்கன்னு தெரியல. இந்த யோசனையைக் கேட்டதும், 'கோதையோட பிள்ளைய சுவீகாரம் பண்ணிக்க முழு சம்மதம். ஊரு பேரு தெரியாத பிள்ளைய கூட்டிட்டு வர விருப்பமில்ல. ஆனா, கோதை வைத்துப்பிள்ளைனா, எனக்கு எந்த ஆட்சேபமும் இல்ல'னு சொன்னாங்க. நாங்களும் உடனே உங்ககிட்ட இத சொல்லணும்னு புறப்பட்டு வந்துட்டோம்", என்று முரளியிடம் கிருஷ்ணன் பகிர, பல நாட்கள் கழித்து அவர்களின் முகத்திலும், மனதிலும் ஆனந்தம் பெருகியது!

No comments:

Post a Comment