கவிதை ஒன்று கேட்டால்
என் பெயர் சொல்லும்
முட்டாள் கவிஞன் நீ!!
முத்தங்கள் கேட்டால்
கன்னங்களைக் கடிக்கும்
வளர்ந்த குழந்தை நான்!!
ஆசைகளை மறைத்துக்கொண்டு
அரிஸ்டாட்டில் பேசும்
அறிவுக்களஞ்சியம் நீ!!
அனைத்தும் அறிந்திருந்தும்
உன் பேச்சுக்கு தலையசைக்கும்
தஞ்சை பொம்மை நான்!!
உரசலும் தீண்டலும்
கேட்காமலே அள்ளிக்கொடுக்கும்
கலியுகக் கர்ணன் நீ!!
சீண்டல்கள் பிடித்தாலும்
கோபப் பார்வை வீசும்
குடும்ப குத்துவிளக்கு நான்!!
காதலை நெஞ்சில் சுமந்து
கனவுகளைக் கண்ணில் சுமக்கும்
என் எதிர்காலம் நீ!!
வாழ்வதன் அர்த்தமாய்
வாழ்க்கையின் நோக்கமாய்
உன் நிகழ்காலம் நான்!!
No comments:
Post a Comment