Friday, 24 July 2020

சீரக மிட்டாய் - ரசனைகள்




குளிர் தென்றல் என் கன்னம் வருடிட, ஒய்யாரியாய் உலவிடும் பௌர்ணமி நிலவினை ஜன்னல் வழியே நான் ரசித்திருக்க, அவளோ மெத்தை விரிப்பை மாற்றிக்கொண்டிருக்கிறாள்.

காலை நாளிதழில் படித்து ரசித்த கவிதையை மாலை வீடு திரும்பியதும் வாசிக்கத் தேடியெடுக்க, கவிதையின் அருகே அன்றைய செலவுகளைப் பட்டியலிட்டுக் கூட்டி சரிபார்த்திருக்கிறாள், அவள்.

இந்த ஆயிரம் காலத்துத் திருக்கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு இமைக்கவும் மறந்து நான் மண்டபத்திலேயே நின்றிருக்க, அவளோ மூலஸ்தானத்தின் அருகே கண்களை இறுக மூடிக்கொண்டு பிரார்த்தித்து நிற்கிறாள்.

கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு 'தண்ணீர் தேசத்து' கலைவண்ணனையும், தமிழ் ரோஜாவையும் நான் நினைவு கூர, அவளோ கடலலைகளைத் துரத்திக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள். 

ஏதோ ஒரு எண்ணத்திலும், செயலிலும் கூட ஒன்றுபடாமல் முற்றிலும் முரண்பட்ட மனிதர்களாய் நாங்கள் இருப்பினும், இன்றும் பிரமிப்பு குறையாமல் நான் புதிதாய் ரசித்திருப்பதும் அவளைத் தான், அவளது முக்கியப் பட்டியலில் என்றும் முதலிடம் எனக்கே தான், நாங்கள் இருவரும் ஒத்துப்போகும் ஒற்றைப்புள்ளி… ஒற்றை பெரும்புள்ளி காதல் மட்டுமே தான்!!



No comments:

Post a Comment