கடந்த அரை மணி நேரத்தில் நூறாவது முறையாக, தன்னவள் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தவனுக்குக் கட்டுக்கடங்கா சந்தோஷம் பொங்க, வண்டியை விரட்டு விரட்டென விரட்டி, வீடு வந்து சேர்ந்தான்.
வழக்கமாக வீடு திரும்பும் நேரத்தை விட இன்று முன்னமே வந்தவனைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தவள், அவனது மோகனப் பார்வையில் நாணி, மேஜையின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
உடையைக் கூட மாற்றிடத் தோணாமல், அவளை விழியால் வருடியபடியே மேஜையில் வந்தமர்ந்தவனின் ஆவலை உணர்ந்தவள், நொடி தாமதிக்காது அவனது தட்டில் உணவைப் பரிமாறினாள்.
'தினமும் ரவை உப்புமா தானா என்று அலுத்துக்கொள்ளும் என் அன்பு கணவருக்காகக் காத்திருக்கிறது நளபாகம்!!' என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தவனுக்கு, கண்கள் குளமானது.
விழி தப்பிய நீர் மணிகள், சிந்திச் சிதறி தொலைந்து போயின, தட்டில் பரிமாறப்பட்ட சேமியா உப்புமாவில்…
- அர்ச்சனா நித்தியானந்தம்
No comments:
Post a Comment