குடைக்குள்ளே நின்றாலும்
மழை நீரில் நனைகின்றேன்
தரை மீது சென்றாலும்
முகிலோடு தவழ்கின்றேன்
அறியாத பூ ஒன்று
எனைக் கடந்து செல்கையிலே
தடுமாறி வீழ்கின்றேன்
எனை இழந்தாலும் வெல்கின்றேன்
கண்கள் உன்னைக் கண்டிட
கால்கள் தவம் செய்தன
மனதில் வழியும் தவிப்பினை
இதழின் சிரிப்புகள் மறைத்தன!!
இனம்புரியா உறவோ
நீ முற்பிறப்பின் தொடர்வோ
தெளிவான சுழலோ
என் தெவிட்டாத நிலவோ
என் இதயம் எடுத்து
உன்னிடம் கொடுக்கட்டுமா?
காதலின் ராகத்தை
உன் காதோடு பாடட்டுமா?
அழகே உன் முன்னே
கடலாக நான் விரிவேனே
அலையாக உன்னைத் தீண்டி
என் அன்பை உனக்குச் சொல்வேனே
அன்பே உன் சாலையில்
நான் மரமாக உயர்வேனே
உன் மீது மலர் தூவி
என் நேசத்தைப் பொழிவேனே
விழியே உன் திசையெங்கும்
நான் வானவில்லாய் எழுவேனே
வர்ணங்களாய் உன்னுள்ளே
நான் நிறைந்து வழிவேனே
உயிரே உன் அருகில்
நான் எரிதழலாய்ப் படர்வேனே
உன் குளிருக்கு இதம் கூட்டி
எனை தொலைத்து சிதைவேனே!!
No comments:
Post a Comment