Tuesday, 13 February 2018

அன்பிற்கு நன்றி!!

ஈன்றபொழுதுனின்று இன்றுவரை
தினமும், என் நலன் வேண்டி
கடவுளிடம் மனு போடும்
என் பெற்றோரின் பாசத்திற்கு
நன்றி!!

உடன்பிறந்து, உறவாடி
சண்டைகள் போட்டு, சமரசம் பேசி
உயிருள்ளவரை தொடர்ந்துவரும்
என் உடன்பிறப்பின் நேசத்திற்கு
நன்றி!!

கண்களால் கதை பேசி
இறுதிவரை என் கரம் பற்றி
காதலால் வாழ்வை நிறப்பும்
என் மன்னவனின் காதலுக்கு
நன்றி!!

பொய்யாக அழுதாலும்
உடல் அயர்ந்து தளர்ந்தாலும்
முத்தங்களால் என்னை உயிர்பிக்கும்
என் பிள்ளையின் அன்பிற்கு
நன்றி!!

வீழ்கையில் தாங்கிடவும்
வாழ்கையில் வாழ்த்திடவும்
என்றும் என்னை சூழ்ந்திடும்
என் உறவுகளின் பரிவிற்கு
நன்றி!!

கதை பேசிக் களித்திடவும்
கவலைகளைப் பகிர்ந்திடவும்
தூண்டுகோலாய் வாழ்ந்திருக்கும்
என் தோழமைகளின் நேயத்திற்கு
நன்றி!!

என் அறிவெனும் விளக்கேற்றி
வழித்தடத்தை செம்மையாக்கி
பாடங்கள் அனைத்தும் புகுட்டிய
என் ஆசான்களின் ஆசிக்கு
நன்றி!!

குயிலோசையும் மலர் வாசமும்
மழை மேகமும் சூரிய சந்திரரும்
இயற்கையின் சாரங்களை அள்ளித் தந்த
என் பூமித்தாயின் கருணைக்கு
நன்றி!!

உயிர் தந்து உடல் தந்து
வாழ்வு தந்து பொருள் தந்து
வளம் தந்து எனைக் காக்கும்
என் ஈசனின் அருளுக்கு
நன்றி!!

என் எழுத்துக்களுக்குக் கைதட்டி
பிழையைச் சுட்டி, நம்பிக்கை ஊட்டி
எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்
என் வாசக நெஞ்சங்களுக்கு
கோடானு கோடி நன்றிகள்!!!

No comments:

Post a Comment