போர்க்களத்தின் நடுவே, யார்
வெண்புறாக்கூட்டை வைத்தது!
பூகம்பம் ஓய்ந்த பின்னே, யார்
பூவின் விதைகளை விதைத்தது!
எங்கோ பாயும் கங்கை, யார்
என் வீட்டின் முற்றத்தில் ஊற்றியது!
மல்லிகை மணக்கும் கொடியில், யார்
இடையிடையே விண்மீனை அவிழ்த்தது!
பிரமிடுகளுக்குப் பின் நின்றுகொண்டு, யார்
என்னோடு கண்ணாமூச்சி ஆடுவது!
மந்தார மலர்களுக்கு, யார்
கானல் நீர் ஊற்றி வளர்ப்பது!
கண் சிமிட்டும் நொடியில், யார்
என்னைக் கண்ணாடிக் கோட்டைக்குள் சிறைபிடித்தது!
தூங்கும் வேளையிலும், யார்
என்னை வெறித்து வெறித்துப் பார்ப்பது!
யாரோ அவன்!
யாரோ அவள்!
இல்லை, யாரோ அது!!
என் மூளை எனும் கசாப்புக்கடைக்காரன்
அவ்வப்போது கூறுபோடும்,
என் மனமே அது!!
No comments:
Post a Comment