Friday, 6 October 2017

மனிதன்

தலைமேல் செருக்கு
சம்மணமிட்டால்,
உலகின்மீதேறி
சிரித்திடுவான்

கீழே விழுந்து
மண்ணைக்கவ்வ,
எங்கோ ஒரு மூலையில்
முடங்கிடுவான்

பழுத்த பழங்கள்
கூடையில் இருந்தும்,
அடுத்தவர் காய்க்கு
ஏங்கிடுவான்

கையிலிருந்தவை
நழுவிச்சென்றபின்,
தத்துவங்கள் பலவும்
பேசிடுவான்

பொருள்களையெல்லாம்
சேர்த்துக் குவிக்க,
இளமையை அடகு
வைத்திடுவான்

இழந்த இளமை
மூப்பிலே திரும்பிட,
பொருளை அள்ளிக்
கொடுத்திடுவான்

ஆசைகளுக்கு
அடிமைப்பட்டு,
பலியாடாகி
நொந்திடுவான்

எல்லாம் துறக்க
எண்ணியும்கூட,
மனதிடம் தினமும்
தோற்றிடுவான்

தன்னைத் தனக்குப்
புரியாமலேயே,
மரணத்தை அவனும்
தழுவிடுவான்

இவனைப்பற்றி
படைத்தவனைக் கேட்டால்,
சொல்வதரியாது அவன்
விழித்திடுவான்!!

No comments:

Post a Comment