Tuesday, 12 January 2021

வயலின் பேசியதே - 2

இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்த தோழிகள், நிகழ்ச்சி தொடங்கிவிட்டதை உணர்ந்து அவசர அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அனுமதி சீட்டினை வாங்கிக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தனர். மேடையின் நடுநாயகமாய் ராகவ் நின்றுகொண்டு இசைத்திருக்க, மற்ற இசைக் கலைஞர்கள் அவனைச் சுற்றி அமர்ந்தபடி வாசித்திருந்தனர். மேடையிலிருந்து நான்கைந்து வரிசைகளைத் தாண்டி அவர்களுக்கு இருக்கை கிடைத்தபொழுதிலும், அவன் முகத்தினைத் தெளிவாய் அவளால் பார்க்க முடிந்தது. இசையில் லயித்து உலகை மறந்து வாசித்து நின்றிருந்தவனின் முகத்தில் அமைதியும், அழகியதொரு புன்னகையும் நீங்காமல் நிறைந்திருந்தது. அவனது வயலினிலிருந்து எழும்பிய மந்திர இசை அவ்வரங்கத்தைச் சூழ, அனைவைரும் கட்டுண்டிருந்தனர்.


“ரித்து, அந்தப் பையன் செம ஸ்மார்ட்டா இருக்கான். ரொம்ப நல்லா வாசிக்கறான்…”

சுவாதி, ரித்திகாவின் காது கடித்தாள்.

“அண்ணனை ‘அவன்’, ‘இவன்’னு மரியாதை இல்லாம பேசக்கூடாது…” என்றாள் அவள் நிதானமாய்.

“அண்ணனா?!” 

அதிர்ந்தவள், சற்று நிதானம் கொண்டு, “சரி, ஓகே… அப்போ இனிமேல் நீ, சாரி, நீங்க எனக்கு அண்ணியா?” என்றாள் வடை போன சோகத்தில்.

“பரவால்ல… என்னை பேரு சொல்லியே கூப்பிட்டுக்கோ… நான் தப்பா நினைக்கல…”

“ரொம்ப தேங்க்ஸ் ரித்து அண்ணி…” என்றவள், அவளை முறைத்துவிட்டு நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கினாள்.


பதினைந்து வயதொத்த சிறு பெண்பிள்ளை ஒருவள், ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாட்டினை தனது குழந்தைக் குரலால் பாடிமுடிக்க, அரங்கமே கரகோஷத்தால் நிறைந்தது. நிகழ்ச்சி நிறைவுற, அக்குழந்தை ராகவ்வின் காலில் விழுந்து வணங்க, மற்ற இளையவர்களும் வணங்க, மூத்தோர் அவனை அரவணைத்துக்கொள்ள, அவனைக் காண முடியா அளவிற்கு கலைஞர்கள் சூழ்ந்துகொண்டனர். அனைத்தையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளின் முகத்தில் அவளே அறியாமல் பெருமிதம் பொங்கியது. பார்வையாளர் அனைவரும் களைந்து செல்ல, இறுதியாய்த் தோழிகள் வெளிப்பட்டனர். 


“ரித்து, காது கேட்காத, வாய் பேச முடியாதவங்களுக்காக சேரிட்டி ஷோ நடத்தறான்னா ராகவ் எவ்வளவு நல்ல பையனா இருக்கணும்?”

ரித்து தோழியைக் கண்டு முறைக்க,

“இங்கப்பாருடி, என் அண்ணன் என் உரிமை. நான் ‘டா’ போட்டு கூட பேசுவேன். அண்ணன்-தங்கச்சிக்கு நடுவுல நீ வராத…” என்று திட்டவட்டமாகக் கூறினாள், சுவாதி.

தோழிகள் சிரித்துக்கொண்டே, வாகன நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர்.


அவ்விடத்தில் நிரம்பியிருந்த மாற்றுத் திறனாளிகளை அமைதியாய் பார்த்தபடி இருவரும் நின்றிருந்தனர். 

“ரித்து, இவங்களைப் பார்க்கும்போது கடவுள் மேல நம்பிக்கை போயிடுது. ஆனா, ஒவ்வொருத்தர் முகத்தில இருக்கற சிரிப்பைப் பார்க்கும்போது வாழ்க்கை மேல நம்பிக்கை வருது.”

“ம்ம்…”

“பாவம், இவங்களுக்கு இப்படி ஒரு குறை இருந்திருக்கக்கூடாது…”

“யாருகிட்ட குறை இல்லை? இவங்க குறைகள் வெளியே தெரியுது. பலருடையது தெரியறதில்லை…”

“??”

“உருவத்துல குறையிருக்கறவங்க வருத்தப்பட ஒண்ணுமில்ல. உள்ளத்துல குறையிருக்கறவங்க தான் வருத்தப்படணும். குணம் குன்றியவர்களைத்தான் இந்த உலகமே பழிக்கும், சபிக்கும். பிறரின் வேதனைக்கு காரணமா இருக்கறவங்க தான் பரிதாபத்திற்கு உரியவர்கள். இப்படிப்பட்ட மனக்குறை தான் மனித இனத்தோட சாபம்.”

“ஆமாடி… உண்மை தான்…”

ஏதோ யோசித்தவளாய்,

“நான் உள்ள போய் ராகவ் கிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வந்துடறேன்டி…” என்று ரித்து கூற,

“ஓஹோ…” என்று பரிகாசமாய் மண்டையாட்டியபடி சுவாதி சிரிக்க, அதற்குள்ளாக ரித்துவின் கைப்பேசி சிணுங்க, 

“அம்மா தான் போன்ல… இன்னும் ஏன் வீட்டுக்கு வரலனு கத்துவங்க. நாம இங்க வந்ததை சொல்ல மறந்துட்டேன். நீ சமாளி, நான் ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு தனது கைப்பேசியினை சுவாதியின் கைகளில் திணித்துவிட்டு மீண்டும் அரங்கத்திற்குள் ஓடிச்சென்றாள், ரித்திகா.


அழைப்பினை ஏற்றாள், சுவாதி.

“ஹலோ ஆண்ட்டி…”

“ஹலோ… சுவாதி, நீயாமா? ரித்து எங்க? இன்னும் வீட்டுக்கு வரல?”

“அது… அவ… ஆள பார்க்கப் போயிருக்கா…”

தான் உளறிவிட்டதை எண்ணி நாக்கினைக் கடித்துக் கொண்டவள், மேற்கொண்டு  செய்வதறியாது முழித்திருந்தாள்.


“ஆளா??”

“இல்லை ஆண்ட்டி… வேலு!!”

அவசரமாக பதில் அளித்தாள்.

“வேலா??”

“அதான் ஆண்ட்டி முருகன் கைல இருக்குமே…”

“ஓ! உங்க ஆபிஸ் பக்கத்துல இருக்கற முருகன் கோவில்ல இருக்கீங்களா?”

‘நல்லவேளை ஆண்ட்டியே ஆன்சர் சொல்லிட்டாங்க…’

“ஆ… ஆமா ஆண்ட்டி…”

“சரி, அவகிட்ட போன கொடு…”

“அது… அவ 108 சுத்து சுத்திட்டு இருக்கா… அதான் போன் என்கிட்ட கொடுத்துட்டா…”

“அப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க?”

சமாளிக்கத் தெரியாமல் தவித்துப்போனவளுக்கு, எதிரே இருந்த பானிபூரி கடையைப் பார்த்ததும் தலையில் பல்ப் எரிந்தது. 

“நான், பானிபூரி சாப்பிட வந்தேன் ஆண்ட்டி…”

“ஏன்மா, நீயும் அவளோட சேர்ந்து கோவிலை சுத்தாம இப்படி பானிபூரி சாப்பிட வந்திருக்கியே, அது நல்லாவா இருக்கு?”

“தெரில ஆண்ட்டி. நான் இன்னும் டேஸ்ட் பண்ணல. அதுக்குள்ள உங்க போன் வந்துடுச்சு.”

ரித்திகாவின் அம்மா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, சில நொடி அமைதிக்குப் பிறகு,

“சரிம்மா, ரித்து வந்ததும் போன் பண்ணச் சொல்லு” என்றுவிட்டு அழைப்பினைத் துண்டித்தாள்.


‘முருகா என்னை மன்னிச்சுடு முருகா… தெரியாம உன் பேரை மிஸ்யூஸ் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுப்பா!!’ என்று கண்கள் மூடி அவள் தியானித்திருக்க, 

“என்னடி நின்னுக்கிட்டே தூங்கற?” என்றபடி வந்து நின்றாள், ரித்திகா.

“என்னது தூங்கறேனா? ஏன் பேசமாட்ட… ஆண்ட்டியை சமாளிக்கறதுக்குள்ள உயிர் போய் வந்துடுச்சு…”

“எதுக்கு சமாளிக்கணும்? மியூசிக் கான்சர்ட் வந்ததை சொல்லவேண்டியது தான?”

“அதை சொல்லப்போய் ராகவ் பத்தி சொல்லிடுவேனோனு பயந்து வேற மாதிரி சமாளிச்சேன்.”

“ஆமா, நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றோம் பாரு… லூசு… எடு வண்டியைக் கிளம்பலாம்…”

“ஆமாமா முதல்ல கிளம்புவோம். உங்கம்மாவ பேசியாவது சமாளிக்கலாம். எங்கம்மா பேச்செல்லாம் கிடையாது. ஸ்ட்ரைட்டா சங்கு தான் எனக்கு…” என்றவள், வண்டியைக் கிளப்பினாள்.


No comments:

Post a Comment