Monday, 11 January 2021

வயலின் பேசியதே - 3

 “மேடம், உங்கக்கிட்ட பேசணும், கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?”

அலுவலகத்தில் பரபரத்துக் கொண்டிருந்த சுவாதியை நிறுத்தி வினவினாள், ரித்து.

“நீ ஏன் பேசமாட்ட? காலைலேர்ந்து அந்த டைனோ தொல்லை தாங்க முடியல…” 

“என்னடி ஆச்சு?”

“ரெண்டு நாள் லீவு போட்டேன்ல, அதுக்கு சேர்த்து வச்சு இன்னைக்கு ஒரே நாள்ல ஏகப்பட்ட வேலையைக் கொடுத்து அந்த டைனோ என்னைப் பழி வாங்கிடுச்சு…”

“சரி வருத்தப்படாதடி, இதெல்லாம் நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே…”

“எவன் இங்க வருத்தப்பட்டான்... ரெண்டு நிமிஷம் கூட ரெஸ்ட் இல்லை… செம டயர்ட்… சரி அது இருக்கட்டும், நீ ஏன் காலையிலிருந்து என்னவோ மாதிரி இருக்க? ரெண்டு நாளா சரியாக் கூட என்கிட்ட போன்ல பேசல?”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே…”

“எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி... என்ன விஷயம்?”

“ஒன்னும் இல்லடி... ஒரு சின்ன குழப்பம்…”

“அந்த கான்சர்ட் போயிட்டு வந்ததுலிருந்தே நீ குழப்பத்தில தான் இருக்க…”

“இல்லை சுவாதி…”

“நடிக்காதடி உண்மைய சொல்லு…”

“அந்தக் கான்சர்ட் போறதுக்கு முன்னாடி ஒன்னு ரெண்டு தடவை ராகவ பஸ்ஸில பார்த்தேன். கடைசியா அன்னைக்கு கான்சர்ட்ல பார்த்த பிறகு பஸ்ல பார்க்க முடியல... அதான் யோசிச்சிட்டு இருந்தேன்…”

“பார்ரா... அதான் அன்னைக்கு கான்சர்ட் போயே ஆகணும்னு அடம் புடிச்சியா? ரைட்டு, நீ கவலைப்படாத. இனிமேல் எப்பவும் நீ வர பஸ்ஸில ராகவ் வரவே மாட்டான்…”

“என்னடி சொல்ற?” பதறினாள், ரித்து.

“அதுக்கு என்கிட்ட எவிடன்ஸ் இருக்கு!!” 

“உளறாம தயவு செஞ்சு விஷயத்தை சொல்றியா?”

“எனக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன கொடுத்தா, கண்டிப்பா சொல்றேன்!!”

கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு, திடமாகக் கூறினாள், சுவாதி.

“சரிடி ஐஸ்கிரீம் ஷாப் தானே? உடனே போலாம்” என்று ரித்திகா கூறியதுடன், கையோடு சுவாதியைக் கிளப்பிக்கொண்டு சுவாதியின் ஸ்கூட்டியில் இருவரும் வழக்கமாக செல்லும் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து சேர்ந்தனர். தனக்குப் பிடித்த ஐஸ் கிரீம் வகைகளை ஆர்டர் செய்து சுவாதி உண்டு முடிக்கும் வரை அமைதி காத்த ரித்திகா, பிறகு ராகவ் பற்றி அவள் கூற வந்ததை அவளுக்கு ஞாபகப்படுத்தினாள்.


“நேத்து கோயில்ல ராகவ பார்த்தேன்டி…”

“கோயில்லயா? எந்தக் கோயில்?”

“கருமாரியம்மன் கோயில்…”

“நீ வேற ஏதோ கோயில் போறதால ஃபோன்ல சொன்ன?”

“நான் ஒரு கோயிலுக்கு மட்டுமா போனேன்? ஊருல உள்ள அத்தனை கோயிலுக்கும் போனேன். உனக்குத்தான் எங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி தெரியுமே. திடீர்னு எல்லா பயலும் பக்திமானா மாறிட்டானுங்க. லீவ் போட்டு கோயில் கோயிலா கூட்டிட்டு போனானுங்க. என் வீட்டு ஆளுங்க எப்போ எப்படி மாறுவாங்கன்னே சொல்லமுடியாது. திடீர்னு பார்த்தா சக்திமானா மாறிவிடுவானுங்க. ரோட்டில சும்மா நிக்கிற பையனுக்கு டீ வாங்கிக் கொடுத்து சோசியல் சர்வீஸ் பண்ணுவானுங்க. தள்ளு வண்டிக்காரன்கிட்ட பேரம் பேசாம காய்கறி வாங்குவானுங்க. அண்ணாச்சி கடையில சில்லறைக்கு பதில் சாக்லேட் கொடுத்தா அதைத் தட்டிக் கேப்பானுங்க. அப்புறம் பார்த்தா திடீர்னு கவரிமானா மாறிடுவானுங்க. இவன் வீட்டு விசேஷத்தில சரியா கவனிக்கல, அவன் வீட்டு விசேஷத்தில சரியா கவனிக்கல, என் கௌரவம், மானம், மரியாதை எல்லாம் போச்சுனு சொல்லி விசேஷத்துக்கு கூப்ட்ட பயலுங்க கிட்ட சண்டைக்கு நிப்பானுங்க. ஆனா ஒண்ணு, புள்ளிமான் மாதிரி துள்ளித் திரியற என்னைப் பார்த்தா மட்டும் அத்தனை பயலுகளும் டாபர்மேன்’ஆ மாறிடறானுங்க. அதுதான் ஏன்னு எனக்குப் புரியவே இல்லை?!!”

அவள் கூறியதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ரித்திகா, 

“அது ஒன்னுமில்ல சுவாதி, எல்லாம் உன் முகராசி அப்படி!!” என்றுவிட்டு மீண்டும் சிரித்திருக்க, தோழி கூறியதைக் கேட்டு தனது முகத்தினைத் தொட்டுபார்த்துகொண்ட சுவாதி, ரித்துவின் கைகளைப் பற்றிக்கொண்டு,

“அப்போ நாளைக்கே நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிட்டா?” என்க, 

“ப்ளீஸ்டி என்னால முடியல” என்றவள் சிரித்து ஓய சில நிமிடங்கள் ஆனது.


“அம்மா தாயே இப்பவாவது ராகவ் பத்தி நீ சொல்ல வந்ததைச் சொல்லு…”

“அந்த மேட்டரை மறந்துட்டேனே…” என்றவள், தனது கைப்பேசியை எடுத்து, அதில் சில புகைப்படங்களைக் காண்பித்தாள். 

“கருமாரியம்மன் கோயில்ல ராகவ் தன்னோட அம்மா அப்பா கூட வந்து, தன்னோட புது வண்டிக்கு பூஜை போட்டுட்டு இருந்தத நான் போட்டோ எடுத்துட்டேன். பைக் செமயா இருக்குல?”

சுவாதி கூறியதும் அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டு ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்தாள், ரித்திகா. அனைத்திலும் ராகவ் சிரித்துக் கொண்டு நிற்க, அருகில் அவனது பெற்றோரும் நின்றிருந்தனர். 

“புது பைக் வாங்கியிருக்கான். இனி எதுக்குடி பஸ்ல வரப்போறான்?”

மெலிதாய் சிரித்துக்கொண்டாள், ரித்திகா. 


“ரித்து, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?”

“சொல்லு சுவாதி…”

“நீ ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க?”

சற்று யோசித்தவள், “எனக்குத் தெரியலடி” என்றாள், ஜீவனற்ற குரலில்.


“ஏதோ விளையாட்டுக்கு அன்னைக்கு அந்த ராகவ வச்சு கிண்டல் பண்ணி பேசினன்னு நினைச்சேன். அதான் நேத்து அவனை கோயில்ல பார்த்ததைக் கூட ஃபோன் பண்ணி உனக்குச் சொல்லல. கிண்டல் பண்றேன் பேர்விழினு சும்மா இருக்கற உன் மனசை சஞ்சலப் படுத்திடுவேனோனு பயம். அதான் சொல்லல. ஆனா இன்னைக்கு காலைலேர்ந்து பார்க்கறேன். நீ நீயாகவே இல்லையே?” 

“ச்சச்ச... அப்படியெல்லாம் எதுவுமில்லை சுவாதி…”

“எதுவும் இருக்கக்கூடாதுனு நான் வேண்டிக்கிறேன்…”

ரித்து கேள்வியாய்த் தோழியை நோக்க,

“இந்தக் காலத்துல நல்லா தெரிஞ்சவங்களையே நம்ப முடியல. இந்தப் பையன் யாரு? என்ன? எப்படிப்பட்டவன்? எதுவும் தெரியாது. அவனை நினைச்சு நீ இப்படி இருக்கறது எனக்கு சரின்னு படல…” என்று மனதில் நினைத்ததைக் கூறினாள்.

“அதை நானும் யோசிக்காம இல்லை, சுவாதி. எனக்கும் புரியுது. நம்ம வாழ்க்கையில எத்தனையோ ஆண்களைக் கடந்து வந்திருக்கோம். எத்தனை ஆண் நண்பர்கள் இருக்காங்க?!! ஆனா, இந்த மாதிரி நான் டிஸ்டர்ப் ஆனது இல்லை. எனக்கே கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாத்தான் தோணுது. என்ன பண்றதுன்னு தெரியல…” 

“ஆனா ரித்து, ஒருவேளை ராகவ் நல்ல பையனா இருந்தா? அவங்க அம்மா அப்பாவும் இந்த ஃபோட்டோவில இருக்கிற மாதிரி நிஜத்திலும் ரொம்ப ஸ்வீட்டான ஆளுங்களா இருந்தா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்ல?!!”

ரித்து அவளை விளங்காத பார்வை பார்க்க,

“எனக்குப் புரியுது நீ என்ன சொல்ல வரேன்னு. நானே இப்படியும் பேசுறேன், அப்படியும் பேசுறேன்னு நினைக்கற. அதானே? இங்கப் பாரு ரித்து, முதல்ல அவன் யோக்கியனா, அவன் குடும்பமும் நல்ல குடும்பமானு கண்டுபிடிப்போம். அதுக்கப்புறம் லவ் பண்ணலாமா வேண்டாமானு யோசிப்போம்.” 

ஆழ்ந்து யோசித்தவள்,

“இல்லைடி…” என்றபடி நெற்றியைப் பற்றிக்கொண்டு கண்கள் மூடி குழப்பமாய் அமர்ந்திருந்தாள். 

“இந்த ரியாக்ஷனுக்கு என்ன அர்த்தம்?” 

“நீ சொன்னது எதையும் செய்ய வேண்டாம். இதை இப்படியே விட்டுடுவோம்…” 

“நிஜமாத்தான் சொல்றியா? அவனைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாமா?”

“எனக்கு பதில் சொல்லத் தெரியல சுவாதி, ரொம்ப ரொம்ப குழப்பமா இருக்கு…”

ரித்துவின் கலங்கிய கண்களைப் பார்த்த சுவாதி, 

“ரித்து, ரெண்டு நாள் ப்ரீயா விடு. எதையும் யோசிக்காம இருக்க முயற்சி பண்ணு. கொஞ்ச நாள் ஆகட்டும்…”

“ம்ம்…” என்றவள், தனது முகத்தினைத் துடைத்துக் கொண்டு தோழியைக் கண்டு புன்முறுவல் சிந்தினாள்.


அடுத்து வந்த நாட்களில், சுந்தர விமானமாக இருந்த பேருந்து பயணம் அவளுக்குக் கசந்தது. மனதின் சஞ்சலமும் அவளை வாட்டியது. வயலின் இசை மீது தீராக் காதல் கொண்டாள். அனைத்து இசையும் அவனது வயலின் பேசிய மொழியாகவே அவளுக்குத் தோன்றியது.


No comments:

Post a Comment