Wednesday, 13 January 2021

வயலின் பேசியதே - 1

 மாநகராட்சியின் பிரதான சாலையின் வழியே, வாகன நெரிசலின் மத்தியிலே தவழ்ந்தும், ஊர்ந்தும் சென்றுகொண்டிருந்தது, அந்த மாநகரப் பேருந்து. பேருந்து ஜனசாகரமாய் இருந்த பொழுதிலும், அவளுக்கு அதிர்ஷ்டம் ஒரு சிட்டிகை அதிகமாகவே இருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவள், பரபரக்கும் முகங்களைப் புன்னகையோடு பார்த்திருந்தாள். சற்றே தலையைத் திருப்பி உள்ளே பார்த்தவளின் கவனத்தை ஈர்த்தது ஒருவன் தோளில் தொங்கிக்கொண்டிருந்த வயலின். 


அவளுக்கு சங்கீதம் மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் படிப்பினை இல்லை. இருப்பினும் காவடிச் சிந்து கொண்டு படைக்கப் பெற்ற கானங்கள் அனைத்தும் அவளுக்கு அத்துப்படி. வயலினும், வீணையும் கூட பிடிக்கும். அதிலும் படிப்பினை இல்லை. இருப்பினும் இசையின் மீது தீராக் காதல் கொண்டிருந்தாள்.


கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அவசியமின்றி உடனே தரிசனம் செய்பவர்களைப் போல், இசைக் கலைஞர்கள் அனைவருமே கடவுளர்களால் கூடுதலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றொரு அனுமானம் அவளுள். 


திரும்பி நின்றிருந்தவனின் முகம் தெரியவில்லை. பழுப்பு நிறத்தில், தோலால் செய்யப்பட வயலின் பெட்டியைத் தாங்கி நின்ற படர்ந்த தோள்களைக் கண்டாள். வெள்ளை நிற டி-ஷர்ட்டை வெறித்துக்கொண்டிருந்தவள், தனது நிறுத்தம் வந்ததும் அவனது முகம் காணாமல் இறங்கிக் கொண்டாள். சிட்டிகை அதிர்ஷ்டம் போதவில்லை! குறைந்தது ஒரு தேக்கரண்டி தேவைப்பட்டது.


மறுநாள் அவளுக்கான அதிர்ஷ்டத்தின் அளவு தெரியவில்லை. ஆனால், அதே ஜன்னலோர இருக்கையை கிடைக்கப் பெற்றாள். இன்று அவளது விழி தயங்கித் தயங்கி, பேருந்தின் உள்ளே இருந்த பல முகங்களில் அவள் கண்டிராத அந்த ஒரு முகத்தினைத் தேடியது. பழுப்பு நிற வயலின் பெட்டி அவனைக் காட்டிக் கொடுத்தது. தெளிந்த வானத்தின் நீலத்தை மேனியெங்கும் படரச் செய்தது போல் நீல நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தவன், திடீரெனத் திரும்பி நின்று, குனிந்து, கடந்து சென்ற கட்டிடங்களை அவள் புறம் இருந்த ஜன்னலின் வழியே நெற்றி சுருங்கக் கண்டிருந்தான். அவன் திரும்பியதும் வெடுக்கென தலைக் கவிழ்ந்து அமர்ந்தவள், கை விரல்களை இறுக்கமாகப் பின்னிக்கொண்டு, வேக வேகமாய் மூச்சிரைத்தாள். அவளது விழி மூடும் இமைகளும் பதட்டம் தாளாமல் படபடத்தன. படபடப்பின் மத்தியில், அவனது முகத்தினை சரிவரக் காண முடியாமல் போன ஏமாற்றமும் அவளை வாட்டியது. 


பேருந்து நிறுத்தம் வந்ததும் அவன் இறங்கிக்கொள்ள, அதை உணராமல் இவள் தலைக் கவிழ்ந்தே அமர்ந்திருந்தாள். பேருந்தின் எதிர் திசையில் நடந்தவன் அவளது இருக்கை கொண்டிருந்த சாளரத்தைக் கடக்கையில் அவளது படபடக்கும் இமைகளுக்குள் அவன் பிம்பம் வந்து விழுந்தது. ஜன்னலின் வெளியே எட்டிப் பார்த்தவளுக்கு மீண்டும் ஏமாற்றமே… வாடிய முகத்துடன் அவன் செல்லும் திசையை அவள் பார்த்திருக்க, சட்டென நடையை நிறுத்தியவன், வெடுக்கென திரும்பி, தலையின் லேசாக தட்டிக்கொண்டு பேருந்து நின்றிருந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனது முகத்தினைக் கண்டுவிட்ட பரவசத்தில் முகம் மலர்ந்தவள், வயிற்றினுள் ஏதோ குழைய மீண்டும் தனது இருக்கையில் தலைக் கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள். இருக்கையின் சாளரத்தின் வெளியே அவன் நடந்து செல்ல, அவன் வேகத்தை ஒத்து பேருந்தும் நகர, சுயம்வரத்திற்கு பரிவாரங்களோடு வருகைத் தரும் ராஜகுமாரனை உப்பரிகையிலிருந்து கடைக்கண் கொண்டு ராஜகுமாரி நோக்குவதுபோல், இவளும் பார்த்திருந்தாள்.    


“ஹே, ஏன் ஆபிஸ்க்கு லேட்டு?”

பரபரப்பாய் தனது இருக்கையில் வந்து அமர்ந்தவளின் எதிரே வந்து அமர்ந்தாள், அவளது தோழி, சுவாதி.

“ஸ்டாப்’அ மிஸ் பண்ணிட்டேன்…”

“காலங்கார்த்தாலயே பஸ்ல தூக்கமா?”

“ச்ச… ச்ச...” என்று உடனடியாக மறுத்தவள், அவனது முகத்தினைக் கண்டுவிட்ட களிப்பில், தன்னை மறந்து, தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தையும் மறந்து, பேருந்தில் அமர்ந்துகிடந்ததை எண்ணி சிரித்துக்கொண்டாள்.

“இப்போ எதுக்குடி சிரிக்கற?”

“அதில்லை…”

“பரவால்ல நல்லாவே சிரிச்சுக்கோ… இன்னைக்கு நீ சிரிக்கற கடைசி சிரிப்பு இதுதான்…”

“ஏன்டி?” 

கலவரமானாள், அவள்.

“நம்ம டைனோசர் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி இங்க வந்து நீ இன்னும் வரலையானு கேட்டு உறுமிட்டு போச்சு…”

எப்பொழுதும் கடுங்கோபத்தில் இருக்கும் மேலாளருக்கு, தோழிகள் வைத்த செல்லப் பெயர் ‘டமால் டுமீல் டைனோசர்’.

அவசர அவசரமாக தனது கையேட்டினை எடுத்துக்கொண்டு மேலாளர் அறைக்குச் சென்றவள், சிறிது நேரம் கழித்து, முகம் தொங்கி வெளிப்பட்டாள்.


“என்னடி ஆச்சு?” கேட்டுக்கொண்டு வந்துநின்றாள் சுவாதி.

“வேறென்ன, ஒரே டமால் டுமீல் தான்…” என்று பாவம் போல் இவள் முகத்தினை வைத்துக்கொண்டு சொல்ல, தோழிகளின் இதழோரம் சிரிப்பு துளிர்க்க, இருவரும் கண்களில் நீர் வரும் வரை சிரித்து ஓய்ந்தனர்.


“சனிக்கிழமை கூட ஆபிசுக்கு வர வேண்டியதா இருக்கு. முதல்ல ஒரு நல்ல ஈனா வானா மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி, இந்த வேலையை ரிசைன் பண்ணனும்…” என்றாள் சுவாதி, தனது வண்டியை ஓட்டியபடி.

அன்று மதியம் அலுவலகம் முடிந்து, தோழிகள் இருவரும், உச்சி வெய்யிலில் உல்லாசமாகச் சென்றுகொண்டிருந்தனர். 

“விடுடி, அரை நாள் தானே ஆபிஸ் வைக்கறாங்க. அதுக்கே சலிச்சுக்கற? வீட்ல போர் அடிச்சுட்டு உட்கார்ந்திருக்கணும்…”

“ஏன் உட்கார்ந்திருக்கணும்… நிம்மதியா படுத்துத் தூங்கலாமே?!”

“போடி… திங்கட்கிழமை ஆரம்பிச்சா வெள்ளிக்கிழமை வரை வேலை சரியா இருக்கு. சனிக்கிழமை சீக்கிரம் ஆபிஸ் முடிஞ்சு இப்படி உன்கூட ஸ்கூட்டில ஒரு ரவுண்டு போக எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?”

“எனக்கும் உன் செலவுல ஐஸ்க்ரீம் சாப்பிட எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” என்றவள், ஒரு ஐஸ்க்ரீம் கடையின் முன் வண்டியை நிறுத்தினாள். 

“எதுக்கு சுவாதி இப்போ ஐஸ்க்ரீம்?”

“இன்னைக்கு நம்ம டைனோ கிட்ட உனக்கு டமால் டுமீல் ஆச்சுல்ல? அதைக் கொண்டாடத்தான்…”

“கிராதகி…”

டமால் டுமீல் டைனோசரைப் பற்றி பேசிக்கொண்டே தோழிகள் சில பல ஐஸ்க்ரீம்களை உண்டு முடித்தனர்.


“அடுத்த வாரமாவது நாம அந்த டைனோகிட்ட சிக்கி சின்னாபின்னம் ஆகக்கூடாது…”

“என்னடி இப்படி சொல்லிட்ட? அப்புறம் நம்மள நம்பி கடையைப் போட்ட இந்த ஐஸ்க்ரீம் கடைக்காரர் நிலைமை என்ன ஆகுறது. வாரத்துல நாலு நாள் நாம இவருக்கு பிசினெஸ் கொடுக்கறோம்ல?”

“ஆமாடி, வாரத்துல நாலஞ்சு தடவை ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு திட்டு விழுது. அதுக்கு ஐஸ்க்ரீம் ட்ரீட்டு. இதெல்லாம் ஒரு பொழப்பா?”

“அதுக்குத்தான் சொல்றேன் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு…”

“போடி அதுக்கு அந்த டைனோவே தேவலாம்…”

“என்னடி ரூட்டு மாறுது? அந்த டைனோக்கு கல்யாணம் ஆகி, ரெண்டு பசங்க இருக்காங்க. பெரியவன் பேரு டமாலு. சின்னவன் பேரு டுமீலு…”

சுவாதி கூறியதைக் கேட்டு இவள் சிரிக்க, இவளுடன் சேர்ந்து அவளும் சிரிக்க, கடையின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியின் அருகே வந்த பின்னரே சிரிப்பலை ஓய்ந்தது.


சுவாதி வண்டியை அதன் நிறுத்துமிடத்திலிருந்து எடுக்க, அருகே காத்துக்கொண்டிருந்தவளின் கண்களில் அந்த சுவரொட்டி எதேச்சையாக விழுந்தது. காலை பேருந்தில் பார்த்தவனின் புகைப்படம் அதிலே இருந்தது. கையில் வயலினோடு சிரித்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும் அவளை போல் அவளது விழிகளும் உறைந்து போய் இமைக்க மறந்தன. 

‘சார் பேரு ராகவ்’ஆ? ராகவ்-ரித்திகா… பேர் பொருத்தமே நல்லாத்தான் இருக்கு…’ என்று தனது பெயரை, சுவரொட்டியில் அவள் கண்ட அவனது பெயரோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். உடனே தனது கைப்பேசியில் அச்சுவரொட்டியைப் படம் எடுத்தவள், அதற்குப்பிறகே அதனை வாசித்தாள். 

“கிளம்பலாமாடி?”

அருகில் வண்டியுடன் வந்து நின்ற சுவாதியைக் கண்டவள்,

“நம்ம அடுத்த ஸ்டாப் இந்த மியூசிக் கான்சர்ட்…” என்றாள்.

“என்னடி திடீர்னு?”

“ப்ச்… இது சேரிட்டி ஷோ (Charity Show )... போலாம் வாடி…”

ரித்து கூற, மறுபேச்சின்றி அவளைக் கூட்டிக்கொண்டு வண்டியைக் கிளப்பினாள், சுவாதி.  


No comments:

Post a Comment