“கிளம்பலாம் ரித்து…” என்றுவிட்டு சுவாதி எழ,
“ஐஸ் க்ரீம் சாப்பிடத்தானே?” என்று வினவியபடி ரித்துவும் எழுந்தாள்.
“இல்லைடி… ஐஸ் க்ரீம் சாப்பிடற மூட் இல்லை. நான் உன்னை பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு கிளம்பறேன்…”
சுவாதி அமைதியாய் வண்டியை ஓட்ட, ரித்துவிற்கும் அந்த மௌனம் தேவைப்பட்டதாய் இருந்தது. திடீரென வண்டியை சாலையோரம் நிறுத்திய சுவாதி,
“ரித்து, அன்னைக்கு கான்சர்ட்ல பாட்டு பாடின பொண்ணு இவ தானே?” என்றாள், சற்று தொலைவில் நின்றிருந்த சிறு பெண் ஒருவளைக் காட்டி.
“ஆமா, சுவாதி” என்று கூறிக்கொண்டே வண்டியிலிருந்து ரித்து இறங்க, இருவரும் அவளின் அருகே சென்று நின்றனர்.
அவர்களைக் கண்ட அச்சிறுமியின் கண்களில் கொக்கிகள் மின்ன,
“நீதானே அன்னைக்கு சேரிட்டி ஷோல ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடின?” என்று சுவாதி வினவ,
“ஆமா அக்கா. உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வெள்ளந்தி சிரிப்போடு வினவினாள், அவள்.
“நாங்க அந்த ஷோவுக்கு வந்திருந்தோம். நீ ரொம்ப அழகா பாடின.”
“ரொம்ப தேங்க்ஸ் அக்கா…” என்றாள் அவள், முகம் மலர.
ரித்துவை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அச்சிறுமியிடம் திரும்பிய சுவாதி,
“ராகவ்’அ உனக்குத் தெரியுமா?” என்றாள்.
“அண்ணன் தான் எனக்கு எல்லாமே…” என்று விடுகதையாய் பதில் கூறினாள், அவள்.
“அப்படினா?”
“மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா எங்களை விட்டுட்டு எங்கயோ போயிடுச்சு. நான், அம்மா, பாப்பா மூணு பேரும் சாப்பாட்டுக்கு வழியில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். அப்பா அடிக்கடி எங்கயாவது களவாண்டு போலீஸ் கிட்ட மாட்டிக்கும். அதனால என் அம்மாவுக்கு யாரும் வேலை கொடுக்கல. சிக்னல் கிட்ட நின்னு பாட்டு பாடுவேன். காசு கிடைக்கும். நான் பெரிய மனுஷி ஆயிட்டதால பல பேர் என்னைத் தப்பா தொடுவாங்க. அம்மாகிட்ட அழுவேன். அம்மாவும் அழும். அப்பத்தான் ஒருநாள் ஒருத்தன் என்கிட்ட… என்கிட்ட… தப்பா… அப்போ அண்ணன் தான் அவனை விரட்டிவிட்டுட்டு என் அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கி ஒரு ட்ரூப்ல சேர்த்துவிட்டாங்க. ட்ரூப்ல ப்ரோக்ராம் வரும்போது நான் போவேன். காசு கிடைக்கும். அம்மாவுக்கும் ஒரு ஹோட்டல்ல பாத்திரம் தேய்க்கற வேலை அண்ணன் மூலமா கிடைச்சுது. அண்ணனால தான் நான் பத்திரமா இருக்கேன். அண்ணனால தான் நாங்க மூணு பேரும் நிம்மதியா இருக்கோம். இப்பக் கூட அசோசியேஷன் ஷோவுக்கு ரிகர்சல் பார்க்கத் தான் போகப்போறேன்…”
அவள் கூறியதைக் கேட்டு ஏறத்தாழ தோழிகள் கண்கள் கலங்கிவிட்டிருந்தனர்.
“ஸ்கூலுக்கு போறியா?” என்றாள் சுவாதி.
“போறேன் கா, பத்தாவது படிக்கறேன்.”
அவள் கூறி முடிக்க, அவளின் அருகே ஒரு பைக் வந்து நின்றது. அதில் வந்தவன் தலைக் கவசத்தைக் கழட்ட, ரித்துவின் நெஞ்சில் சில்லென சாரல் வீசும் முகம் வெளிப்பட்டது.
“ராகவ் அண்ணா, இந்த அக்காங்க ரெண்டு பேரும் நம்ம அசோசியேஷன் சாரிட்டி ஷோக்கு வந்திருந்தாங்களாம். நான் ரொம்ப நல்லா பாடினேன்னு சொன்னாங்க…”
சிறுமி கூறியதைக் கேட்டு தோழிகளைக் கண்டு ‘நன்றி’ என்பது போல் தலையசைத்து, சிறிதாய் ஒரு புன்னகை சிந்தினான், ராகவ். ரித்துவை இதற்குமுன் அவன் சந்தித்தது அவனது நினைவில் இல்லை போலும். அவளை முன்னமே சந்தித்த அறிகுறி எதுவும் அவனது முகத்தில் தென்படவில்லை.
அச்சிறுமியிடம் வண்டியில் அமரும்படி அவன் சைகை செய்ய, “டாட்டா அக்கா” என்று இருவருக்குமாய் கையசைத்துவிட்டு வண்டியில் அமர்ந்தாள்.
“நாங்க உன் படிப்புக்கு ஏதாவது உதவலாமா?” என்று தயக்கத்தோடு அச்சிறுமியிடம் வினவிய சுவாதி, ராகவை நோக்க, அவனோ நேரே சாலையைப் பார்த்தபடி கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். சுவாதி, ‘இவன் ஏன் இப்படி இருக்கான்?’ என்பது போல் ரித்துவிடம் கண்களால் வினவ, அவளும் ‘தெரியவில்லை’ என்பது போல் தலைக்கவிழ்ந்து கொண்டாள்.
“அக்கா, எனக்கு உதவியெல்லாம் வேண்டாம் கா. எங்க அஸோஸியேஷனுக்கு கொடுங்க கா…” என்று அச்சிறுமி பதில் கொடுக்க,
“சரி மா…” என்று சுவாதியின் குரல் வந்ததும், நொடி தாமதிக்காது வண்டி புறப்பட்டது.
“பையன் நல்லவனாத்தான் இருக்கான்… ஆனா ரொம்பத்தான் வெட்கப்படறான்…” என்று சுவாதி ரித்துவின் தோளைத் தனது தோளால் இடிக்க, மெலிதாய் சிரித்துக்கொண்டாள், அவள். அவளது உள்மனம் கூறியது, அவனிடம் கண்டது வெட்கம் அல்ல, ஒதுக்கம் என்று! இனம்புரியா உணர்வுகளின் இடையே பெண்டுலம் ஆடும் மனதினை நிறுத்தி வைக்க பெரும் பாடுபட்டாள்.
சோர்ந்து வீடு திரும்பிய ரித்து, வரவேற்பறையில், தொலைக்காட்சிப்பெட்டியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த தந்தையைக் கண்டாள். அருகே, செய்திகள் கேட்கவிடாது, ஏதோ கூறிக்கொண்டிருந்த தாயைக் கண்டாள். அவளது உள்ளத்துத் தவிப்புகளை, அபிலாஷைகளை, மெல்லிய உணர்வுகளை, ரகசிய கனவுகளை இவ்வுலகில் இவர்களைத் தவிர வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்!! அவள் மனமும் அதையே கூறியது. உள்ளே நுழைந்தவளைக் கண்டதும், “ஏன் ரித்து இவ்வளவு லேட்டு?” என்று கேட்டுக்கொண்டே அம்மா அவள் அருகே வர, “முதல்ல பாப்பாவுக்கு சாப்பாடு எடுத்து வை, அப்புறம் விசாரிக்கலாம்…” என்ற அப்பாவின் குரலால் அவள் அமைதியாகிப்போனாள்.
அப்பாவின் அருகே வந்தமர்ந்த ரித்து, “நான் பாப்பாவா?” என்றாள், மெலிதாய் சிரித்தபடி.
“எப்பவுமே டா…” என்ற அப்பா அவளது தலை வருட, தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.
“எழுந்து வா ரித்து, சாப்டுட்டு படு” என்றபடி அம்மாவும் அருகே வந்து நிற்க,
“பசிக்கல மா…” என்றாள்.
“ஏன் பாப்பா கொஞ்ச நாளா சோர்ந்திருக்க? உடம்புக்கு என்ன பண்ணுது?”
அப்பாவின் குரலில் பொங்கிய பாசம், அவளையும் அறியாமல் அவளது கண்களில் நீர் மணிகளைக் கோர்க்கச் செய்தது.
“உடம்புக்கு ஒண்ணுமில்ல பா, மனசு தான்… என்னமோ குடையுது…”
அப்பாவும், அம்மாவும் அதிர்ச்சியும், கவலையுமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்னடாமா ஆச்சு? என்கிட்ட சொல்லு… உனக்கு நானும், அம்மாவும் இருக்கோம்…”
“தெரியும் பா, எனக்கு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க. என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு தெரியும்…”
“என்ன ஆச்சு ரித்து?”
அமைதியாக இருக்க முயன்றாலும், முடியாமல் பரிதவித்தாள், அம்மா.
எழுந்து அமர்ந்த ரித்து, இருவரையும் பார்த்துவிட்டு, தலைக் கவிழ்ந்தபடி,
“நான் ஒருத்தரை விரும்பறேன்…” என்றாள்.
சிரித்துக்கொண்ட அப்பா, “இதைச் சொல்ல ஏன்டா உனக்கு இவ்வளவு தயக்கம்? நானும், உன் அம்மாவுமே லவ் மேரேஜ் தானே. பையன் யாரு?” என்றார், நிதானமாக.
“அவர் பெயர் ராகவ். வயலினிஸ்ட். ரொம்ப நல்லா வாசிப்பாரு. எங்கேயோ வேலை செய்யறாரு. கச்சேரியும் பண்றாரு.”
“என்னடி நீ எங்கயோ வேலை செய்யறாருனு சொல்ற? அவரோட அம்மா, அப்பா, கூட பொறந்தவங்க, குடும்பம் இதெல்லாம் பத்தி உனக்குத் தெரியுமா தெரியாதா?” அம்மா கவலையானாள்.
“தெரியாது மா… இது என் விருப்பம் மட்டும் தான். அவருக்கு இதெல்லாம் தெரியாது. என்னையவே அவருக்குத் தெரியாது…”
“என்ன பாப்பா சொல்ற? அவரோட பேசிப் பழகினது கூட இல்லையா?”
“இல்லை பா…”
அடுத்த சில நிமிடங்கள் வீடு மௌனித்திருந்தது.
“பாப்பா, இந்த விஷயத்தை நாங்க எப்படி சீரியஸா எடுத்துக்கறதுன்னு தெரியல?”
கலங்கிய விழிகளோடு, முதன்முதலில் ராகவைக் கண்டது முதல், சற்று முன் அவனை சந்தித்தது வரை கூறி முடித்தாள்.
அப்பா யோசனையாகிப்போனார். அடுக்களைக்குள் சென்றுவிட்ட அம்மாவின் விசும்பல் மட்டும் எட்டிப் பார்த்தது.
No comments:
Post a Comment