Sunday, 10 January 2021

வயலின் பேசியதே - 4

 “சுவாதி, பெர்மிஷன் போட்டு போற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்?”

சுவாதி வண்டியை ஓட்ட, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரித்து அவளைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தாள்.

“உன்னை வயலின் க்ளாஸ்ல சேர்த்துவிடப் போறேன்.”

“என்னடி சொல்ற?”

“அன்னைக்கு கான்சர்ட் போற வழியில வயலின் கத்துக்கணும்னு ஆசையா இருக்குனு சொன்னியே. இப்போ அதுக்குத்தான் போயிட்டு இருக்கோம்.”

சுவாதி கூறியதைக் கேட்டு ரித்து அமைதியாக வர, வண்டி நின்ற இடத்தைக் கண்ட பிறகு ரித்துவின் மூச்சு நின்றுபோனது. ‘ராகவ் வயலின் பயிற்சி பள்ளி’ எனும் பதாகையைக் கண்டவளுக்கு கால்கள் நடுங்கத் தொடங்கின.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?”

“வா வா நீ வாழப்போற வீட்டைப் பார்க்க வேண்டாமா?”

“ப்ளீஸ்டி சுவாதி…”

“சும்மா வா ரித்து” என்றவள், அவளை வம்படியாக அழைத்துக்கொண்டு இரும்பு கேட்டினைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.


அழைப்பு மணியை அவள் அடிக்க, கதவினைத் திறந்துகொண்டு வெளிப்பட்டாள் ஏறத்தாழ ஐம்பது வயது கொண்ட ராகவின் அம்மா. 

“வணக்கம் ஆண்ட்டி. என் பெயர் சுவாதி. இவ என் பிரெண்ட் ரித்து, ரித்திகா. இங்க வயலின் சொல்லித்தரதா கேள்விப்பட்டோம்.”

“ஆமாம்மா, என் பையன் ராகவ் தான் க்ளாஸ் எடுக்கறான்.”

“என் பிரெண்டை சேர்த்துவிடணும் ஆண்ட்டி. சார் இருக்காரா?”

“இல்லையே மா. அவன் வேலைக்குப் போயிருக்கான். சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் வருவான்.”

“ஓ அப்படியா ஆண்ட்டி… நாங்க பெர்மிஷன் போட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் வெய்ட் பண்ணமுடியாது” என்றவள், திடீரென்று இருமி தொண்டையை சரி செய்துகொண்டு, “ஆண்ட்டி, குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றாள்.

“நீங்க ரெண்டு பேரும் உள்ள வந்து உட்காருங்க…”

“இல்லைங்க ஆண்ட்டி பரவால்ல, நாங்க வராந்தாலயே இருக்கோம். நீங்க தண்ணி எடுத்துட்டு வாங்க ஆண்ட்டி” என்று பதுவிசாக சுவாதி கூற, அவள் உள்ளே சென்றதும், 

“போட்டோவை விட நேர்ல உன் மாமியார் அழகா இருக்காங்கல்ல!!” என்று ரித்துவிடம் காதுகடித்துவிட்டு, தலையை மட்டும் வீட்டினுள் நீட்டி வரவேற்பறை சுவர்களைப் பார்த்தாள். 

“என்னடி பண்ற?” என்று ரித்து பதற, அவளருகே நெருங்கி வந்த சுவாதி,

“ராகவ்க்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையானு தெரிஞ்சுக்க வேண்டாமா? ஹால்ல கல்யாண போட்டோ இல்லை.”

“அதனால?”

“ப்ச்… உலகம் தெரியாத பொண்ணா இருக்கியே நீ… கல்யாண வயசுல புள்ளைங்க இருக்கற வீட்ல கல்யாணக்கோலத்துல அவங்க வீட்ல போட்டோ இல்லேனா, அந்தப் பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு அர்த்தம்.”

ரித்து முறைக்க,

“இப்ப ப்ரூவ் பண்றேன் பாரு…” என்று சுவாதி சொல்லிக்கொண்டிருக்க, ராகவின் அம்மா வெளிப்பட்டாள்.

“குடிங்கம்மா…” என்று அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்ட சுவாதி,

“என்ன ஆண்ட்டி மோர் கொண்டுவந்திருக்கீங்க?” என்றாள் ஆச்சர்யமாக.

“இந்த வெயில்ல வந்திருக்கீங்களே மா, அதான்…”

“இப்போ எங்களுக்கு ஆபிஸ்ல லஞ்ச் டைம். கூட அரைமணி நேரம் பெர்மிஷன் வாங்கிட்டு வந்தோம். சாயங்காலம் ஆபிஸ் முடிய ரொம்ப நாழி ஆயிடும். அப்புறம் வரமுடியாது…” என்றவள், மடமடவென மோரைப் பருகிவிட்டு,

“வாட்டர் கேன் விலை ஏறிடுச்சுனு தண்ணி கொடுக்கவே யோசிக்கற இந்த காலத்துல நீங்க மோர் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி!!” என்றாள் பதுவிசாக.

“அப்புறம் ஆண்ட்டி, நம்ம ராகவ் சாரோட வைஃப் கூட வயலின் க்ளாஸ் எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டோம். அப்படியா?” 

ரித்து அதிர்ந்துபோக, அவளோ சாதுவாய் நின்றிருந்தாள்.

“ராகவ்’க்கு இன்னும் கல்யாணம் ஆகல மா…”

“அப்படியா ஆண்ட்டி?! யாரோ எங்கக்கிட்ட தப்பா சொல்லிட்டாங்க. எங்களுக்குக் கூட கல்யாணம் ஆகல ஆண்ட்டி…”

ராகவின் அம்மா என்ன கூறுவது என்று புரியாமல் ரித்துவைப் பார்க்க, அவள் சமாளிப்பாய் சிரித்து வைத்தாள்.

“ஆண்ட்டி ராகவ் சாரோட மொபைல் நம்பர் கிடைக்குமா?”

அவள் கூறியதைக் கேட்டு ரித்து பதறி அவளது கையைப் பிடிக்க, சுவாதியோ சளைக்காமல்,

“ஆண்ட்டி எங்களால திரும்ப பெர்மிஷன் போட்டு வரமுடியாது… அதான் க்ளாஸ் பத்தி போன்லையே கேட்டுக்கலாம்னு நம்பர் கேட்டோம்…”

“அவன் இந்த பேஸ்புக்ல இருக்கான் மா… அதுல க்ளாஸ் விவரம் இருக்குமே…”

“ஆண்ட்டி எங்களுக்கு இந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டிண்டர், சாரி சாரி, ட்விட்டர் இதுல எல்லாம் அக்கவுண்ட் இல்லை. அவ்வளவு ஏன் பேங்க்ல கூட அக்கவுண்ட் இல்லை, ஆண்ட்டி.”

அதிசயித்த ராகவின் அம்மா, “இந்தக் காலத்துல இப்படிப்பட்ட பிள்ளைங்களா?! நல்ல பிள்ளைங்க!” என்றவள், “அவன் நம்பரை சீட்டுல எழுதி எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட,

“நான் தான் சொன்னேன்ல ராகவ் சிங்கிள் தான்னு… ராகவ் அம்மாவும் டபுள் ஓகே… தண்ணி கேட்டா மோர் கொடுக்கறாங்க… அவங்களுக்கும் நம்மள பிடிச்சுப்போச்சு!!” என்றாள் சுவாதி முகத்தில் பரவசத்தோடு. ரித்துவோ பயமும், பதட்டமுமாய் நின்றிருந்தாள்.

வெளிப்பட்ட ராகவின் அம்மா,

“இந்த ப்ரோச்சர்ல க்ளாஸ் விவரமும், ராகவோட போன் நம்பரும் இருக்கு. அவனுக்கு மெசேஜ் போட்டீங்கன்னா, உங்களுக்கு எல்லா விவரமும் சொல்லிடுவான்.”

“மெசேஜ் எதுக்கு ஆண்ட்டி, நாங்க போன் பண்ணியே பேசிடறோம்” என்று சுவாதி கூற, அவளது கையை அழுத்திப் பிடித்து மேற்கொண்டு அவளை பேசவிடாமல் தடுத்த ரித்து, 

“ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி, ஆபிஸ்க்கு நேரம் ஆயிடுச்சு…” என்றுவிட்டு நொடி தாமதிக்காது சுவாதியைக் கிளப்பிக்கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றாள்.  


இவர்களுக்காகவே காத்திருப்பது போல், இவர்கள் அலுவலகத்திற்கு திரும்பியதும் மேலாளர் பணிகளை அடுக்க, நின்று நிதானிக்க நேரமின்றி தோழிகள் பணியில் மூழ்கினர்.


“ஷப்பா… நாலு மாமியாரை சமாளிச்சுடலாம் போல் ஒரு டைனோவை சமாளிக்க முடியல…” என்று சலித்துக்கொண்டே ரித்துவின் எதிரே வந்து அமர்ந்தாள், சுவாதி. அவள் கூறியதைக் கேட்டு மெலிதாய் சிரித்துக்கொண்டாள், ரித்து.

“மிஸ்.புன்னகை பூவே, கிளம்புங்க, ஐஸ் கிரீம் கடைக்கு போவோம்…”

“எதுக்கு?”

“எதுக்கா… இன்னைக்கு டைனோ எனக்கு லட்சார்ச்சனை செய்ததுக்கு…” என்றவள், திடீரென யோசனை வந்தவளாய், “அடியே ராகவ்க்கு போன் பண்ணியா?” என்றாள்.

‘இல்லை’ என்று மறுப்பாய் தலையாட்டினாள், ரித்து.

“போன் பண்ணி பேச ரெண்டு நிமிஷம் ஆகுமா? அதுக்கு உனக்கு நேரம் இல்லையா?”

“ஒரே குழப்பமா இருக்கு…”

“என்னடி குழப்பம் உனக்கு? அன்னைக்கு என்ன சொன்ன நீ? இதப்பத்தி கொஞ்ச நாளைக்கு யோசிக்க போறது இல்லைன்னு சொன்ன. ஆனா, பத்து நாளா எப்படி இருக்க நீ?! பைத்தியக்காரி மாதிரி இருக்க. ஒழுங்கா பேசறது இல்ல, சிரிக்கிறது இல்ல... நேத்து உங்க அம்மா போன் பண்ணி உனக்கு என்ன பிரச்சனைனு என்கிட்ட விசாரிக்கறாங்க. நான் என்னன்னு பதில் சொல்றது? அவங்க வருத்தப்பட்டு பேசுனதைக் கேட்டு ரொம்ப மனசு கஷ்டமா ஆயிடுச்சு. அதனாலத்தான் ஒரு முடிவு கட்டணும்னு சொல்லி இன்னைக்கு நான் நேரா வீட்டுக்குக் கூட்டிட்டு போனேன்…

ரித்து முகம் வாடி, கண்கள் கலங்க, பதறிய சுவாதி, அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “அய்யோ ரித்து, என்னடா ஆச்சு? ஏன் அழற? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோம். உனக்கு எது வேணும்னாலும் நான் செய்யறேன். அழாத ரித்து” என்று தாயாகிப்போனாள். மெல்ல தன்னை சமன் செய்துகொண்டவள், தனது மனதில் உள்ளவற்றை தோழியிடம் கூறத் தொடங்கினாள்.


No comments:

Post a Comment