பேப்பர், பேனா... போதுமென்ற அளவு தனிமை... பெரிதாய் சிறிதாய் எண்ணங்கள்... பதிவேற்றம் செய்ய இந்த ப்ளாக்!!
Thursday, 26 November 2020
Sunday, 18 October 2020
கா… கா… கா…
'எங்க இவள இன்னும் காணோம்? வீட்டைப் பூட்டிட்டு எங்க போனாளோ?!' என்று சலித்துக்கொண்டு பூட்டப்பட்ட வீட்டு வாயிலின் முன் நின்றிருந்தவன், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் கண்ணாடியில் தனது முகத்தினைப் பார்த்தபடி, விரல்களால் கேசத்தை சீராய்க் கோதியவன், முழுக்கை சட்டையை முக்கால் நீளத்திற்கு மடித்துவிட்டு, இரு தோள்களையும் விறைப்பாக்கி, நெஞ்சை நிமிர்த்தித் தன்னைத்தானே ரசித்துக்கொண்டு, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.
Saturday, 17 October 2020
மனைவி அமைவதெல்லாம்...
"என்னங்க ஒரு முக்கியமான விஷயம்…"
காலையுணவு உண்டு முடித்து, தனது அறையில் மடிக்கணினி பையைச் சரிபார்த்தபடி அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த கணவனிடம் வந்து நின்றாள், மனைவி. அவளது முகத்தினை நோக்கினான். என்றுமில்லா பொலிவுடன், புன்னகை ஏந்தி நின்றாள்.
"என்ன செல்லம் சொல்லு…"
குழைந்தான், அவன்.
"அது வந்து… எனக்கு ஒன்னு வேணும்..."
"ஒன்னென்ன, ஒரு டஜன் தரேன்!!"
அவன் நெருங்கி நின்றான்.
"அதில்லை… எனக்கு ஒரு பேபி வேணும்…"
புடவைத் தலப்பை விரல்களில் சுற்றி அவிழ்த்தபடி, தலைக் கவிழ்ந்து நின்றவளைக் கண்டு அவன் மன்மதனானான்.
"நீயா செல்லம் கேட்கற? ‘நம்ம குழந்தைக்கு ஒரு வயசு தான் ஆகுது, அடுத்தக் குழந்தையைப் பத்தி இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு யோசிச்சுக்கலாம்’னு சொன்ன?"
"அது…"
"சரி, ஊட்டிக்கு டிக்கெட் போடட்டா?"
சிந்தனையாய் அவனைப் பார்த்திருந்தாள்.
"என்ன யோசனை செல்லம்? ஊட்டி நமக்கு ராசியான இடமாச்சே?"
சிரித்துக்கொண்டவள், "இதுக்கு எதுக்குங்க அவ்வளவு தூரம் போகணும்?" என்றாள்.
"பின்ன வீட்லையேவா? நாலு நாள் லீவு போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 'அத்தை மாமா இருக்காங்க'ன்னு சொல்லி பகல்ல என்கிட்ட வந்து உட்கார கூட மாட்ட. லீவு வீணாகிடுமேன்னு தான் ஊட்டி போகலாம்னு சொல்றேன்."
விழுந்து விழுந்து சிரித்தவள், "இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை. இப்படி அசடு வழியறீங்க! நான் குழந்தை பொம்மை வேணும்னு சொன்னேன். குழந்தை வேணும்னு சொல்லல" என்றுவிட்டு தொடர்ந்து சிரித்தாள்.
சற்றே அதிர்ந்து விலகி நின்றவன், அவளைப் புரியாமல் பார்த்திருந்தான்.
"நம்ம பக்கத்து வீட்டு மாமி கொலு வைக்கப்போறாங்கல்ல, அதுல வைக்க நான் ஒரு கிராப்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குழந்தை கிருஷ்ணன் பிறந்ததும் கோகுலம் முழுக்கக் கொண்டாட்டமா இருக்கறத செஞ்சிருக்கேன். வீடு, மாளிகை, அது, இதுனு நிறைய செஞ்சு வச்சிருக்கேன்... குழந்தை கிருஷ்ணர் மற்றும் கொஞ்சம் தத்ரூபமா வேணும். எனக்குக் கிளே’ல பண்ண வரல. அதான் உங்கள ஒரு குழந்தை பொம்மை வாங்கிட்டு வரச் சொன்னேன்."
பெருமூச்செடுத்து ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டவன்,
"அப்புறம் எதுக்கு மா ஒரு மார்கமா என்கிட்ட வந்து பேசின?" என்றான், பரிதாபமாய்.
"நான் சாதாரணமாத்தான் பேச வந்தேன். நீங்களே தப்பா புரிஞ்சுக்கிட்டு அசடு வழிஞ்சீங்க. காமெடியா இருந்தது. அதான் பேசவிட்டு வேடிக்கை பார்த்தேன்..."
"பேசவிட்டு வேடிக்கை பார்க்கறதுக்கு நான் என்ன பட்டிமன்றத்துலயா பேசிக்கிட்டு இருக்கேன்? ரைட்டு…" என்று வாடிய முகத்தோடு பையை எடுத்துக்கொண்டு அவன் கிளம்ப,
"பேபிய மறந்துடாதீங்க" என்றாள் அவனைத் தொடர்ந்தபடி.
எதோ நினைவிற்கு வந்தவனாய் நடையை நிறுத்தியவன்,
"நம்ம பிள்ளையார் கோவில் வாசல்ல கொலு பொம்மை கடை பார்த்தேனே. அங்க இருக்குமே?" என்றான் தனது துக்கத்தை மறைத்துக்கொண்டு.
"அது எனக்குத் தெரியாதா? எத்தனை யூடியூப் வீடியோஸ் பார்த்து இதை செஞ்சிருக்கேன் தெரியுமா? கிருஷ்ணனுக்குத் தலைப்பாகை, டிரஸ், புல்லாங்குழல் கூட செஞ்சுட்டேன். நம்ம ஏரியா ஃபேன்ஸி கடைல எனக்கு பொம்மை கிடைக்கல. ஒரே ஒரு பொம்மை நீங்க வாங்கிட்டு வந்தா போதும், நான் அதுக்குக் கிருஷ்ண அலங்காரம் பண்ணிடுவேன்."
"ஓ!… ஆமா, இந்த யூடியூப்ல ‘புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கணும்’னு அட்வைஸ் பண்ற மாதிரி வீடியோலாம் பார்க்கமாட்டியா?"
அவனைக் கண்டு முறைத்தவள்,
"நான் பயனுள்ள வீடியோஸ் மட்டும் தான் பார்ப்பேன்…" என்றாள்.
"புரிஞ்சிடுச்சு மா!!" என்றவன், ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…' என்று முணுமுணுத்துக் கொண்டே வாகனம் நோக்கிச் செல்ல,
"என்னங்க பாட்டெல்லாம் பாடறீங்க?" என்றாள், மீண்டும் முகம் மலர்ந்தபடி.
"கொலுவுல பாட்டு பாடினா மாமி சுண்டல் தருவாங்கல்ல, அதான் ரிகர்சல் பார்க்கறேன்.."
"ச்ச என்னங்க நீங்க? உங்களுக்கு வேணுங்கறத செய்யத்தான் நான் இருக்கேன். உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன். ஒரு கப் சுண்டல் செஞ்சுத் தர மாட்டேனா? சாயங்காலம் நீங்க ஆஃபிஸ் முடிஞ்சு வரும்போது சூடா சுண்டல் தயாரா இருக்கும். ரிகர்சல் பண்ற ஜோருல பேபிய மறந்துடாதீங்க."
"பேபி?? மறக்கமாட்டேன் மா… மறக்கவே மாட்டேன்…"
அவன் வண்டியைக் கிளப்ப, மாமி வீட்டு ரேடியோ 'மனைவி அமைவதெல்லாம்…' என்ற பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தது. வண்டியின் இடப்பக்க கண்ணாடியை அவன் நோக்க, அதில் அவனது காதல் மனைவி பலமாய்க் கையசைத்து ‘டாட்டா’ காட்டிக் கொண்டிருந்தாள்.
அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!
Saturday, 8 August 2020
சீரக மிட்டாய் - வெள்ளை ரோஜா
Thursday, 6 August 2020
சீரக மிட்டாய் - பிள்ளை வரம்
"இந்தாமா, வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்காம நாலு மாசமா உன் புருசன் ஏமாத்திட்டு திரியறான். இந்தக் கந்துவிட்டி கோவிந்தன் விவகாரமான ஆளு, காசு வரலனா இனியும் பேசிக்கிட்டு நிக்க மாட்டேன், அத்து போட்டு போய்கிட்டே இருப்பேன்."
ஜன்னல் வழியே பதில் கூறுபவள், இன்று அவன் பேசியவற்றைக் கேட்டு ஈரக்கொலை நடுங்க அவன் காலடியில் வந்து விழுந்தாள்.
"அய்யா, எம்புருசன ஒன்னு செஞ்சுடாத சாமி, இந்தத் தாலிய வேணும்னா வச்சுக்க" என்று அவளிடம் எச்சம் இருந்த அரை பவுன் தங்கத்தாலியை நீட்டினாள், நிறைமாத வயிருடன், மண்டியிட்டபடி.
எதுவும் கூறாமல் வண்டியைக் கிளப்பியவன், கொன்னிமலைக்கோவிலில் பிள்ளை வேண்டி அவனது மனைவி ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பூஜைக்கு வந்து சேர்ந்தான்.
சீரக மிட்டாய் - நெட்டையனும், குட்டையனும்
"ஏலே குட்டை, என்னை நம்பி எத்தனை சீவன் வாழுது தெரியுமாலே?!!"
"நெடு நெடுன்னு வளந்திருக்கியே தவிர விவரமில்லாத பய நீ. ஒதுங்க எடம் கொடுத்ததெல்லாம் பெருசில்லப்பு, நான் வயித்துக்கு உண்டி கொடுக்கேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் நெட்டையா..."
நெட்டையனும், குட்டையனும் தீவிரமாக தங்களின் அருமை பெருமைகளை என்றும் போல் அன்றும் விவாதித்துக்கொண்டிருக்க, ‘இவிங்களுக்கு வேற வேலையில்ல’ என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவர்களின் நண்பர்கள் சூழ்ந்திருக்க, கட கடவென பெருஞ்சப்தத்துடன் வந்த அந்த ராட்சச வண்டியின் இயந்திரக் கைகள், நெட்டையனையும், குட்டையனையும், அவர்களின் மற்ற நண்பர்களையும் வேரோடு பிடுங்கி வீசியது.
Tuesday, 4 August 2020
சீரக மிட்டாய் - செவப்பியும், மஞ்சத்தாயும்
"அடியே செவப்பி, சீலைக்கு தோதா கையில நம்மள மாட்டிக்கிட்டு ஒய்யாரியா திரிவாளே அந்த அழகி எங்க பத்து நாளா காணல?"
"அதுதான் எனக்கும் தெரியல மஞ்சத்தாயி..."
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, பெட்டி திறக்கப்பட்டு மஞ்சள் மற்றும் சிகப்புக் கண்ணாடி வளையல்கள் மட்டும் வெளியேற்றப்பட்டன. அழகியின் கைகளில் அடுக்கப்பட்ட வளையல்கள் ஒருவரையொருவர் கண்டு சிரித்துக்கொண்டிருக்க, அடுத்த நொடியே ஒன்றோடொன்று படார் படாரென மோதப்பட்டு, உடைந்து சிதரின. ரத்தம் வடிய செவப்பியும், மஞ்சத்தாயும் கிடக்க, அழகியின் குங்குமம் அழிக்கப்பட்டு, கூந்தலில் சூடிய மல்லிகை பிய்க்கப்பட்டது.
Monday, 3 August 2020
சீரக மிட்டாய் - ஒப்பாரிக் கிழவி
அந்தக் குப்பத்தின் அருகாமையில் நீண்டிருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடிபட்டு இறந்து போன செய்தி அறிந்து ஒப்பாரி பாட்டெடுக்க வந்துவிட்டாள், கூன் விழுந்து, பார்வை மங்கி, பற்கள் தொலைத்த எண்பத்தி மூன்று வயதான, ஒப்பாரிக் கிழவி.
"ஏ கிழவி, ஏதாவது எழவு வீட்ல பாடுனா நாலு காசு கிடைக்கும். வேவாத வெயில்ல இங்க ஏன் தொண்ட தண்ணி வத்த பாடிக்கிடக்கற?"
"எந்த உறவும் இல்லாம அம்பது வருசமா அனாதையா கிடக்கறவளுக்கு தான் இன்னொரு உசுரோட மதிப்பு தெரியும். என் கண்ணு முன்னாடி எந்த உசுரு போனாலும் என் சொந்தமா நெனச்சு அந்த சீவனுக்காக நாலு சொட்டு கண்ணீர சிந்தி, ஒப்பாரி வைப்பேன்…"
வானம் கருத்திருக்கு...
வட்டநிலா வாடிருக்கு...
எட்டருந்து பாடுறேனே...
ராசா நீ எங்க போன???
Sunday, 2 August 2020
சீரக மிட்டாய் - சமாதான முத்தம்
அவளது அழுகை விசும்பலாகியும் கட்டில் மீதிருந்து எழாமல் கிடக்கிறாள். அவளது தேவையெல்லாம் நெற்றியில் ஓர் முத்தம் - சமாதான முத்தம். "எழுந்து வா, சாப்பிட" - காதில் விழுகிறது, ஆனால் ஒற்றை முத்தம் வேண்டி தவம் கிடக்கிறாள். "அடியே, புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தர வாத்தியாரா இருந்துகிட்டு, ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு ஒரு மணி நேரமா அழுதுகிட்டு இருக்கியே?!!" என்று கூறிக்கொண்டே அவளருகே வந்த அவளது தாய், அவளது முன் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி முத்தம் வைத்து, முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டாள். விசும்பல் தொலைந்து பற்கள் மின்ன சிரித்தவள், "நான் கிழவியானாலும் உனக்கு எப்பவும் குழந்தை தான்" என்றுவிட்டு தாயை இழுத்து அருகே அமரச் செய்தவள், அன்னை மடி மீது தலைவைத்து படுத்துக்கொண்டாள்.
சீரக மிட்டாய் - இசையரசன்
உலகறிந்த இசையரசனுக்கு உள்ளூர் அரங்கில் பாராட்டு விழா.
தன்னை ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பென்ஸ் காரில் ஏறி அமர்கிறான்.
"டேய், உனக்கு என்ன வருமோ, என்ன புடிக்குமோ அதை செய், அதை மட்டும் செய்" என்று அன்று தந்தை கூறியது, இன்று வரை அவனது நினைவில் உள்ளது.
"உங்க புள்ளைக்கு படிப்பெல்லாம் ஏறாது, இசை இசைனு கடைசில பீச்ல ஹார்மோனியத்தோட நிக்க போறான்" என்ற தலைமை ஆசிரியர் முன்பொரு நாள் அவனை பள்ளியிலிருந்து நீக்கினார்.
Friday, 31 July 2020
சீரக மிட்டாய் - சட்டையும், சீலையும்
அழுதபடி உறங்கிப்போனவள் தூங்கி எழுகையில் மணி நான்கு என்று காட்டியது. அரக்கப்பரக்க முகம் கழுவி, சேலையை சரி செய்து, பள்ளியிலிருந்து பிள்ளைகளை அழைத்துவர அவள் அறைக் கதவைத் திறக்க, வெளியே இரண்டு பிள்ளைகளும் அப்பாவோடு கார்ட்டூன் பார்த்தபடி கேக்கயும், வெஜிடபிள் பப்சையும் முழுங்கிக்கொண்டிருந்தன. மெல்ல நகர்ந்து அடுக்களைக்குள் செல்ல, மேடையின் மேல் அவளுக்காகவே காத்திருந்தது மல்லிகையும், அல்வாவும். பின்னிருந்து அணைத்தவன், அவள் கழுத்து மடிப்பில் முத்தம் வைத்து, "இனிமே காலைல டென்ஷன்ல உன்னை கண்டபடி திட்டமாட்டேன்" என்றான். காலையில் நடந்த யுத்தத்தை மறந்து சிரித்தவள், "தெரியாம உங்க சட்டையோட என் சீலைய மெஷின்ல போட்டு சாயமேறிடுச்சு, இனி அப்படி நடக்காது " என்றாள்.
சீரக மிட்டாய் - முதல் சம்பளம்
Thursday, 30 July 2020
சீரக மிட்டாய் - ராஜ தந்திரம்!!
Tuesday, 28 July 2020
சீரக மிட்டாய் - டைகர்
ஆர்.பி. நகர், குறுக்குத் தெருவில் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்னே, குடிசைகள் அனைத்தையும் முழுங்கிவிட்டு, தாண்டவமாடியது, கட்டுக்கடங்கா பெருந்தீ.
பொன்னாத்தாளின் கண் முன்னே அவளது குடிசை மெல்ல மெல்ல தீக்கிரையாகிக் கொண்டிருக்க, பட்டென அவள் கைப்பிடியை விடுத்து குடிசைக்குள் ஓடினான், அவளது ஒரே மகன், ராசய்யா.
துடிதுடித்துப்போனவள் குடிசையை நோக்கி ஓட, சுற்றம் அவளை தடுத்து நிறுத்தியது.
கடவுளென வந்த தீயணைப்புப் படை ரட்சகர்கள், நீர் பொழிந்து தீயினை அணைத்தனர்.
பொன்னாத்தாளின் குடிசைக்குள்ளே, ஒரு மூலையில் நனைந்தபடி ராசய்யா முடங்கியிருக்க, அவனது சின்னஞ்சிறு விரல்களில் அடைகாக்கப்பட்டிருந்தது, டைகர் நாய்க்குட்டி.
சீரக மிட்டாய் - குறுஞ்செய்தி
கடந்த அரை மணி நேரத்தில் நூறாவது முறையாக, தன்னவள் அனுப்பிய குறுஞ்செய்தியைப் படித்தவனுக்குக் கட்டுக்கடங்கா சந்தோஷம் பொங்க, வண்டியை விரட்டு விரட்டென விரட்டி, வீடு வந்து சேர்ந்தான்.
வழக்கமாக வீடு திரும்பும் நேரத்தை விட இன்று முன்னமே வந்தவனைக் கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தவள், அவனது மோகனப் பார்வையில் நாணி, மேஜையின் அருகே சென்று நின்றுகொண்டாள்.
உடையைக் கூட மாற்றிடத் தோணாமல், அவளை விழியால் வருடியபடியே மேஜையில் வந்தமர்ந்தவனின் ஆவலை உணர்ந்தவள், நொடி தாமதிக்காது அவனது தட்டில் உணவைப் பரிமாறினாள்.
'தினமும் ரவை உப்புமா தானா என்று அலுத்துக்கொள்ளும் என் அன்பு கணவருக்காகக் காத்திருக்கிறது நளபாகம்!!' என்று அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தவனுக்கு, கண்கள் குளமானது.
விழி தப்பிய நீர் மணிகள், சிந்திச் சிதறி தொலைந்து போயின, தட்டில் பரிமாறப்பட்ட சேமியா உப்புமாவில்…
- அர்ச்சனா நித்தியானந்தம்
Monday, 27 July 2020
சீரக மிட்டாய் - பூமராங்
Sunday, 26 July 2020
சீரக மிட்டாய் - பரிசம்
முறை மாமன் தான் என்ற போதும், ஒரு முறை கூட ஏறெடுத்தும் பார்க்காதவள், ஓர் வார்த்தை கூட பேசாதவள் மீது, ஏனோ அவனுக்குக் கிறுக்கு!!
"ஏலே மாப்ள, தை பொறந்து கல்யாணத்தை வச்சுகவமா?" என்றார், செண்பகத்தின் தந்தை.
"இந்தா மாமா, உனக்கு மட்டுமில்ல இந்த ஊர் சனத்துக்கும் சொல்லிக்கறேன், ஊர் பழக்கம் வழக்கம்னு சொல்லிக்கிட்டு எவனும் கல்யாணப் பேச்சு எடுக்கக்கூடாது. செண்பகம் என்னென்ன படிக்கணும்னு ஆசைபடுதோ, அத்தனையும் படிச்ச பிறகு தான் எல்லாம்…" என்றவன், மிரட்டும் தோரணையில் அரிவாளை நடுக்கூடத்தில் வீசியெறிந்துவிட்டு அவளை நோக்க, முதன் முறை தலை நிமிர்த்தி மாமனைக் கண்டு சிரித்தாள், செண்பகம்.
Saturday, 25 July 2020
சீரக மிட்டாய் - பைத்தியம்
Friday, 24 July 2020
சீரக மிட்டாய் - ரசனைகள்
காலை நாளிதழில் படித்து ரசித்த கவிதையை மாலை வீடு திரும்பியதும் வாசிக்கத் தேடியெடுக்க, கவிதையின் அருகே அன்றைய செலவுகளைப் பட்டியலிட்டுக் கூட்டி சரிபார்த்திருக்கிறாள், அவள்.
இந்த ஆயிரம் காலத்துத் திருக்கோயில் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களைக் கண்டு இமைக்கவும் மறந்து நான் மண்டபத்திலேயே நின்றிருக்க, அவளோ மூலஸ்தானத்தின் அருகே கண்களை இறுக மூடிக்கொண்டு பிரார்த்தித்து நிற்கிறாள்.
கடற்கரை மணலில் அமர்ந்து கொண்டு 'தண்ணீர் தேசத்து' கலைவண்ணனையும், தமிழ் ரோஜாவையும் நான் நினைவு கூர, அவளோ கடலலைகளைத் துரத்திக்கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
ஏதோ ஒரு எண்ணத்திலும், செயலிலும் கூட ஒன்றுபடாமல் முற்றிலும் முரண்பட்ட மனிதர்களாய் நாங்கள் இருப்பினும், இன்றும் பிரமிப்பு குறையாமல் நான் புதிதாய் ரசித்திருப்பதும் அவளைத் தான், அவளது முக்கியப் பட்டியலில் என்றும் முதலிடம் எனக்கே தான், நாங்கள் இருவரும் ஒத்துப்போகும் ஒற்றைப்புள்ளி… ஒற்றை பெரும்புள்ளி காதல் மட்டுமே தான்!!
Thursday, 23 July 2020
சீரக மிட்டாய் - சாமி இருக்கா?
"நீ என்னா சொன்னாலும் சாமியுமில்ல, பூதமுமில்ல…" என்று ஆணித்தனமாகக் கூறினார் அந்த நாத்திகவாதி.
"உன்னை இப்படி யோசிக்க வைக்கிறதும், பேச வைக்கிறதும் சாமி தான்…" என்று சிரித்து வைத்தார் ஆத்திகவாதி.
"அடபோப்பா… எல்லாத்துக்கும் அறிவியல் விளக்கம் இருக்கற மாதிரி, சாமினு ஒன்னு இருக்கறத அறிவியல் பூர்வமா நிரூபிச்சாத்தான் ஏத்துப்பேனே ஒழிய, இவனுக்கு சாமி இதை பன்னிச்சு, அவனுக்கு அதை பன்னிச்சுன்னு சொன்னா நான் நம்பத் தயாரா இல்லை."
வேகமாய்ப் பாய்ந்து ஒரு மோட்டார் வண்டி வந்துகொண்டிருக்க, அதை கவனிக்காது செல்ல முற்பட்ட ஆத்திகனின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்திய நாத்திகன், "யோவ், வண்டி வரது கூட தெரியாம இப்படி நடக்கிறியே, நான் மட்டும் புடிச்சு தடுக்கலேனா நீ சொர்கத்துல இருக்கற உன் சாமிக்கிட்ட போய் சேர்ந்திருப்ப…"
அவரைக் கண்டு சிரித்த ஆத்திகன், "யோவ், நான் தான் சொன்னேன்ல சாமி இருக்கு, அது எல்லா நேரத்துலயும் காப்பாத்தும்னு…"
Wednesday, 22 July 2020
சீரக மிட்டாய் - அன்பாய் ஒரு புன்னகை
கழுத்தில் புதுத்தாலி மஞ்சள் மணக்க, புதுப்பெண் பொலிவு முகத்தில் ஜொலிக்க, அவனது அலமாரியை சுத்தம் செய்துகொண்டிருந்தவளின் கண்ணில் பட்டது அப்பெட்டி. உள்ளே எம்பராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டையும், வாழ்த்து அட்டைகளும், சாக்கலேட் தாள்களும், பரிசுப் பொருட்களும் என, அவளிடம் அவன் சொல்லாமல் விட்ட அவனது முன்னால் காதலையும், காதலியையும் போட்டுடைத்தது.
அறைக்குள் நுழைந்தவன் அவள் கையிலிருந்த அவனது ரகசியக் காதல் பொக்கிஷங்களைக் கண்டு திடுக்கிட்டு நிற்க, அவளோ நிதானமாய் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.
அப்பெட்டிக்குள் அடைகாக்கப்பட்டவைகளை மீண்டும் அடுக்கியவள், அதை அதனிடத்திலேயே வைத்தாள்.
அவன் நம்பமுடியாமல் பார்த்திருப்பதைக் கண்டவள், "இந்தப் பெட்டியில உள்ளத அழிச்சுடலாம், ஆனா உங்க மனசுல உள்ளத அழிக்க முடியாது. உங்க மனசு முழுக்க நான் நிறைஞ்சதும், நீங்களே இந்தப் பெட்டிய வேண்டாம்னு தூர எறிஞ்சிடுவீங்க" என்றுவிட்டு, மீண்டும் அன்பு குழைத்த புன்னகையைச் சிந்தினாள்.
Tuesday, 21 July 2020
சீரக மிட்டாய் - அவளான அது!!
"அடியே, போனாப்போகுதுன்னு உன்னை இந்த வீட்ல வச்சிருந்தா, எல்லா வேலையும் நீயே இழுத்துப்போட்டு செய்யாம, நான் சொல்றவரைக்கும் என் வாய பார்த்துட்டே நிப்பியா? போ, இந்த வெள்ளை சட்டைய தும்பப்பூ கணக்கா துவச்சு போடு" என்று எரிந்துவிழுந்தவன், கையில் பாட்டிலோடு தொலைக்காட்சியின் முன் சென்றமர்ந்தான்.
இரவு பதினோரு மணிக்கு துணியை வெளுத்து காய வைத்தவள், சோர்ந்து தரையில் விழுந்தாள்.
"ச்ச, ஒரு நாளைக்குக் கூட முழுசா பாட்டரி நிக்க மாட்டேங்குது" என்று புலம்பியபடியே இயந்திர மனுஷியை சார்ஜரில் போட்டவன், "இது மெஷினா இருக்கப்போக நாம எவ்வளவு கோபப்பட்டாலும் கம்முன்னு இருக்கு. இல்லாட்டி அவள மாதிரியே இதுவும் என்னை விவாகரத்து பண்ணிட்டு, விட்டுட்டு போயிருக்கும்" என்று பெருமூச்சுவிட்டான்.
Monday, 20 July 2020
சீரக மிட்டாய் - ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம்
உச்சஸ்தாயியில் ஸ்ருதி பிசகாக அவள் பாடும் சுப்ரபாதமே அவனது தினசரி அலாரம்.
சில நாட்களாகவே இரண்டு வரிக்கு ஒரு முறை எட்டிப்பார்த்தது வறட்டு இருமல்.
'இந்த முப்பது வருஷ சம்சார வாழ்க்கையில இவளுக்கு க்ளாஸ் எடுத்தே காலம் போயிடுத்து' என்று அயர்ந்துகொண்டவன், 'டாக்டரப் போய் பார்க்கணும்னு தனக்கா தோணித்துனா போய் வைத்தியம் பண்ணிக்கட்டும்' என்று ஸ்ருதி தப்பிய சுப்ரபாதத்தைக் கடந்து செல்வது போல், வறட்டு இருமலுக்கும் காதுகளைப் பூட்டிக்கொள்ள பழகிக்கொண்டான்.
காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் ஜரூராக அவன் முன் ஆஜராகும் ஃபில்டர் காபி அன்று வராததைக் கண்டு அடுக்களைக்குள் சென்றவன் கண்டது, மயங்கிய நிலையில் கீழே சரிந்து கிடந்த அவளைத் தான்.
இன்று, அலாரம் சத்தத்தில் விழித்துக்கொண்டவனுக்கு இனி என்றுமே ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம் அவனை எழுப்பப்போவதில்லை என்ற நிதர்சனம், இதயத்தின் ஓரத்தில் சுருக்கென குத்தியது.
Sunday, 19 July 2020
சீரக மிட்டாய் - மல்லிகைப்பூ
வெகு நாட்கள்… இல்லை மாதங்கள்… இல்லை கடைசியாக நான் இதைச் செய்தது எப்பொழுது என்று யோசித்துத் தெளியுமுன்னே, நெகிழிப்பையில் திணிக்கப்பட்ட மல்லிகைப்பூவை என் கையில் திணித்தாள், பூக்காரி.
திருமணமான புதிதில் என் கையில் மல்லிகையைக் கண்டாள், அவள் இதழில் மோகனப்புன்னகை தவழ, இலவச இணைப்பாய் கன்னங்களும் சிவந்து போகும்.
ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த சிரிப்பினையும், சிகப்பினையும் காண எந்தன் கண்கள்… இல்லை இதயம்… இல்லை, இரண்டுமே ஏங்கின.
வாயிற்கதவைத் திறந்தவள் ஒரு கையில் இருந்த சாப்பாட்டுக்கூடையினை வாங்கிக்கொண்டு, மற்றொரு கையில் பதுவிசாக நான் வைத்திருந்த மல்லிகையை வாங்கி கூடைக்குள் திணித்தபடி, "அக்கா வந்திருக்காங்க" என்றுவிட்டு செல்ல, அவளது இன்ப அதிர்ச்சிக்கு மாறாக எனக்கு துன்ப அதிர்ச்சிகள் தோன்றி, வளர்ந்து, மரித்தும் போயின.
மல்லிகைச் சரத்தினை நறுக்கி, அக்கா, அக்கா மகள்கள், என் மகள் என்று அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுத்தவள், அன்று காலை கோவிலில் கொடுத்த இரண்டு அங்குல கதம்ப சரத்தை தலையில் சூடிக்கொண்டே என்னைக் கண்டு நான் ஏங்கிய மோகனப்புன்னகையைச் சிந்த, ஆறுதல் அடைந்தோம் அவளை நெருங்க முடியாமல் போன நானும், மல்லிகையும்.
Saturday, 18 July 2020
சீரக மிட்டாய் - கண்ட நாள் முதலாய்…
இமைக்காமல், சலைக்காமல் இவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனது விழிகளுக்குள், தவனைமுறையில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள்.
தினமும் சபித்துக்கொண்டு அவள் பயணிக்கும் பேருந்து, சில நாட்களாக சுந்தர விமானமாக மாறியதோடு, இவளது பருவத்தின் பயிர்களுக்கு நீரூற்ற, காதல் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கின.
அவன் இறங்கிய பின்னே இரண்டு நிறுத்துங்கள் கழித்து இறங்குபவள், இன்று அவனைத் தொடர்ந்தாள்.
நான்காக மடிக்கப்பட்டிருந்த கோலினை பையிலிருந்து எடுத்து விரித்தவன், மெல்ல மெல்ல எட்டு வைத்து பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்துள் நுழைவதைக் கண்டவள், திடுக்கிட்டு அதிர்ச்சியில் உறைந்தாள். அவளது நினைவுகளில் அவனது விழிகள் நிழலாடியது.
அவ்விடமே காத்திருந்து அவனை மீண்டும் கண்டவள், அவன் கையிலிருந்த கோலினை வாங்கிக்கொண்டு, அவனது விரலோடு விரல் சேர்த்தவள், கைகள் கூடிய பின்னே தன் காதலை உரைத்தாள், காதலும் கைக்கூடவேண்டுமென்ற பரிதவிப்போடு.
Friday, 17 July 2020
சீரக மிட்டாய் - மாமியார் வீடு
அன்று அவள் என்னோடு வாக்குவாதம் செய்தபடி நடக்க, நானும் விடாது அவளது கோபத்தின் உயரத்தை அளந்து பார்க்கும் ஆர்வத்தில் வில்லங்கமான பதில்களையே முன்வைத்தபடி நடந்தேன். நான் சுதாரிப்பதற்குள் அவள் சாலையைக் கடக்க எத்தனிக்க, அதிவேகமாய் விரட்டி வந்தது அந்த லாரி… நான் அவள் கையைப்பற்றி என்னிடம் இழுத்திருக்கலாம்… அல்லது அந்த லாரி க்ரீச்சிட்டு பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் நின்றிருக்கலாம்… ஆனால்… ஆனால், இரண்டுமே நடந்தது!!
என் கையை உதறியவள், லாரி ஓட்டுனரை, என்னை முறைப்பது போல முறைத்துவிட்டு, சாலையைக் கடந்து, பேருந்தில் ஏறி அவள் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.
விபரீதமாக வேறேதோ நடந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு.
நானும் அப்படித்தான்… நானும் அப்படித்தான் நினைத்தேன் என்று நீங்கள் ஊகித்திருந்தால்… அதற்கு வாய்ப்பில்லை ராஜா!! ஏனென்றால் என் மரியாதைக்குரிய மாமனாரும், மதிப்பிற்குரிய மைத்துனரும், காக்கிச்சட்டை 'கன'வான்கள்... இப்பொழுது என் மனைவியை சமாதான செய்து அழைத்துவர என் மாமியார் வீட்டிற்கு, அதாவது என் மனைவி பிறந்து வளர்ந்த வீட்டிற்கு (மீண்டும், நீங்கள் நினைத்தது கிடையாது) சென்றுகொண்டிருக்கேன்.
Saturday, 23 May 2020
லண்டனில் வத்தக்குழம்பு
-
தினமும் மாலை, நகரம் பரபரப்பாகத் தத்தம் வீட்டிற்குள் புகுந்துகொள்ள விழைய, நான் மட்டும் ஒரு கோப்பை காபியோடு அந்தக் கடையின் கண்ணாடிச் சாளரம் ...
-
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட சுவாசங்களில் பெரும்பான்மையான வாசம் நீ! நூறு பாஸ்கல் முத்தத்தால் உன் இதழ்களின் ரேகைகளை என் ...